தேவகியின் கணவன் - அத்தியாயம் 5
ஒரு நாள் ரங்கநாயகி அம்மாள் என்னைக் கூப்பிட்டு
அனுப்பி, "கிட்டா! கோவிலுக்குப் போய் பெருமாளையும் தாயாரையும் சேவித்து
விட்டு வரவேணும். நீ என் கூட வருகிறாயா?" என்று கேட்டாள். மாமியின் அன்புக்கு
மாறு சொல்ல முடியாமல் சம்மதித்தேன். மாமியுடன் நான் கோவிலுக்குப் போவதை
யாராவது பையன்கள் பார்த்தால், "கிச்சாமி மறுபடியும் ஹெட்மாஸ்டர் வீட்டு
மாமியைக் காக்காய் பிடிக்கிறான்!" என்று சொல்லிப் பரிகசிப்பார்கள் என்பது
தெரிந்துதானிருந்தது. அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. தைரியமாகப்
பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு மாமியைத் தொடர்ந்து போனேன். வழியில்
மாமி அநுதாபம் நிறைந்த குரலில், "கிட்டா! என்னிடம் நீ நிஜத்தைச் சொல்லிவிடு.
இவருக்கு - தேவகியின் அப்பாவுக்கு - உன் பேரில் என்ன கோபம்? நீ என்ன
அப்படிப்பட்ட குற்றத்தைச் செய்து விட்டாய்? எதுவாயிருந்தாலும் என்னிடம்
சொல்லி விடு! நான் அவரிடம் பேசிச் சரிப்படுத்துகிறேன்!" என்றாள். மாமியின்
அன்பு என்னை உருக்குவிட்டது. அழமாட்டாக் குறையாக நான் உண்மையைச் சொல்லிவிட்டேன்.
உண்மை என்றால், வைத்திய நாதன் உளறியதை அப்படியே சொல்லிவிடவில்லை. ஒரு
மாதிரி அவனுடைய வம்புப் பேச்சைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லி, அதனால்
நேர்ந்த சண்டையைப் பற்றியும் சொன்னேன்.
இதைக் கேட்ட மாமி, "அழகாயிருக்கிறது! இதற்குத்தானா உன் பேரில் எரிந்து விழுகிறார்? ஊரிலே நாலு காலாடிகள் ஏதாவது பேசிக் கொண்டுதானிருப்பார்கள். இப்படி நடக்கலாம் என்று நான் எதிர்பார்த்ததுதானே? 'இந்தப் பட்டிக்காட்டு ஊரில் புருஷப் பிள்ளைகளின் பள்ளிக் கூடத்தில் தேவகியைச் சேர்க்கலாமா?' என்று அப்போதே நான் சொன்னேன். அதைக் கேட்காமல் சேர்த்து விட்டார். இப்போது உன் பேரில் கோபித்துக் கொண்டு என்ன பயன்? ஹெட்மாஸ்டர் என்னமோ ரொம்ப நல்லவர் தான். ஆனால் கேட்பார் பேச்சைக் கேட்கும் சுபாவம் கொஞ்சம் உண்டு. அந்த உதவித் தலைமை வாத்தியார் ஜகதீசய்யர் ஏதோ இல்லாததும் பொல்லாததும் சொல்லி வத்தி வைத்திருக்கிறார். நீ, பாவம், என் வயிற்றில் பிறந்த பிள்ளை மாதிரி எவ்வளவோ விசுவாசமாயிருந்தாய். தேவகிக்கு உடன் பிறந்த தம்பி, தமையன் ஒருவரும் இல்லையே என்ற குறை எனக்கு உண்டு. அந்தக் குறை தீரும்படி நீ அவளுடைய கூடப் பிறந்த தமையன் மாதிரி பிரியமாக இருந்தாய். பாவம்! ஊரில் உள்ளவர்கள் சேர்ந்து உன்னை ஆகவொட்டாமல் அடித்துவிட்டார்கள். ஆனால் நீ கொஞ்சங்கூடக் கவலைப்படாதே! நான் இவரிடம் சொல்லிச் சரிப்படுத்தி விடுகிறேன். பெருமாள் சந்நிதியிலும் தாயார் சந்நிதியிலும் நான் இன்றைக்கு உனக்காகவே வேண்டிக் கொள்ளப் போகிறேன்!" என்றாள். இந்த அன்பான வார்த்தைகளினால் என் மனம் மேலும் உருகிவிட்டது. பெருமாளையும் தாயாரையும் சேவிக்கும்போது அன்றைக்கு நானும் அவ்விதமே வேண்டிக் கொண்டேன். "ஹெட்மாஸ்டருக்கு என் பேரில் இருந்த அன்பும் மதிப்பும் முன் போலவே ஏற்படவேண்டும்" என்று பிரார்த்தித்தேன்.
என்னுடைய பிரார்த்தனையும் மாமியின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை. சில நாளைக்கெல்லாம் ஹெட்மாஸ்டர் பழையபடி என்மேல் பிரியமாயிருக்கத் தொடங்கினார். இது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி தந்தது. ஆயினும் நான் ஊருக்குப் பயந்து, அதாவது மற்றப் பையன்களின் வம்புப் பேச்சுக்குப் பயந்து, கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டேன். முன்போல் தினசரி இரண்டு வேளையும் ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போவதில்லை. அடியோடு போகாமல் இருப்பதுமில்லை. வாரத்துக்கு இரண்டு மூன்று தடவை போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருவேன். தேவகியாவது மாமியாவது கேட்டால், "இந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்குப் போகவேண்டும் அல்லவா? பாடங்கள் கஷ்டமாயிருக்கின்றன. சிரத்தையாகப் படிக்க வேண்டியிருக்கிறது. படித்து நல்ல மார்க் வாங்கிப் பாஸ் செய்தால் தானே பள்ளிக்கூடத்துக்குக் 'கிதாப்' உண்டாகும்? ஹெட்மாஸ்டருக்கும் நல்ல பெயர் ஏற்படும்?" என்று பதில் சொல்வேன். ஆனால் ஹெட்மாஸ்டரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் என் மனதில் ஏற்பட்டிருந்த அபிமானம் மட்டும் எள்ளளவும் குறையவில்லை.
இப்படிச் சில மாதங்கள் சென்றன. அரை வருஷப் பரீட்சை முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறையும் கழிந்தது. தை மாதம் பிறந்தது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு அல்லவா? எனக்கும் ஒரு வழிபிறந்தது. அதாவது ஹெட்மாஸ்டர் வீட்டில் முன்போல் நெருக்கமான பழக்கம் ஏற்படுவதற்கு ஒரு வழி பிறந்தது. அது, தேவகிக்குக் கலியாணம் நிச்சயமான செய்திதான்!
கிறிஸ்மஸ் விடுமுறைக்காக நான் கிராமத்துக்குப் போய்விட்டுத் திரும்பியதும் இந்தச் செய்தியை அறிந்தேன். ஹெட்மாஸ்டரும் அவர் மனையாளும் எனக்கு ஆள்மேல் ஆள் விட்டார்கள். நானும் அவசரமாய் அவர்கள் வீட்டுக்குப் போனேன். "தேவகிக்குக் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது" என்கிற செய்தியைக் குதூகலத்துடன் சொன்னார்கள். வரனும் ரொம்ப நல்ல வரன் என்று தெரிந்தது. எங்கள் ஹெட்மாஸ்டர் மிக நல்ல மனிதர்; அவருடைய மனையாளோ மகா உத்தமி. அப்படிப்பட்ட தம்பதிகளுடைய ஆசை நிறைவேறாமற் போகுமா? "உங்களுடைய குணத்துக்குத்தான் இவ்வளவு நல்ல வரன் கிடைத்தது" என்று சொன்னேன். பையன் ஒரு தாசில்தாருடைய மகன். பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான். வரதட்சணை கூட அதிகம் கேட்கவில்லையாம். பெண்ணின் அழகையும் சமர்த்தையும் பார்த்து அதிக நிபந்தனை ஒன்றும் போடாமல் கலியாணத்துக்கு ஒப்புக் கொண்டு விட்டார்களாம்.
முன்னேயெல்லாம் 'தேவகிக்குக் கலியாணம்' என்ற பேச்சு எனக்குக் கிலேசத்தை அளித்தது என்று சொன்னேன் அல்லவா! இப்போது கலியாணம் நிச்சயமாகி விட்டது என்று தெரிந்ததும் எனக்கு எந்தவிதமான கிலேசமும் ஏற்படவில்லை. என் தலையிலே இருந்த சுமையும் இருதயத்தை அமுக்கிய பாரமும் இறங்கிவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாகிக் குதூகலம் ஏற்பட்டது. தேவகியின் சமர்த்துக்கும் அழகுக்கும் இவ்வளவு நல்ல வரனுக்குக் கலியாணம் ஆகவேண்டியது நியாயந்தான். பத்மநாப ஐயங்கார்-ரங்கநாயகி அம்மாளின் உத்தம குணத்துக்கு, அவர்களுக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க வேண்டியதும் நியாயந்தான். எல்லாம் கடவுளுடைய கருணை. பெருமாளையும் தாயாரையும் ரங்கநாயகி அம்மாள் சேவித்ததின் பலன் கைமேல் கிடைத்துவிட்டது. எனக்கும் ஒரு பெரிய பொறுப்புத் தீர்ந்தது. ஹெட்மாஸ்டரிடம் நான் கொண்டிருந்த பக்திக்கு எவ்விதமான களங்கமும் சொல்வதற்கு இனிமேல் யாரும் துணியமாட்டார்கள் அல்லவா?
இத்தகைய எண்ணங்களினால் நான் அளவிலாத உற்சாகமடைந்து கலியாண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டேன். முன்போல் பெரும்பாலும் ஹெட்மாஸ்டர் வீட்டிலேயே காலங்கழிக்கத் தொடங்கினேன். பந்தலை அப்படிப் போட வேண்டும், மேளத்துக்கு இன்னாரைச் சொல்ல வேண்டும், சமையலுக்கு இன்னாரை ஏற்பாடு செய்ய வேண்டும், இன்னின்ன சாமான்களை இன்னின்ன இடத்தில் வாங்கிச் சேகரம் செய்ய வேண்டும், கலியாணக் கடுதாசி இப்படி அச்சடிக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் இடைவிடாமல் மாமியுடன் விவாதித்து வந்தேன். கலியாண ஏற்பாடுகள் சம்பந்தமாக என்னால் இயன்ற ஒத்தாசைகளையும் மாமிக்குச் செய்து வந்தேன்.
ஆனால் இந்தக் கலியாண ஏற்பாடுகளிலும் பேச்சு வார்த்தைகளிலும் கொஞ்சங்கூட உற்சாகங்காட்டாமலிருந்தாள் தேவகி. "எனக்குக் கலியாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? அம்மாவும், அப்பாவும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்! கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கவில்லை!" என்று தேவகி அடிக்கடி சொன்னாள். சாதாரணமாகக் கன்னிப் பெண்கள் எல்லாருமே கலியாணப் பேச்சு வந்தால் இப்படிப் பிடிக்காதது போலக் காட்டிக் கொள்வதுண்டு. தேவகியும் அவ்விதந்தான் வெளிக்குச் சொல்லுகிறாள் என்று முதலில் நினைத்தேன். அவள் அப்படிப் பேசும்போதெல்லாம் பரிகசித்துச் சிரித்தேன். போகப் போக, தேவகி உண்மையாகவே கலியாணத்தை ஆட்சேபிக்கிறாளோ என்ற சந்தேகம் உதித்தது. அப்போது அவளிடம் எதிர்க்கட்சி பேசிப் புத்திமதியும் சொன்னேன். "உன் தாயார் தகப்பனாருக்கு நீ ஒரே பெண். உனக்குக் காலா காலத்தில் கலியாணம் பண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு ஆசையாயிராதா? அதை நீ ஆட்சேபித்து என்ன லாபம்? இந்த மாதிரி வரன் தான் சுலபத்தில் கிடைக்குமா? பையன் பி.ஏ. படிக்கிறானாம்!..." என்று வரனைப் பற்றி வர்ணிக்கத் தொடங்கினேன். அதற்குத் தேவகி, "பி.ஏ. என்றால் அவ்வளவு அதிசயமா? எத்தனையோ ஆயிரம் பேர்கள் பி.ஏ. படிக்கிறார்கள். கலியாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம் இருக்க வேண்டாமா? இந்தக் காலத்தில் 'பெண்கள் விடுதலை' என்றும், அதுவென்றும், இதுவென்றும் பேசுகிறார்களே? நான் 'கலியாணம் வேண்டாம்' என்று சொல்லும்போது என்னை நிர்ப்பந்தப் படுத்துவது என்ன நியாயம்? எல்லாம் தெரிந்த எங்கள் அப்பாவே இப்படிச் செய்கிறதுதான் எனக்கு அர்த்தமாகவில்லை! நீங்களாவது என் அப்பா - அம்மாவிடம் கொஞ்சம் எனக்காகப் பேசுவீர்கள் என்று நினைத்தேன். நீங்களும் அவர்களுடைய கட்சி பேசுவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!" என்றாள். இதைக் கேட்டதும் எனக்கு உண்மையாகவே கொஞ்சம் தயக்கம் உண்டாகிவிட்டது. ஒரு வேளை தேவகிக்கு இஷ்டமில்லாத பையனுக்கு அவளைப் பலவந்தமாகக் கலியாணம் செய்து கொடுத்துவிடப் பிரயத்தனம் செய்கிறார்களோ என்ற கவலை ஏற்பட்டது.
"ஆமாம், தேவகி! அந்தப் பையனை உனக்கு உண்மையாகவே பிடிக்கவில்லையா, என்ன? அப்படியானால்..." என்பதற்குள், தேவகி, "அப்படியானாலுமில்லை, இப்படியானாலுமில்லை. அந்தப் பையனை எனக்குப் பிடிக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எங்கே வந்தது? சாப்பாடே இல்லையென்று சொல்லும்போது 'இலை பொத்தல்' என்று புகார் சொன்ன கதையாக அல்லவா இருக்கிறது? எனக்குக் கலியாணம் பண்ணிக் கொள்ளவே இஷ்டமில்லை. பி.ஏ., எல்.டி., பாஸ் செய்துவிட்டு 'டீச்சர்' உத்தியோகத்துக்குப் போய்ச் சுதந்திரமாய் வாழவேண்டும் என்று எனக்கு விருப்பமாயிருக்கிறது. மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்று என்னைக் கேட்டால் என்ன பிரயோஜனம்? என்னைப் பார்க்க வந்த பையனை நான் முகம் எடுத்துப் பார்க்கவேயில்லை. பின்னே, எப்படிப் பதில் சொல்ல முடியும்?" என்றாள். இதிலிருந்து தேவகியின் ஆட்சேபமெல்லாம் வெளிப்படைக்குத்தான் என்று நான் தீர்மானித்துக் கொண்டேன். பிறகு "இந்த மாதிரியெல்லாம் அசந்தர்ப்பமாய்ப் பேசாதே! கலியாணம் பண்ணிக் கொள்ளாமல் 'நன்னரி'யில் சேர்ந்து விடுவதெல்லாம் ஐரோப்பியர்களுக்குச் சரி; ஹிந்துக்களாகிய நமக்குச் சரிப்படுமா? அந்தமாதிரி எண்ணத்தை அடியோடு மறந்துவிடு! அப்பா அம்மா சொல்கிறபடி கேளு!" என்று அழுத்தமாய்ப் புத்திமதி சொல்லத் தொடங்கினேன். "இப்போது இப்படித்தான் 'கலியாணம் வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டிருப்பாய். நாளைக்குக் கலியாணம் ஆகிவிட்டால் என்னையெல்லாம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாய். 'கிட்டா' என்று ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துபோய் விடுவாய்!" என்று சில சமயம் பரிகாசமும் செய்தேன்.
இந்தமாதிரி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஹெட்மாஸ்டரோ அல்லது மாமியோ வந்துவிட்டால், உடனே தேவகி பேச்சை நிறுத்திவிட்டு யோசனையில் ஆழ்ந்து விடுவாள். அவள் அப்படி என்ன யோசனை செய்தாள் என்பது அவளுக்கும் அவளது அந்தராத்மாவுக்குந்தான் தெரியும். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அந்த பரந்தாமனுக்கும் ஒரு வேளை தெரிந்திருக்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 5 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், கலியாணம், எனக்கு, என்ன, தேவகி, ஹெட்மாஸ்டர், நல்ல, வேண்டும், சொன்னேன், அல்லவா, மாதிரி, என்றாள், இப்போது, கொஞ்சம், பேரில், செய்து, கலியாண, எனக்குக், வரன், தொடங்கினேன், பேச்சு, கிட்டா, பையனை, பார்க்க, உண்மையாகவே, தாயாரையும், பெருமாளையும், மாமியின், பிறந்த, உண்டு, ரங்கநாயகி, தேவகியின், கொண்டு, கொண்டேன், சொல்லி, சொல்ல, முன்போல், தேவகிக்குக்