நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு

யாறு உள் அடங்கும் குளம் உள; வீறு சால் மன்னர் விழையும் குடி உள; தொல் மரபின் வேதம் உறுவன பாட்டு உள; வேளாண்மை வேள்வியோடு ஒப்ப உள. |
51 |
ஆறுகள் தம்முள் அடங்கத்தக்க குளங்களும் உள்ளன. அரசர்களால் விரும்பப்படும் குடிகளும் உள்ளன. வேதக் கருத்துக்களையுடைய பழைய தனிப் பாட்டுகளும் உள்ளன. வேள்விக்கு நிகரான ஈகைகளும் உள்ளன.
எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான், ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச் செறிவு உடையான் சேனாபதி. |
52 |
உழவு மாடுடையவன் வேளாளன். ஒரு காலால் பெடையை வயப்படுத்துவதான கோழியைப் போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன். அழகும் அறிவும் உடையவள் வாழ்க்கைத் துணை. சேனையோடு ஒன்றுபட்டு உடனுறைபவன் சேனாபதி.
யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர் கடும் பரி மாக் காதலித்து ஊர்வர்; கொடுங் குழை நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை அல்லார் உவப்பது கேடு. |
53 |
யானையை உடையவர்கள் அதன் சினத்தை விரும்புவார்கள். அரசர்கள் விரைந்து செல்லும் குதிரையை விரும்புவார்கள். நல்லியல்புடைய ஆடவர்கள் நன்மங்கையரின் நாணத்தை விரும்புவார்கள். தீய ஆடவர்கள் தீய பெண்களின் தீதையே விரும்புவர்.
கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின் துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின் ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின் என்ன கடவுளும் இல். |
54 |
ஒருவனுக்குக் கண்ணைப் போலச் சிறந்த உறுப்பில்லை. குலமகளுக்குக் கணவனைப் போல் நெருங்கிய உறவினர் வேறில்லை. பெற்றோருக்கு மக்களைப் போல ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை. குழந்தைகளுக்குத் தாயைப் போல கடவுள் வேறெதுவுமில்லை.
கற்றன்னர், கற்றாரைக் காதலர்; கண்ணோடார் செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர், தெற்றென உற்றது உரையாதார்; உள் கரந்து பாம்பு உறையும் புற்ற அன்னர், புல்லறிவினார். |
55 |
கல்வியறிவுடையவர்களுடன் விரும்பி உடனிருப்பவர்கள், கல்வியறிவுடையவர்களுக்கு இரக்கம் இல்லாதவர்கள் இடர் செய்வாருக்கு ஒப்பாவர். உண்மையைத் தெளிவாகச் சொல்லாதவர்கள் பகைவருக்கு நிகராவர். சிற்றறிவுடையோர் பாம்புப் புற்றுக்கு ஒப்பாவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இல்லை, நான்மணிக்கடிகை, பதினெண், விரும்புவார்கள், கீழ்க்கணக்கு, ஆடவர்கள், சிறந்த, வேறில்லை, ஒப்பாவர், வேளாளன், சங்க, மன்னர், உடையான், சேனாபதி, உவப்பர்