தியாக பூமி - 3.13. மீனாக்ஷி ஆஸ்பத்திரி
சாவித்திரி நெடுங்கரைக்கு வந்து வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்பி இருபது நாளைக்கு மேலாயிற்று. இப்போது அவள் சென்னையில் மீனாக்ஷி ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த சிறு தொட்டிலில் கையால் இலேசாக ஆட்டக்கூடிய தொட்டிலில் ஒரு பெண் குழந்தை கிடந்தது. கனவில் அல்ல; உண்மையாகவேதான். மூக்கும் முழியுமாய்க் குழந்தை நன்றாயிருந்தது. பிறந்து பத்து நாள்தான் ஆகியிருந்தாலும் ஒரு மாதத்துக் குழந்தை போல் தோன்றியது.
குழந்தை அப்போது தன்னுடைய வலது கையின் விரல்களை ருசி பார்த்து அநுபவித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உண்டான 'த்ஸு' 'த்ஸு' என்ற சப்தம் சாவித்திரியின் காதில் விழுந்தபோது அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது. உடனே, திரும்பிக் குழந்தையைப் பார்த்தாள். மலர்ந்த முகம் சுருங்கிற்று. இந்தக் குழந்தையின் காரணமாக என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அநுபவிக்க நேர்ந்தது? அவையெல்லாம் ஒரு மகா பயங்கரமான சொப்பனத்தைப் போல் சாவித்திரியின் நினைவில் வந்தன. அந்தச் சம்பவங்களை மறந்து விடுவதற்கு அவள் எவ்வளவோ முயன்று பார்த்தாள். அவற்றை நினைத்துப் பார்ப்பதில்லையென்று பல்லைக் கடித்துக்கொண்டு மனத்தை உறுதி செய்து கொண்டாள். அது ஒன்றும் பயன்படவில்லை. திரும்பத் திரும்ப அந்த நினைவுகள் வந்து கொண்டுதான் இருந்தன.
நெடுங்கரையிலிருந்து சாவித்திரி உடனே திரும்பிச் சென்னைக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு ரயில் ஏறியபோது அவளுடைய மனத்தில் கவலையும் பயமும் இல்லாமலில்லை. 'அந்தப் பெரிய பட்டணத்தில் போய் அப்பாவை எப்படித் தேடுவோம்? அதுவும் இந்தப் பலஹீனமான ஸ்திதியில்?' என்று அவளுடைய நெஞ்சு பதைபதைத்துக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் இவ்வளவு பயங்கரமான கஷ்டங்களை எல்லாம் அநுபவிக்க நேரிடுமென்று லவலேசமும் அவள் எதிர்பார்க்கவில்லை.
"பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரி வீடு தெரியுமா?" என்று எத்தனை இடங்களில் எத்தனை பேரைக் கேட்டிருப்பாள்? அவர்களில் சிலர், "பாட்டு வாத்தியாரையும் தெரியாது; சம்பு சாஸ்திரியையும் தெரியாது; போ! போ!" என்று கடுமையாகப் பதில் சொன்னார்கள். இம்மாதிரி பதில்களைக் கேட்கும்போதெல்லாம், 'ஜனங்கள் ஏன் இவ்வளவு இரக்கமற்றவர்களாயிருக்கிறார்கள்?' என்று சாவித்திரி ஆச்சரியப்படுவாள். பட்டணங்களிலே வசிக்கும் ஜனங்களின் இடைவிடாத வேலைத் தொந்தரவும், அதனால் சின்னஞ் சிறு விஷயங் கூட அவர்களுக்கு எரிச்சல் உண்டு பண்ணிவிடுவதும் சாவித்திரிக்கு எவ்வாறு தெரியும்? மேலும், பூரண கர்ப்பவதியான ஓர் இளம் பெண் இந்த மாதிரி தன்னந்தனியாக அலைவதைக் கண்டவுடனேயே, ஜனங்களுக்கு அவள் பேரில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் ஏற்பட்டு அருவருப்பு உண்டாவது சகஜம் என்பதைத்தான் சாவித்திரி எப்படி அறிவாள்?
ஆனால், எல்லாருமே இப்படி நடந்து கொள்ளவில்லை, சிலர் அவளிடம் இரக்கமும் காட்டினார்கள். "நீ யாரம்மா? எந்த ஊர்? இந்த நிலைமையிலே ஏன் இப்படி அலையறே?" என்றெல்லாம் விசாரித்தார்கள். ஜனங்களுடைய கோபத்தையும் கடுமையையுமாவது சகித்துக்கொள்ளலாம் போல் இருந்தது; ஆனால், இந்த இரக்கத்தைச் சாவித்திரியினால் சகிக்கமுடியவில்லை. அவர்களுடைய விசாரணைக்குப் பதில் சொல்லவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.
'அப்பா இருக்கிற இடந்தெரிந்தால் சொல்லட்டும்; இல்லாமற்போனால் பேசாமலிருக்கட்டும். இவர்களை இதையெல்லாம் யார் விசாரிக்கச் சொன்னது?' என்று எண்ணினாள்.
கடைசியில், அவளை அந்த மாதிரி விசாரித்த இடம் ஒரு போலீஸ் ஸ்டேஷன், இங்கே அவள் எப்படி வர நேர்ந்தது என்பதும், ஸ்டேஷனில் நடந்தவையும் அவளுக்கு ஏதோ பூர்வ ஜன்மத்து ஞாபகம் போல் தெளிவின்றித் தோன்றின.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.13. மீனாக்ஷி ஆஸ்பத்திரி - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - குழந்தை, அவளுடைய, சாவித்திரி, எத்தனை, பாட்டு, எல்லாம், தெரியாது, எப்படி, இப்படி, இவ்வளவு, மாதிரி, பயங்கரமான, பார்த்தாள், சாவித்திரியின், தொட்டிலில், அநுபவிக்க, நேர்ந்தது, கொண்டுதான், மீனாக்ஷி, இருந்தது