ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கண் எச்சில் கண் ஊட்டார்; காலொடு கால் தேயார்; புண்ணிய ஆய தலையோடு உறுப்பு உறுத்த! - நுண்ணிய நூல் உணர்வினார். |
41 |
ஒருவன் தன் கண்ணிற்கு மருந்து எழுதிய கோல்கொண்டு அவ்வெச்சில் கழியாது தங்கண்ணிற்கு அம்மருந்து ஊட்டார், தங் காலோடு கால் தேயார், புண்ணிய மாய பொருள்களைத் தம் தலையின்கண்ணும் மற்றை உறுப்பின் கண்ணும் உறுத்துக; நுண்ணிய நூலை யுணர்வார்.
கருத்துரை: ஒருவர் கண்ணெழுதிய கோலைச் சுத்தம் செய்யாமல் பிறர் கண்ணிற் செலுத்தக்கூடாது. காலொடு கால் தேய்க்கலாகாது. புனிதமான பொருள் கிடைத்தால் அதனைத் தலையிலும் கண் முதலிய உறுப்புக்களிலும் ஒற்றிக்கொள்க.
மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்; நீர் ஆடியபின், ஈர்-ஆறு நாளும் இகவற்க!' என்பதே - பேர் அறிவாளர் துணிவு. |
42 |
தம் மனைவியர்க்குப் பூப்பு நிகழ்ந்தால், மெய்யுறலாகாத நாள் மூன்றின்கண்ணும் அவரை நோக்கார், நீராடிய பின்பு பன்னிரண்டு நாளும் அகலாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு.
கருத்துரை: மனைவியர்க்கு மாதப்பூப்பு நிகழ்ந்தால் மூன்று நாளளவும், அவர் முகத்தைக் கணவன் காணலாகாது. மூன்று நாளுங்கழிந்து தலைமுழுகினபின் பன்னிரண்டு நாளளவும் அவரைப் பிரிதலாகாது.
உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
உச்சிஅம் போழ்தோடு, இடை யாமம், ஈர்-அந்தி, மிக்க இரு தேவர் நாளோடு, உவாத்திதி நாள், அட்டமியும், ஏனைப் பிறந்த நாள், இவ் அனைத்தும் ஒட்டார்-உடன் உறைவின்கண். |
43 |
உச்சியம்பொழுதும், நடுக் கங்குலும், மாலையுங் காலையும், மிக்க இருதேவர் நாளாகிய ஆதிரையும் ஓணமும், உவாவும், அட்டமியும், தாம் பிறந்த நாளும் என இந்நாட்களின்கண் தம் மனைவியரோடு உடனுறைதலின்கண் நல்லோர் உடன்படார்.
கருத்துரை: நடுப்பகலிலும் நள்ளிரவிலும் மாலையிலுங் காலையிலும் திருவாதிரையிலும் திருவோணத்திலும், அமாவாசை பௌர்ணமியிலும் அட்டமியிலும் பிறந்த நாளிலும் கலவியாகாது.
நாழி முதலியவற்றை வைக்கும் முறை
(இன்னிசை வெண்பா)
நாழி மணைமேல் இரியார்; மணை கவிழார்; கோடி கடையுள் விரியார்; கடைத்தலை, ஓராது, கட்டில் படாஅர்; அறியாதார்- தம் தலைக்கண் நில்லாவிடல்! |
44 |
நாழியை மணைமேல் இருத்தார். மணையைக் கவிழ்த்து வையார், புத்தாடையைத் தலைக்கடையின்கண் விரியார், பலருங் புகுதுங் கடைத்தலைக்கண் ஆராயாது கட்டிற்படார்; தம்மை அறியாதவர் முன்பு நில்லாது விடுக.
கருத்துரை: அளக்கும் படியை மணைமேல் வைத்தலும், மணையைக் கவிழ்த்து வைத்தலும், புத்தாடையைத் தலைக்கடையில் விரித்தலும், தலைக்கடையிற் கட்டிலிட்டுப் படுத்தலும் ஆகா. தம்மை யறியாதா ரெதிரில் நிற்காதிரு.
பந்தலில் வைக்கத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துடைப்பம், துகட் காடு, புல் இதழ், செத்தல் கருங் கலம், கட்டில் கிழிந்ததனோடு, ஐந்தும், பரப்பற்க, பந்தரகத்து! |
45 |
துரால் சீக்குந் துடைப்பமும், துகளோடு கூடிய துராலும், பூவின் புறவிதழும், பழங் கருங்கலங்களும், கிழிந்த கட்டிலும் என இவ்வைந்தும் மணப்பந்தரின் கீழ்ப்பரப்பா தொழிக.
கருத்துரை: திருமணப்பந்தலின்கீழ்த் துடைப்பம், செத்தை, பூவின் புறவிதழ், பழங் கரிப்பானை. கிழிந்த கட்டில் என்னுமிவைகளைப் பரப்பலாகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, வெண்பா, நாளும், நாள், இலக்கியங்கள், ஆச்சாரக், மணைமேல், கால், கட்டில், பதினெண், சிந்தியல், பிறந்த, கோவை, இன்னிசைச், கீழ்க்கணக்கு, மணையைக், நாழி, அட்டமியும், விரியார், வைத்தலும், பூவின், பழங், கிழிந்த, துடைப்பம், மிக்க, புத்தாடையைத், தம்மை, கவிழ்த்து, துணிவு, தேயார், புண்ணிய, காலொடு, ஊட்டார், சங்க, செய்யக், நுண்ணிய, காலமும், நாளளவும், உடன், மூன்று, பன்னிரண்டு, நோக்கார், நிகழ்ந்தால், இன்னிசை