தேவகியின் கணவன் - அத்தியாயம் 13
அன்று மாலை நான் சிந்தாதிரிப்பேட்டையில்
தேவகியின் வீடு சென்ற போது குழந்தைகள் மூன்று பேரும் அழகாக 'டிரஸ்' பண்ணிக்
கொண்டு பொருட்காட்சிக்குப் புறப்படச் சித்தமாயிருந்தார்கள். வாசலில்
என் மோட்டார் போய் நின்றதும் அவர்கள் "அம்மா! சித்தியா வந்து விட்டார்!"
"தாத்தா! கார் வந்து விட்டது!" என்று கோஷமிட்டது என் காதில் விழுந்தது.
என்னைப் பார்த்ததும் ஹெட்மாஸ்டர், "வந்து விட்டாயா, கிருஷ்ணசாமி! இவர்களுடைய
பேச்சை நான் நம்பவில்லை. நீ வருவாய் என்றே எதிர்பார்க்கவில்லை. வண்டியுடன்
வந்தவரையில் விசேஷந்தான்!" என்றார்.
தேவகி சிரித்த முகத்துடன் வந்து என்னை வரவேற்றாள். தேவகியின் இனிமையான தோற்றத்தையும் டாக்டர் சுந்தரம் அவளைப் பற்றிக் கூறியதையும் என் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவன் கூறியது போல் இவள் பொல்லாத நீலியாக இருக்க முடியுமா, இவளுடைய தொல்லையைப் பொறுக்காமல் இவள் கணவன் தூக்குப் போட்டுக் கொண்டிருக்க முடியுமா என்று வியந்தேன். அவளுடைய கழுத்தின் என் கவனம் சென்றது. இரண்டு மெல்லிய சங்கிலிகள் அவள் கழுத்தை அலங்கரித்தன. ஆனால் அவற்றில் மாங்கலியம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
தேவகி என்னை வரவேற்ற பின்னர் அவளுடைய தந்தையைப் பார்த்து, "அப்பா! நான் சொன்னேனே, பார்த்தீர்களா? இவர் ஒரு நாளும் வரமாட்டார் என்று நீங்கள் சொன்னீர்களே? யாருடைய வாக்குப் பலித்தது? போகட்டும்; நீங்கள் இன்று நாடகத்துக்கு வரப்போகிறீர்களா, இல்லையா? ஐந்து நிமிஷத்துக்குள் வராவிட்டால் உங்களை விட்டு விட்டு நாங்கள் புறப்பட்டுப் போய் விடுவோம்!" என்றாள்.
"இதோ வந்து விட்டேன், தேவகி! நான் இன்றைக்கு நாடகத்துக்கு வராவிட்டால் அப்புறம் இந்த வீட்டில் இருக்க முடியுமா? எல்லாரும் சேர்ந்து என் பிராணனை வாங்கிவிட மாட்டீர்களா? கொஞ்சம் பொறுங்கள்! இதோ டிரஸ் பண்ணிக் கொண்டு வந்து விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டுத் தம்முடைய அறைக் கதவைப் படார் என்று சாத்திக் கொண்டார்.
நான் தேவகியைப் பார்த்து "உன்னுடைய அப்பாவுக்கு என் பேரில் உள்ள கோபம் எல்லாம் போய்விட்டதா?" என்று கேட்டேன்.
"என்ன கோபம்?" என்று தேவகி வியப்புடன் கேட்டாள்.
"தண்டாங்கோரை பள்ளிக்கூடத்தில் படித்த போது என் பேரில் அப்பா ஒரு நாள் ரொம்பக் கோபித்துக் கொண்டாரே, ஞாபகம் இல்லையா?"
"அழகாய்த்தானிருக்கிறது. அதையெல்லாம் அப்பா மறந்து போய் எவ்வளவோ நாள் ஆயிற்று. உங்கள் பேரில் அப்பாவுக்கு ரொம்ப அபிமானம். அப்பா அம்மா இரண்டு பேரும் கொஞ்ச நாள் வரையில் உங்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்கள். அடாடா! நீங்கள் எல்லாரும் அந்த நாளில் உபாத்தியாயர்களிடம் எவ்வளவு பக்தி விசுவாசத்துடன் இருந்தீர்கள்? என்னிடத்திலே கூடத்தான் எவ்வளவு மரியாதையாக இருந்தீர்கள்? இந்தக் காலத்துப் பிள்ளைகளும் இருக்கிறார்களே? கொஞ்சமும் மட்டு மரியாதை இல்லாதவர்கள்! கொஞ்ச நாளைக்கு முன்பு குவீன் மேரிஸ் காலேஜில் நடந்த கார்னிவல் கொண்டாட்டத்தில் ஆண் பிள்ளை மாணாக்கர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே! இவர்களுந்ந்தான் விழுந்து விழுந்து இங்கிலீஷ் படிக்கிறார்கள்! இங்கிலீஷ் கதைகளில் 'ஷிவல்ரி'யைப் பற்றி எவ்வளவெல்லாம் இருக்கிறது? அதையெல்லாம் இவர்கள் படித்து என்ன பயன்? ஏட்டுச் சுரைக்காய்தான்! நம்முடைய மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடியாவது இவர்கள் ஸ்திரிகளிடம் பக்தி விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார்களா? அதுவும் இல்லை. இந்தக் காலத்து மாணாக்கர்களுக்கு இங்கிலீஷ் நாகரிகமும் வரவில்லை; நம்முடைய பழைய தர்மமும் பயன்படவில்லை. இரண்டிலும் உள்ள தீமைகள் மட்டும் இவர்களுக்கு வந்திருக்கின்றன. இதைப் பற்றி அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். தண்டாங்கோரை ஹைஸ்கூலில் நீங்கள் எல்லாரும் அந்த நாளில் என்னிடம் எவ்வளவு மரியாதையாக நடந்து கொண்டீர்கள் என்று அடிக்கடி பாராட்டிப் பேசுவார்!..."
இப்படியாக தேவகி கடல் மடை திறந்தது போல் பிரசங்கம் செய்து கொண்டே போனாள். மூச்சு விடாமல் பேசும் அவளுடைய சுபாவம் இன்னமும் அப்படியேதான் இருந்தது என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அவள் கூறியதெல்லாம் உண்மையென்று என் மனம் ஒப்பவில்லை. ஏன்? நான் படித்த காலத்திலே கூடப் பெண்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளத் தெரியாத காலிப் பசங்கள் இருக்கத் தான் செய்தார்கள். வைத்தியநாதனும் சுந்தரமும் இருக்கவில்லையா! அதையெல்லாம் மறந்து விட்டு இவள் பிரமாதமாய்ப் பேசிக் கொண்டே போகிறாளே! போனால் போகட்டும்! எனக்கு என்ன வந்தது? அந்தக் கடிதத்தைப் பற்றிய உண்மையை மட்டும் எப்படியாவது தெரிந்து கொள்ள விரும்பினேன். ஆகையால் தேவகியின் பேச்சில் பலவந்தமாகக் குறுக்கிட்டு, "அதெல்லாம் இருக்கட்டும், தேவகி! அந்தக் கடிதத்தைப் பற்றிய உண்மை அப்புறம் தெரிந்ததா?" என்றேன்.
"எந்தக் கடிதம்?" என்று தேவகி தலையைக் கோணலாக வைத்துக் கொண்டு கேட்டாள்.
"எந்தக் கடிதமாவது? உனக்கு நிச்சயம் செய்திருந்த முதல் கலியாணத்தைத் தடைசெய்த கடிதந்தான்!..."
"அதுவா?" என்று கேட்டுவிட்டுத் தேவகி கலீரென்று சிரித்தாள். எனக்கோ கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்தக் கடிதத்தினால் நான் அடைந்த துன்பம்தான் எத்தனை? இப்போது நினைத்தாலும் மனம் வெட்கி வேதனை அடைகிறது! ஆனால் இவள் அதைக் குறித்துச் சிரிக்கிறாள்!
சிரிப்பைச் சட்டென்று நடுவில் நிறுத்திவிட்டு, "ஆமாம்; அப்படியானால் அந்தக் கடிதத்தை நீங்கள் எழுதவில்லையா?" என்று கேட்டாள்.
"சத்தியமாய் எழுதவில்லை!" என்று நான் ஆத்திரமாய்க் கூறினேன்.
"அடே அப்பா! அதைப்பற்றி இப்போது என்னத்துக்கு இவ்வளவு ஆத்திரம்? போனது போய்விட்டது. நீங்கள் அதை எழுதவில்லை யென்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு அவ்வளவு தைரியம் இல்லையென்பதும் எனக்குத் தெரியும். ஆகையால் நானே எழுதிவிட்டேன்!" என்று தேவகி ஒரு அணுகுண்டைப் போட்டாள்.
"நீ எழுதினாயா! நீயா எழுதினாய்? அப்படியானால் என் பேரில் பழி சொன்னாயே, ஏன்?" என்று மேலும் ஆத்திரத்துடன் கேட்டேன்.
"அது ஒரு காரியத்துக்காக எழுதினேன். ஒரு காரியம் என்ன? உண்மையைச் சொல்லி விடுகிறேனே! எனக்கு அப்பா நிச்சயம் செய்திருந்த கலியாணம் பிடிக்காததால் எழுதினேன். அப்பா கோபித்துக் கொண்ட போது உங்கள் பேரில் பழியைப் போட்டு வைத்தேன். அந்தச் சமயத்துக்கு அப்படிச் சொல்ல வேண்டியிருந்தது. அப்புறம் அப்பாவின் கோபம் தணிந்த பிறகு உண்மையை ஒப்புக் கொண்டேன். அதற்குள் நீங்கள் போயே போய் விட்டீர்கள். அதற்கு நான் என்ன செய்கிறது!" என்றாள் தேவகி.
என் மனம் அப்போது ஒரு பக்கம் கோபத்தினாலும் ஒரு பக்கம் பச்சாத்தாபத்தினாலும் குழப்பம் அடைந்தது. அந்தக் கலியாணம் பிடிக்கவில்லையென்றால், வேறு யாரிடமாவது இவளுடைய மனம் சென்றிருந்ததா? அது ஒருவேளை நானாகவே இருக்குமா? அவசரப்பட்டு மனம் வெறுத்து ஊரை விட்டுப் போனதினால் என் வாணாளையே பாழாக்கிக் கொண்டேனா?
அப்படி எண்ணியபோது தேவகியை மணம் செய்து கொள்ளாதது என் அதிர்ஷ்டந்தான் என்று டாக்டர் சுந்தரம் கூறியது நினைவு வந்தது. இவள் யாரோ ஒருவனைக் கலியாணம் செய்து கொண்டு தானே இருக்க வேண்டும்? அவன் யார்? அவனுடைய கதி என்ன? டாக்டர் சுந்தரம் சொன்னதுபோல் அவன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்தானா? அல்லது அந்த வீட்டு மாடி ஜன்னல் வழியாகப் பார்த்த பைத்தியந்தான் இவளுடைய புருஷனா? புருஷனுடைய நிலைமை அப்படியிருக்கும்போது இவள் பொருட்காட்சிக்கு நாடகம் பார்க்கப் புறப்படுகிறாளே? இதை என்னவென்று சொல்வது? இவள்தான் இப்படி என்றால், இவள் தகப்பனாரும் அல்லவா ஒத்துக்கு மத்தளம் போடுகிறார்!
அவளுடைய புருஷனைப் பற்றியும் அந்த வீட்டு மாடிமேல் உள்ள ஆளைப் பற்றியும் தேவகியைக் கேட்பதற்கு மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். ஆனால் அந்தச் சமயத்தில் ஹெட்மாஸ்டர் கோட்டு, தலைப்பாகை முதலியவை அணிந்து கொண்டு புறப்படத் தயாராக வந்து விட்டார். எனவே ஒன்றும் கேட்க முடியவில்லை.
வாசலில் காரில் ஏறி உட்கார்ந்த பிறகு என் கண்கள் மட்டும் மேலே மச்சு ஜன்னலை உற்று நோக்கின. அங்கே இப்போது அந்தப் பயங்கர முகத்தைக் காணவில்லை.
பாவம்! அந்தப் பைத்தியத்தை உள் அறையில் போட்டுப் பூட்டி விட்டார்களோ, என்னமோ? அல்லது அதனால் தொந்தரவாயிருக்கிறதென்று பைத்திய ஆஸ்பத்திரிக்கு அப்புறம் அனுப்பி விட்டார்களோ, என்னமோ! இருந்தாலும் இந்தத் தேவகியைப் போல் இருதயமற்ற ஸ்திரீயை உலகத்திலேயே காண முடியாது! இவளுடைய வலையில் நான் விழாமல் தப்பியது நான் செய்த புண்ணியந்தான். சீச்சீ! இது என்ன கேவலமான எண்ணம்! துர்ப்பாக்கியசாலியான தேவகியை நாமும் சேர்ந்து நிந்திக்க வேண்டுமா? இவளுக்கு நேர்ந்த கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு வேளை நானே காரணமாயிருந்திருக்கலாம். அப்படி அவசரப்பட்டுக் கொண்டு தண்டாங்கோரையை விட்டு நான் புறப்படாதிருந்தால், இவளுடைய வாழ்க்கையே வேறு விதமாயிருந்திருக்கலாம் என்னுடைய வாழ்க்கையுங் கூடத்தான்!...
இத்தகைய எண்ணங்கள் என் மனத்தை அலைத்துக் கொண்டேயிருக்கையில் பொருட்காட்சியும் வந்துவிட்டது. தேவகி முதலியவர்கள் காரிலிருந்து அவசர அவசரமாக இறங்கினார்கள். நாடகமேடை மைதானத்துக்குப் போவதில் அவர்களுக்கிருந்த பரபரப்பைச் சொல்லி முடியாது.
நான் வண்டியிலிருந்து இறங்காமலிருப்பதைக் கண்ட தேவகி "நாடகம் பார்க்க நீங்கள் வர வில்லையா?" என்று கேட்டாள்.
"நீங்கள் போய் இடம் பிடித்துக் கொண்டு உட்காருங்கள். எனக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது. பார்த்து விட்டுப் பிறகு வந்து விடுகிறேன்!" என்றேன்.
"திரும்பி வீட்டுக்குப் போவதற்கு எங்களைத் திண்டாட விட்டு விடாதீர்கள்!" என்றாள் தேவகி.
"அப்படியெல்லாம் செய்வேனா? கட்டாயம் வந்து உங்களை அழைத்துப் போகிறேன்!" என்றேன்.
"அவசியம் நீங்கள் வந்து நாடகத்தையும் பார்க்க வேண்டும். இன்று நாடகம் ரொம்ப நன்றாயிருக்குமாம்!" என்று சொல்லிக் கொண்டே தேவகி விரைவாக நடந்தாள். அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் போனார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 13 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - தேவகி, நான், வந்து, நீங்கள், கொண்டு, அப்பா, இவள், என்ன, இவளுடைய, விட்டு, மனம், பேரில், அந்தக், போய், எவ்வளவு, அந்த, நடந்து, கேட்டாள், அவளுடைய, கோபம், அப்புறம், இங்கிலீஷ், கொண்டேன், இப்போது, கலியாணம், பிறகு, நாடகம், என்றேன், வந்தது, செய்து, கொண்டே, அடிக்கடி, மட்டும், எல்லாரும், அவன், போல், இருக்க, சுந்தரம், டாக்டர், தேவகியின், போது, முடியுமா, இல்லையா, நாள், அதையெல்லாம், உள்ள, என்றாள், தெரிந்து, பார்த்து, பற்றி