வைர மோதிரம் [காணாமற் போகாதது]
7
சற்று நேரத்துக்கெல்லாம், பாலகோபாலும்
வதஸ்லையும் மாஜி திவானின் பங்களாவுக்கு வெளியே வந்து தங்களுடைய காரில்
ஏறிக் கொண்டார்கள்.
"டிரைவர்! திருவல்லிக்கேணிக்குப் போ!" என்றாள் வத்ஸலை.
"திருவல்லிக்கேணிக்கா? எதற்காக?" என்றான் பாலகோபால்.
"அவரைப் பார்ப்பதற்குத்தான்."
"ஐயோ! ஏதோ விலாசம் சொன்னான்; மறந்து விட்டேனே!"
"நீ மறந்து விட்டால் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சுந்தர முதலியார் தெரு, 48ஆம் நெம்பர்."
"அவனுக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்தது? சட்டைப் பைகளை உதறமாட்டேனென்று அவ்வளவு பிடிவாதம் ஏன் பிடித்தான்? அதுதான் எனக்குத் தெரியவில்லை."
"எனக்குந்தான் தெரியவில்லை. ஆனால் ஏதோ காரணம் இருக்கவேண்டும். அதை நான் கண்டுபிடிக்காவிட்டால், என் பெயர் வத்ஸலை அல்ல; நான் டிப்டி கமிஷனர் கபாலியின் மருமகளல்ல" என்றாள்.
பத்து நிமிஷத்துக்கெல்லாம் வண்டி மேற்படி வீட்டின் வாசலை அடைந்தது.
கீழ்க்கட்டில் குடியிருந்த ஒருவர் வாசலில் நின்று கொண்டிருந்தார்.
"ராஜாராமன் இங்கேதானே இருக்கிறார்?" என்று பாலகோபால் கேட்டான்.
"ஆமாம்; இப்போதுதான் வெளியிலிருந்து வந்து மாடிக்குப் போனார்" என்று பதில் வந்தது.
பாலகோபாலும், வத்ஸலையும் மெதுவாக அடிவைத்து மச்சுப் படிகளின் மீது ஏறினார்கள்.
மேலே சற்று விஸ்தாரமான திறந்த மாடி இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ஒரு சின்ன அறை இருந்தது. இவர்கள் மெதுவாக நடந்து சென்று அறையின் கதவண்டை நின்று எட்டிப் பார்த்தார்கள்.
*****
ராஜாராமன் தன்னுடைய கோட்டைக் கழற்றித் தன் சட்டைப் பைகளிலிருந்து ஏதோ சாமான் எடுத்துக் கொண்டிருந்தான். அது என்ன? ஆ! மாஜி திவானுடைய விருந்தில் வைத்திருந்த பிஸ்கோத்து; அதை மேஜை மீது வைத்துவிட்டு மறுபடியும் பையில் கையை விடுகிறான். இன்னொரு பிஸ்கோத்து. இம்மாதிரி ஆறு பிஸ்கோத்துகளை எடுத்து அடுக்கி வைக்கிறான். உஸ்! தனக்குத்தானே ஏதோ பேசிக் கொள்கிறானே!
"ரகு! ரகு! அவளைப் போன்ற ஆயிரம் தேவகன்னிகைகளின் காதலைக் காட்டிலும் உன்னுடைய அன்புதான் எனக்குப் பெரிது!"
இது காதில் விழுந்தபோது, வத்ஸலையின் அழகிய கன்னங்கள் குழிந்தன. "அவள்" என்று அவன் குறிப்பிடுவது யாரை என்பது வத்ஸலைக்குத் தெரியாதா, என்ன?
அதே சமயத்தில், "அண்ணா! அண்ணா!" என்று குதூகலமாய்க் கூவிக்கொண்டு, யாரோ மாடிப்படி ஏறி வரும் சப்தம் கேட்டது.
"ரகு ஓடி வா!" என்றான் அறையிலிருந்தபடியே ராஜாராமன்.
அடுத்த நிமிஷத்தில், குருகுருவென்று கண்களும், சுருட்டை மயிரும், களை சொட்டிய முகமும் படைத்த ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் மாடிக்கு வந்தான். "அண்ணா! பிஸ்கோத்து வாங்கி வந்திருக்கிறாயா?..." என்று கேட்டவன் அறையின் வாசலில் இருவர் நிற்பதைக் கண்டு திகைத்துப் போனான். உள்ளே வந்து, அண்ணாவிடம் மெதுவான குரலில், 'வெளியில் நிற்பவர்கள் யார்?' என்று கேட்டான்.
ராஜாராமன் ஆச்சரியத்துடன் வெளியே வந்து பார்த்தான். பாலகோபாலையும் வத்ஸலையையும் கண்டதும் முதலில் அவனுக்கு கோபம் வந்தது. ஆனால், வத்ஸலையின் புன்னகை பூத்த முகத்தையும், அந்தக் கண்களையும் கண்டதும் கோபம் பறந்தது. அதற்குப் பதில் வெட்கம் பிடுங்கித் தின்னத் தொடங்கியது.
"தங்களுடைய விலாசம் மறந்து போவதற்குள் வீட்டைக் கண்டுபிடித்து வைக்கலாம் என்று வந்தோம்" என்றான் பாலகோபால்.
"இவ்வளவுதானா? திருட்டுக் கண்டுபிடிக்க வந்தீர்களென்றல்லவா பார்த்தேன்?"
வத்ஸலை சொன்னாள்: "ஆமாம்; திருட்டைக் கண்டுபிடிக்கத்தான் வந்தோம். ஆனால் மோதிரத் திருட்டையல்ல. மோதிரம் என்னிடந்தான் இருந்தது. காராபூந்தித் தட்டிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அதை நான் காட்டியதும் அந்தக் கிழங்களின் முகத்தில் அசடு தட்டியதை நீங்கள் பார்க்காமல் வந்து விட்டீர்கள். ஆனால், நாங்கள் வந்தது வேறு திருட்டைக் கண்டுபிடிக்க. மேஜையில் இருந்த பிஸ்கோத்துகளில் ஐந்தாறு பிஸ்கோத்துகளைக் காணோம். ஒருவேளை இங்கே இருக்குமோ என்று வந்தோம். அடடா! இதோ இருக்கே!"
இவ்வாறு சொல்லி, ராஜாராமனுடைய பதிலுக்கு இடங் கொடாமல், வத்ஸலை மேஜையண்டைப் போய் அந்தப் பிஸ்கோத்துகளைக் கையில் எடுத்துக் கொண்டாள். திகைத்துப் போய் நின்ற ரகுவை பலவந்தமாகப் பிடித்திழுத்து அவன் வாயில் பிஸ்கோத்துகளைத் திணிக்கத் தொடங்கினாள்.
அப்போது, பாலகோபால், தனக்குள், "சரி, சரி! இந்த ராஜாராமன் பிஸ்கோத்துகளை மட்டும் திருடவில்லை. ஒரு மகா அதிகப் பிரசங்கியான பெண்ணின் இருதயத்தைக் கூடத் திருடி விட்டான் போலிருக்கிறது?" என்று எண்ணமிடலானான்.
"இவள் எந்த முட்டாளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாளோ?" என்று ராஜாராமன் முன்னொரு நாள் நினைத்தானல்லவா? ஆறு மாதத்திற்கெல்லாம் வத்ஸலைக்குக் கலியாணம் நடக்கத்தான் செய்தது. ஆனால், அவளைக் கலியாணம் செய்து கொண்டவனை முட்டாள் என்பதாக ராஜாராமன் இப்போது ஒப்புக்கொள்வதில்லை.
அவ்வளவு ஆத்ம நிந்தனை செய்து கொள்ள யாருக்குத்தான் மனம் வரும்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
வைர மோதிரம் [காணாமற் போகாதது] - Vaira Mothiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ராஜாராமன், வந்து, பாலகோபால், வந்தது, வத்ஸலை, அண்ணா, வந்தோம், கலியாணம், செய்து, பிஸ்கோத்து, மறந்து, கோபம், என்றான், நான், அவ்வளவு