தேவகியின் கணவன் - அத்தியாயம் 2
ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்னால்
நடந்த சம்பவம். ஆனாலும் நேற்று நடந்ததுபோல் என் ஞாபகத்தில் இருக்கிறது.
ஹைஸ்கூலில் ஆறாவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன். என் தகப்பனாரின்
மரணம் காரணமாக நடுவில் மூன்று வருஷம் என் படிப்புத் தடைப்பட்டிருந்தது.
ஆகையால் என் வகுப்பில் வாசித்த மற்றப் பிள்ளைகளைக் காட்டிலும் எனக்கு
வயது அதிகம். பதினேழு முடிந்து பதினெட்டாவது பிறந்திருந்தது. ஆனால் பள்ளிக்கூடம்
போகாத மூன்று வருஷமும் நான் சும்மா இருந்து விடவில்லை. நன்றாகப் படித்திருந்தேன்.
ஆகையால் இப்போது வகுப்பில் கெட்டிக்காரப் பையன் என்று பெயர் வாங்கியிருந்தேன்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் எல்லாரும் என்பேரில் பிரியமாயிருப்பார்கள்.
அந்த வருஷத்தில் புதிதாக வந்திருந்த ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்காரும்
என்னிடம் மிக்க அபிமானமாயிருந்தார். அவரைக் காட்டிலும் அவர் மனையாளுக்கு
என்னிடம் பிரியம் அதிகம். அந்தத் தம்பதிகள் எங்கள் ஊருக்கு வந்த புதிதில்
நான் அவர்களுக்கு மிக்க ஒத்தாசையாயிருந்தேன். புதுக் குடித்தனம் போடுவதற்கு
வேண்டிய சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். இதிலிருந்து
அந்த மாமிக்கு என்னை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. தினசரி காலையில்
பலகாரம் காப்பி எனக்கு ஹெட்மாஸ்டரின் வீட்டிலேதான். ஒரு நாளைக்கு நான்
அவர்கள் வீட்டுக்குப் போகாவிட்டால், "கிட்டா! நேற்றைக்கு எங்கே காணோம்?
இந்த மாதிரி நீ 'ஆப்ஸெண்ட்' போட்டால், ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பரீட்சையில்
'ஸைபர்' போட்டுவிடச் சொல்வேன்!" என்று மாமி சண்டை பிடிப்பாள். இப்படிச்
சிலகாலம் ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு நான் செல்லப் பிள்ளையாயிருந்தேன். அவர்கள்
வந்த புதிதில் அவர்களுடைய வீட்டில் அந்தத் தம்பதிகளைத் தவிர வேறு யாரும்
இருக்கவில்லை.
பிறகு ஒரு நாள் ரங்கநாயகி அம்மாள் திடீரென்று ஒரு செய்தி சொன்னாள். அவர்களுடைய குமாரி தேவகி அடுத்த வாரம் சென்னைப் பட்டணத்திலிருந்து வரப்போவதாகச் சொன்னாள். அதுவரையில் அவர்களுக்கு ஒரு புதல்வி உண்டு என்னும் விஷயமே தெரியாமலிருந்தது. எனவே, அந்தச் செய்தியைக் கேட்டவுடன் எனக்கு வியப்பாயிருந்தது. வியப்பு மட்டுமில்லை; காரணம் சொல்ல முடியாத ஒரு பரபரப்பு உண்டாயிற்று. வரப்போகிற தேவகியைப் பற்றி எல்லா விவரங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று. மாமியிடம் சாதுர்யமாகப் பல கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தேவகிக்கு வயது பதினைந்து; நாலாவது பாரம் பாஸ் செய்திருந்தாள். அவளை எங்கள் ஊருக்கு அழைத்துக் கொண்டு வர முதலில் பத்மநாப ஐயங்கார் இஷ்டப்படவில்லை. எங்கள் ஊர் பட்டணத்திலும் சேர்ந்ததில்லை; பட்டிக் காட்டிலும் சேர்ந்ததில்லை. இரண்டும் கெட்ட ஊர். பெண்களுக்குத் தனியாக ஹைஸ்கூல் கிடையாது. ஆண் பிள்ளைகள் ஹைஸ்கூல் மட்டுந்தானிருந்தது. ஆகையினாலே தேவகியின் படிப்பைக் கெடுக்க வேண்டாம் என்று பட்டணத்தில் பாட்டி வீட்டிலேயே அவளை விட்டு விட்டு வந்தார்கள். ஆனால் அதிக காலம் செல்லப் பெண்ணைப் பிரிந்திருப்பதற்குத் தாயார் தகப்பனார் இரண்டு பேராலும் முடியவில்லை. ஆகையால் சில நாளைக்கெல்லாம் அவளை அழைத்துக் கொண்டு வரத் தீர்மானித்தார்கள். அழைத்துக் கொண்டு வந்து புருஷப் பிள்ளைகளின் ஹைஸ்கூலிலேயே சேர்த்துவிடவும் முடிவு செய்தார்கள். ரங்கநாயகி அம்மாள் இதற்கு ஆட்சேபணைகள் பல சொல்லாமலில்லை. ஆனால் பத்மநாப ஐயங்கார், "நானே ஹெட்மாஸ்டராயிருக்கும் போது என்ன கவலை? என்னை மீறி என்ன நடந்துவிடும்? கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோய் விடுமா? யாராவது ஏதாவது உளறிக் கொண்டு போகட்டும். இந்தக் காலத்தில் வைதிக குடும்பத்துப் பெண்கள் சாதி விட்டுச் சாதி கல்யாணம் செய்து கொள்கிறார்கள். கப்பலேறிச் சீமைக்குப் போகிறார்கள். வக்கீல் பரீட்சை பாஸ் செய்துவிட்டு நாலு கைச் சட்டை போட்டுக் கொண்டு கோர்ட்டில் வந்து பேசுகிறார்கள். அவர்களையெல்லாம் யார் தள்ளிவைத்து விட்டார்கள்? என் பெண் என் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பதற்கு என்ன வந்துவிட்டது?" என்று அடித்துப் பேசினார்.
அதன் பேரில் ரங்கநாயகி அம்மாளும் சம்மதித்தாள். எங்கள் ஹெட்மாஸ்டரின் மனைவி கொஞ்சம் உலகப் போக்கை அறிந்த பெண்மணி. தன் புதல்வி ஆறாவது பாரம் வரையிலாவது படித்தால்தான் நல்ல இடத்தில் கலியாணம் ஆகும் என்ற எண்ணம் அந்த அம்மாளின் மனதில் இருந்தது.
"நீயே சொல்லு, கிட்டா! இவருக்கோ மாதம் சம்பளம் நூற்றைம்பது ரூபாய். காப்பிச் செலவுக்கே ஐம்பது ரூபாய் ஆகிவிடுகிறது. இந்த இலட்சணத்தில் பணங் காசு எப்படிச் சேரும்? பத்தாயிரம், இருபதினாயிரம் என்று வரதட்சணை கொடுத்துக் கலியாணம் பண்ணிக் கொடுக்க நமக்கு யோக்யதை உண்டா? குழந்தைக்குக் கொஞ்சம் படிப்பாவது இருந்தால் தானே, சுமாராக நல்ல இடமாகப் பார்த்துக் கலியாணம் செய்து கொடுக்கலாம்?" என்று ரங்கநாயகி அம்மாள் என்னிடம் சொன்னதற்கு நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அந்த விஷயமாக என் மனதில் அச்சமயம் அபிப்பிராயம் ஒன்றும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் மாமிக்கு யாரிடமாவது தன் மனதிலிருந்ததைச் சொல்லித் தீர்க்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் என்னைப் பிடித்துக் கொண்டாள்.
"என்னடா, கிட்டா! ஒன்றும் பதில் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறாயே? உன் அபிப்பிராயம் என்ன? தேவகியின் படிப்பை நிறுத்த எனக்கும் இஷ்டமில்லைதான். ஆனால் இந்த ஊர் கொஞ்சம் பட்டிக்காடாயிருக்கிறதே என்று பார்க்கிறேன். புருஷப் பிள்ளைகள் படிக்கும் வகுப்பிலேயே தேவகியையும் உட்கார்ந்து படிக்கச் சொன்னால், இந்த ஊர்க்காரர்கள் ஏதாவது வம்பு வளர்க்க மாட்டார்களா?" என்று ரங்கநாயகி அம்மாள் மறுபடியும் வற்புறுத்திக் கேட்டாள்.
"நீங்கள் எதற்காகக் கவலைப்படுகிறீர்கள், மாமி! ஹெட்மாஸ்டருக்குத் தெரியாத விஷயமா? அவர் செய்யும் ஏற்பாடு சரியாகத்தான் இருக்கும்" என்று நான் சொல்லி வைத்தேன்.
"என்னதான் அவர் எல்லாம் தெரிந்தவராயிருந்தாலும், இந்த விஷயம் நன்றாய் யோசித்துச் செய்ய வேண்டிய காரியம் அல்லவா? எந்தப் பக்கம் பார்த்தாலும் தர்ம சங்கடமாயிருக்கிறது. எனக்கும் சரி, அவருக்கும் சரி, குழந்தையை விட்டு விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. தூங்குவதற்குக் கண்ணை மூடினால் தேவகிதான் கனவிலே வந்து நிற்கிறாள். எங்கள் விஷயந்தான் இப்படி என்றால், குழந்தையும் 'நான் வந்து விடுகிறேன்' என்று கடிதத்துக்கு மேல் கடிதமாக எழுதுகிறாள். 'பெண் கல்வி' 'பெண் கல்வி' என்று வாய் கொண்ட மட்டும் எல்லாரும் கூச்சல் போடுகிறார்களே? இந்த ஊரில் பெண்களுக்கு என்று ஒரு ஹைஸ்கூல் இல்லை, பாரேன்!" என்றால் மாமி.
"இந்த ஊரில் பெண்களுக்கு ஹைஸ்கூல் வைத்தால் என்ன பிரயோஜனம், மாமி? பெஞ்சுகளும் நாற்காலிகளுந்தான் படிக்க வேண்டும். இந்த ஊர்ப் பெண்கள் யாரும் நாலாவது வகுப்புக்கு மேல் தாண்டிவருவதேயில்லை!" என்றேன் நான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 2 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், எங்கள், என்ன, கொண்டு, ரங்கநாயகி, மாமி, வந்து, அம்மாள், அந்த, ஹைஸ்கூல், ஆகையால், விட்டு, ஒன்றும், கலியாணம், கொஞ்சம், பெண், அவளை, அவர், என்னிடம், பத்மநாப, எனக்கு, கிட்டா, அழைத்துக், பாரம், காட்டிலும்