திருவழுந்தூர் சிவக்கொழுந்து
5
சாப்பாடு எல்லாம் முடித்துக் கொண்டு கிளம்புவதற்கு
இரவு பத்து மணி ஆகிவிட்டது. கம்பெனிக்காரர்கள் அனுப்பியிருந்த டிரைவர்
வண்டி ஓட்டிக் கொண்டு வந்தான். சிவக்கொழுந்து டிரைவருக்குப் பக்கத்தில்
முன் ஸீட்டில் உட்கார்ந்தான். நாங்கள் எல்லாம் பின்னால் இருந்தோம். தம்பி
வண்டி ஓட்ட ஆரம்பிக்காமலிருக்க வேண்டுமே என்று என் மனசு திக்திக் என்று
அடித்துக் கொண்டது. ஆனால் அவனிடம் அதைப் பற்றி நான் சொல்லவில்லை. சொன்னால்,
ஒரு வேளை 'குரங்கை நினைத்து கொண்டு மருந்து தின்னாதே' என்று சொன்ன கதைபோல்
ஆகிவிடலாமல்லவா? ஆகையால் வாயை மூடிக் கொண்டு இருந்தேன்.
அன்றிரவு வானத்தில் மப்பும் மந்தாரமுமாயிருந்தது. ஆனால் நாங்கள் கிளம்பும் போது மழை பெய்யுமென்று தோன்றவில்லை. செங்கற்பட்டு தாண்டுகிற பொழுதுதான் சிறு தூற்றல் போட்டது. அப்போது ஆகாயத்தைப் பார்த்தேன். ஒரே காடாந்தகாரமாயிருந்தது. பெருமழை பிடித்துக் கொள்ளாமலிருக்க வேண்டுமேயென்று கவலைப்பட்டேன்.
இப்படி எண்ணிச் சற்று நேரத்துக்கெல்லாம் நான் கண்ணசந்திருக்க வேண்டும். எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியாது. பெரிய இடிச் சத்தத்தைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தேன்.
ஆஹா! அந்த மாதிரி மின்னலையும் இடியையும் என் ஜன்மத்தில் நான் பார்த்தது கிடையாது. அந்த இடிச் சத்தமானது ஆகாயத்தில் எங்கேயோ ஒரு மூலையில் கிளம்பி, மேகங்களைக் கீறிப் பிளந்து கொண்டு, ஆகாயத்தின் இன்னொரு மூலைக்குப் பிரயாணம் செய்வது போலிருந்தது. அதுவும் சட்டென்று அவசரமாய்ப் போய்விடவில்லை. அண்டகடாகங்களையெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கச் செய்து கொண்டு நிதானமாகப் பிரயாணம் செய்தது. அதே சமயத்தில் பளீரென்று மற்றொரு மின்னல் கிளம்பிற்று. கோடி சூரியன் ஒரே சமயத்தில் கிளம்பினால் எப்படியிருக்கும்? அவ்வளவு பிரகாசமான மின்னல் அரை நிமிஷம் நின்று உலகத்தை ஜகஜ்ஜோதியாகச் செய்தது. அந்த ஜகஜ்ஜோதியின் வெளிச்சம் தாங்காமல் என் கண்கள் மூடிக் கொண்டன. ஆனால் அப்படி மூடிக் கொள்வதற்குள், என் வயிற்றில் நெருப்பைக் கட்டும்படியான காட்சியைப் பார்த்துவிட்டேன் சாமீ! எனக்கு முன்னால் டிரைவரின் ஸீட்டில் உட்கார்ந்து சிவக்கொழுந்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.
'ஐயோ! விபரீதம் வரப் போகிறதே!' என்று என் மனத்தில் மின்னலைப் போல் ஒரு எண்ணம் தோன்றியது. அவ்வளவுதான், விபரீதம் வந்துவிட்டது!
அந்த ஒரு வினாடியில் நேர்ந்த சம்பவங்களை எப்படி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்? படீர் என்று ஒரு பெரிய பயங்கரமான சத்தம்; என் ஜன்மத்தில் அந்த மாதிரி சத்தத்தை நான் கேட்டதே இல்லை; இனிமேல் கேட்கப் போகிறதுமில்லை. ஆகாயம் அப்படியே இடிந்து திடீரென்று நம் தலையில் விழுந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் தோன்றிற்று. அந்தப் பெரும் சத்தத்தினால் என் காது செவிடானது ஒரு வினாடி. அடுத்த வினாடியில் ஒரு பெரிய அதிர்ச்சி; பூலோகத்திலிருந்து என்னை யாரோ தூக்கிப் பாதாளத்தில் எறிவது போலிருந்தது.
எனக்குப் புத்தி தெளிந்து கண்ணை விழித்துப் பார்த்தபோது, நான் கண்ட பயங்கரமான காட்சியை என் ஆயுள் உள்ள வரையும் மறக்க மாட்டேன். எனக்கு எதிரே, ஒரு பெரிய ஆலமரம், பச்சை ஆலமரம், நெருப்புப் பற்றி எறிந்து கொண்டிருந்தது! அந்த மரத்துக்கு அடியில் ஒரு மோட்டார் வண்டியும் தீப்பற்றி எறிந்து கொண்டிருந்தது. ஆகாயத்திலும் பூலோகத்திலும் சூழ்ந்திருந்த காடாந்தகாரத்துக்கு நடுவில், இம்மாதிரி ஒரு பச்சை மரமும், அதனடியில் ஒரு மோட்டாரும் நெருப்புப் பிடித்து எரிந்து கொண்டிருந்தால் என்னமாயிருக்கும்? அப்போது சிறு தூற்றல் வேறு போட்டுக் கொண்டிருந்தது. அந்த மழைத்துளிகள், எரிகின்ற தீயின் ஜ்வாலையில் விழுந்து மறைந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது, அக்னி பகவான், நாக்கை நீட்டி அந்த மழைத் துளிகளை ருசிப்பது போலவும், 'என்னுடைய பெருந் தாகத்துக்கு இந்தத் துளிகள் போதுமா?' என்று மேலும் மேலும் மேக மண்டலத்தை நோக்கிப் போவது போலவும் இருந்தது. இந்தப் பயங்கரக் காட்சியைப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிஷம் கிடந்த இடத்திலேயே கிடந்தேன். தெய்வாதீனமாக, அப்போது காரில் என் தவுல் இருந்தது ஞாபகம் வந்தது! உடனே எனக்கு உயிர் வந்து விட்டது, மறு நிமிஷம் பாய்ந்து சென்று வண்டியின் அருகில் போனேன். வண்டி மரத்தில் முட்டி நொறுங்கிக் கிடந்தது. நல்ல வேளையாக என்ஜினில்தான் நெருப்புப் பிடித்து கொண்டிருந்தது. இன்னும் அடிப்பாகத்துக்கு வரவில்லை. தவுலையும், நாயனங்களையும் எடுத்து அப்புறப்படுத்திவிட்டு, மனுஷர்களின் நிலைமை என்னவென்று பார்த்தேன். டிரைவர் அப்போதுதான் எழுந்து வந்து கொண்டிருந்தான். அவன் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. "அடபாவி! இப்படிப் பண்ணிவிட்டாயேடா! நீ நாசமாய்ப் போக!" என்று வைது விட்டு, தம்பி எங்கே என்று பார்த்தேன். கொஞ்சம் தூரத்தில் அவன் கிடந்ததைக் கண்டதும் இரண்டு எட்டில் பாய்ந்து ஓடினேன். கட்டை மாதிரி கிடந்தான். ஐயோ! பாவி போய்விட்டானோ? மாரைத் தொட்டுப் பார்த்தேன்; அடிக்கிற சத்தமே கேட்கவில்லை. கையைப் பிடித்துப் பார்த்தேன்; நாடி அடிக்கவில்லை. மூக்கின் அருகில் கையை வைத்தேன்; இலேசாக மூச்சு வருவது போல் தோன்றிற்று; கொஞ்சம் எனக்கு உயிர் வந்தது.
இதற்குள்ளாக ஜனங்கள் பேசுகிற கலகல சப்தம் கேட்டுச் சுற்று முற்றும் பார்த்தேன். எழெட்டுப் பேர் கையில் லாந்தர்களுடன் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அதற்கு வெகு சமீபத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருந்ததாகப் பின்னால் தெரிந்து கொண்டேன். கடவுளுடைய செயலைப் பாருங்கள் ஐயா! அவர் தண்டனை அளிக்கும் போதுகூட, கொஞ்சம் கருணையும் காட்டுகிறார்; சஞ்சாரமே இல்லாத இடத்தில் இந்த மாதிரி விபரீதம் நடந்திருந்தால் எங்கள் கதி என்ன ஆகியிருக்கும்...?"
"பிள்ளைவாள்! எனக்குப் புரியவில்லை! என்ன தான் நடந்தது? ஏன் மரம் பற்றிக் கொண்டது? ஏன் மோட்டார் எரிந்தது?" என்றேன்.
"தெரியவில்லையா ஐயா! பச்சை மரம் ஏன் எரியும்? நீங்கள் தான் சொல்லுங்களேன்? இடி விழுந்து தான்..."
"ஐயோ, அனுமார் கோயிலில் செய்த சபதம்..."
"ஆமாம் சாமி, ஆமாம்! அனுமார் கோயிலில் சிவக்கொழுந்து செய்த சபதம் பலித்து விட்டது. அவ்வளவு சமீபத்தில் இடிவிழுந்த அதிர்ச்சியினால் தம்பியின் மூளைகலங்கிப் போயிருக்க வேண்டும். ஸ்டீரிங்கிலிருந்து கை நழுவியது. வண்டி மரத்தின் மேல் முட்டியது. மூலைக்கு ஒருவராய்ப் போய் விழுந்தோம். ஆனால், அதிசயத்தைக் கேளுங்கள்! யாரும் சாகவில்லை. எங்களுக்கெல்லாம் சிறு காயங்களுடன் போயிற்று. தம்பிக்கு மட்டும் - தம்பிக்கு மட்டும்... சாமி! அதை நினைக்கும் போது தெய்வத்தின் தண்டனை என்று தான் நம்ப வேண்டியிருக்கிறது.
ஆனால் அந்தச் சமயம் இதைப் பற்றியெல்லாம் நான் நினைக்கவில்லை. தம்பிக்கு மூர்ச்சை தெளிவிப்பதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தோம். மூர்ச்சை தெளியவில்லை. அடுத்த ரயிலில் கும்பகோணத்துக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். ரயிலில் தம்பியின் முகத்தை உற்றுப் பார்த்த போது தான் 'ஐயோ! இது தெய்வ தண்டனைதானோ' என்று எனக்குச் சந்தேகம் உதித்தது.
கட்டை மாதிரி அவன் பிரக்ஞையற்றுக் கிடந்தபடியால் உயிர் இருக்கிறதோ இல்லையோ என்று எனக்கு அடிக்கடி பயம் ஏற்படும். உடனே தம்பியின் முகத்தைப் பார்ப்பேன். அந்த முகத்தில் ததும்பிய ஜீவ களையைப் பார்த்து தைரியம் அடைவேன். இப்படி ஒரு தடவை பார்த்த போது மூடியிருந்த தம்பியின் கண்களின் ஓரத்தில் ஏதோ பளபளவென்று சிவப்பாகத் தெரிந்தது. உற்றுப் பார்த்தேன், பகவானே!
அப்போதுதான் என் நெஞ்சை யாரோ ஈட்டியால் குத்திப் பிளப்பது போல் இருந்தது. ஏனெனில் மூடியிருந்த இரண்டு கண்களின் முனையிலும் இரத்தத் துளிகள் காணப்பட்டன! எலக்டிரிக் லைட்டின் பிரகாசத்தில் அவை அப்படி உயர்ந்த ரத்தினக் கற்களைப் போல் பிரகாசித்தன!
என் மனசில் அப்போது ஏற்பட்ட பயங்கரமான சந்தேகம் நாலு நாளைக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் உறுதிப்பட்டது. கும்பகோணத்தில் நம்முடைய பிரபல காங்கிரஸ் டாக்டர் இருக்கிறார் அல்லவா? அவருடைய ஆஸ்பத்திரிக்குத்தான் அழைத்துச் சென்றேன். முதல் மூன்று நாலு நாளும் டாக்டர் ஒன்றும் சொல்லவில்லை. நாலாம் நாள், என்னைக் கூப்பிட்டு, ஸ்பஷ்டமாகச் சொல்லிவிட்டார். "பையனுக்கு மனம் கொஞ்சம் குழம்பியிருக்கிறது. கொஞ்ச நாளில் இது சரியாகப் போய்விடும். ஆனால் கண் இரண்டும் போனது போனதுதான்" என்று சொன்னார். அவரை நான் காரணம் ஒன்றும் கேட்கவில்லை. எனக்குத்தான் காரணம் தெரியுமே? ஹனுமார் கோயிலில் தம்பி செய்த பிரமாணம் அப்படியே பலித்து விட்டது. இனிமேல் மதுபானம் செய்தால், என் தலையில் இடி விழட்டும், என் கண் அவிந்து போகட்டும் என்று சபதம் செய்தபடியே ஆகிவிட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவழுந்தூர் சிவக்கொழுந்து - Thiruvazhundhur Sivakozhundhu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டு, அந்த, நான், பார்த்தேன், வண்டி, கொண்டிருந்தது, போது, எனக்கு, மாதிரி, தான், கொஞ்சம், தம்பியின், போல், அப்போது, பெரிய, மூடிக், தம்பி, அவன், கோயிலில், சபதம், தம்பிக்கு, சிவக்கொழுந்து, விட்டது, செய்த, உயிர், தலையில், பயங்கரமான, விபரீதம், பச்சை, நெருப்புப், நிமிஷம், சிறு, வந்து