பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி, நிகராகச் சென்றாரும் அல்லர்;-இவர் திரை நீத்த நீர்த் தண் சேர்ப்ப!-செய்தது உவவாதார்க்கு ஈத்ததை எல்லாம் இழவு. |
226 |
பரந்த அலைகள் வெள்ளம்போல் பரக்கும் நீரையுடைய குளிர்ந்த கடல் நாடனே! தம்முடைய சுற்றத்தாராலும் தம்மாலும் ஒருவருக்கு ஓரிடர் வந்து பொருந்தியவிடத்து ஒரு பொருளுதவி அவர் மனமொப்ப ஒழுகினாருமல்லர். (அதுவன்றி) செய்ததைக்கொண்டு மனம் மகிழாதவர்களுக்கு கொடுத்த பொருள்கள்எல்லாம் இழந்த பொருள்களேயாம்.
கருத்து: பெற்றதைக்கொண்டு மனம் உவவாதார்க்குப் பொருள்கொடுத்தல் ஆகாது.
24. ஊழ்
எவ்வம் துணையாப் பொருள் முடிக்கும் தாளாண்மை, தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?- பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர்!-குறும்பு, இயங்கும் கோப்புக்குழி, செய்வது இல். |
227 |
பூவின்கண் புகுந்து வண்டுகள் ஒலிக்கின்ற வயல்நாடனே! (எந்நாட்டின்கண்ணும் தடையின்றிச் செல்ல வல்ல ஆணையையுடைய) பேரரசன் (போர் செய்யப்) புகுந்த இடத்து குறுநிலத்தை ஆளுமரசன் எதிர்த்துச் செய்வது ஒன்றுமில்லை (அவன் ஆளுகையின் கீழ் அடங்கியிருப்பான்); (அதுபோல) துன்பமே துணையாக தான் கருதிய பொருளை முடித்தற்குரிய முயற்சி இழவூழே (எதிர்த்து நின்று முடியாதவாறு) முடிக்கின்றவிடத்து முயற்சி அதனை எதிர்த்து வலிந்து என்ன செய்ய முடியும்? (கீழ்ப்பட்டேயிருத்தல்வேண்டும்.)
கருத்து: இழவூழ் எதிர்த்துநிற்குமிடத்துச் செய்யும் முயற்சியாற் பயனில்லையாம்.
சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும், பட்ட விருத்தம் பலவானால், பட்ட பொறியின் வகைய, கருமம் அதனால்,- அறிவினை ஊழே அடும். |
228 |
குறித்துச் சொல்லப்படும் மிகுந்த அறிவு உடையாரிடத்தும் உளவாய குற்றங்கள் பலவானால் (அதற்குக் காரணம்) பட்டபொறியின் வகைய கருமம் பொருந்தியிருக்கின்ற பழவினையின் இருக்கும் செயல்கள் என்பதறியப்படும் வழிப்பட்டனவாய் ஆகையால் நல்லறிவினை முன் செய்த ஊழே பேதைமையாக்கும்.
கருத்து: மிகுந்த அறிவுடையாரிடத்தும்குற்றங் காணப்படுதல் ஊழானாயது என்பதாம்.
அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும் திங்களும், தீங்குறுதல் காண்டுமால்;-பொங்கி, அறைப் பாய் அருவி அணி மலை நாட!- உறற்பால யார்க்கும் உறும். |
229 |
மிகுந்து கற்பாறையின்கண் பாயாநின்ற அருவிகளையுடைய மலை நாடனே! அழகிய இடமகன்ற ஆகாயத்தினின்று மிகுந்த வெண்மையான கிரணங்களை வீசுகின்ற மதியும் கோளாற் றீமை யடைதலைக் காண்கின்றோம். (ஆதலால்) உறற்பால யார்க்கும் உறும் - தமக்கு வரக்கடவ துன்பங்கள் தம்மை மாற்றும் இயல்புடையாரே யெனினும் விடாது அவரைச் சென்று பற்றி நிற்கும்.
கருத்து: வருவது வந்தே தீரும். அதை மாற்றுதலும் ஆகாது. அதன்பொருட்டு வருந்துதலும் ஆகாது.
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேற்சென்றதனால், விழுமிய வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால தீண்டா விடுதல் அரிது. |
230 |
சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும் கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாற்சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டுவந்து அரசுரிமையை எய்துவித்ததால் சிறந்த பொருள்களை விரும்பினும் விரும்பாதொழியினும் அடைதற்குரியவாய் நின்ற நன்மைகள் அவனைஅடையாது நிற்றல் இல்லை.
கருத்து: தமக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், பழமொழி, நானூறு, ஆகாது, பதினெண், உறற்பால, கீழ்க்கணக்கு, மிகுந்த, உறும், யார்க்கும், சென்று, நன்மைகள், தீரும், வந்தே, கருமம், தமக்கு, முயற்சி, மனம், நாடனே, தம்மாலும், சங்க, செய்யும், செய்வது, பலவானால், பட்ட, எதிர்த்து, வகைய