தேவகியின் கணவன் - அத்தியாயம் 10
தேவகி உள்ளே வந்து உட்கார்ந்ததும் ஹெட்மாஸ்டர்
"பார்த்தாயா, தேவகி? நம்ம தண்டாங்கோரை கிச்சாமி எப்படி ஜோராய் 'ஸ்டூடி
பேக்கர்' கார் வைத்துக் கொண்டு இருக்கிறான், பார்த்தாயா? சற்றே நீ இவனுடன்
பேசிக் கொண்டிரு. நான் ஸ்நானம் செய்து விட்டு வந்து விடுகிறேன்" என்று
சொல்லிப் போனார்.
தேவகி தன் குழந்தைகளை ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு, "இதோ உங்கள் சித்தியா வந்திருக்கிறார். நமஸ்காரம் பண்ணு!" என்றாள். (வைஷ்ணவர்கள் சித்தப்பாவைச் 'சித்தியா' என்று சொல்வது வழக்கம்.) "இவர் எங்கள் சித்தியாவா? இத்தனை நாள் எங்களை ஏன் வந்து இவர் பார்க்கவில்லை?" என்றது ஒரு குழந்தை. அதற்கு, "இப்போதுதான் உங்கள் சித்தியாவுக்கு தயவு வந்திருக்கிறது. அதற்கு நான் என்ன செய்கிறது?" என்றாள் தேவகி. இதற்குப் பதில் சொல்லவே எனக்குத் தெரியவில்லை.
குழந்தைகள் நமஸ்காரம் செய்துவிட்டு அவரவர்களும் கையில் ஒரு புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
"அந்த நாளில் நீ படிப்பிலே கெட்டிகாரியாக இருந்தது போலவே உன் குழந்தைகளும் இருக்கிறார்கள்" என்றேன் நான்.
"போதும், போதும். நான் படித்த இலட்சணத்தை நீங்கள் தான் மெச்ச வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கே போகாமல் படிப்பை நிறுத்திவிட்டேன். ஆனால் அது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் தான் திடீரென்று ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சர்டிபிகேட்' கூட வாங்கிக் கொள்ளாமல், மாயமாய்ப் போய் விட்டீர்களே?" என்றாள்.
இவ்வளவு சீக்கிரத்தில் அந்த விஷயத்தைப் பற்றிப் பேச எனக்கு இஷ்டமில்லை. கடைசியில் தேவகியிடம் விடை பெற்றுக்கொண்டு போகும்போது அந்த 'போர்ஜரி' கடிதத்தின் உண்மை வெளியாயிற்றா என்று கேட்க நினைத்தேன். ஆரம்பத்திலிருந்து அதைப் பற்றிக் கேட்டுப் பேச்சை விரஸமாக்குவானேன்?
ஆகையால், பேச்சை வேறு பக்கம் திரும்ப விரும்பி, "தேவகி! உன் தாயார் காலமாகி விட்டாளாமே? இப்போதுதான் ஹெட்மாஸ்டர் சொன்னார்!" என்றேன்.
உடனே தேவகி கடல் மடை திறந்ததுபோல் தன் தாயாரைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அன்னையின் அருமை பெருமைகளைப் பற்றியும் அற்புத குணங்களைப் பற்றியும் வர்ணித்துக் கொண்டேயிருந்தாள். எனக்கும் மாமியைப் பற்றிக் கேட்கப் பிரியமாயிருந்தது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் இங்கே சொல்லிக் கதையை வளர்த்த நான் விரும்பவில்லை. மேலே விஷயத்துக்குப் போகிறேன்.
திடீரென்று தேவகி, "அம்மாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரம் போவதே தெரிவதில்லை. இனிமேல்தான் அடுப்பு மூட்டித் தளிகை செய்தாக வேண்டும். நான் போகட்டுமா? அப்பா சீக்கிரம் வந்து விடுவார்!" என்றாள்.
"எனக்கும் போக வேண்டியதுதான். நேரமாயிற்று. ஆனால் உன் புருஷனைப் பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே, தேவகி! அவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நான் முக்கியமாக வந்தேன். அவர் வீட்டில் இப்போது இல்லையா? ஒரு வேளை ஊரிலேயே இல்லையா?" என்று கேட்டேன்.
தேவகி அந்தப் பழைய நாட்களில் சில சமயம் திடீரென்று சிந்தனையில் ஆழ்ந்து பேசாமலிருப்பாள் என்று சொன்னேன் அல்லவா? அந்தமாதிரி இப்போதும் இருந்தாள். திடீரென்று அவளுடைய பிராயத்தில் இருபது வயது குறைந்து பழைய கன்னிப் பெண் தேவகியாக மாறிவிட்டதாகவே தோன்றியது. யோசனையில் ஆழ்ந்திருந்த அந்த நிமிஷத்தில் அவளுடைய முகபாவம் அப்படியிருந்தது.
"தேவகி! இருபத்தைந்து வருஷத்தில் நீ கொஞ்சம் கூட மாறவில்லை" என்று நான் சொன்னதும், அவள் திடுக்கிட்டுப் பகற் கனவிலிருந்து விழித்துக் கொண்டவாளாய், "என்ன கேட்டீர்கள்?" என்றாள்.
"உன்னுடைய புருஷரைப் பற்றித்தான் கேட்டேன்; அவரைப் பார்க்க முடியாதா?" என்றேன்.
தேவகி சிறிது நேரம் உச்சிமோட்டைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "ஆம், அவரைப் பார்க்க முடியாது. அது பெரிய கதை. இப்போதே சொல்ல வேண்டுமா?" என்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 10 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - தேவகி, நான், என்றாள், திடீரென்று, அந்த, வந்து, அவரைப், பற்றிப், என்றேன்