திருவழுந்தூர் சிவக்கொழுந்து
1
இரவு எட்டு அடித்து முப்பதாவது நிமிஷம்
ரயில் ஐயம்பேட்டை ரயில் ஸ்டேஷனில் வந்து நின்றது. பளிச்சென்று வீசிய
மின்னலில் ஸ்டேஷன் கட்டடம், பிளாட்பாரம், அப்பால் அடர்ந்து வளர்ந்திருந்த
மரங்கள் எல்லாம் ஒரு கணம் தெரிந்து அடுத்த கணத்தில் மறைந்தன. மின்னலுக்குப்
பிறகு இருட்டு முன்னை விடப் பதின்மடங்கு அதிகமாகத் தோன்றிற்று. மினுக்
மினுக்கென்று தோன்றிய ஸ்டேஷன் லாந்தர் அந்த இருட்டை எடுத்துக் காட்டுவதற்காகப்
போட்ட வெளிச்சமாகக் காணப்பட்டது, 'நீ என்ன என்னை எடுத்துக் காட்டுவது?'
என்று இருள் கோபங் கொண்டு அந்த லாந்தரை அமுக்கிக் கொன்றுவிடக் கவிந்து
வருவது போலிருந்தது.
சில பேர் ரயிலில் ஏறி விட்டால் உடனே அவர்கள் கண்ணைச் சுற்றத் தொடங்கி விடுகிறது. வண்டி இரண்டு அசைப்பு அசைந்ததும் தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் எனக்கு ரயிலில் தூங்க முடிவதே இல்லை. அதிலும் இடியும் மின்னலுமாய் இருந்த அந்த இரவில் தூக்கம் எப்படி வரப் போகிறது? ராத்திரி முழுவதும் ரயிலில் கழித்தாக வேண்டுமே என்று கவலையாயிருந்தது.
ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ரயிலின் ஆட்டத்தில் படிப்பதும் சுலபமாக இல்லை. இந்த நிலைமையில், "ஐயம்பேட்டை ஐயம்பேட்டை!" என்ற போர்ட்டரின் குரலைக் கேட்டதும் சாத்தியிருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியே பார்த்தேன். கதவைத் திறக்கும் போதே 'தவுல் கந்தப்பனுக்கு இந்த ஊர்தானே?' என்ற நினைவு எழுந்தது.
ஐயம்பேட்டைக் கந்தப்பன் என்று நீங்கள் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் அவருடைய ஊரையும், பெயரையும் நான் மாற்றியிருக்கிறேன். இந்தப் பெயர் பெற்ற தவுல் வித்வானை நந்தி தேவரின் அவதாரம் என்றே சிலர் சொல்வார்கள். அவர் தவுல் வாசித்தால் அது கேவலம், தவுலாக இராது. தேவ துந்துபி என்று சொல்லும்படியாகத்தான் இருக்கும். ஒரு சமயம் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை இவருடைய தவுல் வாசிப்பைக் கேட்டாராம். உடனே தம்மிடமிருந்த மிருதங்கம், கஞ்சிரா அவ்வளவையும் உடைத்து எறிந்து விட்டு, ஆறு மாதகாலம் தோல் வாத்தியத்தையே தொடாமல் இருந்தாராம்.
அவ்வளவு சிறந்த தவுல் வித்வான் ஐயம்பேட்டைக் கந்தப்பன். அதோடு தேசிய விஷயங்களில் அதிக சிரத்தையுள்ளவர்.
கதர் தான் கட்டுவார். காங்கிரஸ் மாநாடுகளில் அவரை அடிக்கடி பார்த்திருந்ததுடன், ரொம்ப ரசமாகப் பேசக் கூடியவர் என்றும் தெரிந்து கொண்டிருந்தேன். ஆகையினால் தான் அவரைப் பற்றிய நினைவு உண்டாயிற்று. ஒரு வேளை கந்தப்பன் தப்பித் தவறி இதே வண்டியில் வந்து ஏறினால் இராத்திரிப் பொழுது போவது தெரியாமல் போகுமல்லவா? என்று எண்ணினேன்.
இப்படி எண்ணியதுதான் தாமதம். இரண்டு மூன்று பேர் பிளாட்பாரத்தில் அவசர அவசரமாக நடந்து வருவது தெரிந்தது. யார் என்று உற்றுப் பார்த்தேன். முதலில் வந்த ஆசாமி, தவுல் கந்தப்பன் தான்! இதைப் பற்றி நான் ஆச்சரியப்பட்டு முடிவதற்குள்ளாக நானிருந்த வண்டியின் கதவு திறக்கப்பட்டது. கந்தப்ப பிள்ளை உள்ளே ஏறினார். பின்னோடு வந்தவர்கள் இரண்டு தவுல்களையும் பெட்டி படுக்கைகளையும் வண்டியில் ஏற்றினார்கள்.
"எல்லா சாமானும் வந்துடுத்தா?"
"எல்லாம் வந்துடுத்துங்க."
"சரியா இருக்கா, பார்த்திடுங்க."
"போய்ட்டு வரீங்களா, தம்பீ!"
"போய்ட்டு வரோம், அண்ணே!"
"ஓடு! ஓடு! வண்டி கிளம்பிட்டுது. பக்கத்து வண்டியிலே ஏறிக்கோ! விழுப்புரத்திலே தூங்கிடாதே! தெரியுதா?"
ரயில் நகரத் தொடங்கியது. ஒரு நிமிஷத்திலே ஸ்டேஷன் விளக்கு மறைந்தது. காடாந்திரமாகக் கவிந்திருந்த இருளைக் கிழித்துக் கொண்டு ரயில் துரிதமாகச் சென்றது.
"என்ன, கந்தப்பபிள்ளை சௌக்கியமா?" என்று கேட்டேன்.
கந்தப்பபிள்ளை திடுக்கிட்டு, என்னைத் திரும்பிப் பார்த்தார். "சாமி நீங்களா? சௌக்கியந்தானுங்க. உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்" என்றார்.
"உம்மைப் பார்த்தது எனக்கு அதைவிட சந்தோஷம். ஒரு வேடிக்கையைக் கேளுங்கள். ஐயம்பேட்டை ஸ்டேஷனில் வண்டி நின்றதும் உம்மை நான் நினைத்துக் கொண்டேன். தப்பித் தவறி இதே வண்டியில் நீரும் வந்து ஏறினால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று எண்ணினேன். அடுத்த நிமிஷம் பார்த்தால் நீரே வந்து இந்த வண்டியில் ஏறுகிறீர். நாளைக்கு சென்னை பட்டினத்தில் என் ஸ்நேகிதர்களிடம் நான் சொன்னால் நம்பவே மாட்டார்கள். 'இயற்கைக்கு விரோதம்' என்பார்கள்" என்றேன்.
"எந்த இயற்கைக்கு விரோதம், ஸ்வாமி" என்று கந்தப்பபிள்ளை கேட்டார்.
"இது என்ன கேள்வி! எந்த இயற்கைக்கு விரோதம் என்றால்...?"
"இல்லை, ஐயா! இப்போது பாருங்கள். இந்த ரயில் இருக்கிறது. தண்டவாளத்தில் ஓடுவது இதன் இயற்கை. அந்த இயற்கையை நம்பித்தான் நாம் எல்லோரும் ரயிலில் ஏறுகிறோம். ஆனால் திடீரென்று எப்போதாவது ஒரு தடவை ரயில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விடுகிறது. அதனால் விபத்து நேரிடுகிறது. இந்த விபத்தை நேரில் பார்க்காதவர்கள் 'அதெல்லாம் இல்லை; அப்படி ஒரு நாளும் ரயில் தண்டவாளத்தை விட்டு நகர்ந்திராது; இயற்கைக்கு விரோதம்' என்று சொல்லலாம் அல்லவா?"
இதற்கு என்ன பதில் சொல்வதென்று நான் யோசிப்பதற்குள் அவர் மேலே பேசத் தொடங்கி விட்டார், "இதோ கேளுங்கள். வானத்தில் இடி இடிக்கிறது. இந்த ஐந்து நிமிஷத்தில் பத்து இடி இடித்துவிட்டது. இம்மாதிரி உலகத்தில் தினம் பதினாயிரம், லக்ஷம் இடி இடித்துக் கொண்டுதானிருக்கிறது. அந்த இடியெல்லாம் பூமியின் மேல் விழுந்தால், இந்த உலகத்திலே ஒரு மனுஷன், ஒரு பிராணி உயிரோடு இருக்க முடியுமா? முடியாது. ஆகையால், இடி இடித்துவிட்டு ஆகாயத்திலே மறைந்து விடுவதுதான் இயற்கை. ஆனால் எப்போதோ ஒரு தடவை இடியானது பூமியின் மேல் விழுகிறது. அதுவும் ஒரு மனுஷன் மேல் விழுகிறது. அந்தப் பாழும் இடி அவனைக் கொல்லாமல் அவன் கண்ணன் மட்டும் கொண்டு போய் விடுகிறது! இதற்கு என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமி! இது இயற்கையா? இயற்கைக்கு விரோதமா?"
இப்படிக் கேட்டு விட்டு கந்தப்பன் என்னைப் பார்த்தார். நானும் அவரைப் பார்த்தேன். வேறு எனக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
"என்ன சாமி, பேசாமல் இருக்கீங்க? சொல்லுங்களேன்? இடி விழுகிறது இயற்கையாய் இருந்தால், நம் எல்லோர் தலையிலும் ஏன் இடி விழவில்லை? நம் எல்லார் கண்ணும் ஏன் அவிந்து போகவில்லை? அது இயற்கைக்கு விரோதமாய் இருந்தால் ஒருத்தர் மேல் மாத்திரம் எப்படி விழுந்திருக்கும்! அவர் கண் மட்டும் எப்படிப் போயிருக்கும்? இது நடக்கக் கூடியதா ஸ்வாமி? நடக்கக் கூடியது இல்லாவிட்டால் எப்படி நடந்தது?"
கந்தப்ப பிள்ளையின் அப்போதைய அறிவுத் தெளிவைப் பற்றி எனக்குச் சந்தேகம் உண்டாயிற்று. தஞ்சாவூர் ஜில்லாவில் இன்னும் மதுவிலக்குச் சட்டம் வரவில்லை என்பது ஞாபகம் வந்தது. ஒரு வேளை... அப்படி இருக்குமோ? சே! சே! ஒரு நாளும் இல்லை. அவர் அந்த ஊர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். காந்திக் குல்லா போட்டுக் கொண்டு கள்ளுக்கடை மறியல் செய்தவர். அப்படிப்பட்ட மனுஷரா மதுபானம் செய்திருப்பார்? இல்லவே இல்லை.
பின்னே, ஏன் இப்படி என்னவெல்லாமோ சம்பந்தமில்லாமல் பேசுகிறார்? இடியாவது? தலையில் விழுவதாவது? இயற்கைக்கு விரோதமாவது? எல்லாம் சர்வ பேத்தலாகவல்லவா இருக்கிறது?
பேச்சை மாற்றுவதற்காக நான், "பட்டணத்துக்குத் தானே வருகிறீர்கள்? அங்கே நாளைக்கு கச்சேரியாக்கும்! கல்யாணக் கச்சேரியா?" என்று கேட்டேன்.
"ஆமாம் சாமி! நாளைக்குப் பட்டணத்திலே கச்சேரிதான்" என்றார் கந்தப்ப பிள்ளை.
இப்படிச் சொல்லிவிட்டு, தவுலை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். அதன் உறையை அவிழ்த்தார். தவுலின் இரண்டு புறத்தையும் தடவிக் கொடுத்தார். ஒரு தாயார் தன்னுடைய குழந்தையின் அழகான கன்னங்களைத் தடவுவதுபோல் அவ்வளவு செல்லமாகத் தடவினார்!
மனுஷர் இந்த இரயில் வண்டியில் தனித் தவுல் கச்சேரி ஆரம்பிக்கப் போகிறாரா என்ன? தூக்கம் வருகிறதற்கு நல்ல உபாயந்தான்! - இப்படி நினைத்து மனத்திற்குள் சிரித்துக் கொண்டேன். அப்போது அவர் சொன்னார்:
"சாமி! நானும் தினம் பொழுது விடிந்தால் தவுல் அடித்துக் கொண்டுதானிருக்கிறேன். எத்தனையோ நாதஸ்வர வித்வான்களுக்கு வாசித்திருக்கிறேன். ஆனால் நேற்றைக்கு ராத்திரி நான் பரவசமாய் வாசித்தது போல் வாசித்தது வெகு அபூர்வம். இந்தத் தோல் வாத்தியத்திலிருந்து நேற்று என்னெல்லாம் நாதங்கள் வந்தன? நானா வாசித்தேன்? இல்லை, இல்லை. நந்தி பகவானே என் விரல்களிலே வந்து உட்கார்ந்து கொண்டார்!
இதைக் கேட்டதும் அவருடைய பேச்சில் எனக்கு சிரத்தை உண்டாயிற்று. சற்று முன் அவர் தலைகால் இல்லாமல் பேசியதெல்லாம் முதல் நால் கச்சேரியின் ஆவேசந்தான் என்று அறிந்து கொண்டேன்.
"அப்படியா? எந்த ஊரில் ஐயா, அவ்வளவு நல்ல கச்சேரி? நாயனம் யார் வாசித்தது?" என்று கேட்டேன்.
"திருவழுந்தூர் சிவக்கொழுந்து என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா, சாமி?"
"திருவழுந்தூர் சிவக்கொழுந்தா? அது யார்? நான் கேட்டதில்லையே?" என்றேன்.
வெகு காலத்துக்கு முன்பு சிவக்கொழுந்து என்று பிரசித்து பெற்ற நாயனக்காரர் இருந்ததாக நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அவர் நான் பிறப்பதற்கு முன்னாலேயே காலஞ்சென்ற மனிதர். அவருக்குத் திருவழுந்தூருமில்லை!
"கேட்டதே இல்லையா? நினைத்துப் பாருங்க சாமி. 1929-30இல் நீங்க எங்க இருந்தீங்க?"
"ஓஹோ! 1929-30 லா? பாதி நாள் சர்க்கார் விருந்தாளியா இருந்தேன். பாக்கிப் பாதி நாள் சேலம் ஜில்லாவில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெகு தூரத்திலுள்ள கிராமத்தில் இருந்தேன்.
"சரிதான்; அதனால் தான் நீங்கள் கேள்விப்படவில்லை. திருவழுந்தூர்த் தம்பி அந்த இரண்டு வருஷ காலம்தான் பிரசித்தமாயிருந்தது. ஆனால் அந்த இரண்டு வருஷத்திலேயே அது சங்கீத உலகத்தையே ஜயித்துவிட்டது."
எனக்குப் பகீர் என்றது. கலை உலகில் மகா மேதாவிகளாக கிளம்பும் சிலர் அற்பாயுஸிலே இறந்து விடுவது சகஜமாயிருக்கிறதல்லவா? உடனே, கிட்டப்பாவின் ஞாபகம் எனக்கு வந்தது.
"ஐயோ, பாவம்! கிட்டப்பா மாதிரி..."
"இல்லீங்க, சாமி, இல்லீங்க! உங்கள் வாயாலே, அப்படிச் சொல்லாதீங்க. தம்பி தீர்க்காயுஸா இருக்கட்டும்னு சொல்லுங்க."
"ரொம்ப சந்தோஷம், ஐயா! தீர்க்காயுளாய், சிரஞ்சீவியாய், என்றும் பதினாறாய், மார்க்கண்டனைப் போலிருக்கட்டும். ஆனால், பெயர் ஏன் இப்போது மறைந்து போச்சு? ஏன் அவர் வாத்தியம் வாசிக்கிறதில்லை?"
"ஏன் வாசிக்கிறதில்லை? வாசித்தால் உலகம் தாங்காது. எல்லாரும் பைத்தியம் பிடித்துப் போய் விடுவார்கள். அதனால் தான் நான் கூட அடிக்கடி தம்பியைப் பார்க்கப் போகிறதில்லை. நேற்று ராத்திரி அது வாசித்துக் கேட்டேன். அப்போது முதல் வெறி பிடித்தது போலிருக்கு. தவுலைக் கிழித்து எறிந்து விட்டு, 'இனி மேல் ஒருத்தனுக்கும் தவுல் வாசிக்கிறதில்லை' என்று சபதம் பண்ணத் தோன்றுகிறது. அடாணா ராகம் ராத்திரி வாசிச்சுது பாருங்கள்! ஒரு நிமிஷம் எனக்குக் கண்ணிலே ஜலம் வந்தது. மறு நிமிஷம் எழுந்து ஆனந்தக் கூத்தாடலாம் என்று தோன்றிற்று. அதை நினைக்கும் போதே மயிர்க் கூச்சல் எறிகிறது."
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவழுந்தூர் சிவக்கொழுந்து - Thiruvazhundhur Sivakozhundhu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், தவுல், அவர், இல்லை, அந்த, என்ன, சாமி, ரயில், இயற்கைக்கு, இரண்டு, வந்து, வண்டியில், கந்தப்பன், மேல், தான், நிமிஷம், விரோதம், கேட்டேன், விட்டு, ரயிலில், கொண்டு, எனக்கு, ஐயம்பேட்டை, ராத்திரி, ஸ்டேஷன், எல்லாம், வாசிக்கிறதில்லை, எந்த, கொண்டேன், ஸ்வாமி, வந்தது, வாசித்தது, விழுகிறது, சந்தோஷம், அதனால், வெகு, கந்தப்பபிள்ளை, அவ்வளவு, விடுகிறது, வண்டி, பிள்ளை, எப்படி, ரொம்ப, உண்டாயிற்று, கந்தப்ப, யார், இப்படி, உடனே, பார்த்தேன்