முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.037.திருமறைக்காடு
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.037.திருமறைக்காடு

2.037.திருமறைக்காடு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்.
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
1862 | சதுரம்
மறைதான் றுதிசெய் துவணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. |
2.037. 1 |
இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே! உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக் கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு நல்லவண்ணம் விடை அருள்வாயாக.
1863 | சங்கந்
தரளம் மவைதான் கரைக்கெற்றும் வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா மங்கை யுமைபா கமுமா கவிதென்கொல் கங்கை சடைமே லடைவித் தகருத்தே. |
2.037.2 |
சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால் கரையில் எறியும் மரக்கலங்களை உடைய கடல் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உமைமங்கை ஒருபாகமாக இருக்க நீ கங்கையைச் சடைமீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ?
1864 | குரவங்
குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல் மருவும் பொழில்சூழ் மறைக் காட் டுறைமைந்தா சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல் அரவம் மதியோ டடைவித் தலழகே. |
2.037.3 |
குரா, குருக்கத்தி, புன்னை, புலிநகக்கொன்றை ஆகியன மருவிய பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! தலைமாலையும் மலர்மாலையும் திகழும் உன் செஞ்சடைமேல் தம்முள் பகை உடைய பாம்பையும் மதியையும் உடன் வைத்துள்ளதற்குக் காரணம் யாதோ?
1865 | படர்செம்
பவளத் தொடுபன் மலர்முத்தம் மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா உடலம் முமைபங் கமதாகியு மென்கொல் கடனஞ் சமுதா வதுவுண் டகருத்தே. |
2.037.4 |
படர்ந்த செம்பவளக் கொடிகள், பல்வகையான மலர்கள், முத்துக்கள், மடல்கள் அவிழ்ந்த மலர்ப் பொழில்கள் ஆகியன சூழ்ந்து விளங்கும் மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உன் திருமேனியில் ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டவனாயிருந்தும் கடலில் எழுந்த நஞ்சினை அமுதம்போல உண்டதன் கருத்து யாதோ?
1866 | வானோர்
மறைமா தவத்தோர் வழிபட்ட தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா ஏனோர் தொழுதேத் தவிருந் தநீயென்கொல் கானார் கடுவே டுவனா னகருத்தே. |
2.037. 5 |
தேவர்கள், வேதங்களை உணர்ந்த பெரிய தவத்தினர் ஆகியோர் வழிபட்ட தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருமறைக்காட்டில் உறையும் செல்வனே! தன்னையல்லாத ஏனையோர் அனைவராலும் தொழுது போற்றப்பெறும் பெருமையோடு இருந்த நீ காட்டுள் வாழும் வேடுவனாய் உருக்கொண்ட காரணம் யாதோ?
1867 | பலகா
லங்கள்வே தங்கள்பா தங்கள்போற்றி மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல் தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே. |
2.037.6 |
பலகாலங்கள் வேதங்கள் பாதங்களைப் போற்றி மலரால் வழிபாடு செய்யும் மறைக்காட்டுள் எழுந்தருளி விளங்கும் இறைவனே! ஏழுலகங்களையும் தன் உடைமையாகக் கொண்டுள்ளவனே! நீ பலர் வீடுகளுக்கும் சென்று தலையோட்டில் பலியேற்று அதில் உண்டருளியதற்குக் காரணம் யாதோ! சொல்வாயாக.
1868 | வேலா
வலயத் தயலே மிளிர்வெய்தும் சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா மாலோ டயனிந் திரனஞ் சமுனென்கொல் காலார் சிலைக்கா மனைக்காய்ந் தகருத்தே. |
2.037.7 |
விளங்கும் சேல்மீன்களைக் கொண்டுள்ள கடலின் அயலே உள்ள திருமா மறைக்காட்டில் உறையும் செல்வனே! முற்காலத்தில் திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் அஞ்சுமாறு காலில் வைத்து மிதித்துக் கணை பூட்டும் வில்லை ஏந்திய காமனை எரித்ததன் கருத்து யாதோ?
1869 | கலங்கொள்
கடலோ தமுலாவு கரைமேல் வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா இலங்கை யுடையா னடர்ப்பட் டிடரெய்த அலங்கல் விரலூன் றியருள் செய்தவாறே. |
2.037. 8 |
மரக்கலங்களைக் கொண்டுள்ள கடலின் ஓதம் உலாவுகின்ற கரைமீது வலம் வருபவர் வாழ்த்தி இசைத்துப் போற்றுமாறு விளங்கும் மறைக்காட்டில் விளங்கும் பெருமானே! இலங்கை மன்னன் இராவணன் அடர்க்கப்பட்டு இடர் எய்துமாறு அசையும் உன் திருவடி விரலால் ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்த காரணம் யாதோ?
1870 | கோனென்
றுபல்கோ டியுருத் திரர்போற்றும் தேனம் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா ஏனங் கழுகா னவருன் னைமுனென்கொல் வானந் தலமண் டியுங்கண் டிலாவாறே. |
2.037.9 |
பலகோடி உருத்திரர்கள் தலைவன் என்று போற்றும், தேன் பொருந்திய அழகிய பொழில்கள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் செல்வனே! பன்றியும் கழுகும் ஆன திருமால், பிரமர் உன்னை முற்காலத்தே நிலத்தை அகழ்ந்து சென்றும், வானத்தில் பறந்து சென்றும் கண்டிலர். அதற்குக் காரணம் யாதோ?
1871 | வேதம்
பலவோ மம்வியந் தடிபோற்ற ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய் ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல் ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. |
2.037. 10 |
வேதங்கள் பலவும் வேள்விகள் செய்து வியந்து உன் திருவடிகளைப் போற்ற, கடல்நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற பெருமானே! வைதிக நெறியினர்க்கு அயலவராகிய சமணர் சாக்கியர்களாகிய அறிவற்றவர்கள் உரைகளால் உம்மை அலர் தூற்றுதற்குக் காரணம் யாதோ?
1872 | காழிந்
நகரான் கலைஞான சம்பந்தன் வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார் வாழி யுலகோர் தொழவா னடைவாரே. |
2.037.11 |
காழி நகரில் தோன்றிய கலைகளில் வல்ல ஞான சம்பந்தன் வாழ்த்துதற்குரிய மறைக்காட்டில் உறையும் ஈசனைத் தரிசிக்கும் பேறு வாய்த்து அறிவித்த ஏழிசை பொருந்திய இப்பதிகப் பாமாலையை ஓதி வழிபட வல்லவர், வாழும் இவ்வுலகோர் தொழவான் அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமறைக்காடு - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மறைக்காட்டில், உறையும், மறைக்காட், காரணம், பொழில்சூழ், சூழ்ந்த, விளங்கும், டுறைமைந்தா, மைந்தனே, கொண்டுள்ள, டுறைசெல்வா, பொழில்கள், செல்வனே, வேதங்கள், வழிபாடு, மறைக்காடா, மலரால், திருமா, கடலின், சென்றும், சம்பந்தன், பொருந்திய, பெருமானே, திருமால், இலங்கை, வாழும், வழிபட்ட, தகருத்தே, செய்து, திருமறைக்காட்டில், திருக்காப்புக், திருச்சிற்றம்பலம், திருமுறை, கருத்து, பொழில், திருமறைக்காடு, ஒருபாகமாக, ஆகியோர்