முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » நாலடியார் » 7.சினம் இன்மை
நாலடியார் - 7.சினம் இன்மை
மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதமின்மை நன்று. |
61 |
தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின் முடிகிற்கும் உள்ளத் தவர். |
62 |
ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் நெருங்கி மிகவும் அவமதிப்பு வந்த போதிலும், அதற்குக் கலங்காது எடுத்த காரியத்தை நிறைவேற்றும் மனவலிமை மிக்கவர், சிறிதே இடர் கண்டபோதெல்லாம் சினத்தைப் பொறுத்துத் தாங்காமல், அழியாச் சிறப்புடைய இனிய உயிரை விடுவரோ? (மனவலிமைமிக்கவர் கண்டதற்கெல்லாம் சினம் கொள்ளாமல் சாந்தமாயிருப்பர். முந்திக்குரிய உயிர் ஆதலின் அழியா உயிர் என்றார்).
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. |
63 |
ஒருவன் நா காவாமல் வாய் திறந்து சொல்லும் சினச்சொல், இடைவிடாது தன்னையே வருத்தும் ஆதலால், ஓயாது ஆராய்ந்தறிந்த அறிவையும், கேள்வி ஞானத்தையும் உடைய சான்றோர், எப்போதும் சினம் கொண்டு கடுமையான சொற்களைச் சொல்லமாட்டார்கள். (பிறர் மீது சினம் கொண்டு தாக்கும் கடுஞ்சொற்கள் திருப்பித் தம்மையே தாக்கும். ஆதலால் ஞானிகள் கடுமையான சொற்களைச் சொல்ல மாட்டார்கள்).
நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாம் கீழ். |
64 |
மேலோர், தமக்கு நிகா¢ல்லாதவர் தம்மை எதிர்த்து நன்மையற்ற தீய சொற்களைச் சொன்னால், அதற்காக மனம் புழுங்கிச் சினம் கொள்ளார். ஆனால் கீழ்மக்களோ, பிறர் கூறும் இழி சொற்களையே மனத்தில் நினைத்து நினைத்து, பிறா¢டம் சொல்லிச் சொல்லி, மேலும் மேலும் சினம் அடைந்து ஆற்றாது துள்ளிக் குதித்து தூணில் முட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வர்.
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை. |
65 |
வாலிபப் பருவம் உடையவனது புலனடக்கமே அடக்கம் எனப்படும். நிறைந்த பொருள் இல்லாதவனது கொடையே பயனுள்ள கொடையாம். அவை போல, எல்லா எதிர்ப்புகளையும், வெல்லத்தக்க உடல் வலிமையும், உள்ள உறுதியும் உடையவன், சினத்தைப் பொறுத்துக்கொள்ளும் பொறுமையே சிறந்த பொறுமை ஆகும்.
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம் குடிமையான் வாதிக்கப் பட்டு. |
66 |
மந்திரித்து இட்ட திருநீற்றினால் உடனே சீற்றம் தணிந்து படம் அடங்கும் பாம்பைப் போல, தங்கள் உயர்குலப் பெருமையால் தடைசெய்யப்பட்டு, கல்லால் எறிந்தது போல் கீழ் மக்கள் வாயிலிருந்து வரும் சொற்களை, யாவரும் காண, பொ¢யோர் சினம் கொள்ளாது பொறுத்துக்கொண்டு நல்லொழுக்க நெறியிலே தமது அறிவைச் செலுத்துவர்.
மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று. |
67 |
பகைவராக நின்று அப்பகைமைப் பண்புக்கேற்பக் காரியங்களைச் செய்யும்போது, தாமும் எதிர்த்துப் பகைமை கொள்ளாதவருடைய பொறுமையை, 'இயலாமையாகிய பலவீனம்' என்று கூறமாட்டார்கள், அறிஞர்கள். அப்பகைவர், தம் தீமையை அடக்கிக் கொள்ளாது மேலும் கொடுமைகள் செய்தாலும் தாம் அவர்களுக்குத் திருப்பித் தீங்கு செய்யாதிருத்தல் நல்லது.
நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம். |
68 |
கீழ் மக்களின் சினம் நெடுங்காலம் கழிந்தாலும் தணியாது மேன்மேல் வளரும். ஆனால் புகழ் பெற்ற மேன் மக்களின் சினமானது, சுட வைக்கும் போது தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போல, தானாகவே தணியும். (இயல்பில் குளிர்ச்சியும், பிறர் சுடவைத்தால் வெம்மையும் நீர்க்கு இருப்பது போல் பொ¢யோர் குணத்திற்கும் உண்டு. பிறர் துன்புறுத்தும் வரை உள்ளம் சினம் கொண்டாலும், பிறர்க்கு யாதொரு துன்பமும் செய்யாது அச்சினம் தானே தணியும் என்பது கருத்து).
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம் தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். |
69 |
தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவா¢டம் இல்லை.
கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற் பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. |
70 |
சினம் கொண்டு நாய் தமது உடம்பைக் கடிப்பதைப் பார்த்தும், அதற்குப் பதிலாகத் தம் வாயினால் நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகில் இல்லை! அதுபோல, தகுதியின்றி, கீழ் மக்கள் கீழ்த்தரமான சொற்களைச் சொல்லும்போது மேன் மக்கள், அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வார்களோ? சொல்லமாட்டார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
7.சினம் இன்மை - Naaladiyar - நாலடியார் - Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - சொற்களைச், அடக்கம், சான்றோர், கொண்டு, மேலும், மக்கள், கொடையே, நினைத்து, தமக்கு, கொள்ளாது, மக்களின், தணியும், உபகாரம், நெடுங்காலம், செய்தாலும், திருப்பித், ஆற்றாமை, பொ¢யோர், சொல்லமாட்டார்கள், நடக்கட்டும், சிறிதும், நடப்பாரும், தலைமேல், இலக்கியங்கள், பாரும், நல்லது, சினத்தைப், கடுமையான, literature, ஆதலால், அறிவுடையார், கேள்வி, தாக்கும்