தேவகியின் கணவன் - அத்தியாயம் 3
ஹெட்மாஸ்டரும் நானும் தேவகியை அழைத்துக்கொண்டு
வருவதற்காக ரயில்வே நிலையத்துக்குப் போயிருந்தோம். தெரிந்த மனிதர்களுடன்
தேவகியைக் கூட்டி, ரயிலேற்றி அனுப்புவதாகச் சென்னையிலிருந்து கடிதம்
வந்திருந்தது. ரயில் எப்போது வரப் போகிறது என்று எனக்கு ஒரே ஆவலாயிருந்தது.
கடைசியாக, ரயில் வந்தது. நாங்கள் நின்ற இடத்துக்கு எதிரிலேயே தேவகி இருந்த
வண்டியும் நின்றது. ரயிலுக்கு வெளியே முகத்தை நீட்டி ஹெட்மாஸ்டரைப் பார்த்துக்
கையை ஆட்டிய பெண்ணைப் பார்த்ததும் அவள் தான் தேவகி என்று எனக்குத் தெரிந்துவிட்டது.
கோண வகிடும் சுருட்டை மயிரும் குறுகுறுவென்ற முகமும் கறுப்பான புருவமும்
கண்ணிமையுமாகத் தோன்றிய தேவகியின் முகத்தை ரயில் சட்டங்களுக்கு நடுவில்
அன்றைக்கு எப்படிப் பார்த்தேனோ, அப்படியே இன்றைக்கும் ஞாபகத்துக்கு வருகிறது.
"அப்பா! வந்துவிட்டேன்!" என்று சொன்ன அவளுடைய குரலைக் கேட்டதும் என்
நெஞ்சு மேலெழுந்து தொண்டையை அடைத்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. ரயிலிலிருந்து
தேவகி கீழே இறங்கியதும் எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா?
"மாமி சுத்தப் பைத்தியம்! இப்படி ரம்பை, மேனகையெல்லாம் தோற்றுப் போகும்படி அழகு படைத்த பெண்ணுக்குக் கலியாணம் ஆவதைப் பற்றியா கவலைப்படுவது? இவளுக்குப் படிப்பு இருந்தால் தான் கலியாணம் ஆகுமா? பத்தாயிரம் இருபதினாயிரம் வரதட்சணை இந்தப் பெண்ணுக்கா கொடுக்க வேண்டும்? பைத்தியக்காரத்தனந்தான்! இவளைக் கலியாணம் செய்து கொள்ளுகிறவன் அல்லவா இவளைப் பெற்றவர்களுக்குப் பத்தாயிரம், இருபதினாயிரம் பணம் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுத்தாலும் அது இவளுக்கு ஈடாகுமா?" என்று இப்படியெல்லாம் என் மனம் நினைத்தது.
ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியேறியபோது தேவகியின் பெட்டியை நான் தூக்கிக் கொண்டு போனேன். அப்படி அவளுடைய பெட்டியைத் தூக்கியது எனக்குப் பெருமையாயிருந்தது. ஜட்கா வண்டியில் முதலில் தேவகியை ஏறச் சொல்லிவிட்டு ஹெட்மாஸ்டர் ஏறிக் கொண்டார். பிறகு என்னையும் ஏறிக்கொள்ளச் சொன்னார். நான் தயக்கத்துடன் ஏறி உட்கார்ந்தேன். வண்டி நகரத் தொடங்கியதும் தேவகி, "இவர் யார் அப்பா?" என்றாள். அதுவரையில் யாருமே என்னைப் பற்றி அவ்விதம் மரியாதையாகப் பேசியதில்லை. எங்கள் ஊரில் சிறு பெண்கள்கூடப் புருஷப் பிள்ளைகளை 'அவன்' 'இவன்' என்றுதான் சொல்வார்கள். தேவகி எனக்கு மரியாதை கொடுத்துப் பேசியது எனக்கு அளவில்லாத பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. பட்டணத்தில் வளர்ந்த பெண்களின் நாகரிகம் எப்படியும் உயர்வுதான் என்று எண்ணிக் கொண்டேன்.
எப்போதும் சளசளவென்று பேசும் பழக்கம் உடைய எனக்கு அன்றைக்கு, அந்த ஜட்கா வண்டியில் போகும்போது, எதனாலோ பேசவே தோன்றவில்லை. தகப்பனாரும் மகளும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மௌனமாயிருந்தேன். நடுவில் ஒரு தடவை தேவகி "இவருக்கு ரொம்ப சங்கோசம் போலிருக்கிறது. பேசாமல் வருகிறாரே?" என்றாள். "அதெல்லாம் ஒன்றுமில்லை; அப்பாவும் பெண்ணும் பேசும்போது நடுவில் குறிக்கிட வேண்டாம் என்று இருக்கிறான். உன் அம்மாவுக்கு இவன் செல்லப் பிள்ளை. எதற்கெடுத்தாலும் 'கிச்சாமியை அனுப்புங்கள்!' என்பாள். இவனால் எனக்கு வீட்டு விஷயமான கவலையே இல்லாமலிருக்கிறது!" என்றார் ஹெட்மாஸ்டர். அவரிடம் அப்போது எனக்கு எல்லை கடந்த நன்றி உணர்ச்சி உண்டாயிற்று.
ஹெட்மாஸ்டர் குடியிருந்த வீட்டின் வாசலில் சில மந்தாரை, பவளமல்லி முதலிய புஷ்பச் செடிகளுக்கு மத்தியில் ஒரு பழைய காலத்துச் சாதி முல்லைக் கொடியும் வளர்ந்து படர்ந்து பூத்துக் கொட்டியிருந்தது. ஒடிந்து விழுந்து விடுவாளோ என்று தோன்றும்படி ஒல்லியான தேகத்துடன் தேவகி அந்த வீட்டுக்குள் புகுந்தபோது, பெண்களைப் 'பூங்கொடி' என்று சொல்வதின் பொருத்தம் எனக்கு விளங்கிற்று. இன்றைக்குக் கூட நான் தேவகியைப் பற்றி நினைத்தால், அந்த சாதி முல்லைக்கொடியும் அதில் பூத்திருந்த மலர்களின் மணமும் சேர்ந்து எனக்கு ஞாபகம் வருகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 3 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - எனக்கு, தேவகி, ஹெட்மாஸ்டர், அந்த, நான், நடுவில், ரயில், கலியாணம்