தியாக பூமி - 3.10. சாவித்திரியின் கனவு
சாவித்திரியை அழைத்துக்கொண்டு போகிறோமென்று சொன்ன திருநெல்வேலி ஜில்லாக்காரர்கள் உண்மையிலேயே ரொம்பவும் நல்ல மனுஷர்கள். புருஷன், மனைவி, குழந்தை, புருஷனுடைய தாயார் இவர்கள்தான். தாயார் விதவை. புருஷனுக்கு முப்பது வயதும், மனைவிக்கு இருபது வயதும் இருக்கும். குழந்தை மூன்று வயதுப் பையன். அவர்களில் யாரும் பார்ப்பதற்கு அவ்வளவு லட்சணமாயில்லை. கணபதி அவனுடைய பெயருக்கு ஏற்றது போலவே கட்டைக் குட்டையாயும், கொஞ்சம் இளந் தொந்தி விழுந்தும் காணப்பட்டான். கறுப்பு நிறந்தான். முகம், கன்னமும் கதுப்புமாய்ச் சப்பட்டையாயிருந்தது. ஜயம் அவனைவிடச் சிவப்பு; ஆனால் முகத்தில் அம்மை வடு. போதாதற்கு, மேல் வாய்ப்பல் இரண்டு முன்னால் நீண்டு வந்திருந்தது. இதை மறைப்பதற்காக ஜயம் அடிக்கடி உதட்டை இழுத்து மூடிக்கொண்டாள். அவள் நாலைந்து மாதமாக 'ஸ்நானம் செய்ய'வில்லையென்றும் தோன்றிற்று. இந்தக் குடும்பத்தார் ஒருவரோடொருவர் கொண்டிருந்த அந்யோந்யம் சாவித்திரிக்கு அளவிலாத ஆச்சரியத்தை அளித்தது. என்ன அன்பு! என்ன அக்கறை!
ஐந்து நிமிஷத்துக்கொரு தடவை, "ஜயம்! ஏதாவது வேணுமா?" என்று கணபதி கேட்டுக் கொண்டிருந்தான். "ஏண்டாப்பா! பிள்ளைத்தாச்சிப் பொண் பட்டினியாயிருக்காளே! ஏதாவது வாங்கிண்டு வந்து கொடேண்டா!" என்று தாயார் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். "நான் தான் வெறுமனே சாப்பிட்டுண்டே இருக்கேனே! அம்மாதான் பச்சை ஜலம் வாயிலே விடாமே இருக்கார். அவருக்கு ஏதாவது பழம், கிழம் வாங்கிக் கொடுங்கோ!" என்பாள் ஜயம்.
ஜயம் எதற்காவது எழுந்து நின்றால், சொல்லி வைத்தாற்போல், கணபதி, அவனுடைய தாயார் இரண்டு பேரும் எழுந்திருந்து, "என்ன வேணும், ஜயம்?" என்று கேட்பார்கள். கொஞ்ச நேரம் அவள் உட்கார்ந்திருந்தபடியே வந்தால், "இந்தாடி அம்மா! ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாக் காலைக் கொரக்களி வாங்கும். சித்தே காலை நீட்டிண்டு படுத்துக்கோ!" என்பாள் மாமியார். அஸ்தமித்தால் போதும்; ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்திவிடச் சொல்வாள். வண்டியிலுள்ள மற்றவர்கள் ஆட்சேபித்தால், "கொஞ்சம் கோவிச்சுக்காதீங்கோ. பிள்ளைத்தாச்சிப் பொண்ணு. பனி உடம்புக்காகாது" என்பாள்.
அவர்கள் ஒருவரோடொருவர் அந்யோந்யமாயிருந்ததல்லாமல், சாவித்திரியையும் மிகப் பரிவுடன் கவனித்துக் கொண்டார்கள். சில சமயம் அந்த அம்மாள், சாவித்திரியின் கஷ்டங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்து விடுவாள். "ராஜாத்தி மாதிரி இருக்கா. இவளை ஆத்திலே வச்சுட்டு அந்த மூடம் எங்கெல்லாமோ சுத்தி அலையறானே?" என்றும், "நல்ல மாமியார் வாச்சாடி அம்மா, உனக்கு! இப்படி எட்டு மாதத்துக் கர்ப்பிணியைத் தனியா அனுப்பறதுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?" என்றும் சொல்வாள். கணபதி, "பேசாமலிரு, அம்மா!" என்று அடக்குவான். "நீ சும்மா இருடா! என்னமோ, அந்த துஷ்டைகளுக்குப் பரிஞ்சு பேசறதுக்கு வந்துட்டே? உனக்கென்ன தெரியும், ஊர் சமாசாரம்? இந்தச் சாதுப் பெண்ணை அந்த ராட்சஸி படுத்தி வச்சது. ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிச்சுது! பாவம்! இவளுக்குப் பொறந்தகமும் வகையில்லைபோல் இருக்கு. அவாதான் வந்து தலைச்சம் பிள்ளைத்தாசியைப் பாத்துட்டு அழைச்சுண்டு போகவேண்டாமோ?" என்பாள்.
மாமியார் இப்படி ஏதாவது பேசும்போதெல்லாம், மாட்டுப் பெண்ணின் முகத்தில் பெருமை கூத்தாடும். அவளுக்குப் புக்ககத்தைப் போலவே பிறந்த வீடும் நன்றாய் வாய்த்திருந்தது என்று சம்பாஷணையில் சாவித்திரி தெரிந்து கொண்டாள். ஜயத்தின் தகப்பனாருக்கு இரண்டு மாதமாய் உடம்பு சரியில்லை என்று தகவல் வந்ததாம். "ஒரு வேளை நான் பிழைக்கிறேனோ, இல்லையோ, என் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரு தடவை பார்த்துவிட்டால் தேவலை" என்று அவர் சொன்னாராம். அதன் பேரில்தான் இப்போது இவர்கள் திருநெல்வேலிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.10. சாவித்திரியின் கனவு - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஏதாவது, என்பாள், தாயார், இரண்டு, மாமியார், பிள்ளைத்தாச்சிப், சொல்வாள், இப்படி, என்றும், அடிக்கடி, வயதும், குழந்தை, அவனுடைய, கொஞ்சம், சாவித்திரியின், முகத்தில், ஒருவரோடொருவர்