தேவகியின் கணவன் - அத்தியாயம் 8
வைத்தியநாதனும் சுந்தரமும் சேர்ந்து சிரித்த
சிரிப்பின் ஒலி என்னை நெருப்பாகத் தகித்தது. அவர்களுடைய சிரிப்பில் இடி
விழட்டும் என்று சபித்தேன். என் உள்ளத்தில் அவ்வளவு பேரும் புயலை அவர்கள்
உண்டு பண்ணிவிட்டுப் போனார்கள். அவர்கள் கூறியதையெல்லாம் ஒவ்வொன்றாய்
எண்ணிப் பார்த்தேன். அவற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கலாம் என்றும்
சிந்தித்தேன். மாப்பிள்ளை வீட்டாருக்கு மொட்டைக் கடிதம் போனது உண்மையாகத்தான்
இருக்க வேண்டும். கலியாணம் தடைப்பட்டதற்கு ஏதேனும் காரணம் இருந்து தீரவேண்டும்
அல்லவா?
ஆனால் அந்தக் கடிதம் எழுதியது யாராயிருக்கும்? தேவகியே எழுதினாள் என்பது உண்மையாயிருக்குமா? அதில் என் பெயரைக் குறிப்பிட்டிருந்ததும் நிஜமாயிருக்க முடியுமா? - அதை எண்ணும் போதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஆனால் கொஞ்சம் நிதானித்து யோசித்து அது உண்மையாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். என்னைப் பற்றித் தேவகி அப்படி எழுதியிருக்கும் பட்சத்தில் சற்று முன்னால் என்னை அம்மாதிரி வரவேற்றிருக்க மாட்டாள். அவ்வளவு அலட்சியமாகவும் வெறுப்பாகவும் பேசியிருக்க மாட்டாள். என்னிடம் அவள் காதல் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மையாயிருக்கும் பட்சத்தில், ஹெட்மாஸ்டர் காலிலே விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்ளலாம். தேவகிக்குத் தகுந்த கணவனாவதற்கு நான் பெரும் பிரயத்தனம் செய்வதாக வாக்குறுதி அளிக்கலாம். அவளை நான் மணந்து கொள்வதற்கு அவர் கூறும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் அது உண்மையாயிருக்க முடியாது. தேவகி அத்தகைய கடிதம் எழுதியிருக்க முடியாது. பின், யார் எழுதியிருக்கக்கூடும்? ஏன்? இந்த அயோக்கிய சிகாமணி வைத்தியும் சுந்தரமும் செய்த வேலையாக இருக்கலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்து என்னையும் அவமானப்படுத்தி சந்தி சிரிக்கவைப்பதற்கு அவர்கள் இந்தச் சூழ்ச்சி செய்திருக்கலாம்.
சட்டென்று ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வந்தது. தேவகி வியாசங்கள் எழுதிய நோட் புத்தகத்தை ஒரு தடவை நான் என் அறைக்கு எடுத்து வந்திருந்தேன். அவளது வியாசம் ஒன்றைத் திருத்திக் கொடுப்பதற்காகத்தான். அதே சமயத்தில் வைத்தியும் என் அறைக்கு வந்திருந்தான். அந்த நோட் புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ அதைப்பற்றிக் 'கிறுதக்'காகக் கூடக் கேட்டான். அப்புறம் அன்றைக்கு அந்த நோட் புத்தகத்தைக் காணாமல் நான் தேடியதும், அதைப் பற்றிக் கவலைப் பட்டதும், திடீரென்று மறுநாள் அந்த நோட் புத்தகம் என் அறையில் வந்து முளைத்திருந்ததும் ஞாபகத்துக்கு வந்தன. அந்தக் கணத்தில், குற்றவாளி யார் என்பது என் மனத்திற்கு ஐயமற விளங்கிவிட்டது. அந்த அயோக்கியன் வைத்தியினுடைய வேலைதான். இதைப்போய் உடனே ஹெட்மாஸ்டரிடம் சொல்லி என் பேரிலுள்ள சந்தேகத்தையும் தப்பெண்ணத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும். குற்றவாளி யார் என்பது ருசுவாகிவிட்டால், பிறகு நின்றுபோன கலியாணத்தைத் திரும்பவும் பேசி முடித்து நடத்தி வைப்பது கூடச் சாத்தியமாகலாம் அல்லவா?
இப்படியெல்லாம் ஆகாசக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டு மறுபடியும் ஹெட்மாஸ்டரின் வீட்டுக்கு விரைந்து சென்றேன். அடடா! அங்கே எனக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது?
நான் எவ்வளவோ அன்பும் மதிப்பும் வைத்து என்னுடைய இருதயத்திலே கோயில் கட்டிப் பூசை செய்து வந்த தெய்வமாகிய தேவகி இப்படி என் பேரில் அபாண்டமான பெரும் பழியைப் போடுவாள் என்று நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?
ஆனால் அவள் பேரில் குற்றம் சொல்லுவதிலும் பயனில்லைதான். அவள் என்ன செய்வாள், பாவம்? சந்தர்ப்பங்களின் சேர்க்கை அப்படி அவள் கூட என்பேரில் சந்தேகப்படும்படியாகச் செய்து விட்டது.
நான் ஹெட்மாஸ்டரின் வீட்டுக்குள் புகுந்த போது தேவகி விசித்து அழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஹெட்மாஸ்டர் இரையும் சத்தமும் அவருடைய மனைவி தன் பெண்ணுக்குப் பரிந்து ஏதோ சொல்லும் சத்தமும் கூடக் கேட்டது. இந்தச் சமயத்தில் நான் உள்ளே போய் உண்மையை வெளிப்படுத்தித் தேவகியை அவளுடைய தந்தையின் கோபத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற ஆசையுடன் தடபுடலாகப் பிரவேசம் செய்தேன். ஆசை அதிகமாகிற பொழுது அறிவு மழுங்கிவிடும் என்பது எவ்வளவு உண்மையான வார்த்தை!
நான் உள்ளே சென்றதும் அந்த மூன்று பேரும் பூசை வேளையில் கரடி புகக் கண்டவர்கள் போல் மிரண்டு விழித்து என்னைப் பார்த்தார்கள்.
ஹெட்மாஸ்டர் என்னைப் பார்த்ததும் ஏதோ சொல்ல வாயெடுத்தவர், பேசவே முடியாதவராய், திறந்த வாய் திறந்தபடி நின்றார்.
மாமியோ கண்ணீர் ததும்பிய கண்களோடு என்னைப் பார்த்தாள். 'பாவம்! இந்தச் சமயத்திலா நீ வந்து சேர வேண்டும்?' என்று மாமியின் கண்கள் கருணையோடு கூறின.
தேவகிதான் முதலில் வாயைத் திறந்து பேசினாள், அடடா! எவ்வளவு கர்ண கடூரமான வார்த்தைகள் அவளுடைய வாயிலிருந்து வெளி வந்தன? தேவகியின் குரலைக் குயிலின் குரலோடும் அவளுடைய பேச்சைக் கிளியின் மழலையோடும் ஒப்பிட்டுப் பார்த்து இறுமாந்திருந்த என்னை அவளுடைய கொடுமையான வார்த்தைகள் எப்படிப் புண்படுத்தி வேதனை செய்தன?
"என்னைப் போட்டு ஏன் பிடுங்கி எடுக்கிறீர்கள், அப்பா! உங்கள் அருமைச் சிஷ்யன் கிச்சாமி, இவன் தான் என்னுடைய வியாச நோட் புத்தகத்தை எடுத்துப் போய்ச் சில நாள் வைத்திருந்தான். இந்தத் தடியன் தான் என்னுடைய எழுத்து மாதிரி எழுதி அந்தப் பொய்க் கடிதம் போட்டிருக்கவேண்டும்!" என்றாள் தேவகி.
அவ்வளவுதான்; ஹெட்மாஸ்டர் ரௌத்ராகாரமடைந்து என்னை நோக்கி நடந்து வந்தார். "அடபாவி! சண்டாளா! என்னுடைய குடியைக் கெடுத்துவிட்டு மறுபடியும் என்ன தைரியமாய் இந்த வீட்டுகுள்ளே நுழைகிறாயடா!" என்று அலறிக்கொண்டே என்னருகில் வந்து என் கழுத்தைப் பிடித்து வேகமாக ஒரு தள்ளுத் தள்ளினார்.
தள்ளிய வேகத்தில் எதிரிலேயிருந்த சுவரிலே போய் முட்டிக் கொண்டேன். ஒரு நிமிஷம் என் பொறி கலங்கிற்று.
"ஐயையோ! உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா, என்ன? அந்தப் பிள்ளை பேரில் உங்கள் கோபத்தைக் காட்டுகிறீர்கள்?" என்று மாமி பரிந்து கூறியது கிணற்றுக்குள்ளிருந்து பேசியதுபோல் என் காதில் விழுந்தது. மாமியின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறினேன். பிறகு அந்த வீட்டுக்குள் நுழையவே இல்லை.
அன்றிரவே அந்த ஊரை விட்டுக் கிளம்பி விட்டேன். பள்ளிக்கூடத்தில் 'டிரான்ஸ்பர் சர்டிபிகேட்' வாங்குவதற்காகக் கூடத் தாமதிக்கவில்லை. மறுபடி ஹெட்மாஸ்டர் முகத்தில் விழிக்கவே நான் விரும்பவில்லை. அன்றிரவு கிளம்பியவன் தான்; பிறகு அந்த ஊரின் எல்லையைக் கூட இன்று வரையில் நான் மிதிக்கவில்லை. அன்றைய நிகழ்ச்சி, - அன்று எனக்கு நேர்ந்த அதிர்ச்சி, - என்னுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைக்க காரணமாயிருந்தது.
கிராமத்துக்குப் போய் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கல்கத்தாவுக்குப் பிரயாணமானேன். கல்கத்தாவில் என்னுடைய தூரத்து உறவினர் ஒருவர் இருந்தார். பெரிய கம்பெனியில் அவர் மானேஜர் உத்தியோகம் பார்த்தார். அவரை அண்டி முதலில் அவருடைய வீட்டில் சமையல் வேலை செய்தேன். பிறகு அவருடைய கம்பெனியில் குமாஸ்தாவானேன். நாளடைவில் பொறுப்புள்ள பெரிய உத்தியோகங்கள் கிடைத்தன. கடைசியில் சென்னையிலேயே மேற்படி கம்பெனியின் கிளை ஆபீஸுக்கு மானேஜரானேன். பணமும் பல வசதிகளும் என்னைத் தேடிக் கொண்டு வந்தன.
பல வருஷ காலம் மணம் செய்து கொள்ளாமலே இருந்தேன். என் முப்பதாவது வயதில் வாழ்க்கையின் தனிமையைப் பொறுக்க முடியாமல் கலியாணம் செய்து கொண்டேன். என்னுடைய இல்வாழ்க்கையைப் பற்றிக் குறை ஒன்றும் சொல்வதற்கில்லை. நம் நாட்டில் பெரும்பாலோருடைய இல்வாழ்க்கையைப் போல் என் குடும்ப வாழ்க்கையும் லோகாபிராமமாக நடந்து வருகிறது.
எப்போதாவது சில சமயங்களில், ஹெட்மாஸ்டர் பெண் தேவகியைப் பற்றி நான் நினைத்துக் கொள்வதுண்டு. அவளை மணந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்திருக்கும் என்று அசட்டுக் கனவுகள் காண்பதுண்டு. அப்பொழுதெல்லாம், கடைசிச் சந்திப்பில் அவள் என்பேரில் சுமத்திய அநியாயப் பழியை நினைந்து அவள் பேரில் வெறுப்பை வேண்டுமென்று வருவித்துக் கொள்வேன். ஆயினும், அது என்ன அதிசயமோ, தெரியவில்லை! எவ்வளவு முயன்றாலும் தேவகியைப் பற்றி வெறுப்பாக என்னால் நினைக்க முடிவதில்லை. அவள் எங்கே இருக்கிறாளோ, அவளுடைய வாழ்க்கையின் சுக துக்கங்கள் எப்படியோ, - என்று நினைக்கும் போது ஒரு தனிப்பட்ட அநுதாப உணர்ச்சி ஏற்படும். தேவகியைப் பற்றிய சிந்தனையில் நான் ஆழ்ந்திருக்கும்போது யாராவது ஏதாவது கேட்டால் என் காதிலேயே ஏறாது. சுய ஞாபகம் வந்ததும் "என்ன சொன்னீர்கள்? ஏதோ ஞாபகமாய் இருந்துவிட்டேன்!" என்பேன்.
பொருட் காட்சி மைதானத்தில் தேவகியைத் திடீரென்று பார்த்ததிலிருந்து அவள் விஷயமான அநுதாப உணர்ச்சி ஒன்றுக்கு நூறு மடங்காயிற்று. அவளுடைய தோற்றத்தையும் ஆடை ஆபரணங்களையும் பார்த்தால் அவ்வளவு செழிப்பான நிலையில் அவள் இருக்கக்கூடும் என்று தோன்றவில்லை. குழந்தைகளைப் பார்த்தாலும் அப்படியேதானிருந்தது. பாவம்! என்ன கஷ்டப் படுகிறாளோ, என்னமோ? அவளுக்கு நான் ஏதேனும் உதவி செய்வது சாத்தியமானால், அதைக் காட்டிலும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றுமே இராது.
அது மட்டுமல்ல; தேவகியும் அவளுடைய தந்தையும் என்பேரில் கொண்ட சந்தேகம் ஆதாரமற்றது என்பதை எப்படியேனும் நிரூபிக்க வேண்டும். அப்படி என் பேரில் அவர்கள் அநியாயப் பழி சுமத்தியதற்காக வெட்கப்படும்படியும் செய்ய வேண்டும்! - இந்த ஒரு காரியம் நிறைவேறினால் பிறகு என் வாழ்க்கையில் குறைபடுவதற்கே இடம் ஒன்றுமிராது. அது நிறைவேறுகிற வரையில் என் உள்ளத்தில் குறையும் வேதனையும் இருந்து கொண்டுதானிருக்கும்.
ஹெட்மாஸ்டர் பத்மநாப அய்யங்காரும், அவளுடைய உத்தம பத்தினியான ரங்கநாயகி அம்மாளும் உயிரோடு சௌக்கியமாயிருக்கிறார்களா? அதைக்கூடத் தேவகியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டேனே? என்றாலும், பாதாகமில்லை; எல்லாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரிந்து போகிறது!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 8 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அவள், அந்த, என்னுடைய, அவளுடைய, ஹெட்மாஸ்டர், தேவகி, எவ்வளவு, என்ன, பிறகு, பேரில், நோட், எனக்கு, என்னைப், என்பது, வேண்டும், கடிதம், என்னை, செய்து, என்பேரில், பாவம், போய், தேவகியைப், வாழ்க்கையின், தான், அவ்வளவு, அவருடைய, பெரிய, இந்தச், யார், கேட்டுக், புத்தகத்தை, முடியாது, வந்தன, வந்து, அப்படி