திருவழுந்தூர் சிவக்கொழுந்து
4
அந்த நாடகக் கம்பெனி கும்பகோணத்துக்கு
வந்ததிலிருந்து சிவக்கொழுந்து ஒரு நாள் நாடகமாவது பார்க்காமலிருந்தது
கிடையாது. வெளியூர்களுக்கு எங்கேயாவது கச்சேரிக்குப் போனாலும் நாடகம்
நடக்கும் ராத்திரிக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடுவான்.
மனோரஞ்சிதம் மேடைக்கு வந்து விட்டால், நம்ம பையனைப் பார்க்கவே முடியாது. தேன் குடித்த குரங்கு என்பார்களே, அந்த மாதிரிதான்.
வேடிக்கையை வேணுமானால் கேளுங்கள். சிவக்கொழுந்துக்குப் பிடித்திருந்த நாடகப் பைத்தியம் வனஜாட்சியையும் பிடித்துக் கொண்டது. அவளும் தவறாமல் நாடகத்துக்குப் போய் வந்தாள். ஆனால் அவள் நாடகம் மட்டும் பார்க்கப் போனதாக எனக்குத் தோன்றவில்லை. இரண்டு மூன்று நாள் நானும் கவனித்தேன். சிவக்கொழுந்து மேடையையே பார்த்துக் கொண்டிருக்க, வனஜாட்சி சிவக்கொழுந்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். கொட்டகையில் அவன் ஒரு மூலையில் இவள் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாலும், எப்படியோ அவளுடைய கண் அவன் இருக்குமிடந்தேடிக் கண்டுபிடித்துவிடும்.
இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. வனஜாட்சியின் மனவேதனை எனக்கு நன்றாய்த் தெரிந்தது. அவள் இந்த அசட்டுப் பிள்ளையை நினைத்து நினைத்து உருகிப் போய்க் கொண்டிருந்தாள் என்பதையும் கண்டேன். நாடகக் கம்பெனி வந்ததிலிருந்து, சிவக்கொழுந்து எங்கள் வீட்டுக்கு வருவது கிடையாது. வனஜாட்சி சில சமயம் "ஏன் மாமா! இந்த நாடகக் கம்பெனி எப்போது ஊரை விட்டுப் போகப் போகிறது?" என்று கேட்பாள். கேட்கும் போதே அவள் கண்களில் ஜலம் தளும்பி நிற்கும். நான் அவளுடைய குறிப்பை அறிந்து கொள்வேன். என்னுடைய மனமும் கஷ்டப்பட்ட தென்றாலும், வெளிப்படையாக, "சீ! பைத்தியமே உனக்கு என்ன அதைப் பற்றிக் கவலை? ஊரில் யார் எக்கேடு கெட்டால் உனக்கென்ன? ஏதாவது வேலை இருந்தால் பார் போய்!" என்பேன். இன்னும் சில சமயம் அவள், "மாமா! நானும் டிராமாவில் சேரப் போகிறேன்" என்பாள். நாடகத்தில் மனோரஞ்சிதம் பாடியபடியெல்லாம் பாடி, அவள் நடித்தபடியெல்லாம் நடித்துக் காட்டுவாள். "ஐயோ! இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பலமாகப் பிடித்து விட்டதே" என்று எண்ணி வருத்தப்படுவேன்.
நம் ஊர்க்காரர்கள் சாதாரணமாய் ஒன்று என்றால், நூறு என்பார்கள். ஒன்றும் இல்லாத போதே பொய்யும் புளுகும் கற்பனை செய்வார்கள். கொஞ்சம் நிஜமும் இருந்தால் கேட்க வேணுமா? சிவக் கொழுந்தின் பைத்தியக்காரத்தனத்தைப் பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. இந்த மாதிரி மேதாவியான பிள்ளைக்கு இப்படி அசட்டுப் பட்டம் வந்ததேயென்று எனக்கு எவ்வளவோ வருத்தமாய் இருந்தது.
கடைசியாக நாடகம் முடிந்தது. அதாவது கும்பகோணத்தில் மனோரஞ்சிதம் கம்பெனியாரின் நாடகம் முடிந்தது. அவர்கள் அடுத்தபடியாக சென்னை பட்டிணத்திற்குக் கிளம்பினார்கள். அவர்கள் ஊருக்குக் கிளம்புகிற அன்று சிவக்கொழுந்து அந்த நாடகக் காரியின் ஜாகைக்குப் போய் அங்கேயே இருந்ததாகவும், ரொம்பவும் அசட்டுப் பிசட்டு என்று நடந்து கொண்டதாகவும் தெரிய வந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கும் அவர்களை வழி அனுப்புவதற்குப் போயிருந்தானாம். ரயில் கிளம்பிக் கொஞ்ச தூரம் போன பிற்பாடு கூட, சிவக்கொழுந்து, "நான் பட்டணத்துக்கு வரேன், அவசியம் வந்து உங்களைப் பார்க்கிறேன்" என்று இரைந்து கத்தியதாகவும், அதைக் கேட்டு பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் சிரித்ததாகவும் கேள்விப்பட்டேன்.
நாடகக் கம்பெனி ஊரை விட்டுப் போன பிறகு, வனஜாவுக்குக் கொஞ்சம் உற்சாகம் பிறந்தது. "ஏன், மாமா! இனி மேல் திருவழுந்தூர்த் தம்பி நம் வீட்டுக்கு வருவாங்கல்ல?" என்று கேட்டாள். அவள் கேட்டதற்கு தகுந்தாற்போல், சிவக்கொழுந்தும், இரண்டொரு தடவை வீட்டுக்கு வந்தான். அப்போதெல்லாம் வனஜாவின் தோரணையைப் பார்க்க வேண்டுமே? அடேயப்பா! ராணி தான்! குறுக்கே நெடுக்கே போவாள். சிவக்கொழுந்தை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டாள். ஏதாவது கேட்டால், பதில் சொல்லவும் மாட்டாள். காதில் கேட்காதது போல் போய்விடுவாள்.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு ஒரு பக்கம் வேடிக்கையாகவும் ஒரு பக்கம் வருத்தமாயுமிருந்தது. நான் அவர்களுக்கு, புத்தி கித்தி ஒன்றும் சொல்லவில்லை சாமி! என்னுடைய உலக அனுபவத்திலே தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி இளம் பிள்ளைகள் காரியத்திலே, புத்தி சொல்கிறதனால் பிரயோசனமே ஏற்படுவதில்லை. அதனால்தான் சிவக்கொழுந்து அந்த நாடகக்காரி மையலில் அகப்பட்டிருந்தபோது கூட நான் ஒன்றும் சொல்லவில்லை. இதிலேயெல்லாம் அவர் அவர்களும் பட்டுப் பட்டுத் தேற வேண்டும். கஷ்டமோ, சுகமோ, அனுபவித்துத்தான் புத்தி வர வேண்டும். குறுக்கே ஏதாவது சொன்னோமானால் பைத்தியம் முற்றிப் போய்விடுகிறது.
இப்படி இரண்டு மூன்று மாதம் ஆயிற்று. சென்னைப் பட்டணம் கந்தஸ்வாமி கோயில் உற்சவத்திற்கு சிவக்கொழுந்தை அழைத்துக் கொண்டு வரும்படி எனக்குக் கடிதம் வந்தது. பட்டணத்தில் அந்தப் பழிகாரி இருக்கிறாளே என்று அப்போதே மனசில் நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அதற்காக வந்தக் கச்சேரியை விட முடியுங்களா? கிளம்பிப் போனோம். ஆகா! சாமி! அந்தக் கச்சேரியில் சிவக்கொழுந்து என்னமாய் வாசித்தது என்கிறீர்கள்? அது தான் கடைசி கச்சேரி என்று தம்பியின் அந்தராத்மாவுக்குத் தெரிந்திருந்தது போலிருக்கிறது. அதனால்தான், அவ்வளவு அற்புதமாய் அமைந்ததோ, என்னமோ? ஒரு நாள் ராத்திரி தம்பி பைரவிராகம் வாசித்த போது, கேட்டவர்கள் எல்லாம் அழுது விட்டார்கள். தம்பியின் வாசிப்பில் முன்னைக்கு இப்போது கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. முன்னேயெல்லாம், கல்யாணி, சங்கராபரணம், ஹம்ஸத்வனி, நாட்டை, கேதாரம் இந்த மாதிரி ராகங்கள் வாசிப்பதிலேதான் தம்பிக்கு உற்சாகம். எனக்கும் தவுல் வாசிக்க ரொம்ப உற்சாகமாய் இருக்கும். கொஞ்ச நாளாகத் தம்பி காம்போதி, கேதாரகௌளம், உசேனி, முகாரி, கமாசு - இப்படி அதிகமாக வாசிக்க ஆரம்பித்திருந்தது. இந்த ராகங்களெல்லாம் வாசிக்கும் போது, எனக்குச் சில சமயம் கண்ணில் ஜலம் வந்துவிடும். உடம்பெல்லாம் மயிர்க்கூச்சு எறியும். தவுல் வாசிப்பதற்கே ஓடாது! ஏதோ விரல் வழக்கம் போல் தட்டிக் கொண்டிருக்குமே தவிர, மனசெல்லாம், தம்பியின் வாசிப்பில் ஈடுபட்டிருக்கும். நடு நடுவே, இரண்டு கையையும் தூக்கிக் கும்பிட்டு, 'ஹர ஹர! மகாதேவா!' என்பேன். இதைப் பார்த்துவிட்டு, சிலபேர் சிரிப்பார்கள்; முட்டாள்கள்! சங்கீதம் அனுபவிக்கும் விதம் அவர்களுக்கென்ன தெரியும்?
மூன்று நாள் கச்சேரியும் முடிந்தது. நாலாம் நாள் பொழுது விடிந்தது. "இன்றைக்கு ஊருக்கு புறப்படலாமா, தம்பி!" என்றேன்.
"கொஞ்சம் பொறுங்கள் மாமா. புதன் கிழமை தானே சிதம்பரத்தில் கச்சேரி? நேரே காரிலேயே போய் விடலாம்" என்றது தம்பி.
சிவக்கொழுந்துக்குக் கொஞ்ச நாளாக மோட்டார் கார் பைத்தியமும் ஏற்பட்டிருந்தது. 'டிரைவ்' பண்ணக் கத்துக் கொண்டிருந்தான். அடுத்த தடவை பட்டணம் போகும்போது கார் வாங்கி வர வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அன்று பகலெல்லாம் சுற்றி, கடைசியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு 'ஸெகண்ட் ஹாண்ட்' கார் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். சொற்ப மைலே ஓடியிருந்த படியால், 'ஸெகண்ட் ஹாண்டா'ய் இருந்தாலும் வண்டி பார்ப்பதற்கு ரொம்ப நன்றாயிருந்தது.
நல்ல வேளை; கச்சேரியிலும் கார் வாங்குவதிலும் புத்தி சென்றதனால் மனோரஞ்சிதத்தை மறந்துவிட்டான் என்று நான் எண்ணி சந்தோசப்பட்டேன். ஆனால், அது அற்ப சந்தோஷமாய் போயிற்று. அன்று இராத்திரி சிவக்கொழுந்து நாடகத்துக்குப் போனான். "நீங்களும் வரீங்களா அண்ணே!" என்று அரைமனசாய்க் கூப்பிட்டான். "ரொம்ப சிரமமாய் இருக்கிறது; நான் வரவில்லை" என்று சொல்லி விட்டேன். அன்று இராத்திரியெல்லாம் என் மனசில் வேதனை குடி கொண்டிருந்தது.
மறுநாள் காலையில் தம்பி ரொம்ப நேரம் கழித்து தான் எழுந்தான். எழுந்ததும் பரபரப்புடன் ஸ்நானபானாதிகளை முடிக்கத் தொடங்கினான். ஜோராக டிரஸ் பண்ணிக் கொண்டான். எல்லாம் ஆனதும் "மாமா! கொஞ்சம் வெளியிலே போய் விட்டு வருகிறேன். சாப்பாட்டுக்கு எனக்காகக் காத்திருக்க வேண்டாம். திரும்பி வருவதற்கு நேரம் ஆனாலும் ஆகும்" என்றான்.
"தம்பி! இதென்ன பேச்சு? நாளைப் பொழுது விடிந்தால் சிதம்பரத்தில் இருக்க வேண்டுமே? புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யாமல் எங்கேயோ போகிறேன் என்கிறாயே?"
"கட்டாயம் இன்று இராத்திரியே கிளம்பி விடலாம் மாமா! ராத்திரி பத்து மணிக்குக் காரில் கிளம்பினால், பளபளவென்று பொழுது விடியும் போது சிதம்பரம் போய்விடலாம். உங்களுக்குத் தூக்கம் விழிக்க வேண்டாமென்றிருந்தால் நீங்கள் வேணுமானா ராத்திரி ரயில் ஏறி விடுங்கள்" என்றான்.
இப்படிச் சொல்லிவிட்டு வெளியே போனவன் இனிமேல் சாயங்காலம் தான் திரும்பி வருவான் என்று நினைத்தேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்குள் அவன் திரும்பி வந்துவிடவே எனக்கு ஆச்சர்யமாய்ப் போயிற்று.
"என்ன தம்பி! அதற்குள்ளே வந்துவிட்டாய்?" என்று நான் கேட்டதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், உள்ளே போய் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் அவன் விம்மி அழும் சத்தம் கேட்டது.
தம்பியுடன் சோக்ரா பையனும் போயிருந்தான். அவனைக் கூப்பிட்டு "என்னடா சமாசாரம்?" என்று விசாரித்தேன். அவன் எல்லா விவரமும் சொன்னான். ஸாந்தோமில் இருந்த மனோரஞ்சிதத்தின் பங்களாவுக்குப் போனார்களாம். வாசலில் ஏற்கனவே ஐந்து ஆறு மோட்டார் வண்டிகள் காத்துக் கொண்டிருந்தனவாம் "கும்பகோணம் சிவக்கொழுந்து பிள்ளை வந்திருக்கார்" என்று தம்பி சொல்லியனுப்பிச்சுதாம். வாசல் சேவகன் திரும்பி வந்து, "இப்போது அம்மாவுக்கு வேலை இருக்காம். பார்க்க முடியாதாம். இன்னொரு சமயம் வரச் சொன்னாங்க" என்று தெரிவித்தானாம். தம்பிக்கு முகம் அப்படியே சிறுத்துப் போச்சாம். வண்டியைத் திருப்பச் சொல்லி நேரே ஜாகைக்கு வந்து விட்டதாம்.
சாமி! இந்த விஷயம் எனக்கு ஆச்சர்யத்தை விளைவிக்கவில்லை. அந்தப் பெண் பிள்ளையை மதறாஸ்காரர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். பெரிய பெரிய வக்கீல்கள் என்ன, ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் என்ன, ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தர்கள் என்ன இப்படிப்பட்ட சீமான்களெல்லாம் அவள் வீட்டு வாசலில் போய்க் காத்துக் கொண்டிருந்தார்களாம்! இப்படியெல்லாம் பெருமை வந்தால், நல்ல மனுஷ்யர்களுக்கே கர்வம் தலைக்கேறிப் போய்விடும். ஒரு சாதாரண பெண் பிள்ளைக்குக் கேட்க வேண்டுமா? கேவலம் ஒரு மேளக்காரனை அவள் மதிப்பாளா?
சிவக்கொழுந்தின் மேல் எனக்குக் கோபமாய் வந்தது, இவனுடைய வித்வத் எங்கே? அவள் எங்கே? அந்த அற்பப் பெண்பிள்ளை எங்கே? அவள் வீட்டை தேடிக்கொண்டு இவன் ஏன் போகிறான்? இந்த அவமானம் அவனுக்கு நன்றாய் வேண்டும்! அப்போதுதான் புத்தி வரும். அழட்டும் நன்றாய் அழட்டும்.
இப்படி எண்ணி, அவனை சமாதானப்படுத்துவதற்கு நான் போகவில்லை. எனக்கு சில மனுஷ்யர்களை பார்க்க வேண்டியிருந்தது. அவர்களைப் பார்த்து விட்டு வரலாம் என்று வெளியே போய்விட்டேன்.
சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்குத்தான் திரும்பி வந்தேன். வந்ததும், தம்பியைப் பற்றி விசாரித்தேன். சுமார் நாலு மணிக்குத் தம்பி அறையிலிருந்து எழுந்து வந்ததாகவும், நான் எங்கே என்று விசாரித்ததாகவும், உடனே வண்டியில் ஏறிக் கொண்டு புறப்பட்டுச் சென்றதாகவும், தெரிந்தது. ரயிலில் ஏறி நாம் பாட்டுக்குப் போய்விடலாமா, தம்பி எப்படியாவது திண்டாடிக் கொண்டு வந்து சேரட்டும் என்று முதலில் நினைத்தேன். அப்புறம் இந்த மாதிரி நிலைமையில் அவனைத் தனியாக விட்டு விட்டுப் போகக் கூடாது என்று தோன்றிற்று. மனத்திலே என்னமோ திக்திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருவேளை தம்பி வந்து சேராவிட்டால் நாளைக்குச் சிதம்பரத்தில் கச்சேரி என்ன ஆவது? அவன் தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டால், அதற்காக நாமும் அசட்டுத் தனமாகப் போகலாமா என்று நினைத்து, அவன் வரவுக்காகக் காத்திருந்தேன்.
சாயங்காலம் ஏழு மணிக்குத்தான் வாசலில் வண்டி வந்து நின்றது.
"மாமா வந்துட்டாங்களா?" என்று சிவக்கொழுந்து உற்சாகமாகக் கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த போது, 'போகிறது, பிள்ளைக்குப் புத்தி சரியாய்ப் போய்விட்டது போலிருக்கு' என்று நான் நினைத்துச் சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த சந்தோஷம் ஒரு நிமிடங்கூட இல்லை. உள்ளே வந்த தம்பியைப் பார்த்தேனோ இல்லையோ, அவனுடைய உற்சாகத்துக்குக் காரணம் என்னவென்று தெரிந்து போய்விட்டது. அப்படியே என் மனம் இடிந்து போயிற்று.
'அடி பாவி! சண்டாளி! உன்னால்தானே விபரீதம் வந்தது!' என்று அந்த நாடகக்காரியை மனத்திற்குள் திட்டினேன். நான் அன்று சாயங்காலம் தம்பியைத் தனியாய் விட்டு விட்டுப் போனதற்காக என்னையே நொந்து கொண்டேன். 'இப்போது நான் ரயிலில் போவது என்பது முடியாத காரியம். கூட இருந்து தம்பியை அழைத்துக் கொண்டு தான் போக வேண்டும்.'
இந்த இடத்தில் கந்தப்ப பிள்ளை சொன்னது எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. எதையோ சொல்ல விட்டு விட்டார் என்று தோன்றிற்று. "நீர் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை, ஐயா! அப்படிச் சிவக்கொழுந்தினிடம் என்ன மாறுதலைக் கண்டீர்?" என்று கேட்டேன்.
"தெரியவில்லையா, சாமி! அதைச் சொல்வதற்குக் கூட எனக்குச் சங்கடமாயிருக்கிறது. பையன் நன்றாகத் 'தண்ணி' போட்டுவிட்டு வந்திருந்தான்! அவ்வளவுதான். அனுமார் கோயிலிலே செய்த சத்தியம் போச்சு! மறுபடியும் 'சோக்ரா' பையனை விசாரித்தேன். சாயங்காலம் இன்னொரு தடவை அந்த நாடகக்காரி வீட்டுக்குப் போனதாகவும், அப்போதும் 'பார்க்க முடியாது' என்றே பதில் கிடைத்ததாகவும், இவர்கள் வாசலில் நிற்கும் போதே அவள் வெளியில் கிளம்பி வந்து மோட்டாரில் ஏறிக் கொண்டு போய்விட்டதாகவும் தம்பியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லையென்றும் 'சோக்ரா' சொன்னான். அதற்குப் பிறகு தம்பி கொஞ்ச நேரம் எங்கெல்லாமோ சுற்றி அலைந்து விட்டுக் கடைசியில் ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகில் வண்டியை விட்டுக் கொண்டு போயிற்றாம். நாசமாய்ப் போகிறவன்கள் தான் மதுபானக் கடைகள் வைத்திருக்கிறார்களே? சக்கைப் போடு போட்டு விட்டு வந்து விட்டான்!
இதையெல்லாம் கேட்டபோது ஒரு புறத்தில் எனக்குத் தம்பியின் பேரில் கோபம் வந்தாலும், இன்னொரு பக்கம் இரக்கமாயுமிருந்தது. அவன் மனசு எவ்வளவு வேதனைப் பட்டிருந்தால், இந்த மாதிரி கோயிலில் செய்த பிரமாணத்தைக் கைவிட்டு மது பானம் செய்யத் தோன்றியிருக்கும்? பாழும் பெண் மோகத்தின் சக்திதான் என்ன? - போனது போகட்டும், இந்த தடவை எப்படியாவது பையனை ஜாக்கிரதையாய் ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால், அப்புறம் கவலையில்லையென்று நினைத்தேன். 'இந்த நாடகக்காரிப் பைத்தியம் இத்துடன் இவனுக்கு விட்டுப் போயிற்று. பிறகு வனஜா இருக்கிறாள், பார்த்துக் கொள்கிறாள்!' என்று எண்ணி என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவழுந்தூர் சிவக்கொழுந்து - Thiruvazhundhur Sivakozhundhu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - தம்பி, நான், அவள், வந்து, கொண்டு, சிவக்கொழுந்து, அவன், என்ன, அந்த, எனக்கு, மாமா, தான், கொஞ்சம், போய், புத்தி, விட்டு, பார்க்க, விட்டுப், சாயங்காலம், திரும்பி, மாதிரி, அன்று, நாள், நாடகக், நாடகம், தம்பியின், தடவை, வேண்டும், போது, பைத்தியம், கார், வாசலில், எங்கே, கம்பெனி, போயிற்று, கொஞ்ச, ரொம்ப, சாமி, ஒன்றும், எண்ணி, இப்படி, சமயம், வந்தது, கூடப், போதே, எனக்குக், ஏதாவது, அசட்டுப், நேரம், நினைத்தேன், இன்னொரு, பெண், நினைத்து, விசாரித்தேன், உள்ளே, சோக்ரா, சிதம்பரத்தில், இப்போது, பக்கம், எப்படியாவது, பதில், மனோரஞ்சிதம், இரண்டு, மூன்று, வீட்டுக்கு, முடிந்தது, ராத்திரி, பிறகு, பார்த்துக், கச்சேரி, கொண்டேன், பொழுது