திருவழுந்தூர் சிவக்கொழுந்து
2
கதையே அடியே பிடித்துச் சொல்லும்படி நான்
ரொம்பவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் தவுல் கந்தப்ப பிள்ளை
சொல்லத் தொடங்கினார்.
"திருவழுந்தூர்த் தம்பியை நான் முதன் முதலில் சந்தித்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு மேலிருக்கும். அப்போதுதான், அதனுடைய பெயர் பிரபலமாக ஆரம்பித்திருந்தது. ஒரு கோயில் கும்பாபிஷேகத்தில் தம்பியின் கச்சேரிக்கு என்னை தவுலுக்கு அழைப்பதற்கு வந்திருந்தார்கள். ஒரு மைனர் பையனின் கச்சேரிக்குப் போய் வாசிக்கிறதாவது என்று நினைத்து முதலில் சாக்குப் போக்குச் சொன்னேன். ஆனால் வந்தவர்கள் என்னை விடவில்லை. 'உங்களைத்தான் தவுலுக்கு அமர்த்த வேணுமென்று சிவக்கொழுந்து பிள்ளை பிடிவாதமாய்ச் சொல்லியிருக்கிறார். நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்' என்று வற்புறுத்தினார்கள். உடனே அப்படிப்பட்ட பையனைப் பார்க்க வேணுமென்று எனக்கும் தோன்றி, சம்மதம் கொடுத்து அச்சாரமும் வாங்கிக் கொண்டேன்.
கச்சேரி செய்யக் கிளம்பி இரண்டு வருஷத்துக்குள்ளே பிள்ளையாண்டான் இவ்வளவு பேர் எடுத்திருக்கிறானே, ஏதோ சுமாராய் ஊதுவான் என்று நினைத்துக் கொண்டுதான் போனேன். ஆனால், தம்பி நாயனத்தை வாயிலே வைத்து ஊத ஆரம்பித்தானோ இல்லையோ, இது சுமார் வாசிப்பில்லை, பிரமாதம் என்று தெரிந்து போயிற்று. அரைமணி வாசிப்பதற்குள் எனக்குப் பரவசமாய்ப் போய்விட்டது. மன்னார்குடி சின்னப்பக்கிரி, செம்பொன்னார் கோயில் ராமசாமி முதலிய மகாவித்வான்களின் பரம்பரைக்கு வாரிஸாக வந்திருப்பவன் இந்தப் பிள்ளையாண்டான் தான் என்று தீர்மானித்து விட்டேன்.
என்னைத்தான் தவுலுக்கு வைக்க வேண்டுமென்று தம்பி வற்புறுத்திய காரணம் என்னவென்று தெரிய வந்தது. என்னுடைய தவுல் வாசிப்பின் மேல் சிவக்கொழுந்துக்கு அபாரப் பிரியம். அது மட்டுமல்ல, கொஞ்ச காலமாகத் தம்பி எங்கே கச்சேரிக்குப் போனாலும் அங்கே சண்டையாக முடிந்து கொண்டிருந்ததாம். தம்பியின் மேல் மற்ற நாதஸ்வர வித்வான்களுக்கெல்லாம் அவ்வளவு அசூயை உண்டாகியிருந்தது.
சாமி! புகழ் என்பது இருக்கிறதே, அது மகா பொல்லாதது. ஒரு மனுஷனுக்கு ஒரு பக்கத்தில் எவ்வளவு புகழ் பெருகுகிறதோ, அவ்வளவுக்கு இன்னொரு பக்கம் அவன் மேல் கோபமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும், கலை, வித்வத் என்று சொன்னால் போதும். 'நேற்று முளைத்த இந்தப் பையன் இவ்வளவு நன்றாக வாசிக்கிறதா? இவ்வளவு செல்வாக்கு அடைகிறதா?' என்று எல்லாருக்கும் ஒரே வயிற்றெரிச்சல். ஆகவே, நாதஸ்வரக்காரர்கள் கூடுமிடமெல்லாம் திருவழுந்தூர்த் தம்பியை இகழ்ந்து பேசுவதே வேலையாய்ப் போயிருந்தது.
அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால் ஒரு பிரசித்தமான கோயிலில் பங்குனி உற்சவத்துக்குச் சிவக்கொழுந்தை வரவழைத்திருந்தார்களாம்.
உள்ளூர் நாயனக்காரர் ஒருவரும் வாத்தியம் வாசித்தார். உற்சவம் ஆரம்பித்ததிலிருந்து இரண்டு கோஷ்டிக்கும் புகைந்து கொண்டிருந்தது. திருக்கல்யாண உற்சவத்தின் போது மண்டபத்தில் கச்சேரி நடந்தது. தம்பி வாசித்துக் கொண்டிருக்கையில் உள்ளூர் நாயனக்காரரும் அவருடைய ஸெட்டைச் சேர்ந்தவர்களும் பின்னால் உட்கார்ந்து கேலி செய்து கொண்டிருந்தார்கள். 'நாயனத்தை நிமிர்த்திப் பிடிக்கிறதா, தலை கீழாய்ப் பிடிக்கிறதா என்று தெரியாத பசங்களெல்லாம் கச்சேரி பண்ண வந்துடறாங்க" என்று ஒருத்தன் சொன்னானாம். 'கேட்கிறவனுங்க ஞானசூன்யங்களாயிருந்தால், எவன் வேணுனாலும் தான் வாசிக்க வருவான்' என்றானாம் இன்னொருவன். இதெல்லாம் சிவக்கொழுந்தின் காதில் பட்டும் படாமலும் விழுந்து கொண்டிருந்த போதிலும், அதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் தம்பி வாசித்துக் கொண்டிருந்தது. ஆனால் உள்ளூர் ஸெட்டின் தவுல்காரர் ஒரு தடவை 'தாளம் தப்பிப் போச்சு!' என்று சொன்னபோது தம்பிக்குக் கோபம் வந்து விட்டது. திரும்பிப் பார்த்து, 'யாரடா தாளம் தப்பிப் போச்சு என்று சொல்லுகிறவன்? முன்னாலேயே வந்து தாளம் போடுங்கடா!' என்று காரமாய்ச் சொல்லிற்று. தம்பியின் மேல் அபிமானம் உள்ளவர்கள் பக்கத்தில் பலர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பிரமாதமாய்க் கோபம் வந்துவிட்டது. அவர் 'இவன்கள் கிடக்கானுக, தம்பி, ரொம்ப தாளத்தைக் கண்டுட்டானுக! சோத்துக்குத் தாளம் போடறவனுகதானே! நீ பாட்டுக்கு வாசி' என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான். கலகம் முற்றி விட்டது. உள்ளூர் நாயனக்காரர் நாயனத்தைத் தூக்கி அடிக்க வந்தார். தவுல்காரர் ஒருவரையொருவர் கோலினால் அடித்துக் கொண்டார்கள். ஜாலர்களைப் பிடுங்கி எறிந்தார்கள். சற்று நேரம் ஒரே அல்லோல கல்லோலமாய்ப் போய்விட்டது. தர்மகர்த்தா, குருக்கள் முதலியவர்கள் வந்து சண்டையை விலக்கி நிறுத்தினார்கள். பிறகு யார் மேல் குற்றம் என்று விசாரணை நடந்தது. சபையிலும் இரண்டு கட்சி, சிலர் உள்ளூர் அபிமானத்தின் மேல் உள்ளூர் நாயனக்காரர் கட்சியில் சேர்ந்து கொண்டார்கள். அதிகம் பேர் தம்பியின் கட்சியில் இருந்தார்கள். ஆனால் தர்மகர்த்தா உள்ளூர்க் கட்சியில் இருந்தார். அவர் தம்பியின் மேல் தான் குற்றம் என்று தீர்மானித்து, 'நீ வாசித்தது போதும் எழுந்து போகலாம்' என்று கட்டளையிட்டார். ஆனால், கோயில் குருக்கள் ஐயாவுக்கு, தம்பியின் வாசிப்பு என்றால் உயிர். ஆகையால் அவர், 'சிவக்கொழுந்து கோயிலை விட்டுப் போனால் நானும் இதோ கிளம்பி விடுகிறேன்' என்று ஆவேசம் வந்தவர் போல் கிளம்பி விட்டார். அப்புறம் மறுபடியும் மத்தியஸ்தம் பண்ண வேண்டியதாயிற்று. இந்த மாதிரி ஒரு தடவை, இரண்டு தடவை இல்லை; பல தடவைகளில் கலகம் நடக்கவே சிவக்கொழுந்து யோசனை பண்ணி, என்னை எப்படியாவது தவுலுக்குச் சேர்த்துக் கொண்டு விட வேண்டும் என்று முடிவு செய்தது. நான் அதோடே சேர்ந்து விட்டால் அப்புறம் எவனும் வாலை ஆட்ட மாட்டான் என்று தம்பிக்கு அவ்வளவு நிச்சயம்.
இதெல்லாம் பிற்பாடு தம்பியே மனசைவிட்டுச் சொல்லித் தான் நான் தெரிந்து கொண்டேன். அது முதல் நாங்கள் இருவரும் சேர்ந்தே கச்சேரிக்குப் போகத் தொடங்கினோம். மற்ற நாயனக்காரர்களுக்கெல்லாம் இதனால் என் பேரில் காய்ச்சல், என்னை பகிஷ்காரம் பண்ணுகிறது என்றும் தீர்மானம் செய்திருந்தார்கள். ஆனால், எனக்கு என்ன வந்தது சாமீ! உண்பது நாழி, உடுப்பது நான்கு முழ கதர் வேஷ்டி. சோற்றுக்குத் துணிக்கு ஏதோ பகவான் கொடுத்திருக்கிறார். 'கிடக்கிறான்கள்' என்று நான் அலட்சியமாய்த் தான் இருந்தேன்.
அந்த சமயத்தில் அவர்களுடைய பகிஷ்காரம் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யவில்லை. தினம் பொழுது விடிந்தால் கச்சேரிதான். தம்பியின் வாசிப்போ நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருந்தது. இதற்கு முன்னாலெல்லாம் நான் பணத்துக்காகத் தவுல் வாசித்துக் கொண்டிருந்தேன். தம்பிக்கு வாசிக்க ஆரம்பித்த பிறகு, என்னை மறந்து பரவசமாய் வாசித்தேன், ஸ்வாமி! அது என்ன மனோதர்மம்? அது என்ன கற்பனை? அது என்ன பொருளுதயம்? - இத்தனைக்கும் தம்பி, பெரியவர்கள் காட்டிய வழியிலிருந்து அந்தண்டை இந்தண்டை நகரவில்லை. இந்தக் காலத்திலே போல், ஒத்துக்குப் பதில் தம்புரா சுருதி வைத்துக் கொள்ளவில்லை. தவுலுக்குப் பதில் தபலா, அப்புறம் பக்க வாத்தியத்துக்கு ஹார்மோனியம், மோர்சிங்கு - இப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.
இந்த சமயத்தில் நான் குறுக்கிட்டு, "பிள்ளைவாள்! தம்புரா சுருதியைப் பற்றி எதற்காக இவ்வளவு...?" என்று ஆரம்பித்தேன். நான் மேலே பேச அவர் இடங் கொடுக்கவில்லை.
"எனக்குத் தெரியும் சாமி, தெரியும். நீங்கள் தம்புரா சுருதியை ஆதரிக்கிறவர் என்று அந்த விவகாரம் இப்போது வேண்டாம். திருவழுந்தூர் தம்பி அப்படியெல்லாம் புது வழிக்குப் போகவில்லையென்றுதான் சொல்கிறேன். ஆனாலும் வாசிப்பு அற்புதமாயிருந்தது. தேவகானம் என்றால் தேவகானந்தான். அதற்கேற்றார் போல் நாளுக்கு நாள் செல்வாக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது, பணம் வந்து குவிந்தது.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு எவ்வளவோ சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால், ஒரே ஒரு விஷயம் மனத்திற்கு மிகவும் துன்பத்தை கொடுத்து வந்தது. கலைக்கும் வித்வானுக்கும் பெரிய சத்ரு எது தெரியாதா, சாமி! தம்பிக்கும் அந்தக் கொடிய மதுபானப் பழக்கம் இருந்தது. எப்படியாவது அந்தப் பழக்கத்திலிருந்து தம்பியை விடுவிக்க வேண்டுமென்று நான் ஆத்திரம் கொண்டிருந்தேன். அடிக்கடி ஜாடை மாடையாகச் சொன்னேன். சில சமயம் தெளிவாகவும் சொன்னேன். தம்பிக்கு, என்னிடம் ரொம்பப் பயபக்தி உண்டு. ஆகவே, நான் சொல்லும் போது பதில் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கும். கெட்ட பழக்கம் என்று அதுக்குத் தெரியாமலுமில்லை. ஆனால் விடுவதற்கு மட்டும் முடியவில்லை. ஏதோ, நான் சொல்லிக் கொண்டு வந்ததன் பயனாக, ரொம்ப மீறிப் போகாமல் கட்டுக்குள் இருந்தது. இந்த மட்டிலாவது இருக்கிறதே என்று நான் ஒருவாறு திருப்தியடைந்திருந்தேன்.
இப்படியிருக்கையில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று. தேசமெங்கும் அமளிதுமளிப்பட்டது. எனக்கு ரொம்ப நாளாகவே தேசிய விஷயங்களில் சிரத்தை உண்டு என்று உங்களுக்குத் தெரியுமே! அந்த நாளில் அடிக்கடி பொதுக் கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தேன். சில சமயம் தம்பியையும் அழைத்துக் கொண்டு போவேன். அந்தக் கூட்டங்களில் தலைவர்களுடைய பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுத் தம்பியின் மனம் கனிந்து கொண்டிருந்தது என்பதை அறிந்தேன். கடைசியில், காந்தி மகானைக் கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி வந்தது. அன்று கும்பகோணத்தில் பிரமாண்டமான கூட்டம். பட்டணமே திரண்டு வந்தது போலிருந்தது. தம்பிக்கு இரண்டு வருஷமாகக் கும்பகோணத்தில் தான் ஜாகை. நானும் அடிக்கடி கும்பகோணம் வருவேன். அன்றைய தினம் பொதுக்கூட்டத்துக்கு நானும் தம்பியும் போயிருந்தோம். கூட்டத்தில் அன்று பேசியவர்கள் எல்லாரும் ரொம்பவும் உருக்கமாகப் பேசினார்கள். என் பக்கத்திலிருந்த தம்பியின் கண்களில் ஜலம் பெருகி வழிவதைப் பார்த்தேன்.
கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தபிறகு, திடீரென்று சலசலப்பு உண்டாயிற்று. கொஞ்ச தூரத்தில் போலீஸ்காரர்கள் கையில் குண்டாந்தடிகளுடன் கூட்டமாக வருவது தெரிந்தது. கூட்டங்களைத் தடியால் அடித்துக் கலைத்து விடும்படி அன்றைய தினந்தான் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாம். ஜனங்களுக்கு இது ஒன்றும் தெரியாது. அவர்களில் பெரும்பாலோர் திரும்பிப் பார்த்து, இது என்ன சமாச்சாரம் என்று யோசிப்பதற்குள் போலீஸ்காரர்கள் திடும் பிரவேசமாக கூட்டத்திற்குள் பிரவேசித்து தாறுமாறாக அடிக்கத் தொடங்கினார்கள். உடனே, கூட்டம் கலைய ஆரம்பித்தது. இரண்டு நிமிஷத்துக்குள் முக்கால்வாசிப் பேர் ஓடிப் போய் விட்டார்கள். கடைசி வரையில் இருந்தவர்களில் அடியேனும் ஒருவன். நான் ஓடவில்லை. தோளிலும் முதுகிலும் நாலைந்து அடி வாங்கிக் கொண்ட பிறகு மெதுவாகத்தான் அங்கிருந்து சென்றேன்.
தம்பி முன்னயே ஓடிப் போய் எனக்காக ஒரு சந்தின் முனையில் காத்துக் கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் வந்து கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டழுதது. இருவரும் அதிகமாகப் பேசாமல் வீட்டை நோக்கிச் சென்றோம். வழியில் கடைத்தெருவில், ஹனுமார் கோயிலண்டை வந்ததும் தம்பி, 'நில்லுங்க, அண்ணே!' என்று கூச்சல் போட்டது. அனுமார் சந்நிதியில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தது.
"ஸ்வாமி! ஆஞ்சநேயா! இன்று முதற் கொண்டு மதுபானம் என்பதையும் கண்ணாலும் பார்க்க மாட்டேன்; கையாலும் தொடமாட்டேன். சத்தியம்! சத்தியம்" என்று பிரமாணம் செய்தது.
பாவி நான், அப்போது, சும்மா இருந்திருக்கக் கூடாதா? "தம்பி, அனுமார் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். அதிலும் கடைத்தெரு அனுமார் ரொம்ப சக்தியுள்ளவர். அவருடைய சந்நிதியில் பிரமாணம் செய்திருக்கிறாய், ஜாக்கிரதை! ஞாபகமிருக்கட்டும்" என்றேன்.
அப்போது தம்பி, "அப்படி நான் என் பிரமாணத்தை மீறினால், என் தலையில் இடிவிழட்டும்; என் கண் அவிந்து போகட்டும்" என்று உரத்த குரலில் சொல்லிற்று.
ஸ்வாமி! நிஜமாகச் சொல்கிறேன், அப்போது என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. ரோமங்கள் எல்லாம் குத்திட்டு நின்றன. 'அட பாவி! இவ்வளவு பயங்கரமான சபதம் ஏன் செய்தாய்?' என்று உரத்த குரலில் சொல்ல விரும்பினேன்; ஆனால் நா எழவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவழுந்தூர் சிவக்கொழுந்து - Thiruvazhundhur Sivakozhundhu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், தம்பி, தம்பியின், தான், மேல், இரண்டு, உள்ளூர், கொண்டு, கொண்டிருந்தது, என்ன, இவ்வளவு, வந்தது, வந்து, என்னை, அவர், தம்பிக்கு, தாளம், ரொம்ப, நானும், போல், அப்புறம், எனக்கு, அடிக்கடி, கூட்டம், அனுமார், அப்போது, தம்புரா, பதில், அந்த, ஒன்றும், கொண்டிருந்தேன், ஸ்வாமி, கட்சியில், நாயனக்காரர், தவுலுக்கு, கச்சேரிக்குப், போய், கோயில், தம்பியை, கேட்டுக், தவுல், சொன்னேன், சிவக்கொழுந்து, சாமி, வாசித்துக், தடவை, பேர், கிளம்பி, பார்க்க, கச்சேரி, பிறகு