வைர மோதிரம் [காணாமற் போகாதது]
6
ராஜாராமனுடைய செவிகளில் இதெல்லாம் ஏறவேயில்லை.
'வைரம்', 'வைர மோதிரம்' என்பது மட்டும் காதில் விழுந்தது. அவனுடைய ஞாபகத்தில்
ரகு இன்னும் சற்று நேரத்தில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி விடுவானே
என்பதிலேயே ஈடுபட்டிருந்தது. மாஜி திவானுடைய பிரசங்கமோ முடிகிற வழியாய்க்
காணவில்லை. அவரிடம் தன்னுடைய நிர்ப்பந்தமான நிலையைச் சொல்லி ஏதாவது அவசரமான
உதவி வேண்டுமென்று கேட்க அவன் விரும்பினான். அவரிடம் அவனுடைய நம்பிக்கை
இதற்குள் ரொம்பவும் குறைந்து விட்டது. தன்னில் தானே ஆழ்ந்து போயிருக்கும்
அந்த மனிதருக்குப் பிறருடைய சுக துக்கங்களை உணரும் சக்தி இருக்குமா?
எப்படியிருந்தாலும் இன்றைய தினம் அவரிடம் தனியாகப் பேசுவது சாத்தியமில்லை.
நாளைக் காலையில் வந்து பார்க்க வேண்டியதுதான்.
"எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. போனால் தேவலை" என்று அருகிலிருந்த பாலகோபாலிடம் தெரிவித்தான். அவன், "உங்களை அடிக்கடி பார்க்க விரும்புகிறேன். எங்கே வசிக்கிறீர்கள்?" என்று கேட்டான்.
"திருவல்லிக்கேணி சுந்தரமுதலியார் தெருவில் 48ஆம் நம்பர் வீட்டு மாடி அறையில் இருக்கிறேன். ஆனால் அங்கே எத்தனை நாள் இருப்பேன் என்பது நிச்சயமில்லை" என்றான் ராஜாராம்.
"எங்கள் வீடு எழும்பூரில் இருக்கிறது. நீங்கள் ஒரு நாள் கட்டாயம் வரவேண்டும்" என்று பாலகோபால் சொல்லி, தன் விலாசம் எழுதிய சீட்டை அவன் கையில் கொடுத்தான்.
ராஜாராம் விடைபெற்றுக் கொள்வதற்காக எழுந்து நின்றான்.
அப்போது மாஜி திவான், ஏதோ பேசிக் கொண்டிருந்தவர், பேச்சை நிறுத்தி, "மோதிரம் எங்கே?" என்று கேட்டார்.
எல்லாரும், "எங்கே? எங்கே?" என்றார்கள். சுற்று முற்றும் பார்த்தார்கள். மோதிரத்தைக் காணோம்.
"எனக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது. நான் போய் வரட்டுமா?" என்றான் ராஜாராமன், மாஜி திவானைப் பார்த்து.
அவரும் இவனைப் பார்த்தார். ஆனால் பதில் ஒன்றும் சொல்லவில்லை. மற்றவர்களைப் பார்த்து, மோதிரம் எங்கே?" என்று கேட்டார்.
எல்லாரும் மேஜையைப் பார்த்தார்கள். பக்ஷணத் தட்டுகளைப் பார்த்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். பிறகு, ஆகாயத்தைப் பார்த்தார்கள். எங்கும் மோதிரத்தைக் காணவில்லை.
ராஜாராமன் நின்று கொண்டேயிருந்தான். "நான் வரட்டுமா?" என்று மறுபடியும் கேட்டான்.
அப்போது டிபுடி கமிஷனர் கபாலி, இனிமேல் காரியங்களை நடத்தும் பொறுப்பு தம்முடையது என்பதை உணர்ந்தார். உடனே, எழுந்து நின்று, "நண்பர்களே! ரூ.750க்கு வாங்கிய ஒரு வைர மோதிரத்தை ஐந்து நிமிஷத்துக்கு முன்னால் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது அந்த மோதிரத்தைக் காணோம் என்று நமக்கு விருந்தளித்த பெரிய மனிதர் கூறுகிறார். இது நம்மெல்லாருக்கும் அவமானம் தரக்கூடிய விஷயம். கண்யமுள்ளவர்கள் இத்தகைய சந்தர்ப்பத்தில் செய்யக் கூடியது ஒன்றுதான் இருக்கிறது. நம்மை நாமே சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டியதுதான். முதலில் ஒவ்வொருவரும் சட்டைப் பைகளை உதறுங்கள்!" என்றார்.
"அது தான் சரி" என்றார் மாஜி ஸப் ஜட்ஜ்.
"எனக்கு ஆட்சேபமில்லை" என்றார் வக்கீல். மற்றவர்கலும் சம்மதத்துக்கு அறிகுறியாக முணுமுணுத்தார்கள். கபாலி, ராஜாராமனுடைய முகத்தைப் பார்த்தார். அவன் முகத்தில் ஏற்பட்ட குழப்பத்தைக் கவனித்தார். திருடன் அகப்பட்டுவிட்டான் என்று தீர்மானித்துக் கொண்டார். போலீஸ் இலாகாவில் முப்பது வருஷம் இருந்து தலை நரைத்துப் போன அவருக்கு இந்தத் திருட்டைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிதா?
அந்தச் சமயம் பாலகோபால் புன்னகையுடன், "சட்டையை மட்டும் உதறினால் போதுமா? வேட்டி மடிப்பில் செருகிக் கொண்டிருந்தால்? குடுமியில் வைத்து முடிந்து கொண்டிருந்தால்?..." என்றான்.
கபாலி, "பாலகோபால்! இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் கூடவா விளையாட்டு? துளிக்கூட நன்றாயில்லை. முதலில் சட்டைப் பைகளை உதறுவோம். அதில் அகப்படாவிட்டால், பிறகு எல்லாரும் தனி அறைக்குப் போய்ப் பூரண சோதனை செய்து கொள்வோம். நல்ல வேளையாக, ஸ்திரீகள் இதில் சம்பந்தப்படவில்லை" என்றார்.
"ஏன் அப்படி எங்களை ஒதுக்குகிறீர்கள்? மற்ற எல்லாவற்றிலுந்தான் நாங்கள் மட்டமாயிருக்கிறோம்; திருட்டுப் பட்டம் கட்டிக் கொள்வதில் கூடவா மட்டமாயிருக்க வேண்டும்?" என்று வத்ஸலை கேட்டாள். அவளுடைய குரலில் ஏளனம் அதிகமாயிருந்ததா, கோபம் அதிகமாயிருந்ததா என்று சொல்வதற்கு முடியாமலிருந்தது.
கபாலி, "திருட்டு என்று யார் சொன்னார்கள்? ஞாபக மறதியாய் யாராவது சட்டைப் பையில் போட்டுக் கொண்டிருக்கலாம். அப்படியின்றி, மோதிரம் மாயமாய்ப் போயிருந்தாலும், நம்முடைய பொறுப்பை நான் கழித்துக் கொள்ளலாமல்லவா?" என்று கூறி, தமது கோட்டை அவிழ்த்து உதறினார்.
"எனக்கு ஆட்சேபமில்லை, ஸ்வாமி!" என்று பாலகோபாலும் தன் கோட்டை எடுத்து உதறினான். மற்றவர்களும் அப்படியே செய்தார்கள்.
ராஜாராமன் மட்டும் நின்றபடியே இருந்தான்.
"மிஸ்டர் ராஜாராம்! ஏன் நிற்கிறீர்கள்? அவசரமாய்ப் போக வேண்டுமென்றீர்களே! சட்டையை உதறிவிட்டால், உடனே போகலாமே!" என்றார் கபாலி.
ராஜாராமனுக்கு என்ன நேர்ந்து விட்டது? அவன் ஏன் அப்படித் தேம்புகிறான்? அவனுடைய கண்களில் ஏன் நீர் ததும்புகிறது?
ஒரு நிமிஷம் அவ்வாறு நின்றுவிட்டுக் கோபமும் துக்கமும் பொங்கிய குரலில், "நான் மாட்டேன்; என் சட்டையைக் கழற்ற மாட்டேன். எனக்குத் தெரியும் உங்கள் சமாசாரம்; என்னை அவமானப்படுத்துவதற்காகவே இப்படிச் செய்திருக்கிறீர்கள். அது வைர மோதிரமேயல்ல; அது கெட்டுப் போகவுமில்லை; சுத்தப் பொய். நீங்கள் எல்லாரும் பெரிய மனிதர்கள். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் ஏழை!..." என்று அலறினான்.
கபாலி, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, சாவதானமாக, "தம்பி! பதறாதே!..." என்று ஆரம்பித்தார்.
அதற்குள், ராஜாராமன், "ஆமாம்; பதறாதே! உங்களுக்கென்ன உபதேசம் செய்வதற்கு? முடியாது. நான் இந்த அவமானத்துக்கு உட்படமாட்டேன். சட்டையை உதறமாட்டேன். இதோ நான் போகிறேன். உங்களால் ஆனதைச் செய்து கொள்ளுங்கள்" என்று விம்மிய குரலில் சொல்லிவிட்டு, விரைவாக நடந்து வெளியே சென்றான்.
ராவ்சாகிப் கபாலி, கடகடவென்று சிரித்தார். ஆனால் மற்றவர்கள் யாருக்கும் சிரிப்பு வரவில்லை. ராஜாராமனுடைய ஆத்திரமான பேச்சும், அவனுடைய குரலில் தொனித்த துக்கமும் அவர்களையெல்லாம் பிரமை பிடித்தவர்கள் போல் ஆக்கிவிட்டன. கிணறு வெட்டப் போய்ப் பூதத்தைக் கண்டவனுடைய நிலையை அவர்கள் அடைந்திருந்தார்கள்.
கபாலி மட்டுந்தான் தம்முடைய நிதானத்தை இழக்கவில்லை. வெளியில் கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆளை அவர் சமிக்ஞை செய்து கூப்பிட்டார். அருகில் வந்ததும் அவன் காதில் ஏதோ சொன்னார்.
அப்போது வத்ஸலை தான் இருந்த இடத்தில் எழுந்து நின்று, "மாமா! நீங்கள் என்ன சொல்கிறீர்களென்று எனக்குத் தெரியும். மிஸ்டர் ராஜாராமைப் பின் தொடர்ந்து போகச் சொல்கிறீர்கள். ஆனால், அது தேவையில்லை..." என்றாள்.
எல்லாரும் அவள் முகத்தை வியப்புடன் நோக்கிக் கொண்டிருக்கையிலேயே, "இதோ அந்த வைர மோதிரம், பத்திரமாயிருக்கிறது!" என்று எடுத்துக் காட்டினாள். "பரிசாரகன் உங்கள் மேஜையிலிருந்த காராபூந்தித் தட்டை இங்கே எடுத்து வைத்தான். காராபூந்திக் குவியலுக்குள் இது இருந்தது. உங்களில் ஒருவர் பேச்சு ஸ்வாரஸ்யத்தில் ஞாபக மறதியாய்த் தட்டில் போட்டிருப்பீர்கள்..."
"அடடா! அந்தப் பையனைப் போய்ச் சந்தேகித்தோமே? என்ன அநியாயம்! நீ ஏன் முன்னமே சொல்லியிருக்கப்படாது?" என்று மாஜி திவான் கேட்டார்.
"ஏனா? உங்களுடைய புத்திசாலித்தனம் எவ்வளவு தூரம் போகிறதென்று பார்க்கத்தான்!" என்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வைர மோதிரம் [காணாமற் போகாதது] - Vaira Mothiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கபாலி, நான், அவன், என்றார், எல்லாரும், பார்த்தார்கள், எங்கே, மாஜி, மோதிரம், அவனுடைய, நின்று, என்ன, இருக்கிறது, ராஜாராமன், குரலில், சட்டைப், சட்டையை, செய்து, ஒருவர், அப்போது, என்றான், அந்த, அவரிடம், மட்டும், ராஜாராம், நீங்கள், கேட்டார், ராஜாராமனுடைய, எழுந்து, பாலகோபால், மோதிரத்தைக்