பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
செருக் கெழு மன்னர்த் திறல் உடையார் சேர்ந்தார், ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ ?- உருத்த சுணங்கின் ஒளியிழாய்!-கூரிது, எருத்து வலியநன் கொம்பு. |
271 |
தோன்றுகின்ற தேமலையும் ஒளிபொருந்திய அணிகலன்களையுமுடையாய்! வலிமிக்க எருதினுடைய கொம்பு கூரானது; (ஆதலான்) போரையுடைய அரசர்களாகிய எல்லாத் திறனுமுடையாரை அடைந்தவர்கள் பிறர் ஒருவருக்குப் பயந்து மனந்தளர்தலும் உண்டோ? (இல்லை.)
கருத்து: அரசரேயன்றி அவரைச் சார்ந்தோரும் பிறருக்கஞ்சார்.
வேந்தன் மதித்து உணரப்பட்டாரைக் கொண்டு, ஏனை மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப;-ஆய்ந்த நல மென் கதுப்பினாய்!-நாடின் நெய் பெய்த கலமே நெய் பெய்துவிடும். |
272 |
ஆராய்ந்த நல்ல மெல்லிய கூந்தலை யுடையாய்! அரசனால் நன்குமதிக்கப்பட்டு அவனது மகிழ்ச்சிக்கு இடமானவரை அவன் மதிக்கின்ற தன்மை ஒன்று கொண்டே ஏனை மக்களும் அவனைப்போன்றே மிக மதித்து உணர்வர் நெய் இருந்த ஏனமேநெய் பெய்தற்கு அமையுமாறுபோல.
கருத்து:அரசனால் மதிக்கப்பட்டார் ஏனையோராலும் மதிக்கப்படுவர்.
ஆண்தகை மன்னரைச் சேர்ந்தார் தாம் அலவுறினும், ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க!- பூண்டாங்கு மார்ப!-பொருள் தக்கார் வேண்டாமை வேண்டியது எல்லாம் தரும். |
273 |
அணிகலன்களை அணிந்திருக்கின்ற மார்பை உடையவனே! ஆண்டகைமையை உடைய அரசர்களைச் சேர்ந்து ஒழுகுபவர்கள் தாம் வறுமையால் மிக்க துன்பத்தை அடைந்தாலும் அவரிடத்தில் ஒன்றனை விரும்புகின்றோம் என்பதனை கூறாதொழிக பிறரால் மிக மதிக்கப்பட்டார் ஒரு பொருளையும் விரும்பிக் கேளாமையே அவர் விரும்பிய யாவற்றையும் தரும்ஆதலால்.
கருத்து: அரசனைச் சார்ந்தொழுகுவார் தமக்கு ஒரு பொருள் வேண்டுமென்று அரசனைக் கேளா தொழிகஎன்பதாம்.
காவலனை ஆக வழிபட்டார், மற்று அவன் ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல்- ஆ அணைய நின்றதன் கன்று, முலை இருப்ப, தாய் அணல் தான் சுவைத்தற்று. |
274 |
அரசனைத் தனக்குத் துணையாகக் கொண்டு அவனைச் சார்ந்தொழுகினார் அவனால் ஏவப்பட்ட வேலையைச் செய்பவர்க்கு உதவிசெய்து அவரால் காரியம் பெறலாமென்று நினைத்தல் பசுவினை அணைந்து நின்ற பசுவின் கன்று தாயினது மடி யிருக்கவும தாயினது அணலைச் சுவைத்தாற்போலும்.
கருத்து: அரசனைச் சார்ந்தொழுகுவார் கீழாயினாரிடம் கூறித் தங்குறையை முடித்துக்கோடற்க என்பதாம்.
சிறப்புடை மன்னரைச் செவ்வியான் நோக்கி, திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை; விறற் புகழ் மன்னர்க்கு உயிர் அன்னரேனும், புறத்து அமைச்சின், நன்று, அகத்துக் கூன். |
275 |
மிகுந்த புகழினையுடைய அரசர்க்கு உயிரை ஒப்பாரேயாயினும் புறத்தே உள்ள அமைச்சர்களைவிட அரண்மனையிலுள்ள கூனர்க்குச் செவ்வி வாய்த்தல் எளிது (ஆதலால்) எல்லாச் சிறப்புமுடைய அரசர்களை காண்டற்குரிய காலத்தை அறிந்துகண்டு திறம்படக் கூறுவார்க்கு முடியாததுஒன்றுமில்லை.
கருத்து: அரசனை சார்ந்தொழுகுவார் அரசனுடைய குறிப்பறிந்து கூறிக் காரியங் கொள்கஎன்பதாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், சார்ந்தொழுகுவார், மதித்து, நெய், பதினெண், பழமொழி, கீழ்க்கணக்கு, ஒன்று, நானூறு, மன்னரைச், தாம், அரசனைச், தாயினது, கன்று, மதிக்கப்பட்டார், பொருள், கொண்டு, சேர்ந்தார், சங்க, உண்டோ, கொம்பு, அரசனால், இல்லை, அவன்