முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 121.நினைந்தவர் புலம்பல்
திருக்குறள் - 121.நினைந்தவர் புலம்பல்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. |
1201 |
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.
எனைத்தொன்(று) இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில். |
1202 |
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். |
1203 |
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தென்னெஞ்சத்(து) ஓஒ உளரே அவர். |
1204 |
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?
தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எந்நெஞ்சத் தோவோ வரல். |
1205 |
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன். |
1206 |
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். |
1207 |
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
எனைத்து நினைப்பினும் காயார் எனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. |
1208 |
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைத்து. |
1209 |
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. |
1210 |
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
தேடல் தொடர்பான தகவல்கள்:
121.நினைந்தவர் புலம்பல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - காதலர், நெஞ்சில், காதலரை, நினைத்தாலும், எம்முடைய, யாமும், நினைத்து, காதலராகிய, செய்யும், போலிருந்து, போன்று, உள்ளினும், இலக்கியங்கள், செய்தலால், துன்பம், literature, நினைப்பவர், தும்மல்