முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 114.நாணுத் துறவுரைத்தல்
திருக்குறள் - 114.நாணுத் துறவுரைத்தல்
காமம் உழந்து வருந்தினார்க் கேமம் மடலல்ல தில்லை வலி. |
1131 |
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. |
1132 |
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். |
1133 |
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புனை. |
1134 |
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். |
1135 |
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
மடலூர்த்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லாப் பேதைக்கென் கண். |
1136 |
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில். |
1137 |
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று மடும். |
1138 |
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. |
1139 |
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. |
1140 |
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
114.நாணுத் துறவுரைத்தல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - நல்லாண்மை, நாணமும், என்னும், தந்தாள், நாணொடு, நீக்கி, இலக்கியங்கள், காதலின், உடம்பும், உயிரும், literature