தேவகியின் கணவன் - அத்தியாயம் 6
கலியாணத் தேதி குறிப்பிட்டாகிவிட்டது.
பந்தக்கால் முகூர்த்தம் நடந்து, கலியாணக் கடுதாசி அச்சிடவும் கொடுத்தாகிவிட்டது.
கலியாணத்துக்கு வேண்டிய சாமான்களில் பாதிக்குமேல் சேகரம் செய்தாகி விட்டது.
மணப் பெண்ணுக்கு நிச்சயதார்த்தப் புடவையும் மாப்பிள்ளைக்கு முகூர்த்த
வேஷ்டியும் கூட வாங்கியாகிவிட்டது. இவ்வளவு ஏற்பாடுகளும் ஆன பிறகு, திடீரென்று
'ஹெட்மாஸ்டர் பெண்ணின் கலியாணம் நின்று போய் விட்டது' என்ற வதந்தி ஊரில்
பரவியது.
என் தாயாரைப் பார்ப்பதற்காக இரண்டு நாள் நான் கிராமத்துக்குப் போயிருந்து திரும்பி வந்தேன். திரும்பி வந்தவுடனே அந்தச் செய்தி காதில் விழுந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையை அறிந்து கொள்வதற்காக அவசர அவசரமாக ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போனேன். வீட்டு வாசலில் கலியாணத்துக்காகப் போட்டிருந்த பந்தலை ஆட்கள் அப்போதுதான் பிரித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி என் மனதில் சொல்ல முடியாத வேதனையை உண்டு பண்ணியது. வீட்டுக்குள்ளே போனேன். ஹெட்மாஸ்டராவது, அவர் மனைவியாவது அங்கே காணப்படவில்லை. தேவகி மட்டும் கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தாள். சந்திரபிம்பம் போன்ற அவளுடைய முகம் வாடி வதங்கியிருந்தது. அவளுடைய தலை மயிர் அவிழ்ந்து தொங்கியது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியதின் அடையாளங்கள் காணப்பட்டன.
"தேவகி! இது என்ன? பந்தலை ஏன் பிரிக்கிறார்கள்? நான் கேள்விப்பட்டது உண்மையா?" என்றேன்.
"ஆமாம், கிட்டா! உண்மைதான். கலியாணம் நின்று போய்விட்டது. நான் 'வேண்டாம் வேண்டாம்' என்று அடித்துக் கொண்டேனே, அதை இவர்கள் கேட்டால்தானே? அப்போது நான் சொன்னதைக் கேட்கவில்லை; இப்போது நன்றாய் அவமானப் பட்டார்கள். இவர்களுக்கு நன்றாய் வேண்டும்! இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்!" என்றாள். தேவகியின் இனிய குரலில் அவ்வளவு குரோதம் எப்படி வந்து புகுந்தது என்று ஆச்சரியப்பட்டேன்.
"என்ன காரணம்? கலியாணம் ஏன் நின்றது?" என்று கேட்டேன்.
"என்ன காரணமோ! என்னைக் கேட்டால், எனக்கு என்ன தெரியும்? அப்பாவும் அம்மாவும் என்னைப் பிடுங்கி எடுப்பது போதாது என்று நீ வேறே கேள்வி கேட்பதற்கு வந்துவிட்டாயா?" என்றாள் தேவகி.
கோபத்திலும் ஆத்திரத்திலும் மரியாதை கூடத் தவறிவிட்டாள்! ஆயினும் அதற்காக அவளைக் குற்றம் சொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை.
இந்தச் சமயத்தில் வீட்டு வாசலில் ஹெட்மாஸ்டரின் குரல் கேட்டது.
"ஏண்டா! இன்னுமா பந்தலைப் பிரித்தாகவில்லை? சீக்கிரம் பிரித்து எறிந்து விட்டுத் தொலையுங்களடா!" என்று பத்மநாப ஐயங்கார் சத்தமிட்டுக் கத்தினார். அது ஹெட்மாஸ்டரின் குரல்தானா? ஆமாம், அவருடைய குரலேதான்! ஹெட்மாஸ்டரின் குரல்தான் அவ்வளவு கர்ணகடூரமாகியிருக்கிறது!
பாவம்! ஹெட்மாஸ்டருக்கு மனதில் எவ்வளவு தாபம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது ஊகிக்கக் கூடியது தானே? அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும், என்ன விதமாக ஆறுதல் சொல்லுவது என்றும் யோசித்தேன். யோசித்துக் கொண்டே வீட்டு வாசற்புறம் போக நாலு அடி எடுத்து வைத்தேன். இதற்குள் பத்மநாப ஐயங்கார் உள்ளே வந்து விட்டார். வந்தவர், என்னைப் பார்த்தார். ஐயோ! அந்தப் பார்வை! சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்துத் திரிபுரத்தை எரித்துவிட்டார் என்பதில் எனக்குச் சிறிதும் அதிசயம் கிடையாது! ஆனால் அன்றைக்குத் தேவகியின் தகப்பனார் என்னைப் பார்த்த பார்வை என்னை ஏன் எரிக்கவில்லை என்பதைப் பற்றிய அதிசயந்தான் இன்னமும் எனக்குத் தீரவில்லை.
சற்று நேரம் தீ எழும் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தவர், சட்டென்று நிதானித்துச் சமாளித்துக்கொண்டு, "ஓகோ! நீ வேறு துக்கம் விசாரிக்க வந்து விட்டாயா! சரி! இங்கே வா!' என்று சமிக்ஞையும் காட்டிவிட்டு அவருடைய சொந்த அறைக்குள் நுழைந்தார். உடலெல்லாம் பதற, நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள நானும் உள்ளே போனேன். இதற்குள் அவர் நிதானித்துக் கொண்டு விட்டதாகத் தோன்றியது. குரலில் அவ்வளவு கடுமையில்லை; சாவதானமாகத்தான் பேசினார். ஆனால் அவர் கூறிய விஷயம் என்னைக் கதி கலங்க அடித்துவிட்டது.
"கிருஷ்ணசாமி! நான் சொல்வதைச் சரியாக வாங்கிக் கொள். பதில் பேசாதே! இனிமேல் நீ இந்த ஊரில், என்னுடைய பள்ளிக்கூடத்தில், படிக்கச் சௌகரியப்படாது. நியாயமாக உன்னை பள்ளிக்கூடத்திலிருந்து 'டிஸ்மிஸ்' செய்யவேண்டும். அதற்கு வேண்டிய முகாந்தரம் இருக்கிறது. ஆனால் நீ தகப்பனில்லாத ஏழைப் பையன். நீ எப்பேர்ப்பட்ட பெரிய தீங்கு செய்திருந்தபோதிலும் உன்னை அடியோடு கெடுத்துவிட எனக்கு விருப்பமில்லை. நாளைக்குப் பள்ளிக்கூடம் வந்தாயானால் உனக்கு 'டிரான்ஸ்பர் சர்டிபிகேட்' கொடுத்து விடுகிறேன். எப்படியும் இந்த வருஷம் போனது போனதுதான். அடுத்த வருஷத்தில் வேறு எந்த ஊர் ஹைஸ்கூலிலாவது சேர்ந்துபடி, இங்கே செய்ததுபோல் அயோக்கியத்தனம் செய்யாமல், யோக்கியமாக நடந்துகொள்! என்னால் உன்னை மன்னிக்க முடியாது. கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள். கடவுளின் கருணை எல்லையற்றது. அவர் ஒரு வேளை உன்னை மன்னித்தாலும் மன்னிக்கக் கூடும்!"
மேற்கூறிய வார்த்தைகளை அப்படியே ஹெட்மாஸ்டர் கூறியதாக நான் உறுதி சொல்ல முடியாது. இம்மாதிரி தோரணையில் பேசினார் என்றுதான் சொல்லலாம். ஏற்கெனவே கலக்க முற்றிருந்த என் மனதில் அவர் கூறிய வார்த்தைகள் அவ்வளவு தெளிவாகப் பதியவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாயிருந்தது. ஆயினும் விஷயம் என்னவென்பது விளங்கிவிட்டது. நான் ஏதோ மன்னிக்க முடியாத பெரிய குற்றம் செய்து விட்டேன். அதனால் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இனி நான் படிக்கமுடியாது. அந்த வருஷம் வேறு ஊர்ப் பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்ந்து படிக்கவும் முடியாது. ஒரு வருஷம் போனதுதான்!
படிப்பைப்பற்றி அவ்வளவாக நான் கவலைப் படவில்லை; வாழ்நாளில் ஒரு வருஷம் என்ன பிரமாதம்? ஆனால் ஹெட்மாஸ்டர் என் விஷயத்தில் அவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதுதான் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தது. அப்படிப்பட்ட தண்டனை பெறுவதற்கு நான் குற்றம் என்ன செய்தேன்? 'குற்றம் என்ன?' 'குற்றம் என்ன?' என்று என் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் துடிதுடித்துக் கேட்டது; ஒவ்வொரு நரம்பும் அலறி அழுது கேட்டது.
தயங்கித் தட்டுத் தடுமாறி என் நாவும், "ஸார்! நான் என்ன குற்றம் செய்தேன்? எதற்காக என்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து தள்ளுகிறீர்கள்?" என்று கேட்டது.
"அட அயோக்கியா! கேள்வி வேறு கேட்கிறாயா? போ! என் கண் முன் நிற்காமல் போய்த் தொலை! இனி என் முகத்திலேயே விழிக்காதே! இங்கே நின்றாயோ உன்னைக் கொன்று விடுவேன். மேலே ஒரு வார்த்தை பேசினாலும் உன்னை 'டிஸ்மிஸ்' செய்து விடுவேன்! கெட் அவுட்!" என்று ஹெட்மாஸ்டர் கூச்சலிட்டார்.
மேலே நான் அங்கு நின்றால், என்னை அவர் கொல்வது ஒருபுற மிருக்கட்டும்; வரம்பு மீறிய கோபத்தினால் அவருடைய உயிருக்கே ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடும் என்று தோன்றியது. விம்மிக் கொண்டே அந்த வீட்டிலிருந்து வெளியேறினேன். பந்தலில் இருந்த கீத்துகளை யெல்லாம் இதற்குள் பிரித்துக் கீழே போட்டிருந்தார்கள். கம்புகள் மட்டும் நின்றன. போகிற போக்கில் அந்தக் கம்புகளில் ஒன்றைப் பிடுங்கிக் கிழே தடாரென்று போட்டு விட்டுப் போனேன். வீதியில் நடந்தபோது எட்டுத் திசைகளும் சுழன்றன. சூரியன் இருண்டு பட்டப்பகல் நள்ளிரவாயிற்று. வானம் இடிந்து என் தலையில் விழுந்து அமுக்கி மூச்சுவிட முடியாமல் திணறச் செய்தது. இந்த நிலையில் எப்படியோ தட்டுத் தடுமாறித் தள்ளாடி என்னுடைய அறைக்குப் போய்ச் சேர்ந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 6 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், என்ன, அவர், குற்றம், வேண்டும், ஹெட்மாஸ்டர், என்னைப், அவ்வளவு, உன்னை, சொல்ல, வேறு, போனேன், வருஷம், கேட்டது, இங்கே, பள்ளிக்கூடத்தில், அந்த, முடியாது, இதற்குள், வந்து, வீட்டு, கலியாணம், மனதில், முடியாத, ஹெட்மாஸ்டரின், தேவகி, அவருடைய