வைர மோதிரம் [காணாமற் போகாதது]
4
நமது மாஜி திவானுடைய வாழ்க்கையில் பழைய
நாகரிகமும் புது நாகரிகமும் அழகாகக் கலந்திருந்தன.
இந்தச் சிற்றுண்டி விருந்துக்கு மேஜைகள், விரிப்புகள், கிண்ணங்கள், கோப்பைகள் சகிதமாக மேனாட்டு முறையில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் புருஷர்களுக்குத் தனி மேஜையும் ஸ்திரீகளுக்குத் தனி மேஜையும் போடப்பட்டிருந்தன.
விருந்துக்கு வந்திருந்தவர்களுடைய பிரபாவங்களை இப்போது கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யர் ஒரு வக்கீல், அவருடைய காலத்திலே அநேகம் கட்சிக்காரர்களைத் தலை மொட்டையடித்தவர். இப்போது அவருடைய முக்கியமான வேலை என்னவென்றால், உலகத்திலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவதுதான். அவரவர்களுக்கு எந்தெந்த விஷயத்தில் பிரமை உண்டென்று அவர் தெரிந்து கொண்டு அதைப் பற்றி எழுதுவார். மகாத்மாவுக்கு ஹரிஜன சேவையைப் பற்றியும், கிராம நிர்மாணத்தைப் பற்றியும் அவர் அநேக கடிதங்கள் எழுதியிருக்கிறார். மகாத்மாவிடமிருந்து அவருக்கு ஒரு தடவை பதில் வந்தது. "தங்களுடைய கடிதங்கள் மிகவும் ருசிகரமான விஷயங்களை உட்கொண்டவை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதை நான் நம்புகிறேன். ஆனால், நான் புலன்களை அடக்கும் விரதம் கொண்டிருக்கிறேனாதலால் அவற்றை அனுபவிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை" என்று மகாத்மா எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை நமது வக்கீல் கண்ணாடி போட்டு மாட்டியிருக்கிறார். அதே மாதிரி, பெர்னாட்ஷாவிடமிருந்து, "தங்கள் கடிதத்தைப் படித்தேன்; இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்" என்று வந்த கடிதத்தையும், ரொமேன் ரோலண்டிடமிருந்து, "தங்கள் முப்பது பக்கங்கொண்ட கடிதம் கிடைத்தது; தங்கள் பாஷை எனக்குப் புரியாததற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்" என்று வந்த கடிதத்தையும் கண்ணாடி போட்டுச் சுவரில் மாட்டியிருக்கிறார்.
அவர் அப்படிக் கண்ணாடி போட்டு மாட்டியிருக்கும் கடிதங்களில் நடுநாயகமாக விளங்குவது சென்னை மாஜி கவர்னர் ஒருவருடைய கடிதந்தான். சீமைக்குப் போய் விட்ட அந்த மாஜி கவர்னருக்கு ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யர் எத்தனையோ கடிதங்கள் எழுதினார்; ஒன்றுக்கும் பதில் வரவில்லை. கடைசியாக, கடவுள் அருளால் அவருடைய மனோரதம் நிறைவேறும் காலம் வந்தது. ஐயருடைய அருமை மனைவி காலஞ்சென்றாள். அவள் கைலாசப் பிராப்தி அடைந்த வரலாற்றை மிகவும் உருக்கமாக ஒரு கடிதத்தில் எழுதி, "தங்களிடமிருந்து ஓர் ஆறுதல் மொழி வந்தால் தான் உயிர் தரிப்பேன்" என்று முடித்திருந்தார். இம்மாதிரி விஷயங்களில் வெள்ளைக்காரர்கள் சம்பிரதாயத்தைக் கண்டிப்பாக அநுசரிப்பவர்கள். உடனே மாஜி கவர்னரிடமிருந்து பதில் வந்தது. "தங்கள் மனைவி தங்களைவிட்டுச் சென்று கைலாசத்தை அடைந்த விஷயம் தெரிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். அவளுக்கு நல்ல புத்தி ஏற்பட்டுத் திரும்பி வந்தால், மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று அந்தக் கடிதம் சொல்லிற்று. அதன் பொருள் என்னவென்று ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யருக்கு இன்றுவரை நன்கு விளங்கவில்லையென்றாலும், கடிதம் என்னவோ கண்ணாடி போடப்பட்டு தொங்குகிறது.
விருந்தினரில் இன்னொருவர் ஒரு பத்திரிகாசிரியர், அவருடைய பெயர் ராவ் பகதூர் அச்சுதராயர், முப்பத்திரண்டு வருஷமாக நடந்து வரும் அவருடைய பத்திரிகையின் பெயர் 'குடும்பநேசன்'. அவருடைய குடும்பத்துக்கு அந்தப் பத்திரிகை நேசனாயிருப்பதில் சந்தேகமேயில்லை. அந்தப் பத்திரிகையை யார் படிக்கிறார்கள் என்பது மட்டும் ஒரு பரம ரகசியம்; மொத்தத்தில் அந்தப் பத்திரிகையில் எத்தனை விளம்பரங்கள் வருகின்றனவோ, அவ்வளவு பிரதிகளும் அதற்குமேல் பத்துப் பிரதிகளும் அச்சிடப்படுவதாக வதந்தி. ஒரு தடவை, 'குடும்பநேச'னில் விளம்பரம் கொடுப்பது பற்றி நகர சபையில் விவாதம் வந்த போது, 'குடும்பநேச'னில் விளம்பரம் செய்வதை விட நாமே தலைக்கு ஒரு பிரதி கையால் எழுதி விநியோகம் செய்துவிட்டு, விளம்பரப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளலாமே!" என்று ஓர் அங்கத்தினர் யோசனை சொன்னாராம். ஆனாலும் மேற்படி பத்திரிகையும் ஒரு முக்கியமான பொதுஜன சேவை செய்துதான் வருகிறது. மற்றப் பத்திரிகைகளில் வராத நமது மாஜி திவான் போன்றவர்களின் உருவப் படங்களும், அவர்களுடைய உயர் குணாதிசயங்களும் 'குடும்பநேச'னில் அடிக்கடி வெளியாவதுண்டு.
இன்னொருவர் ஒரு பெரிய ரயில்வே உத்தியோகஸ்தர். மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவர். அந்த அந்தஸ்த்துக்குத் தகுந்தபடி தலையில் வழுக்கை விழுந்தவர். அவருக்குச் சங்கீதத்தில் ரொம்ப பிரமை. மாதம் ரூ.100 ஒரு வித்வானுக்குக் கொடுத்து அவரிடம் மூன்று வருஷம் சங்கீதம் கற்றுக் கொண்டார். முடிவில் அந்த வித்வான், "உமது மூளையில் சங்கீதம் ஏறாது" என்று ஸர்ட்டிபிகேட் கொடுக்கவே, இவர் கோபங்கொண்டு "சங்கீத வித்தையையே சீர்திருத்துகிறேன்" என்று ஆரம்பித்துவிட்டார்! அவர் இதுவரையில் புதிதாக ஒன்பதரை ராகங்களும், பதிமூன்றேகால் தாளங்களும், 356 ஸ்வரங்களும் கண்டுபிடித்திருக்கிறார். இவற்றைக் கேட்டு ஆனந்திப்பவர்களில் நம் மாஜி திவான் ஒருவராதலால், அவரிடம் ஸ்ரீமான் சி.ஆர்.சந்தர் அவர்களுக்கு அதிக மதிப்புண்டு.
அடுத்தவர் ஒரு மாஜி ஸப் ஜட்ஜ். அவர், "இந்தியாவுக்கு வேண்டியதென்ன?" என்னும் பெயர் கொண்ட பிரசித்தி பெற்ற புத்தகத்தின் ஆசிரியர். அந் நூலில், கிராப்புத் தலை மோகத்தைக் கண்டித்துக் குடுமியின் அவசியத்தை வலியுறுத்தும் அத்தியாயம் மட்டும் 28 பக்கங்கள் அடங்கியது. இந்த அருமையான புத்தகத்தை அவர் இங்கிலாந்தின் பார்லிமெண்ட் சபை அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் அனுப்பி, புத்தகம் பெற்றுக் கொண்டதற்கு அவர்களுடைய அத்தாட்சிக் கையெழுத்துக்களை வாங்கி வைத்திருக்கிறார். இந்த அரிய பெரிய நூலுக்கு முன்னுரை தந்திருக்கிறவர் நம் மாஜி திவான் தான் என்றால், இவர்களுடைய பரஸ்பர நன்மதிப்பைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.
ஐந்தாவது பிரமுகர் அந்த டிவிஷனின் கார்ப்பரேஷன் கௌன்ஸிலர் என்பதை அவரிடமிருந்து கிளம்பிய கார்ப்பரேஷன் வாசனையே பிரசித்தப்படுத்திக் கொண்டிருந்தது. ஆகையால் நாம் அவரைப்பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.
இந்த ஐந்து பிரமுகர்களோடு மாஜி திவான், ராவ் சாகிப் கபாலி, பாலகோபால், ராஜாராம் இவர்கள் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேர் புருஷர்களுடைய மேஜையை அலங்கரித்தார்கள். ஸ்திரீகளுடைய மேஜையில் இருந்தவர்களைப் பற்றி நாம் ஏதாவது சொன்னால், மாஜி திவான் கட்டாயம் ஆட்சேபிப்பாராதலால், மேலே கதையைத் தொடர்வோம்.
*****
சிற்றுண்டி விருந்து நடந்து கொண்டிருந்தது.
அதே சமயத்தில் மாஜி திவான் விருந்தினரின் செவிக்கும் விருந்து அளித்துக்
கொண்டிருந்தார்."சோஷலிஸமாம்! இந்த ஜவஹர்லால் நேற்று பையன். இவன் பிறப்பதற்கு மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னால், மனு எழுதிவிட்டுப் போயிருக்கிறார். மனு எங்கே, இந்தக் காரல் மார்க்ஸ் எங்கே? தற்கால நாகரிகம் நமது பிள்ளையாண்டான்களுடைய கண்களை மறைத்து வருகிறது..."
இடையிடையே பாலகோபால் அவருடைய வாயைக் கிளறி விட்டுக்கொண்டிருந்தான். "தற்கால நாகரிகம் தற்கால நாகரிகம் என்று மண்ணை வாரி இறைக்கிறீர்களே! தற்கால நாகரீகத்தில் எந்த அம்சத்தை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்கள்? இங்கிலீஷ் படிப்பதில், உத்தியோகம் பார்ப்பதில், பென்ஷன் வாங்குவதில், பட்டம் பெறுவதில், பிள்ளையைச் சீமைப் படிப்புக்கு அனுப்புவதில், மோட்டார் வைத்துக் கொள்வதில் - இது ஒன்றிலும் உங்களுக்கு ஆட்சேபமில்லை; பின் எதைக் குறித்துத்தான் வாயைச் செலவழிக்கிறீர்கள்?"
"கேட்டீர்களல்லவா?..." என்று மாஜி ஸப் ஜட்ஜ் ஆரம்பித்தார்.
மாஜி திவான் அவரைப் பேச விடுவாரா? "நீங்கள் இருங்கள். அவனுக்கு நானே சொல்கிறேன் பதில். பாலகோபால்! நீ கேட்டது சரியான கேள்வி. அந்தக் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. அந்தக் கேள்விக்கு அடிப்படையான மனப்பான்மை இருக்கிறதே, அதைத்தான் ஆட்சேபிக்கிறேன். உங்களுக்கெல்லாம் நமது புராதன நாகரிகத்தில் நம்பிக்கை போய்விட்டது. அதனால் தான் இந்தக் காலத்துப் பிள்ளைகள் இப்படிப் பேசுகிறீர்கள். ஒருவனுடைய வெளிநடத்தை எப்படியிருந்தாலும், மனப்பான்மை சரியாயிருந்தால் அவனுக்குக் கதி உண்டு. உங்களுக்கு நமது புராதன நாகரிகத்தில் பக்தி சிரத்தை கிடையாது. ஜவஹர்லால் நேருவினிடம் உள்ள தப்பு இது தான்..."
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வைர மோதிரம் [காணாமற் போகாதது] - Vaira Mothiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மாஜி, அவருடைய, திவான், தான், அவர், நமது, மிகவும், கண்ணாடி, அந்த, தங்கள், பதில், அந்தக், பற்றி, ஸ்ரீமான், தற்கால, கடிதம், குடும்பநேச, நாகரிகம், னில், பாலகோபால், அந்தப், வந்தது, கங்கோத்ரி, தெரிந்து, பெரிய, கடிதங்கள், வந்த, பெயர்