பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
அகலம் உடைய அறிவுடையார் நாப்பண், புகல் அறியார் புக்கு, அவர் தாமே - இகலினால் வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது அன்றோ, பாண் சேரிப் பல் கிளக்கும் ஆறு. |
21 |
கல்வி கேள்விகளில் விரிவு உடைய இயற்கை அறிவினார் இடையில் நுழைதற்குத் தகுதியற்ற கயவர்கள் புகுந்து (தம் சொற்களை யாரும் விரும்பாமல் இருக்கவும்) தாமே மாறுபாட்டினால் வீணான பயனற்றவற்றைக் கூறுதல் பாணர்கள் தெருவில் ஒருவன் வாய்திறந்து பாடுவதைப்போல அஃது ஆகும்அல்லவா!
கருத்து:கற்றாரிடைக் கல்லார் வீண் வார்த்தைகளைப் பேசாதொழிதல்வேண்டும்.
மானமும் நாணும் அறியார், மதி மயங்கி, ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து, ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும் யானைப் பல் காண்பான் புகல். |
22 |
கல்லார் தம் மானமும் நாணும் அழிதலை அறியாராய் புத்தி மயக்கத்தை யடைந்து பல நூல்களையும் அறிவார் நடுவிற் புகுந்து அவர்களை ஒப்பத் தாமும் இருந்து நூல்களை வினாவி உரைக்கப்புகுதல் யானையைப் பல்பிடித்துப் பார்க்கப் புகுதல் போல் யாவர்க்கும் நகைதருஞ்செயலாகும்.
கருத்து: கற்றார்அறிவின் திறனைக் கல்லார் அறிய முயலுதல் நகைப்பிற்கிடனாம்.
அல்லவையுள் தோன்றி, அலவலைத்து, வாழ்பவர் நல் அவையுள் புக்கு இருந்து, நா அடங்க, - கல்வி அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல் மிளகு உளு உண்பான் புகல். |
23 |
கல்வியறிவு இல்லாதார் அவையுள் முற்பட்டு (நல்லன) அல்லவற்றைக் கூறி (புல்லரை) வென்று வாழ்பவர் கல்வியறிவு உடையார் அவையுள் தானே புகுந்து பிறர் நாவடங்கும்படி கல்வியில் எல்லையின்றி அறிந்த அறிவுடையோர் அறிவினை இகழ்ந்து கூறுதல் (சிறந்த உணவுகள் இருக்க) மிளகின் உளுவை (உண்ணப்புகுவதனோடு ஒக்கும்).
கருத்து: கல்லார் கற்றாரை இகழ்ந்து கூறின் தீமையைஅடைவர்.
நல் அவை கண்டக்கால் நாச் சுருட்டி, நன்று உணராப் புல் அவையுள் தம்மைப் புகழ்ந்து உரைத்தல்,-புல்லார் புடைத் தறுகண் அஞ்சுவான், இல்லுள், வில் ஏற்றி, இடைக் கலத்து எய்துவிடல். |
24 |
கல்லார் கல்வி அறிவுடையோர் அவையைக் கண்ணுறுவராயின் தமது நாவினை மடக்கி நன்மை தீமை இன்ன தென்றறியாத புல்லர்கள் வாழும் அவையின்கண் தம்மைத் தாமே இல்லன கூறிப் புகழ்ந்துரைத்தல் பகைவரிடத்துள்ள அஞ்சாமையைக் கண்டு பின்வாங்குகின்றவன் வீட்டின் உள்ளே வில்லின்கண் அம்பை ஏற்றி கருங்கலங்களிடையே எய்வதனோடு ஒக்கும்.
கருத்து: கல்லார் தம்மினத்தாரிடையே தம்மைப் புகழ்ந்து கொள்வர்.
நடலை இலர் ஆகி நன்று உணராராய முடலை முழுமக்கள் மொய் கொள் அவையுள், உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல் கடலுளால் மாவடித் தற்று. |
25 |
மனத்தின்கண் கவலை யிலராய் நன்மை தீமை அறியாதவராகிய மனவலியுள்ள கயவர்கள் நெருங்கியுள்ள அவையில் அலைத்து வாழ்கின்ற கயவன் ஒருவனுக்கு உயிர்க்குப் பயன்தரத் தக்கனவற்றைக் கூறுதல் கடலுள்ளே மாங்கனியை வடித்தாற் போலும்.
கருத்து: கயவற்குஉறுதிப்பொருள்களைக் கூறுதலாகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கல்லார், கருத்து, அவையுள், கல்வி, இலக்கியங்கள், புகுந்து, கூறுதல், தாமே, பழமொழி, இருந்து, புகல், கீழ்க்கணக்கு, பதினெண், நானூறு, அறிவுடையோர், நன்று, ஒக்கும், இகழ்ந்து, புகழ்ந்து, நன்மை, தீமை, ஏற்றி, உரைத்தல், கல்வியறிவு, தம்மைப், மானமும், புக்கு, அறியார், உடைய, சங்க, வீண், கயவர்கள், அறிவார், ஞானம், நாணும், வாழ்பவர்