முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 117.படர் மெலிந் திரங்கல்
திருக்குறள் - 117.படர் மெலிந் திரங்கல்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். |
1161 |
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். |
1162 |
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பி னகத்து. |
1163 |
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல். |
1164 |
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். |
1165 |
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. |
1166 |
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். |
1167 |
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை. |
1168 |
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள் நெடியம் கழியும் இரா. |
1169 |
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
உள்ளம்போன் றுள்விழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல் மன்னோஎன் கண். |
1170 |
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
117.படர் மெலிந் திரங்கல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - இருக்கின்றது, துன்பம், இன்பம், அறியாமல், காமநோயைப், இலக்கியங்கள், இறைப்பவர்க்கு, literature