தேவகியின் கணவன் - அத்தியாயம் 4
தேவகி எங்கள் ஊருக்கு வந்து சில நாள்
வரையில் என் வாழ்க்கையே குதூகல மயமாயிருந்தது. வழக்கம் போலவே ஹெட்மாஸ்டர்
வீட்டுக்கு அடிக்கடி போய் வந்தேன். அம்மாவுக்கு உதவி செய்தது போலவே மகளுக்கும்
உதவி புரிந்து வந்தேன். சில சமயம் கணக்கு முதலிய பாடங்களில் தேவகி சந்தேகம்
கேட்டால் சொல்லிக் கொடுப்பேன். தேவகிக்கும் என்னை ரொம்பப் பிடித்து விட்டதாகத்
தோன்றியது. அம்மாவைப் போலவே பெண்ணும் ஒரு நாள் நான் அவர்கள் வீட்டுக்குப்
போகாவிட்டால், "எங்கே நேற்றுக் காணோம்?" என்று கேட்கத் தொடங்கினாள்.
அவர்களுக்குள் ஒரு வித்தியாசம் என்னவென்றால், தாயார் என்னிடம் பிள்ளை
முறை பாராட்டி என்னை ஏக வசனத்தில் அழைப்பாள். புதல்வி மரியாதையாக 'வாங்கள்'
'போங்கள்' என்று கூறுவாள்.
இவ்விதம் சிலகாலம் நான் ஆனந்த மயமான வானுலகத்தில் சஞ்சரித்து வாழ்ந்து வந்தேன். திடீரென்று அந்த வானில் கருமேகம் ஒன்று தோன்றியது. முதலில் சிறியதாகத் தோன்றியது வர வரப் பெரிதாகிப் படர்ந்தது. இடியும் மின்னலும் புயலும் மழையும் தொடர்ந்து வந்தன.
தேவகி எங்கள் பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது பாரத்திலே சேர்ந்தாள். வகுப்பில் எல்லாப் பிள்ளைகளும் பெஞ்சிகளில் உட்கார்ந்திருப்பார்கள். தேவகிக்கு மட்டும் சற்றுத் தள்ளி ஒரு தனி நாற்காலி போடப்பட்டிருக்கும். அதில் அவள் உட்கார்ந்து கொள்வாள். இதைக் குறித்துச் சில மாணாக்கர்கள் ஒரு விதமாகப் பேசுவதுண்டு என்று எனக்குத் தெரிய வந்தது. பராபரியாகக் கேள்விப்பட்டேனேயன்றி, என் காதில் அத்தகைய பேச்சு எதுவும் விழாமல் கொஞ்ச நாள் வரையில் இருந்தது. ஆகையால், மனதிற்குள் ஆத்திரப்பட்டேனே தவிர அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கடைசியாக, ஒரு நாள் என் காதுபடக் கேட்டு விட்டேன். ஆறாவது பாரத்தில் இரண்டு வருஷம் தேறாமல், மூன்றாவது வருஷம் படித்த ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் வைத்தியநாதன். பணக்கார வீட்டுப் பிள்ளை. அகம்பாவம் பிடித்தவன். வம்புப் பேச்சுப் பேசும் வழக்கம் ரொம்ப உண்டு. ஆசிரியர்களைப் பற்றிக்கூடச் சில சமயம் கன்னாபின்னா என்று மரியாதைக் குறைவாகப் பேசுவான். அவனோடு நான் சகவாசமே வைத்துக் கொள்வதில்லை.
ஒருநாள் நான் ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போய்விட்டு ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது வைத்தியநாதனும் இன்னொரு பையனும் சாலை ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைச் சுட்டிக் காட்டி வைத்தியநாதன் ஏதோ சொன்னான். இன்னொரு பையன் 'ஓஹோ!' என்று சிரித்தான். அதைக்கூட நான் பொருட்படுத்தவில்லை. நான் பாட்டுக்குச் சாலையின் இன்னொரு ஓரமாகப் போனேன். ஆனால் வைத்தியநாதனுக்கு அன்றைக்கு ஏதோ பிசாசு பிடித்திருந்தது. ஆகையால் என் காதில் விழும்படி அவன் ஹெட்மாஸ்டர் பெண் தேவகியைப் பற்றிப் பேசினான். என்னையும் அவளையும் சேர்த்தே பேசினான், என்ன பேசினான் என்று இங்கே எழுதி என் பேனாவையும் காகிதத்தையும் கறைப்படுத்த நான் விரும்பவில்லை.
அதைக் கேட்டேனோ இல்லையோ, எனக்கு ஆவேசம் வந்துவிட்டது. அவ்வளவு தைரியமும் தேகபலமும் எனக்கு எப்படி அச்சமயம் வந்தன என்பதை நினைத்தால் இப்போது கூட வியப்பாயிருக்கிறது. ஒரே பாய்ச்சலில் அவனருகில் சென்று அவன் கன்னத்தில் பளீர் என்று ஒரு அறை விட்டேன். வைத்தி நல்ல தடியன்; 'புட்பால்' நன்றாக ஆடுவான். காற்பந்து ஆடி ஆடிக் காலில் அவனுக்கு வைரம் பாய்ந்திருந்தது. என்னை ஒரு உதைவிட்டான். என் முழங்காலில் பட்டுப் பிராணனே போய்விட்டது. ஆயினும் நான் பணிந்து விடவில்லை. இரண்டு பேரும் சிறிது நேரம் துவந்த யுத்தம் செய்தோம். வீதியில் விழுந்து புரண்டோ ம். வைத்தி என் கழுத்தைப் பிடித்து நெருக்க ஆரம்பித்தான். எனக்கு மூச்சுத் திணற ஆரம்பித்துவிட்டது. நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் எங்கள் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் வந்தார். ஹெட்மாஸ்டரைக் காட்டிலும் அவர் பிள்ளைகளின் கட்டுப்பாட்டை நிலை நிறுத்துவதில் கண்டிப்பானவர். அவர் எங்கள் அருகில் வந்து அதட்டியதும் இருவரும் சண்டையை நிறுத்தினோம். இருவரையும் அவர் கடுமையாகத் திட்டிவிட்டுப் பள்ளிக்கூடம் வந்ததும் தண்டிக்கப் போவதாகச் சொன்னார். வைத்தி உடனே "என் பேரில் தப்பில்லை, ஸார்! நான் பாட்டுக்குச் சுந்தரத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது இவன் தான் வலுச்சண்டைக்கு இழுத்தான். திடுதிடுவென்று வந்து கன்னத்தில் பளீர் என்று அறைந்தான். சுந்தரத்தை வேணுமானால் கேட்டுப் பாருங்கள்!" என்றான். "சுந்தரத்தைக் கேட்பதென்ன? இவனையே கேட்கிறேன். வைத்தி சொல்வது உண்மையா?" என்று என்னைப் பார்த்து ஆசிரியர் அதட்டிக் கேட்டார். நான் பதில் சொல்லாமல் திகைத்து நின்றேன். வைத்தி கூறியது என்னவோ உண்மைதான். முதலில் வைத்தியின் கன்னத்தில் அறைந்தவன் நான் தான். ஆனால் எதற்காக? அந்தக் காரணத்தை வெளியிட்டுச் சொல்ல எனக்கு இஷ்டமில்லை. அதைச் சொல்வதைக் காட்டிலும் ஆசிரியரின் தண்டனையைப் பெறுவதற்கும் மற்றவர்களிடம் அவமானப் படுவதற்கும் தாயாராயிருந்தேன். தேவகியையும் என்னையும் சேர்த்து வைத்தி பேசிய ஆபாச வார்த்தைகளை எப்படி நான் திருப்பிச் சொல்வேன்? சொன்னால் அந்தப் பேச்சு ஊரெல்லாம் ஒரு நிமிஷத்தில் பரவி விடுமே? அதைவிட என் நாவைத் துண்டித்து விடுவதே மேல் என்று நினைத்தேன்.
உதவித் தலைமை ஆசிரியர் ஜகதீசய்யர் ஹெட்மாஸ்டரிடம் எங்கள் தெருச் சண்டையைப் பற்றிச் சொல்லிவிட்டார். ஹெட்மாஸ்டர் என்னை அழைத்து விசாரித்தார். வைத்தியுடன் வலுச் சண்டைக்குப் போனதற்குக் காரணம் கேட்டார். நான் சொல்ல மறுத்தேன். வேறு யாரிடம் சொன்னாலும் அவரிடம் சொல்லக் கூடாதல்லவா? கடைசியில் "இந்தத் தடவை மன்னித்துவிட்டேன். இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதே!" என்று எச்சரித்தார். அத்துடன் அச்சம்பவம் முடிந்துவிட்டதாகத் தோன்றியது.
ஆனால் ஹெட்மாஸ்டர் என்னை நடத்திய முறையில் சீக்கிரத்திலேயே வித்தியாசத்தைக் கண்டு கொண்டேன். பழைய அபிமானமும் நம்பிக்கையும் என்னிடம் இல்லையென்றே தோன்றியது. அவர்களுடைய வீட்டுக்கு நான் வருவதைக் கூட அவ்வளவாக அவர் விரும்பவில்லையென்று காணப்பட்டது. அதைக் காட்டிலும் முக்கியமாக, நானும் தேவகியும் பேசுவதைப் பார்த்தால் ஹெட்மாஸ்டரின் முகம் சுருங்கிற்று. "தேவகி! என்ன வீண் பேச்சு? போய்ப் பாடத்தைப் படி!" என்பார். இதுமட்டுமல்லாமல் என்னிடம் அவர் தனிமையில் பேச நேரும்போது "கிருஷ்ணசாமி! தேவகிக்கு ஒரு நல்ல வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் வாழ்க்கையில் ரொம்பவும் வறுமையால் கஷ்டப்பட்டவன். தேவகியையாவது நல்ல பணக்காரப் பிள்ளைக்குப் பார்த்துக் கொடுத்து விட விரும்புகிறேன். பணக்காரப் பிள்ளையாயிருந்தால் மட்டும் போதாது; குறைந்தது பி.ஏ. படித்தவனாயிருக்க வேண்டும். பெருமாளுடைய சித்தம் எப்படியிருக்கிறதோ? உனக்கு யாராவது நல்ல வரன் தெரிந்திருந்தால் சொல்லு!" என்று கூறுவார்.
இந்த வார்த்தை என் நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போலிருக்கும். எனக்கு நானே புத்தி சொல்லிக் கொண்டு ஆறுதல் அடையப் பார்ப்பேன். "தேவகிக்கு எப்படியும் ஒரு நாள் கலியாணம் நடக்க வேண்டியதுதானே? ஆஸ்திபாஸ்தி ஒன்றுமேயில்லாத நாம் அதைப்பற்றி யோசித்து என்ன பயன்? நமக்குப் படிப்பும் கொஞ்சம். பி.ஏ. வகுப்பை எட்டிப் பார்க்கவும் முடியாது. வயதுப் பொருத்தம் கூட இல்லை. பின்னே, எதற்காகக் கவலைப்பட வேண்டும்? ஹெட்மாஸ்டர் சொல்வது நியாயந்தானே?" என்று பலவிதமாக எண்ணி யோசித்து முடிவு செய்வேன். ஆனாலும் தேவகிக்குக் கலியாணம் நடக்கப் போகிறது என்ற எண்ணம் என் மனதில் ஏதோ ஒரு வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
"வைத்திக்கும் எனக்கும் சண்டை எழுந்த காரணத்தைப் பற்றி ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்திருக்குமோ, ஒரு வேளை சுந்தரம் சொல்லியிருப்பானோ?" என்று எண்ணி எண்ணி என் உள்ளம் தத்தளித்தது. அல்லது வைத்தியே ஒருவேளை ஏதாவது உளறியிருக்கலாம்; குற்றத்தை என்பேரில் சுமத்தியிருக்கலாம். ஆனாலும் அதைப்பற்றி யாரிடமும் பேசவோ, கேட்கவோ முடியவில்லை. சண்டைக்குப் பிறகு வைத்தியும் நானும் பேசுவதேயில்லை. என்னைப் பற்றி அவன் நான் இல்லாத சமயங்களில் ஏதேதோ கோள் சொல்லி அவதூறு பேசி வருகிறான் என்று தெரிந்திருந்தது. ஆயினும் பழைய அநுபவம் காரணமாக அதைப்பற்றிக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்துவிட்டேன். இரண்டாவது தடவை அவனோடு சண்டை போட எனக்கு இஷ்டமில்லை.
இப்படியாகக் காலம் போய்க் கொண்டிருந்தது. என் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த புத்துணர்ச்சியும் ஆனந்தமும் மறைந்துவிட்டன. கவலையும் சந்தேகமும் மனதை அரித்துக் கொண்டிருந்தன. இவ்வளவுக்கு மிடையில் தேவகி எப்போதும்போல் என்னிடம் பிரியம் காட்டி வந்தது ஒன்றுதான் ஒருவாறு திருப்தி அளித்து வந்தது. "ஏன் இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருவதில்லை?" என்று தேவகி என்னைப் பார்க்கும் போதெல்லாம் கேட்கத் தவறுவதில்லை. ஆனால் அவளுடைய தகப்பனார் நான் வருவதை விரும்பவில்லையென்று அவளிடம் நான் எப்படிச் சொல்வேன்? சொன்னால்தான் அதில் பயன் என்ன?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 4 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், தேவகி, வைத்தி, எனக்கு, ஹெட்மாஸ்டர், நல்ல, என்னை, தோன்றியது, எங்கள், நாள், அவர், அவன், என்னிடம், என்ன, வந்து, கன்னத்தில், ஆசிரியர், என்னைப், காட்டிலும், எண்ணி, பேச்சு, வந்தேன், வீட்டுக்கு, போலவே, தேவகிக்கு, வந்தது, இன்னொரு, சொல்ல, பற்றி, பேசினான்