வைர மோதிரம் [காணாமற் போகாதது]
2
"ஹலோ! ராஜாராம்!" என்ற குரல் கேட்டுத்
திரும்பிப் பார்த்தான். ஒரு பெரிய மோட்டார் வண்டி அவன் பின்னால் நின்றது.
அதில் ஒரு பெரிய மனிதர் உட்கார்ந்திருந்தார்.
"நமஸ்காரம்" என்றான் ராஜாராமன்.
"ஏதாவது வேலையாய்ப் போகிறாயா?" என்று அப்பெரிய மனிதர் கேட்டார்.
"வேலையா? வேலையிருந்தால் தான் எவ்வளவோ தேவலையே?"
"அப்படியென்றால் என்னுடன் வா! உட்கார்!"
ராஜாராமன் வண்டியில் ஏறி அவர் அருகில் உட்கார்ந்தான். வண்டி கிளம்பியது.
அந்தப் பெரிய மனிதர் ஒரு மாஜி திவான். ஒரு தடவை, ராஜாராமன் கலாசாலைத் தமிழ்ச் சங்கத்தின் காரியதரிசியாயிருந்தபோது, அவரை ஓர் உபந்நியாசத்துக்காக அழைத்திருந்தான். அச்சமயம் அந்த மாஜி திவானின் சில முக்கிய குணாதிசயங்களைப் பற்றி அவன் வெகுவாகப் புகழ்ந்து பேசினான். அவரிடம் அந்தக் குணங்கள் உண்டென்பதை அதற்கு முன் யாரும் கண்டு பிடிக்கவில்லை. உண்மையில், அவருக்கே கூட அது புதுமையாய்த்தான் இருந்தது. இன்னும் புகுந்து பார்த்தோமானால், அந்தப் புகழுரை ராஜாராமனுடைய சொந்த சரக்குமன்று. ஓர் ஆங்கில நூலாசிரியர் "கனவான் யார்?" என்ற தலைப்புடன் எழுதியிருந்த கட்டுரையை அதற்கு முதல் நாள் அவன் படித்திருந்தான். அதில் குறிப்பிட்டிருந்த குணாதிசயங்களையெல்லாம் மாஜி திவான்மேல் அவன் ஏற்றிப் பேசினான்.
அது எப்படியானாலும், அன்றைய தினம் மாஜி திவான், ஜாம்பவந்தனால் புகழப்பட்ட அனுமாருடைய நிலையை அடைந்தார். அவருடைய இருதயம் குதூகலத்தினால் விரிந்தது. மேலும் ராஜாராமனிடம் அவருக்கு ஓர் அபிமானம் விழுந்து விட்டது.
இப்போது ராஜாராமன் தம் பக்கத்தில் உட்கார்ந்ததும் அவன் முதுகில் ஒரு பெரிய 'ஷொட்டு'க் கொடுத்துவிட்டு, "என்ன செய்து கொண்டிருக்கிறாய் இப்போது?" என்று கேட்டார். தன் கஷ்டங்களுக்கு ஒரு வேளை முடிவு வந்துவிட்டதோவென்று ராஜாராமனுக்குத் தோன்றியது. பி.ஏ. (ஆனர்ஸ்) பாஸ் செய்து விட்டு மூன்று மாதமாய் வேலைக்கு அலைந்து கொண்டிருப்பதைப் பற்றிச் சாங்கோபாங்கமாய் எடுத்துச் சொன்னான்.
அதைக் கேட்டதும் மாஜி திவான் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்: "நமது தற்கால நாகரிகம் அவ்வளவு இலட்சணத்தில் இருக்கிறது. வேலையில்லாதவர்கள் 'வேலை, வேலை' என்று அலைகிறார்கள். வேலை இருப்பவர்களோ எப்படி வேலை செய்யாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறார்கள். நம் பெரியோர்கள் எவ்வளவு நல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று இப்போது தெரிகிறதா? வர்ணாசிரமத்தை இகழ்கிறீர்களே. பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பிரித்து, அந்தந்தச் சாதிக்கு அந்தந்த வேலையென்று ஏற்படுத்தினார்களே அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள்!... தற்கால நாகரிகத்தைப் போய் நீங்கள் ஒசத்தியாய்ச் சொல்கிறீர்கள்!..."
"நான் சொல்லவில்லையே..." என்று ஆரம்பித்தான் ராஜாராமன்.
"நீ என்றால் நீயா? நீ சொல்லாவிட்டால், உன்னைப் போன்றவர்கள் சொல்கிறார்கள். என் பிள்ளையாண்டான் ஆக்ஸ்போர்டில் படிக்கிறான். அவன் என்ன எழுதுகிறான் தெரியுமா? ஜவாஹர்லால் நேருவின் சரித்திரத்தைப் படித்தானாம். அவர் சொல்கிறதுதான் சரியாயிருக்காம். இந்தியாவுக்கு 'ஸோஷலிஸ'ந்தான் வேண்டுமாம். சுத்த முட்டாள்கள்! இவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? இந்தியாவுக்கு வேண்டியது என்னவென்பதை எத்தனையோ ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் நம் ரிஷிகள் எழுதி வைத்துவிட்டார்கள். தைத்திரீய உபநிஷத் என்ன சொல்கிறது. 'அன்னாத் பிராணா: பிராணபான:..."
உபநிஷத் பிரசங்கம் முடிவதற்குள் வண்டி லாயிட்ஸ் ரோட்டிலிருந்த ஒரு பெரிய பங்களாவின் கேட்டில் புகுந்து நின்றது. அப்போது ராஜாராமன் அவனைப் புளகாங்கிதமாகச் செய்த ஒரு காட்சியைக் கண்டான்; தன்னையும், தன் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், மாஜி திவானிடம் உத்தியோகம் கேட்க வேண்டுமென்ற நினைவையும் மறந்தான். வண்டியிலிருந்து இறங்குவதற்குக் கூட மறந்து போனான். அப்படி அவனை மெய் மறக்கச் செய்தவை. ஒரு பெண்மணியின் முகத்திலிருந்த இரண்டு கண்கள் தான்.
'கரியவாகிப் புடைபரந்து
மிளிர்ந்து
செவ்வரியோடி நீண்டவப்
பெரியவாய கண்களென்னைப்
பேதைமை செய்தனவே!'
என்று ஆழ்வார் பகவானைப் பற்றிப் பாடியவாறு போல, தன்னைப் பேதைமை செய்த
அந்தக் கண்களையும் அவற்றைப் படைத்த பெண்ணையும் இனித் தன் வாழ்நாளில்
பார்க்கப் போகிறோமென்ற எண்ணமே அவனுக்கிருக்கவில்லை. அப்படியிருக்க, இங்கே,
சற்றும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் அவளைப் பார்த்ததும்
அவன் மெய்மறந்ததில் வியப்பென்ன?செவ்வரியோடி நீண்டவப்
பெரியவாய கண்களென்னைப்
பேதைமை செய்தனவே!'
"இறங்கு! ஒரு சின்ன டீ பார்ட்டி கொடுக்கப் போகிறேன். நீயும் இருந்துவிட்டுப் போகலாம். பாதகமில்லை, இறங்கு! வருகிறவர்கள் எல்லாரும் ரொம்ப வேண்டுமென்கிறவர்கள் தான்" என்று மாஜி திவான் வற்புறுத்திச் சொன்ன பிறகு, ராஜாராமன் கொஞ்சம் சுய ஞாபகம் வந்து வண்டியிலிருந்து இறங்கினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வைர மோதிரம் [காணாமற் போகாதது] - Vaira Mothiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ராஜாராமன், மாஜி, அவன், பெரிய, திவான், என்ன, வேலை, இப்போது, தான், வண்டி, மனிதர்