வைர மோதிரம் [காணாமற் போகாதது]
5
மாஜி திவானுடைய பேச்சில் ஒவ்வொரு வார்த்தைதான்
ராஜாராமன் காதில் விழுந்தது. காரணம் வாசகர்களே யூகித்துக் கொள்ளலாம்.
அவனுடைய கவனமெல்லாம் ஸ்திரீகள் மேஜையிலிலேயே இருந்தது. அவர்களில் அதிகமாகப்
பேசிய குரல் வத்ஸலையினுடையதுதான் என்பதை அவன் அறிந்தான். இந்த மாஜி திவானுடைய
வாய் சற்று ஓயாதா என்று அவனுக்குத் தோன்றிற்று.
இரண்டொரு சமயம் மிகவும் தயக்கத்துடன் அவன் ஸ்திரீகள் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் அவளுடைய பரந்த கண்களின் கருவிழிகளும் சுழன்று தன்னை நோக்குவதைக் கண்டபோது அவனுக்கு இந்த உலக ஞாபகமே இல்லாமல் போயிற்று.
'நிலவு செய்யு முகமும்
- காண்பார்
நினைவு அழிக்கும் விழியும்
கலகலென்ற மொழியும் - தெய்வக்
களிதுலங்கு நகையும்'
என்று கவி பாடியபோது, இத்தகைய ஒரு பெண்ணை நினைத்துதான் பாடியிருக்க வேண்டும்.நினைவு அழிக்கும் விழியும்
கலகலென்ற மொழியும் - தெய்வக்
களிதுலங்கு நகையும்'
இப்படி அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில், அவன் தேனினும் இனியதென்று நினைத்த அந்தக் குரலிலே பின்வரும் சொற்கள் அமுதமும் நஞ்சும் தோய்ந்தனவாய் வெளிவந்தன:
"ஆமாம்! மனப்பான்மைதான் சரியாயிருக்க வேண்டும்! காரியம் என்ன பிரமாதம்? இந்த சென்னைப் பட்டணத்தில் இன்றைய தினம் இரவு உணவுக்கு என்ன செய்வோம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குடிப்பதற்குப் பாலில்லாமல் ஒட்டி உலரும் குழந்தைகள் எத்தனையோ இருக்கின்றன. நாமோ இங்கே ஒவ்வொன்று இரண்டு அணா விலையுள்ள சீமை பிஸ்கோத்துகளில் தலைக்கு நாலைந்து தின்கிறோம். அதனாலென்ன மோசம்? நம்முடைய மனப்பான்மை சரியாயிருக்கிறதல்லவா?"
மாஜி திவான் சொன்னதற்குப் பதிலாக வத்ஸலை மேற்கண்டவாறு கூறினாள். அதற்குள் திவான், "நீ கூட உன் அண்ணனுடன் சேர்ந்து விட்டாயா? ரொம்ப பேஷ்! தேசம் உருப்பட்டால் போலத்தான்" என்று கூறி, மேலே ஏதோ பேசிக் கொண்டு போனார்.
ஆனால், வத்ஸலையின் வார்த்தைகள் ராஜாராமனுடைய மனத்தில் வேறோர் எதிர்பாராத பலனை உண்டாக்கின. 'இராத்திரிச் சாப்பாடு...குழந்தை...பிஸ்கோத்து...' இவ்வார்த்தைகள் செவியில் விழுந்ததும் ராஜாராமன் கனவு உலகத்திலிருந்து விழித்துக் கொண்டான். ரகுவின் நினைவு வந்தது. 'அந்தோ! குழந்தை ராத்திரி என்ன செய்வான்? இங்கே நாம் வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுளே! ஸ்திரீ சௌந்தர்யத்தின் சக்திதான் என்ன? தன்னைத் தவிர வேறு கதியில்லாத அருமைத் தம்பியைக் கூடச் சற்று நேரம் மறக்கச் செய்துவிட்டதே! - ராஜாராமனுடைய உள்ளம் வெட்கத்திலும் வேதனையிலும் ஆழ்ந்தது. "ரகு! நீ வழக்கம்போல் ஆறரை மணிக்கு 'அண்ணா!' என்று கூப்பிட்டுக் கொண்டு வருவாயே? உனக்கு என்ன கொடுப்பேன்? இராத்திரி நீ பட்டினி கிடக்கவா வேண்டும்?" என்று அவனுடைய இருதயம் அலறிற்று. கண்களில் துளித்த கண்ணீர்த் துளிகளை வெகு சிரமப்பட்டுப் பிறருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டான்.
*****
மாஜி திவான், மேலே பிரசங்கம் செய்து கொண்டு போனார்: "ஏற்கனவே உலகில் தர்மக் குழப்பம் அதிகமாயிருக்கிறது. எது சத்தியம், எது மித்தை என்பதை அறிய முடியாமல் ஜனங்கள் திண்டாடுகிறார்கள். ஸ்திரீகள் வேறு பொது விவகாரங்களில் புகுந்துவிட்டால் கேட்க வேண்டியதில்லை. உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? உண்மை வைரம் ஒன்றையும், இமிடேஷன் வைரம் ஒன்றையும் கொடுத்தால், எது வைரம், எது இமிடேஷன் என்று கண்டு பிடிக்க முடியுமா? இதோ, பாருங்கள்; இந்த மோதிரத்தை இன்று வாங்கினேன். இதை நிஜ வைரமல்லவென்று யாராவது சொல்ல முடியுமா?" என்று கூறிப் பக்கத்திலிருந்த மாஜி ஸப் ஜட்ஜினிடம் மோதிரத்தைக் கொடுத்தார். அதில் பதித்திருந்த ஒரு பெரிய வைரமும் இரண்டு சிறு வைரங்களும் பளபளவென்று கண்களைப் பறித்தன. மாஜி ஸப்-ஜட்ஜ் அதைப் பார்த்துவிட்டு, "ஆமாம்; அசல் வைரம் மாதிரிதான் இருக்கிறது. இருந்தாலும் கவனித்துப் பார்த்தால் தெரிந்துவிடும்" என்றார். பிறகு, அதை அடுத்தாற் போலிருந்த ராவ்சாகிப் கபாலியிடம் கொடுத்தார். அவர் அதைப் பார்த்துவிட்டு, "ரொம்ப நன்றாயிருக்கிறது. இது நிஜ வைரமென்று யாராவது நம்புவார்களா, என்ன? பைத்தியந்தான்" என்றார். மோதிரம் கைமாறிப் போய்க்கொண்டேயிருந்தது. அடுத்தபடி, வக்கீலும் அந்த மாதிரியே அபிப்பிராயப்பட்டார். பத்திரிகாசிரியர், "எனக்கு வைரங்களில் அவ்வளவு அநுபவம் இல்லை. இருந்தாலும் இதைப் பார்த்தால் சந்தேகம் ஏற்படாமலிராது" என்றார்.
மாஜி திவான், "ஹஹ்ஹஹ்ஹா!" என்று சிரித்தார். "பார்த்தீர்களா? கேவலம் ஒரு வைரத்தை நிஜம், பொய் என்று கண்டுபிடிக்க முடியாதவர்கள், சத்தியத்தின் ஸ்வரூபத்தை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறோம்? அது நிஜ வைரந்தான். ரூபாய் 750க்கு இப்போதுதான் வாங்கினேன் - லவனபுரம் ஜமீன்தாருக்காக" என்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வைர மோதிரம் [காணாமற் போகாதது] - Vaira Mothiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மாஜி, என்ன, வைரம், என்றார், அவன், திவான், வேண்டும், ஸ்திரீகள், கொண்டு