தேவகியின் கணவன் - அத்தியாயம் 7
கழுகுக்கு மூக்கில் வேர்க்கும் என்று
ஒரு பழமொழி உண்டு. சமீபத்தில் எங்கேயாவது இரை கிடைப்பதாயிருந்தால் கழுகுக்கு
மூக்கில் வேர்க்குமாம்! வைத்திக்கும் சுந்தரத்துக்கும் அப்படியே மூக்கில்
வேர்க்கும் போலிருக்கிறது. நான் வந்திருப்பதையும் என்னுடைய மனோ நிலையையும்
தெரிந்து கொண்டு அவர்கள் என்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தார்கள். அவ்வளவாக
நான் அவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்வதில்லையென்று சொல்லியிருக்கிறேன்.
ஆயினும் விஷமிகளுக்கு வெட்கம் ஏது? என்னைத் தேடி வந்து சேர்ந்தார்கள்.
எனக்கு ஏற்பட்டிருந்த துக்கத்தையும் அவர்கள் பேரில் வந்த கோபத்தையும் வெகு பிரயாசைப் பட்டு நான் அடக்கிக் கொண்டேன். கொஞ்சம் நான் பொறுமையாயிருந்தால், தேவகியின் கலியாணம் தடைப்பட்ட காரணத்தை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம் என்று என்னுடைய உள்ளுணர்ச்சி சொல்லிற்று.
"எங்கே அப்பா வந்தீர்கள்? என்ன விசேஷம்!" என்று கேட்டேன்.
"என்ன விசேஷமா? ஊரெல்லாம் ஒரே அமர்க்களமாயிருக்கிறது; 'என்ன விசேஷம் என்று மெள்ளக் கேட்கிறாயே? ஹெட்மாஸ்டர் பெண்ணின் கலியாணம் நின்று போனது உனக்குத் தெரியாதா?" என்றான் வைத்தியநாதன்.
"அது தெரியாமல் இருக்குமா? தெரியும். அதற்காக நாம் என்னத்தைச் செய்வது?" என்றேன் நான்.
"என்னத்தைச் செய்வதாவது? ஏன்? பேஷாகச் செய்யலாம். நம்மில் யாராவது ஒருவர் தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளலாம். 'போட்ட பந்தலைப் பிரிக்க வேண்டாம்' என்று ஹெட்மாஸ்டரிடம் சொல்லலாம்" என்றான் சுந்தரம்.
"பேஷான யோசனைதான். இதை நீ ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பார்ப்பதுதானே? என்னிடம் சொல்லி என்ன பிரயோஜனம்?" என்றேன்.
"ஹெட்மாஸ்டரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் நீ தேவதா விஸ்வாசம் வைத்திருந்தாயே என்று உன்னிடம் சொன்னோம். நீ என்னடா என்றால், ஏனோ தானோ என்று பேசுகிறாய். அது போனால் போகட்டும். கலியாணம் ஏன் நின்றது என்பதைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்குமே?" என்றான் வைத்தி.
"எனக்குத் தெரியாது, அப்பா, எனக்கு ஒன்றும் தெரியாது."
"சும்மாச் சொல்கிறாய்! உனக்குத் தெரியாமல் இருக்குமா?"
"சத்தியமாய் எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்திருந்தால், சொல்லுங்கள்! கேட்கிறேன்."
"உனக்கே தெரியாது என்றால், எங்களுக்கு எப்படித் தெரியும்? ஆனால் ஊரில் அதைப் பற்றிப் பலவிதமாய்ப் பேசிக் கொள்கிறார்கள்."
"ஊரில் என்ன பேசிக் கொள்கிறார்கள்?"
"சம்பந்தி வீட்டாருக்கு ஏதோ ஒரு மொட்டைக் கடிதம் இந்த ஊரிலிருந்து போனதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்."
"அப்படி அந்த மொட்டைக் கடிதத்தில் என்ன எழுதியிருந்ததாம். கலியாணம் நின்று போகும்படி?"
"தேவகி வேறொரு பையன் மீது காதல் கொண்டிருப்பதாக அந்தக் கடிதத்தில் எழுதியிருந்ததாம்."
"இது என்ன முட்டாள்தனம்? ஒரு மொட்டைக் கடிதத்தை நம்பியா கலியாணத்தை நிறுத்தி விடுவார்கள்? அந்த சம்பந்திகள் அவ்வளவு முட்டாள்களா?"
"இல்லை, அப்பா! அதில் இன்னொரு சூட்சுமம் இருக்கிறது. அந்த மொட்டைக் கடிதம் கலியாணப் பெண் தேவகி எழுதியது போலவே எழுதியிருந்ததாம். அதில் அந்தப் பெண், தான் காதலிப்பது இன்னார் என்று கூட எழுதியிருந்தாளாம்..."
என் நெஞ்சு இப்போது தடக், தடக் என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. மேலே வைத்தி என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவலாயிருந்தது.
"அப்புறம்?" என்றேன்.
"தேவகி யார் பெயரைக் குறிப்பிட்டிருப்பாள் என்று நீதான் சொல்லேன், பார்க்கலாம்."
"எனக்கு எப்படித் தெரியும்? கடிதத்தை நான் பார்க்கவில்லையே?"
"பார்க்காவிட்டால் என்ன? உனக்குத் தெரியாமலா இருக்கும்?"
"தெரியவே தெரியாது. மொட்டைக் கடிதத்தைப் பற்றிய செய்தியே இப்போது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்."
"ஆமாம், அப்பா, ஆமாம்! உனக்கு ஒன்றுமே தெரியாது. நீ பால் மணம் மாறாப் பாலகன். நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். இதற்காக என் பேரில் கோபித்துக் கொள்ளாதே! அந்தக் கடிதத்தில் தேவகி உன்னுடைய பெயரைக் குறிப்பிட்டு உன்னை அவள் காதலிப்பதாக வெட்ட வெளிச்சமாய் எழுதியிருந்தாளாம்!"
"சிவ சிவா! பொய்! சுத்தப் பொய்!" என்றேன் நான். ஆயினும் என் நெஞ்சு ஏன் அப்படி விம்மி மேலெழுந்தது? என் தலைக்குள் ஏன் அவ்வளவு பெரிய அலைகள் குமுறி மோதின?
சுந்தரம் மேலும் கூறினான்:- "இன்னொரு விஷயங்கூட ஊரில் பேசிக் கொள்கிறார்கள், கிட்டா! உனக்குத் தெரிந்திருப்பது நல்லது என்று சொல்கிறேன். உண்மையில் தேவகி அந்தக் கடிதத்தை எழுதவில்லையென்றும், தேவகி எழுதியது போல, அவளுடைய எழுத்தை 'போர்ஜரி' செய்து வேறு யாரோ எழுதிவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்."
"ஐயோ! இது என்ன அநியாயம்? அப்படி யார் செய்திருப்பார்கள்?"
"என்னடா அப்பா, பரமசாதுவைப் போல் பேசுகிறாயே? நீ தான் அந்தப் 'போர்ஜரி'க் கடிதம் எழுதினாய் என்றல்லவா ஊரில் பேச்சாயிருக்கிறது?"
எனக்கு வந்த கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் அளவேயில்லை. என் பொறுமை அதன் எல்லைக்கு வந்து விட்டது. கடைசியாக ஒரு பெருமுயற்சி செய்து "வைத்தி! சுந்தரம்! நீங்கள் என்னோடு சண்டை பிடிப்பதற்காக வந்திருக்கிறீர்களா? அப்படியானால் சொல்லிவிடுங்கள். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவானேன்?" என்று கேட்டேன்.
"சேச்சே! அதெல்லாம் ஒன்றுமில்லை, அப்பா! உன்னோடு சண்டை பிடித்து எங்களுக்கு இப்போது என்ன ஆகவேணும்? இது நல்லவர்களுக்குக் காலம் இல்லை. ஏதோ நீ எங்கள் 'கிளாஸ்-மேட்' ஆயிற்றே, வெளியே பேசிக் கொள்வதை உன் காதிலே போட்டு வைக்கலாம் என்று வந்தால், நீ இப்படிச் 'சண்டைக்கு வந்திருக்கிறீர்களா?' என்று கேட்கிறாய். அழகாய்த்தானிருக்கிறது. நாங்கள் போகிறோம்!" என்று சொல்லிவிட்டு இருவரும் போய்த் தொலைந்தார்கள். அறைக்கு வெளியில் போனதும் அவர்கள் சிரித்துக் கொண்டுபோன சத்தம் என் காதில் விழுந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 7 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்ன, நான், தேவகி, தெரியாது, அப்பா, மொட்டைக், உனக்குத், கலியாணம், என்றேன், கொள்கிறார்கள், தெரியும், ஊரில், பேசிக், எனக்கு, அந்த, அந்தக், அவ்வளவு, இப்போது, கடிதத்தை, அப்படி, எழுதியிருந்ததாம், கடிதத்தில், வைத்தி, வந்து, தெரிந்து, என்னுடைய, என்றான், செய்து, எனக்குத், மூக்கில், சுந்தரம், கடிதம்