திருவழுந்தூர் சிவக்கொழுந்து
6
தம்பி மூன்று மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக புத்தி தெளிவடைந்து வந்தது. பத்து நாளைக்குள் நான்
இன்னாரென்று தெரிந்து கொண்டு பேச ஆரம்பித்தான். கண்ணுக்கு இன்னும் கட்டுப்
போட்டிருந்தது. கண் போய் விட்டது என்ற செய்தியைச் சொல்ல எனக்குத் தைரியம்
வரவில்லை. நான் இல்லாத சமயத்தில் டாக்டரையே தெரிவிக்கும்படி சொல்லிவிட்டேன்.
இனிமேல் தனக்குக் கண் தெரியவே தெரியாது என்று அறிந்ததும் அவனுக்கு மறுபடியும்
சித்தப் பிரமை மாதிரி ஆகிவிட்டது. சம்பந்தமில்லாமல் தனக்குத்தானே பேசிக்
கொண்டும் சிரித்துக் கொண்டுமிருந்தான். இவ்வளவு கூத்தில் அவன் அந்த நாடகக்காரியை
மட்டும் மறக்கவில்லை. அடிக்கடி 'மனோரஞ்சிதம்', 'மனோரஞ்சிதம்' என்று சொல்லிக்
கொண்டும் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டும் இருந்தான். இதனால் வனஜாவை
அவனைப் பார்ப்பதற்கு அழைத்து கொண்டு வருவதற்கு எனக்குப் பிடிக்கவில்லை.
வனஜாவோ, தான் அவரைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். யாரும் பார்க்கக் கூடாது என்று டாக்டர் கண்டிப்பாய் கட்டளையிட்டிருப்பதாகச் சொல்லிக் காலம் ஓட்டிக் கொண்டிருந்தேன். கடைசியில் அவளுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் ஒரு நாளைக்கு அழைத்துக் கொண்டு வந்தேன். அவள் பார்க்க வரும் விஷயத்தைத் தம்பியிடம் தெரியப்படுத்த வேண்டாமென்று இரண்டு பேருமே பேசித் தீர்மானித்திருந்தோம். அவ்வாறே அவள் அவன் படுத்திருந்த அறையில் வந்து பேசாமல் மௌனமாய் நின்றாள்.
நான் பயந்தபடியே ஆயிற்று. சிவக்கொழுந்து தனக்குத் தானே பேசிக் கொள்கையில், 'அடி மனோரஞ்சிதம்! என் கிளியே! மடமயிலே! மானே! தேனே, என்றெல்லாம் பிதற்றினான். நான் மிகுந்த கவலையுடன் வனஜாவைப் பார்த்தேன். ஐயா! ஸ்தீரிகளின் இதயத்தை ஆண் பிள்ளைகளால் கண்டு பிடிக்க முடியாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களல்லவா? அது உண்மையென்று அப்போது எனக்குத் தெரிந்தது. இந்த மாதிரி சிவக்கொழுந்து இன்னும் மனோரஞ்சிதத்தின் பெயரை ஜபம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, வனஜா மனம் வெறுத்துப் போய்விடுவாள் என்றும், தம்பியின் மேல் அவளுக்கிருந்த பாசம் போய்விடுமென்றும், அப்புறம் அவனைப் பார்க்க வர வேண்டுமென்றே சொல்ல மாட்டாள் என்றும் நினைத்தேன். ஆனால் நடந்தது இதற்கு நேர்மாறாக இருந்தது. வனஜாவின் மனம் கொஞ்சம் கூட சலிக்கவில்லையென்று கண்டேன். உண்மையில் அவளுடைய பாசம் முன்னைவிட அதிகமானதாகத் தோன்றிற்று.
தினந்தோறும் தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டுமென்றும் ஆனால் தம்பிக்குச் சொல்லக் கூடாதென்றும், அவள் பிடிவாதம் பிடித்தாள். தம்பிக்குத் தன் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு வர வேண்டுமென்றும் சொன்னாள். அவளே சில சமயம் எடுத்துக் கொண்டு வந்தாள். இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. முன்னே சிவக்கொழுந்துக்கும் வனஜாவுக்கும் கலியாணம் பண்ணி வைக்க வேண்டுமென்று நான் எண்ணியது வாஸ்தவந்தான். ஆனால் இப்போது அது நடக்கக் கூடிய காரியமா? அவளுடைய தாயார் சம்மதிப்பாளா? இந்தப் பைத்தியக்காரப் பிள்ளைதான் சம்மதிக்கப் போகிறானா? இவ்வளவுக்குப் பிறகு இன்னும் அவனுக்கு 'மனோரஞ்சிதம் பிரேமை' போகவில்லையே! பின்னே வனஜாவின் பாசத்தை வளர விடுவதில் என்ன பிரயோஜனம்?
இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில் வனஜா சொன்ன ஒரு விஷயம் என்னைத் திடுக்கிடச் செய்துவிட்டது. "மாமா, நான் சொல்கிறதற்கு நீங்கள் சம்மதிக்க வேணும்" என்று அவள் ரொம்ப நேரம் பூர்வ பீடிகை போட்டுவிட்டுக் கடைசியில், "நான் என் பெயரை மாற்றி மனோரஞ்சிதம் என்று வைத்துக் கொள்ளப் போகிறேன். நீங்கள் சம்மதம் கொடுக்க வேணும்" என்றாள். முதலில், அவளுடைய நோக்கம் இன்னதென்பது எனக்கு விளங்கவில்லை. பிற்பாடு அவளுடன் பேசித் தெரிந்து கொண்டேன். தம்பிக்குத் தான் கண் தெரியாதல்லவா? இதைச் சாதகமாக வைத்துக் கொண்டு வனஜா தன்னை மனோரஞ்சிதமாக மாற்றிக் கொள்ளப் போவதாய்ச் சொன்னாள். மனோரஞ்சிதம் மாதிரியே தன்னால் பேசவும் பாடவும் முடியுமென்றும் சொல்லி, அந்தப் படியெல்லாம் எனக்குச் செய்து காட்டினாள். குரல் பேச்சு எல்லாம் தத்ரூபம், நாடக மேடையில் நான் பார்த்தபடியே இருந்தது.
எனக்கென்னமோ தம்பியை இப்படி ஏமாற்றுவது பிடிக்கவேயில்லை. அதனால் என்ன கேடு விளையுமோ என்னமோ என்று பயமாயுமிருந்தது. ஆனாலும் வனஜாவின் பிடிவாதத்தையும் கண்ணீரையும் என்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை. 'மாமா! எனக்கு அவரைத் தவிர வேறு கதி கிடையாது. வனஜாவை அவருக்குப் பிடிக்காதபடியால் மனோரஞ்சிதமாகி விடுகிறேன். இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிரை விட்டு விடுவேன். ஸ்திரீ ஹத்தி தோஷம் உங்களை விடாது" என்றாள்.
பல நாள் தயங்கித் தயங்கி, கடைசியாக இந்த மோசடிக்கு நான் சம்மதித்தேன். அந்தப் பெண்ணின் துயரத்தை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஒரு வேளை யுக்தி பலித்தால், சிவக்கொழுந்து மனந்தேறி முன்போல் மனுஷனாகலாம் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. ஆனால் கவலையும் திகிலும் ஒருபுறம் இல்லாமற் போகவில்லை. முதலில் யுக்தி பலிக்க வேண்டும்; பிறகு உண்மை வெளியாகும் போது, தம்பி என்ன செய்வானோ, என்னமோ? பகவான் இருக்கிறார், நடக்கிறபடி நடக்கட்டும் என்று தீர்மானித்து விட்டேன்.
மறுநாள், வனஜாவை அழைத்துக் கொண்டு தம்பியின் வீட்டுக்குப் போனேன்.
தம்பியிடம் இந்தப் பேச்சை எப்படி எடுக்கிறது என்று நான் தயங்கிக் கொண்டிருக்கையில், தற்செயலாக வனஜாவின் கைவளைகள் குலுங்கின. அதைக் கேட்டதும் தம்பிக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போயிருக்க வேண்டும்.
"மாமா! யார் அது?" என்று கேட்டான்.
நல்ல வேளையாய்ப் போச்சு என்று நான் நினைத்துக் கொண்டு "தம்பி! உன்னைப் பார்ப்பதற்காகப் பட்டணத்திலிருந்து மனோரஞ்சிதம் வந்திருக்கு" என்றேன்.
"என்ன மனோரஞ்சிதமா?" என்று கேட்டுக் கொண்டு தம்பி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். ஒரு நிமிஷம் எனக்கு ரொம்பப் பயமாய்ப் போய்விட்டது.
அதே சமயத்தில் வனஜா சட்டென்று அருகில் வந்து "ஆமாம், நான் தான் வந்திருக்கிறேன். நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிக் கொண்டே, அவனுடைய தோள்களைப் பிடித்து மெதுவாக படுக்க வைத்தாள்.
ஐயோ! அப்போது தம்பி பார்த்த பார்வை இன்னும் என் மனசில் அப்படியே நிற்கிறது. ஒளி இழந்த அவனுடைய கண்களால் அப்படி வெறிக்க வெறிக்க விழித்துப் பார்த்தான். ஒரு பொருளை இழந்த பிறகு தான் அதனுடைய அருமை மனுஷர்களுக்கு நன்றாய்த் தெரிகிறதல்லவா? அவ்விதமே, கண் பார்வையின் அருமையை அந்த சமயத்தில் தம்பி ரொம்பவும் உணர்ந்திருக்க வேண்டும். 'போன பார்வை திரும்பி வராதா?' என்ற அளவில்லாத ஆத்திரத்தை அச்சமயம் அவனுடைய முகத்திலே பார்த்த போது, எனக்கு பெரிய வேதனை உண்டாயிற்று. இவனை ஏமாற்றுகிறோமே என்ற பச்சாதாபமும் ஏற்பட்டது. ஆனால், எப்படியோ அந்தப் பெண்ணின் வார்த்தையைக் கேட்டு இந்த மோசடியில் இறங்கியாகி விட்டது. இனிமேல் தயங்கி என்ன பிரயோஜனம்?
முன்னாலேயே நானும் வனஜாவும் யோசித்துக் கற்பனை செய்திருந்த கதையை அப்போது சொன்னேன். தம்பி ஸ்மரனையிழந்திருந்த போது அடிக்கடி 'மனோரஞ்சிதம்' என்று சொல்லிக் கொண்டிருந்ததாகவும், அவள் வந்தால் தான் அவனுக்குக் குணமாகுமென்று நினைத்து நான் கடிதம் எழுதினதாகவும், அதன் பேரில் அவள் வந்திருப்பதாகவும் பாடம் ஒப்புவித்தேன்.
வனஜா நான் சொன்னதை ஆமோதித்தாள். "மாமாவின் கடிதம் பார்த்ததும் ஓடி வந்தேன்; உங்களுக்கு உடம்பு நன்றாய் சௌக்கியமான பிறகுதான் திரும்பிப் போகப் போகிறேன்" என்றாள்.
கொஞ்ச நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்த பிறகு, "எங்கே, அம்மா! ஒரு பாட்டுப் பாடுங்கள். தம்பி கேட்கட்டும்" என்றேன் நான். இதையும் முன்னாலேயே பேசி வைத்திருந்தோம்.
மனோரஞ்சிதம் நந்தன் சரித்திரத்தில் நந்தன் வேஷம் போட்டுக் கொள்வதுண்டு. அப்போது 'பட முடியாதினித் துயரம்' என்னும் அருட்பாவை ராக மாளிகையில் பாடுவாள். இப்போது வனஜா அந்தப் பாட்டை அதே மாதிரி ராகமாளிகையில் பாடினாள். குரல், பாடும் விதம், அங்கங்கே விழுந்த சங்கதிகள் முதற்கொண்டு அப்படியே இருந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். தம்பியோ பாட்டைப் பரவசமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான். ஒளி இழந்த அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வந்து கொண்டிருந்தன.
எங்களுடைய யுக்தி இவ்வாறு பலித்து விட்டதைப் பற்றி நாங்கள் இருவரும் அசாத்தியமான சந்தோஷம் அடைந்தோம். பிறகு, வனஜா தினந்தோறும் தம்பியைப் பார்க்க வந்து கொண்டிருந்தாள். பகலெல்லாம் பெரும்பாலும் அவனுடைய வீட்டிலேயே கழிப்பாள். தம்பிக்கு நெருங்கிய உற்றார் உறவினர் யாரும் இல்லை. வீட்டில் தவசிப் பிள்ளையையும் சோக்ராவையும் தவிர வேறு யாரும் கிடையாது. அவர்களை நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்.
கொஞ்ச நாளைக்கெல்லாம் நான் வேறு நாதஸ்வர வித்வான்களுடன் கச்சேரிக்குப் போக ஆரம்பித்தேன். ஒரு தடவை அந்த மாதிரி போய் விட்டுத் திரும்பி வந்த போது சிவக்கொழுந்து மிகவும் உற்சாகத்துடனே, "மாமா! நானும் மனோரஞ்சிதமும் கலியாணம் பண்ணிக் கொள்ளப் போகிறோம். இனிமேல், அவள் நாடக மேடை ஏறி நடிப்பதில்லை என்றும் தீர்மானமாகி விட்டது" என்று சொன்னான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இது என்ன விபரீதமாக அல்லவா இருக்கிறது? ஏனோ, தம்பிக்கு உடம்பு குணமாவதற்காக இந்த ஏமாற்றத்துக்கு நான் சம்மதித்தேன். எப்போதுமே அவனுக்கு உண்மை தெரியாமல் இருக்குமா? தெரியும்போது என்ன கதி ஆவது?
ஆனால் இந்த ஆட்சேபம் ஒன்றும் வனஜாவிடம் பலிக்கவில்லை. "பிற்பாடு நானல்லவா கஷ்டப்பட போகிறேன்? உங்களுக்கு என்ன?" என்றாள். அழுது கண்ணீர் விட்டு எப்படியோ என்னை சம்மதிக்கப் பண்ணிவிட்டாள். அவளுடைய தாயாரையும் சம்மதிக்கச் செய்தாள்.
அடுத்த மாதம் திருநாகேசுவரம் கோயிலில் அவர்களுக்குக் கல்யாணம் நடத்திக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம்.
இப்படிச் சொல்லி விட்டு, கந்தப்ப பிள்ளை சும்மா இருந்தார். ஏதோ பெரிய யோசனையில் ஆழ்ந்தவர் போல் தோன்றினார்.
"அப்புறம் என்ன?" என்று கேட்டேன்.
"அப்புறம் என்ன? மாப்பிள்ளையும், மருமகளும் சௌக்கியமாயிருக்கிறார்கள். மணிமணியாய் இரண்டு ஆண் பிள்ளைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன" என்றார்.
எனக்குத் திருப்தி உண்டாகவில்லை. அவர் சொல்ல வேண்டியது இன்னும் பாக்கி இருப்பதாகத் தோன்றியது.
"இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?" என்று கேட்டேன்.
"முந்திரிச் சோலை என்று கேட்டிருக்கிறீர்களா, சாமி? காரைக்காலுக்கும் முத்துப்பேட்டைக்கும் நடுவே மத்தியில் சமுத்திரக் கரையோரத்தில் இருக்கிறது. முந்திரிச் சோலை மாரியம்மன் கோயில் வெகு பிரசித்தம். கிராமம் வெகு அழகாயிருக்கும். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் முந்திரி மரங்களும், சவுக்கு மரங்களும் தான். ஊருக்குக் கிழக்கே கொஞ்ச தூரம் வரையில் இந்தத் தோப்புகள்; அப்புறம் நாணல் காடு. நாணல் காட்டைத் தாண்டினால் வெண் மணல். அதற்கும் அப்பால் அலை வீசும் சமுத்திரம். இடைவிடாமல் அலைகளின் 'ஓ' வென்ற சப்தமும், சவுக்குத் தோப்புகளின் 'ஹாய்' என்ற சப்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
இந்த முந்திரிச் சோலைதான் என்னுடைய பூர்வீக கிராமம். இங்கே எனக்கு ஒரு சின்ன வீடும் கொஞ்சம் காணியும் உண்டு. சிவக்கொழுந்து, பெயரும் புகழுமாய் நன்றாயிருந்த காலத்தில், இந்த கிராமத்துக்கு இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறான். ஊர் தனக்கு ரொம்பப் பிடித்திருப்பதாகவும், எப்போதாவது கச்சேரி செய்வதை நிறுத்தினால், இந்த ஊரில் வந்து வசிக்கப் போவதாகவும் அடிக்கடி சொல்வான்.
கல்யாணம் ஆன சில நாளைக்கெல்லாம் தம்பி, "மாமா! நான் முந்திரிச் சோலைக்குப் போகப் போகிறேன். உங்கள் வீட்டை எனக்குக் கொடுக்க வேணும்" என்றான். அதெல்லாம் கூடாதென்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். "கண் பார்வை இல்லாமற் போனால் என்ன, தம்பி? அதற்காக நீ வாத்தியம் வாசிப்பதை நிறுத்தி விடக்கூடாது. அந்த காலத்தில் சரப சாஸ்திரியார் கண்ணில்லாமல் புல்லாங்குழல் வாசிக்கவில்லையா? கச்சேரி வராதோ என்று நினைக்காதே எதேஷ்டமாய் வரும்" என்றேன்.
எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. "வேணுமானால் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். சில வருஷமாவது நான் கிராமத்தில் இருக்கப் போகிறேன். கொஞ்ச நாளைக்கு நாயனத்தையே நான் தொடப் போவதில்லை" என்று பிடிவாதமாய்ச் சொன்னான். அந்தபடியே அவனும் வனஜாவும் முந்திரிச் சோலைக்குப் போய்விட்டார்கள். இன்னமும் அங்கேதான் இருக்கிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவழுந்தூர் சிவக்கொழுந்து - Thiruvazhundhur Sivakozhundhu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், என்ன, தம்பி, கொண்டு, மனோரஞ்சிதம், வனஜா, அவள், வந்து, தான், எனக்கு, வேண்டும், பிறகு, அவளுடைய, பார்க்க, மாமா, போகிறேன், சிவக்கொழுந்து, இன்னும், முந்திரிச், அவனுடைய, கொஞ்ச, விட்டு, அந்தப், வனஜாவின், நீங்கள், அப்புறம், என்றாள், போது, அப்போது, எனக்குத், மாதிரி, சொல்லிக், அந்த, கொஞ்சம், விட்டது, தம்பிக்கு, யுக்தி, வேறு, என்றேன், கேட்டுக், இழந்த, பார்வை, சமயத்தில், சொல்ல, திரும்பி, அவனுக்கு, அடிக்கடி, இப்போது, என்றும், வனஜாவை, யாரும், அவன், கொண்டும், இரண்டு, இனிமேல், கொள்ளப், வேணும், பேசிக், பிற்பாடு