வைர மோதிரம் [காணாமற் போகாதது]
1
ராஜாராமன், பி.ஏ. (ஆனர்ஸ்) கடற்கரைச்
சாலை ஓரமாய் நடந்து கொண்டிருந்தான். மாலை சுமார் நாலு மணியிருக்கும்.
ஹைக்கோர்ட்டிலிருந்து திரும்பும் மயிலாப்பூர் வக்கீல்களின் வண்டிகள்
ஒன்றன்பின் ஒன்றாய்ச் சரசரவென்று போய்க் கொண்டிருந்தன. அந்த வண்டியில்
அமர்ந்திருந்த கனதனவான்களுக்கு மட்டும், அப்போது ராஜாராமனுடைய மன நிலைமை
தெரிந்திருந்தால், அப்படி அலட்சியமாய் போயிருப்பார்களா? அன்றிரவு அவர்களால்
கவலையின்றித் தூங்கியிருக்க முடியுமா?
சுருங்கச் சொன்னால், அப்போது ராஜாராமனுடைய உள்ளம் ஒரு லட்சம் செங்கல்லை வேகவைக்கக்கூடிய காளவாயைப் போல் எரிந்து கொண்டிருந்தது. அந்தத் தீயினால் அவன் அந்தக் கடற்கரைச் சாலையிலிருந்த கட்டிடங்களையெல்லாம் சுட்டெரித்துவிட விரும்பினான். முக்கியமாக, அந்த ஸெனட் மண்டபம், பிரஸிடென்சி கலாசாலை, புதிதாய்க் கட்டியிருக்கும் பரீட்சை மண்டபம் இவை அவன் கண்களை உறுத்தின. எதற்காக இந்தக் கட்டிடங்கள்? எதற்காக இவற்றில் ஒருவன் படிப்பதும் பரீட்சை தேறுவதும்? பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில் முதல் தரத்தில் தேறிய தன்னுடைய கதி இப்போது எவ்விதம் இருக்கிறது?
'பட்டினியினால் இறந்தான்' என்று கதைகளிலாவது, பத்திரிகைச் செய்திகளிலாவது படித்தபோதெல்லாம் ராஜாராமன் ஆச்சரியப்படுவான். 'யாராவது பட்டினியினால் சாவார்களா? என்னதான் தரித்திரமானாலும், வயிற்றுக்குச் சோறு கிடைக்காமலா போய்விடும்? சுத்தப் பொய்யும் புளுகும்' என்று நினைப்பான்.
இப்போது அவனுக்கே அந்த கதி நேர இருந்தது. இராத்திரி சாப்பாட்டுக்கு வழியில்லை! தனக்கு மட்டுமல்ல; தன் தம்பி ரகுவுக்கும் அதே கதிதான்.
ஆம்; தான் மட்டுமாயிருந்தால் கூடப் பாதகமில்லை. சமுத்திரத்தில் விழுந்து உயிரை விட்டாலும் விடலாம்; அல்லது போலீஸ்காரன் மேல் கல்லை விட்டெறிந்து சிறைக்குப் போகலாம். ஆனால் ரகுவை என்ன செய்வது? தனக்கு ஏதாவது நேர்ந்தால் அந்தக் குழந்தையினுடைய கதி என்னவாகும்?
ரகு சாயங்காலம் வழக்கம்போல விளையாடிவிட்டு ஆறரை மணிக்குத் திரும்பி வருவான். வரும்போதே, "அண்ணா! பிஸ்கோத்து வாங்கி வந்திருக்கிறாயா?" என்று கேட்டுக் கொண்டு வருவான். அறையிலே தன்னைக் காணாவிடில் அவன் என்ன செய்வான்? தவித்துப் போக மாட்டானா?... சரிதான்; ஆனால் தான் அறையில் உயிரோடு இருந்துதான் என்ன பிரயோஜனம்? குழந்தைக்குப் பிஸ்கோத்து வாங்கிக் கொண்டு போகக் கையில் காசு எங்கே இருக்கிறது?
இரண்டு வருஷத்திற்கு முன்னால் ராஜாராமனுடைய தாயார் - கிராமத்திலிருந்தவள் - திடீரென்று இறந்து போனதாகத் தந்தி வந்து அவன் உடனே புறப்பட்டுச் சென்றான். அதற்கு முன்னாலேயே அந்த அம்மாள் விற்கக் கூடிய நகை, நட்டு எல்லாவற்றையும் விற்றுவிட்டிருந்தாள். அவ்வளவையும் ராஜாராமனுடைய படிப்பும், பட்டணவாசமும் விழுங்கி விட்டன. தாயாருடைய மரணத்தினால் அந்த வருஷம் அவனுடைய படிப்பு தடைபட்டது. சில மாதம் ஊரில் இருந்து, பாக்கி இருந்த வீட்டையும் நிலத்தையும் மிகவும் பிரயாசையின் பேரில் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, ரகுவையும் அழைத்துக் கொண்டு சென்னைப் பட்டணம் வந்து சேர்ந்தான்.
அந்த வருஷம் நன்றாய்ப் பரீட்சையிலும் தேறினான். அதற்குள் கையில் கொண்டு வந்திருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. சாமான்களை ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தான். கடைசியாக மிஞ்சியிருந்த கைக்கடிகாரத்தையும் விற்றாய்விட்டது.
இந்த மூன்று மாதமாக அவன் உத்தியோகந் தேடி அலையாத இடம் சென்னையில் கிடையாது; அவன் ஏறி இறங்காத ஆபீஸ் கிடையாது.
அன்று மாலை கடற்கரைச் சாலை ஓரத்தில் அவன் ஏன் அவ்வளவு உள்ளக் கொதிப்புடன் நடந்து கொண்டிருந்தான் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?
தேடல் தொடர்பான தகவல்கள்:
வைர மோதிரம் [காணாமற் போகாதது] - Vaira Mothiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், அந்த, கொண்டு, ராஜாராமனுடைய, கடற்கரைச், என்ன