திருவழுந்தூர் சிவக்கொழுந்து
3
சிவக்கொழுந்தினிடம் எனக்கு அபிமானம் அதிகமாவதற்கு
இன்னொரு காரணமும் சேர்ந்தது. என் தமக்கை ஒருத்தி கும்பகோணத்தில் புதுச்
செட்டித் தெருவில் இருந்தாள். நான் கும்பகோணம் போனால் அங்கேதான் தங்குவது
வழக்கம். அவள் மகள் வனஜாட்சியை இந்த மானக்கேடானா தொழிலுக்கு விடக்கூடாது.
நல்ல இடமாய்ப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும் என்று
நானும் சுந்தர காமாட்சியுமாக யோசித்து முடிவு கட்டி வைத்திருந்தோம்.
நான் கும்பகோணத்தில் இருக்கும் காலங்களில் சிவக்கொழுந்து தம்பி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் நான், "ஆகா! நம்முடைய வனஜாவுக்கும் சிவக்கொழுந்துக்கும் மட்டும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டால் எவ்வளவு மேலாய் இருக்கும்?" என்று எண்ணுவேன். என்னுடைய ஆசை நிறைவேறலாம் என்பதற்கு அறிகுறிகளும் தோன்றி வந்தன. அவர்கள் இரண்டு பேருக்கும் ஒருவர் மேல் ஒருவர் பிரியம் ஏற்பட்டு வந்ததாகத் தோன்றியது.
வனஜா, பார்க்கிறதற்கு, ரம்பை, ஊர்வசி என்று சொல்கிறார்களே அந்த மாதிரியெல்லாம் பிரமாதமாக இருக்க மாட்டாள். ஆனால், அப்படி அவலட்சணமும் இல்லை. முகத்தில் நல்ல களை. குடித்தனப் பெண் பாங்காய் இருப்பாள். ஆனால் புத்திசாலித்தனத்தில் அவளுக்கு ஈடான பெண்ணை நான் பார்த்ததே கிடையாது. ஏனோ என் மருமகளாச்சே என்று நான் சொல்கிறதாக நீங்கள் நினைக்கக் கூடாது. எனக்கே சொந்தத்திலே குழந்தை குட்டிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பற்றி நான் அப்படிச் சொல்கிறேனா? கிடையாது.
வனஜாவை சங்கீதக் கச்சேரிக்கோ நாட்டியத்துக்கோ தயார் செய்யும் உத்தேசம் எங்களுக்கு இல்லை. இந்தத் தொழில் எல்லாம் எங்கள் தலை முறையோடு போகட்டும், குழந்தைகள் எல்லாரும் குடியும் குடித்தனமுமாக இருக்கட்டும் என்று ஆசைப்பட்டோ ம். ஆகையால், வனஜாவைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பினோம். ஏழெட்டு கிளாஸ் வரையில் படித்த பிறகு பள்ளிக் கூடத்தையும் நிறுத்தி ஆயிற்று. அப்புறம் வனஜா வீட்டில் சும்மா தான் இருந்தாள்.
என்ன இருந்தாலும் பரம்பரையாக வந்த கலை போகுமா? வனஜாவுக்கு சங்கீதம் நாட்டியம் அபிநயம் எல்லாம் இலேசாக வந்தது. ஆனால் அவ்வளவும் குறும்புத்தனமாக மாறிற்று. வனஜா எங்கே என்னத்தைப் பார்த்தாலும் அதே மாதிரி தானும் செய்து விடுவாள். யார் எப்படிப் பாடினாலும், அதே மாதிரி பாடிக் காட்டுவாள். நாடகம் பார்த்தால், யார் யார் எப்படி நடித்தார்களோ அப்படியே நடித்துக் காட்டுவாள். மனுஷ்யாளுடைய சாதாரண நடை உடை பாவனைகள் அவளுக்கு அப்படியே வந்துவிடும். யார் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள், எப்படி நடக்கிறார்கள் - அம்மாதிரியெல்லாம் செய்து காட்டி பரிகாசம் பண்ணுவாள். வனஜா இருக்கும் இடமெல்லாம் ஒரே சிரிப்பும் விளையாட்டும் ஆகத்தான் இருக்கும். யாருக்கும் பயப்பட மாட்டாள். அலட்சியமாகத் தூக்கி எறிந்துதான் பேசுவாள். 'இப்படியெல்லாம் இருக்கக்கூடாது. பதவிசா இருக்க வேண்டும்' என்று அவளுக்கு நான் அடிக்கடி புத்தி சொல்வதுண்டு.
ஆனால், வனஜாவின் விஷமம், வாய்த் துடுக்கு, சிரிப்பு, விளையாட்டு, எல்லாம் ஒரே ஒரு ஆசாமியின் முன்னால் மட்டும் மாயமாய் மறைந்து போயின. சிவக்கொழுந்து தம்பி வந்துவிட்டால் இல்லாத நாணம் வெட்கம் எல்லாம் வந்துவிடும். தம்பி முன்னால் அவள் அதிர்ந்து பேச மாட்டாள். ஏதாவது கேட்டால் தான் பதில் சொல்வாள். வழக்கம் போல் கலீரென்று சிரிக்க மாட்டாள். தம்பி ஏதாவது வேடிக்கையாகப் பேசினால் இலேசாகச் சிரிப்பாள். சிவக்கொழுந்தின் நாயனம் கேட்பதில் அவளுக்கு ரொம்ப ஆசை. கும்பகோணத்தில் உத்ஸவம், ஊர்வலம் எதற்காவது தம்பி வாத்தியம் வாசித்தால் அதை அவள் கேட்காமல் இருக்க மாட்டாள். அடுத்தாற்போல் சிவக்கொழுந்து வீட்டிற்கு வரும்போது, அந்த ராகம் நன்றாய் இருந்தது, இந்தக் கீர்த்தனம் அபூர்வமாயிருந்தது என்றெல்லாம் சொல்வாள்.
நான் எப்போது வீட்டுக்கு வந்தாலும், பின்னால் தம்பி வருகிறதாயென்று ஆவலுடன் பார்ப்பாள். வராவிட்டால், ஜாடையாக, "அவர் சௌக்கியந்தானே? உடம்புக்கு ஒன்றுமில்லையே?" என்று கேட்பாள்.
சிவக்கொழுந்தின் மனமும் இப்படித்தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். தம்பி இந்த வீட்டுக்கு வரும் போதெல்லாம் வனஜா வாசலில் நின்று வரவேற்காவிட்டால், அவனுடைய கண் சுற்றும் முற்றும் பார்க்கும். வீட்டை விட்டுப் புறப்படும் போதும் அப்படித்தான். வனஜாவிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் போக மாட்டான். "போகலாமா! மாமா!" என்று கேட்டுக் கொண்டு நிற்பானே தவிர, கிளம்பமாட்டான்.
இந்தப் பிள்ளைகளுடைய மனசு எனக்குக் கண்ணாடி மாதிரி தெரிந்து போயிற்று. சிவக்கொழுந்துக்கும் வனஜாவுக்கும் தான் பகவான் பிணைத்துப் போட்டிருக்கிறார் என்று நான் தீர்மானம் பண்ணிக் கொண்டேன். இதைப் பற்றி எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. என் சகோதரிக்கும் இது ரொம்பத் திருப்தியாகத்தானிருந்தது.
எங்களுடைய எண்ணம் இவ்வளவு சுலபமாகப் பலிக்கப் போகிறதை எண்ணி நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில், எங்களுடைய சந்தோஷத்தில் மண்ணைப் போடுவதற்கு ஒரு பாவி வந்து சேர்ந்தாள். அவளை உங்களுக்கும் தெரிந்து தான் இருக்கும். திருச்செந்தூர் மனோரஞ்சிதம் என்று பெயர். இப்போது அவள் பெயர் மங்கிப் போயிருக்கிறது. ஆனால், அடேயப்பா! அந்தக் காலத்தில் அவளுக்கிருந்த மவுஸைச் சொல்ல முடியாது. அவளுடைய நாடகக் கம்பெனி கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தது. வந்து பத்து நாளைக்குள் கும்பகோணமே பயித்தியமாய்ப் போய்விட்டது.
கதைக்குக் காலில்லை என்பார்களே, அந்தமாதிரி, கலை உலகத்தில் ஒருவருக்குப் புகழ் ஏன் வருகிறது, ஏன் போகிறது என்பதற்குக் காரணமே சில சமயம் இருப்பதில்லை. அந்த மனோரஞ்சிதம் என்கிற பெண் பிள்ளை ரொம்ப சாதாரணம் என்பது என் அபிப்பிராயம். இராத்திரியிலே, முகத்திலே பவுடரை வாரி அப்பிக் கொண்டு, பளபளவென்று சம்கி புடவையைக் கட்டிக் கொண்டு, எலக்டிரிக் லைட்டுக்கு முன்னால் வந்து நின்றால் ஏதோ பிரமாதமாய்த் தானிருக்கும். வேஷத்தைக் கலைத்துவிட்டுப் பகலிலே பார்த்தால், என் முகத்திலே இருக்கிற லட்சணம் கூட இருக்காது.
அவள் பாட்டோ ரொம்ப மட்டம். ஹிந்துஸ்தானி மெட்டுகளிலே தளுக்காய் நாடகத்துக்கு வேண்டிய பாட்டுக்கள் பாடுவாள். அவ்வளவுதான். சாரீரம் சுமாராயிருக்கும். ஆனால் கால் மணி நேரம் காம்போதியைப் பிடித்து ஆலாபனம் பண்ணச் சொல்லுங்கள்; வெறும் பூஜ்யம். தாளம் தவறாமல் ஒரு தியாகராஜ கீர்த்தனத்தைப் பாடச் சொல்லுங்கள்; முடியாது! 'தாளத்தை வீட்டிலே வைச்சுட்டு வந்திருக்கேன், எடுத்துக்கிட்டு வரலை' என்று சொல்லக் கூடிய பேர்வழி.
இந்த சாதாரண நாடகக்காரியின் மேலேதான் கும்பகோணம் அப்படி பயித்தியம் பிடித்து அலைந்தது. ஒரு நாளைக்கு டிக்கடி கிடைக்கவில்லை என்று, ஜனங்கள் கொட்டகை மேல் கல்லை விட்டெறிந்தார்கள். எவ்வளவுக் கூட்டம் வந்திருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் அந்தப் பெண் பிள்ளை பகலிலே எங்கேயாவது வெளியிலே கிளம்பினால் போதும், ஆயிரம் ஜனங்கள் பின்னோடு போய்க் கொண்டேயிருப்பார்கள். அவள் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்ய வந்தால் அன்றைக்கு உற்சவம் மாதிரிதான். அவ்வளவு ஜனங்கள் கூடிவிடுவார்கள். ஆனால் எல்லாரும் அந்த நாடகக் காரியைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர, ஸ்வாமியைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.
இப்படி ஊரெல்லாம் பயித்தியமாகப் போனதில் நான் ஆச்சரியப்படவில்லை. பாலாமணி காலத்திலிருந்து இந்த மாதிரி எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன். ஆனால் திருவழுந்தூர்த் தம்பியும் அந்த மாதிரி பிரமை பிடித்துப் போனதுதான் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாய் இருந்தது. அதனால் எனக்கு உண்டான மன வேதனைக்கு அளவே கிடையாது. தம்பியினுடைய வித்வத் என்ன? யோக்யதை என்ன? செல்வாக்கு என்ன? இவன் போய் அந்த நாடகக்காரி காலிலே விழுகிறதாயிருந்தால் அதைவிட அவமானம் வேறென்ன இருக்கிறது சாமி?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவழுந்தூர் சிவக்கொழுந்து - Thiruvazhundhur Sivakozhundhu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், தம்பி, அந்த, அவள், மாதிரி, வனஜா, இருக்கும், மாட்டாள், எல்லாம், தான், என்ன, யார், வந்து, ரொம்ப, அவளுக்கு, எனக்கு, கொண்டு, தெரிந்து, முடியாது, கும்பகோணத்தில், ஜனங்கள், பார்த்துக், எப்படிப், இருக்க, பெண், வீட்டுக்கு, சிவக்கொழுந்து, கிடையாது, முன்னால்