பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
காப்பு இகந்து ஓடி, கழி பெருஞ் செல்வத்தைக் கோப் பரியான் கொள்ளக், கொடுத்து இராது என் செய்வர்? நீத்த பெரியார்க்கே ஆயினும், மிக்கவை மேவின், பரிகாரம் இல். |
386 |
இருவகைப் பற்றினையும் முற்ற அறுத்த துறவிகளோயினும் தம்மால் தானமாகக் கொடுக்கப்பட்ட மிக்க பொருளைத் தாமே சென்று மேவுவராயின் அதனை இடை நின்று தடுத்தற்குரிய வழி இல்லை. (அதுபோல) காப்பு இகந்து ஓடி - காவல் நெறியைக் கடந்து சென்று குடிகளது மிக்க பெருஞ் செல்வத்தை அரசனாகிய பெரியவன் வலிந்து சென்று கொள்வானாயின்
கருத்து: அரசனே குடிமக்களது செல்வத்தைப் பறிக்க முற்படுவானாயின், அதனை நீக்க வல்லவர் யாரும் இலர்.
34. வீட்டு நெறி
எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும், மன்னருடைய உடைமையும், மன்னரால் இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை உடைமை தலை. |
387 |
எண்ணுதற்குக் குறைவு இல்லாத செல்வமும் உயர்குடிப் பிறப்பும் மன்னரைத் தம் வயத்தராய் உடைய உரிமையும் அரசர்களால் இத் தன்மையுடையாரெனப் புகழப்படுதலும் விரும்பத்தக்கனவல்ல இப்பிறப்பிற்கும் மறு பிறப்பிற்கும் உறுதியாகிய தம்முடைய தலைவனாகிய கடவுளை உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.
கருத்து:ஒவ்வொருவரும் கடவுளைஉடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.
அடங்கி, அகப்பட்ட ஐந்தினையும் காத்து, தொடங்கிய மூன்றினால் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய, செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே- கொல்லிமேல் கொட்டு வைத்தார். |
388 |
துறவறத்திற்கு விதிக்கப்பட்ட நெறியின்கண் தாம் அடங்கி ஒழுகி, ஐம் புலன்களையும் பொறிகள் மேற் சொல்லாதவாறு செறியப் பாதுகாவல் செய்து, தாம் செய்யத் தொடங்கிய துறவற நெறியில், மனம், மொழி, மெய் என்ற மூன்றானுந் தூயராய் மாட்சிமைப்பட்டு, இவ்வுலகத்தின்கண் இவ்வுடம்பு ஒழிந்து நிற்க, இனிச் செல்ல விருக்கும் மறுமைக்கு உறுதியைக் காலம்பெறச் செய்யாதவர்களே, தீயின் மீது நெல்லினைப் பெய்து பொரித்து உண்ணுபவரோ டொப்பர்.
கருத்து:காலம் பெறத் துறந்து வீடு எய்துக என்றது இது.
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப் பட்டு ஆர் துடியிடை யார்ப் படர்ந்து, ஒட்டித் தொடங்கினார் இல்லத்து, அதன்பின் துறவா உடம்பினால் என்ன பயன்? |
389 |
தன்னுடன் நட்புச் செய்துகொண்டவர்களைச் செல்வமுடையவராகச் செய்து பகைவரை அழித்து கூரிய பற்களையும் பட்டுடை பொலியும் உடுக்கை போன்ற இடையினையு முடைய பெண்கள்மீது காதல் கொண்டு பொருந்தி இல்லறத்தைத் தொடங்கிச் செய்தவர்கள் அது முடிந்த பிறகு துறவறத்தில் துறந்து செல்லாத உடம்பினான் என்னபயனுண்டாம்?
கருத்து: இல்லற நெறியில் நின்று அதன் பின்னர்த் துறவறம் சேர்க.
இல்வாழ்க்கையானும் இலதானும் மேற்கொள்ளார், நல் வாழ்க்கை போக, நடுவு நின்று, எல்லாம் ஒருதலையாச் சென்று துணியாதவரே- இரு தலையும் காக் கழித்தார். |
390 |
இல்லறத்தை யாயினும் அஃதின்றி நின்ற துறவறத்தை யாயினும் தாம் மேற்கொண் டொழுகாதவராகி சிறந்த வாணாள் வறிதே கழிய இடை நின்று எல்லாவற்றையும் ஆழ்ந்து உறுதியாகத் துணிந்து ஒருநெறிக்கண் ஒழுகாதவர்களே காவின் இருபக்கத்திலுமுள்ள பொருளை நீக்கித் தண்டினைச் சுமந்து நின்றாரோ டொப்பர்.
கருத்து: இரு வாழ்க்கையினுள் ஒன்றன்கண்ணும் துணிவோ டொழுகாதவர்கள் இம்மை மறுமை இன்பங்களைப் பெறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 76 | 77 | 78 | 79 | 80 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, சென்று, இலக்கியங்கள், நின்று, நானூறு, பதினெண், பழமொழி, தாம், கீழ்க்கணக்கு, தொடங்கிய, செய்து, நெறியில், யாயினும், துறந்து, டொப்பர், அடங்கி, செல்வமும், இகந்து, காப்பு, பெருஞ், மிக்க, கொள்ளுதலே, சங்க, சிறந்தது