தேவகியின் கணவன் - அத்தியாயம் 9
ஞாயிற்றுக் கிழமை பொழுது விடிந்தது. காலையில்
நான் விழித்து எழுந்ததும் என் மனதில் உண்டான முதல் நினைவு, அன்றைக்குத்
தேவகியின் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான்.
பொழுது விடிந்தவுடனேயே, காரை எடுத்துக் கொண்டு தேவகியின் வீட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணத்தைப் பலவந்தமாகக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அவ்வளவு சீக்கிரமாகப் போனால், யாராவது சிரிப்பார்கள். மேலும் அப்போது பனிக்காலம். காலை ஏழு மணிவரையில் மூடுபனி கொட்டிக் கொண்டிருந்தது. சில வீடுகளில் அதற்குள் எழுதிருக்கக் கூட மாட்டார்கள். அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிச்சயமாக நேரங்கழித்தே எழுந்திருப்பார்கள். காலை எட்டு மணி வரையில் பனியின் சிலு சிலுப்பு இருந்தது. பொழுது விடிந்து எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்துக் காப்பி சாப்பிட அவகாசம் கொடுக்க வேண்டுமல்லவா?
கடைசியாக, எட்டரை மணிக்குப் புறப்பட்டேன். தேவகி கொடுத்திருந்த விலாசம் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு சந்து. அந்தச் சந்தைக் கண்டு பிடித்து, வீட்டு நம்பரையும் கண்டு பிடிப்பதற்குள், மணி ஒன்பது ஆகிவிட்டது. ஆனால் நான் எண்ணியது போல் வீடு அவ்வளவு மோசமாயில்லை. அது ஒரு மச்சு வீடு. கீழ்க் கட்டிலும் மேன் மாடியிலும் பல அறைகள் உள்ள விசாலமான வீடு.
காரைக் கொண்டு போய் நிறுத்தியதும் யாராவது வீட்டுக்குள்ளிருந்து வந்து விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். யாரும் வெளியே வருகிற வழியாக இல்லை. வீட்டு வாசலில் படிகட்டில் நின்று, "ஸார்! ஸார்!" என்றேன். கீழ்க்கட்டிலிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. மேலேயிருந்து, ஒரு கடுமையான புருஷக் குரல், "யார் அங்கே?" என்று சத்தமிட்டது. ஒரு விநாடி "இது என்ன வம்பு? ஒரு வேளை விலாசம் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் வேறு யார் வீட்டுக்காவது வந்து விட்டோ மா?" என்று நினைத்தேன்.
வாசற் படிக்கட்டிலிருந்து வீதியில் இறங்கி அண்ணாந்து பார்த்தேன். மேல் மாடி அறையின் ஜன்னல் கதவை யாரோ படீர் என்று சாத்தினார்கள்.
மேல் கட்டில் வேறு யாராவது குடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டு மறுபடியும் வாசற்படி ஏறிக் கதவண்டையில் வந்து "ஸார்! ஸார்!" என்றேன். அதற்கும் பதில் இல்லாமற் போகவே, தைரியத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, கதவை இரண்டு தட்டி "தேவகி! தேவகி!" என்றேன். பிறகு, பாதி சாத்தியிருந்த கதவைத் திறந்தேன்.
உள்ளே முற்றத்தில் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயண்டை ஒரு வேலைக்காரி பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். ஒரு குழந்தை குழாயண்டை நின்று குழாயிலிருந்த தண்ணீரில் கையை வைத்து விசிறி அடித்துக் கொண்டிருந்தது.
அந்தக் குழந்தையைப் பார்த்ததும் என் மனம் நிம்மதியடைந்தது. அந்தக் குழந்தை பொருட் காட்சி மைதானத்தில் தேவகியுடன் நான் பார்த்த குழந்தைதான். ஆகவே, இது தேவகியின் வீடு என்பதில் சந்தேகமில்லை. ஒரு வேளை உள்ளே சமையற்கட்டில் தேவகி இருக்கலாம். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருப்பதால் நான் மெதுவாய்க் கூப்பிட்டது காதில் விழவில்லை போலும்.
என்னுடைய இரண்டு கையையும் பலமாகத் தட்டவே வேலைக்காரி நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். கையை அலம்பிவிட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே என் அருகில் வந்தாள். "என்னாங்க, சாமி!" என்றாள்.
"தேவகி அம்மாளைப் பார்ப்பதற்காக வந்தேன். அந்த அம்மாளின் வீடு இதுதானே?" என்றேன்.
"அம்மா அடுத்த வீதிக்குப் போயிருக்காங்க. ஒரு சிநேகிதி அம்மாளின் குழந்தைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம். அதற்காகப் போயிருக்காங்க!" என்றாள் வேலைக்காரி.
"எப்போது திரும்பி வருவார்கள்?"
"தெரியாதுங்க. அனேகமாக இப்பவே வந்தாலும் வந்துடுவாங்க!"
இதென்ன தொந்தரவு என்று நினைத்துக் கொண்டு, "வீட்டிலே வேறு யாருமில்லையா! அந்த அம்மாளின் புருஷர்?..." என்றேன்.
வேலைக்காரி கொஞ்சம் திகைத்து நின்றுவிட்டு, "அவங்க வெளியூருக்குப் போயிருக்காங்க! இன்னும் திரும்பி வரவில்லைங்க!" என்றாள்.
அவளுடைய திகைப்பின் காரணம் அப்போது எனக்குப் புரியவில்லை. பிற்பாடு தெரிந்தது.
"தேவகி அம்மாளின் தகப்பனார் பத்மநாப ஐயங்கார் இருக்காரா?" என்று கேட்டேன்.
"அவரு இருக்காரு! அதோ அந்தக் காமரா அறையிலே எட்டிப் பாருங்க!" என்று சொல்லிவிட்டு வேலைக்காரி தன்னுடைய வேலையைப் பார்ப்பதற்குப் போய் விட்டாள்.
வேலைக்காரி சுட்டிக் காட்டிய அறையின் கதவு சாத்தியிருந்தது. சற்று நேரம் உட்கார்ந்திருக்கலாம் என்றால் ஒரு பெஞ்சியா, நாற்காலியா ஒன்றும் கிடையாது. மேலும், அந்த வேலைக்காரி காமரா உள்ளுக்குள் எட்டிப் பார்க்கச் சொன்னதின் அர்த்தம் என்ன?
அந்த அறை ஜன்னலின் கீழ்ப்பாதிக் கதவுகள் சாத்தியிருந்தன. அருகில் சென்று மேற்பகுதி வழியாக எட்டிப் பார்த்தேன். உள்ளே நான் பார்த்த காட்சி ஒரு நிமிஷம் என்னைப் பிரமிக்கும்படி செய்து விட்டது.
ஒரு வயதான மனிதர் அந்த அறையின் சுவர் ஓரமாகத் தலைகீழாக நின்று கொண்டிருந்தார். அவருடைய தலையை ஒரு தலையணையில் வைத்துக் கொண்டிருந்தார். கால்களைச் சுவர் மீது சாத்தியிருந்தார். மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டு நின்றார் என்பது தெளிவாயிருந்தது. ஆனால் அவருடைய முகம் எனக்குத் தெரியவில்லை. எனினும் அவர் ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்காராக இருக்கலாம் என்று தோன்றியது. முகத்தைப் பார்த்தால் நிச்சயமாய்ச் சொல்லி விடலாம்.
ஆயினும் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறவரிடம் எப்படிப் பேசுவது? ஜன்னல் ஓரமாகவே நின்று காத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நிமிஷத்துக்கெல்லாம் அந்த மனிதரின் கால்கள் கீழே வந்தன. அவர் எழுந்து நின்றார். அறைக்குள் மங்கலான வெளிச்சமே யிருந்த போதிலும் அவர் பத்மநாப ஐயங்கார் தான் என்பது தெரிந்துவிட்டது.
இதுதான் சமயம் என்று "ஸார்! ஸார்!" என்றேன்.
ஐயங்கார் என் பக்கம் சட்டென்று திரும்பிப் பார்த்துக் கடுகடுப்பான முகத்துடன் "யார் அது, சுத்த நியூஸென்ஸ்! இந்த வீட்டில் ஒரு நிமிஷமாவது 'பிரைவஸி' என்பதே கிடையாது!" என்றார்.
"மன்னிக்கவேண்டும் ஸார்! நான் தான் உங்கள் பழைய மாணாக்கன் கிச்சாமி! என்னை ஞாபகம் இல்லையா?" என்றேன்.
உடனே ஹெட்மாஸ்டரின் முகம் மலர்ந்தது. "அடே டேடேடே! நம்ம தண்டாங்கோரை கிச்சாமியா? வா! வா! தேவகி கூடச் சொன்னாள், நீ வருவாய் என்று. நான் தான் மறந்துவிட்டேன். வா! உள்ளே வா!" என்று சொல்லிக் கொண்டே வந்து அறையின் கதவைத் திறந்தார். உள்ளே போனதும் தானும் உட்கார்ந்து என்னையும் ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார்.
மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு என்னை நன்றாய் உற்றுப் பார்த்து விட்டு, "ஆமாம், நீ கிச்சாமிதான்! ஆனால் எப்படி மாறிப் போயிருக்கிறாய்? ஷர்ட்டு, கோட்டு, கையிலே ரிஸ்ட்வாச்சு, பையிலே பார்க்கர் பேனா எல்லாம் பிரமாதமாயிருக்கிறதே; வாசலில் நிற்கிற கார் கூட உன்னுடையது தானாக்கும்! ஜோரான ஸ்டூடி பேக்கர் கார் அல்லவா? தேவகி சொன்னது சரிதான். நல்ல பணம் சம்பாதிச்சுட்டே போலிருக்கிறது. எல்லாம் பெருமாளுடைய அருள். ரொம்ப சந்தோஷம். ஆனாலும் எப்படி மாறிப் போயிருக்கிறாய்? என்னுடைய 'ஸ்டூடண்ட்' கிச்சாமி நீதான் என்று நம்புவதே கஷ்டமாய்த் தானிருக்கிறது. இப்போது எங்கே இருக்கே? என்ன செய்யறே? எல்லாம் சவிஸ்தாரமாய்ச் சொல்லு பார்க்கலாம்?" என்றார்.
"பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறேன், ஸார்! ஏதோ உங்கள் ஆசீர்வாதத்தினாலே இது வரை எல்லாம் சௌக்கியமாகவே இருந்து வருகிறது. தியாகராஜ நகரிலே வசித்து வருகிறேன். தாங்கள் இங்கே வந்து ரொம்ப வருஷம் ஆகிவிட்டதோ?"
"ஏன்? ரிடையர் ஆனதிலிருந்து இங்கேதான் இருந்து வருகிறேன். வேறு எங்கே போகிறது? இது என் பிதிரார்ஜித வீடு."
"அப்படியா? ரொம்ப சந்தோஷம்! உங்களை நான் பார்த்துக் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷம் இருக்குமே? ஆனால் உங்களுடைய தோற்றத்தில் மட்டும் மாறுதலே இல்லை. அன்று மாதிரியே இன்றைக்கும் இருக்கிறீர்கள், ஸார்!"
"நீ சொல்கிறது உண்மை. வயது எனக்கு இப்போது 75 ஆகிறது. ஆனால் நான் இதைச் சொன்னால் ஒருவரும் நம்புவதில்லை. எல்லாரும் அறுபது வயதுதான் மதிப்பிடுகிறார்கள். எதனாலே இப்படி இருக்கேன் தெரியுமா! எல்லாம் யோகாசனத்தின் மகிமைதான். நீ வருகிறபோது கூட ஆஸனந்தான் செய்து கொண்டிருந்தேன். நீ வேணுமானால் பாரு! நான் நூறு வயது இருக்கப் போகிறேன். நான் சுரம் தலைவலி என்று படுத்து இன்றைக்கு வருஷம் பதினைந்து ஆகப்போகிறது."
"எந்த வருஷத்திலே, ஸார், நீங்கள் ரிடையர் ஆனீர்கள்? ரிடையர் ஆனவரையில் தண்டாங்கோரையில் தான் ஹெட்மாஸ்டராயிருந்தீர்களா!"
"ஆமாம், கிட்டா, ஆமாம்! வேறு எங்கே நான் போகிறது? தண்டாங்கோரையிலே அந்த நாட்களை நினைத்தாலே எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. அதுவும் நீங்கள் எல்லாம் படித்துக் கொண்டிருந்த போது, எப்பேர்ப்பட்ட நல்ல ஸெட்? நீங்கள் எவ்வளவு சிரத்தையாய்ப் படித்தீர்கள்! உபாத்தியாயர்களிடம் எவ்வளவு மரியாதையாயிருந்தீர்கள்! - இந்தக் காலத்துப் பிள்ளைகள் அடியோடு கெட்டுப் போய் விட்டார்கள்! படிக்கிறதில்லை, பரீட்சைப் பேப்பரைத் திருடப்பார்க்கிறது; அப்படித் திருடிப் பரீட்சைப் பேப்பர் முழுதும் தெரிந்திருந்தாலும், பரீட்சையிலே சரியாகப் பதில் எழுதி மார்க் வாங்க முடிகிறதில்லை! இந்தக் காலத்து மாணாக்கர்கள் ரொம்ப ரொம்ப மட்டமானவர்கள். அடாடா! நீங்கள் எல்லாம் படித்தபோது எவ்வளவு நன்றாயிருந்தது? அப்போது வகுப்புகளுக்கு வருவதே ஒரு சந்தோஷம்!"
"எனக்குக் கூட அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால் எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது, ஸார்! உங்களிடம் படித்த பிறகு வேறு யாரிடமும் படிக்க நான் இஷ்டப்படவில்லை."
"ஆமாம், ஆமாம்! நீ டிரான்ஸ்பர் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளக் கூட வரவில்லை பாவம்! உன்னை வீணாக..."
"அதனால் என்ன, ஸார்! ஒன்றும் குறைவில்லை. அப்படியே படிப்பை விட்டு விட்டுப் போய் 'பிஸினஸ்' துறையில் சேர்ந்ததினாலேதான் இன்றைக்கு நான் நன்றாயிருக்கிறேன். என்னுடைய ஆபீஸில் எனக்குக் கீழே முப்பது 'கிராஜுவேட்'டுகள் குமாஸ்தா வேலை பார்க்கிறார்கள், ஸார்!"
"ரொம்ப சந்தோஷம். நான் ஆதியிலிருந்து என் கீழ் படித்த மாணாக்கர்களுக்கெல்லாம் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். 'உத்தியோகம் உத்தியோகம் என்று ஆலாய்ப் பறக்காதீர்கள்! ஏதாவது வியாபாரம், கைத்தொழில், பாங்கிங்க், - இப்படிப் பார்த்துப் புகுந்து கொள்ளுங்கள்' என்று படித்துப் படித்துச் சொல்வேன். நீ ஒருவனாவது என்னுடைய வார்த்தையை மதித்து நடந்து இந்த மாதிரி நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறாயே, அதைப் பற்றி எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது. ஆனால், பாவம், உன் மாமிதான் கண்ணை மூடி விட்டாள். என்னைப் பரிதவிக்க விட்டுப் போய்விட்டாள். இன்றைய தினம் அவள் உயிரோடிருந்து நீ 'ஜம்' என்று 'ஸ்டூடி பேக்கர்' காரில் வந்து இறங்கியதைப் பார்த்திருந்தால் அப்படியே பூரித்துப் போயிருப்பாள். அவளுக்கு உன் பேரில் அலாதியான பிரியம். எத்தனையோ மாணாக்கர்கள் என்னிடம் படித்திருக்கிறார்கள். அவளிடமும் பக்தியுடன் பழகியிருக்கிறார்கள். ஆனால் உன்னிடம் அவளுக்கு ஏற்பட்ட பாசத்தைப் போல் வேறு யாரிடமும் ஏற்படவில்லை. தண்டாங்கோரையில் புதுக் குடித்தனம் போட்ட போது நீ செய்த உதவிகளைப் பற்றி அவள் சொல்லாத நாள் கிடையாது. என்னிடம் கூட அவளுக்கு ரொம்பக் கோபம். உன் பேரில் நான் அநியாயமாய்ப் பழி போட்டுத் துரத்திவிட்டேன் என்று. ஆனால் அந்த நிலைமையில் நான் என்ன செய்திருக்க முடியும், கிச்சா! நீயே சொல்லு!"
"ஆமாம், ஸார்! நீங்கள் என்ன செய்திருக்க முடியும்?" என்றேன் நான். ரங்கநாயகி அம்மாள் காலமாகி விட்டாள் என்னும் செய்தி என்னைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. மாமி கடைசி வரை என்னை நினைவு வைத்துக் கொண்டிருந்தாள் என்பது என் மனதை உருக்கி விட்டது.
இதே சமயத்தில் வாசலில் கலகலவென்று பேச்சுக் குரல் கேட்டது. அடுத்த நிமிஷம் தேவகி தன்னுடைய மூத்த குழந்தைகள் இருவருடனும் வீட்டுக்குள்ளே வந்தாள்.
என்னைப் பார்த்ததும், "ஓகோ! கிட்டாவா? வாசலில் நிற்கும் மோட்டார் கார் உங்களுடையது தானா? யாருடையதோ என்று பார்த்தேன். நீங்கள் இன்றைக்கு வருகிறதாகச் சொன்னதையே மறந்து போய் விட்டேன். நல்லவேளை! ஆண்டு நிறைவு நடந்த வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புத்தியும் தட்டிக் கழித்து விட்டு வந்தேனே? அதுவே நலதாய்ப் போயிற்று!" என்றாள்.
ஸ்திரீகளின் சபல சித்தத்தைப் பற்றி என்னவென்று சொல்வது? இன்றைக்கு என்னை அவள் தான் வரும்படி சொன்னாள். ஆனால் நானே வருகிறேன் என்று சொன்னதாக இப்போது சொல்கிறாள். அது மட்டுமல்லாமல், என்னை வரச் சொல்லிவிட்டு, அதை அடியோடு மறந்தும் போய் விட்டாள்! நானோ மூன்று நாலு நாளாய்க் கனவிலே கூட அதே நினைவாயிருந்தேன். நன்றாயிருக்கிறதல்லவா, கதை?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 9 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், ஸார், அந்த, தேவகி, என்றேன், எல்லாம், வேலைக்காரி, கொண்டு, வேறு, என்ன, ஆமாம், வந்து, ரொம்ப, வீடு, நீங்கள், போய், உள்ளே, தான், என்னை, நின்று, என்னைப், என்றாள், இன்றைக்கு, விட்டாள், சந்தோஷம், என்னுடைய, அம்மாளின், அறையின், வாசலில், எங்கே, வருகிறேன், வருஷம், இப்போது, யாராவது, நல்ல, அப்போது, ரிடையர், வேண்டும், அவள், அவளுக்கு, பற்றி, எவ்வளவு, தேவகியின், சந்தோஷமாயிருக்கிறது, கார், கொட்டிக், எட்டிப், யார், கிடையாது, ஐயங்கார், பத்மநாப, பொழுது, போயிருக்காங்க, செய்து, என்பது, விட்டு, அந்தக், பதில், ஒன்றும், அவர், கொண்டிருந்தேன், பார்த்தேன்