ஸுசீலா எம். ஏ.
8
மாலை ஐந்து மணி சுமாருக்கு மரப்பாலத்துக்கருகில்
உட்கார்ந்து தோசை சாப்பிட்டு விட்டு, ஸுசீலாவும் பாலசுந்தரமும் கீழே
போகக் கிளம்பினார்கள். "பசி என்றால் எப்படி இருக்கும் என்று இன்றைக்குத்தான்
எனக்குத் தெரிந்தது" என்றாள் ஸுசீலா. "நமது நாட்டில் தினந்தோறும் இம்மாதிரி
பசிக் கொடுமையை அனுபவிக்கிறவர்கள் கோடிக்கணக்கான பேர்" என்றான் பாலசுந்தரம்.
"நிஜமாகவா! ஐயோ! எப்படித்தான் பொறுக்கிறார்கள்? இத்தனை நாளும் எனக்கு
யாராவது பிச்சைகாரன் 'பசி எடுக்குது, அம்மா! பிச்சைபோடு, அம்மா! பிச்சைபோடு,
அம்மா!' என்றால் கோபம் கோபமாய் வரும்" என்றாள் ஸுசீலா.
"இந்தியாவின் ஜனத்தொகை 40 கோடி. இதில் பாதிபேர் - 20 கோடிப் பேர் ஓயாமல் பசித்திருப்பவர்கள். கூடிய சீக்கிரத்தில், நமது தேசத்தில் உணவு உற்பத்தி அதிகமாக வேண்டும். இல்லாவிட்டால்..."
ஸுசீலாவுக்கு, பத்திரிகையில் வாசித்ததெல்லாம் ஞாபகம் வந்தது. அவள் பெருமூச்சு விட்டாள்.
அப்போது பாலசுந்தரம் ஸுசீலாவைக் கையைப் பிடித்து நடத்திக் கொண்டிருந்தான். "இப்போது நாம் போவது போலவே, வாழ்க்கை முழுவதும் கைகோத்துக் கொண்டு போக முடியுமானால்..." என்றான்.
ஸுசீலா வெடுக்கென்று கையைப் பிடுங்கிக் கொண்டாள். "நீங்கள்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளாத விரதம் எடுத்தவர்களாயிற்றே!" என்றாள்.
.000000000000000000000000000000000000000000000000000 பாலசுந்தரம் விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு, விஷயம் என்னவென்று விசாரித்தான். ஸுசீலா தான் பத்திரிக்கையில் படித்ததைச் சொன்னாள்.
"படித்ததை முழுதும் படிக்காமல் பாதியில் விட்டு விட்டால், அதற்கு நான் என்ன செய்வது?" என்றான்.
"பின்னால் என்ன சொல்லியிருந்தது?" என்று கேட்டாள்.
"ஆனால், இந்த விரதத்துக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. 'இந்தப் பெரிய தேசத் தொண்டில் ஒருவனுக்கு உதவி செய்யக் கூடிய வாழ்க்கைத் துணைவியாகக் கிடைத்தால், அந்த நிலைமையில் கல்யாணம் செய்து கொள்வதே அதிக பயனுள்ளதாகும்' என்று கடைசியில் சொல்லியிருந்தேன்."
ஸுசீலா சற்று நேரம் யோசித்து விட்டு, "அம்மாதிரி நான் உங்களுக்கு உதவியாயிருப்பேன் என்று தோன்றுகிறதா?" என்றாள்.
"உன்னைப் போல் உதவி எனக்கு வேறு யார் செய்ய முடியும்? நான் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தால், அவற்றை எப்படி சரியாக உபயோகிப்பது என்று நீ ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லலாமல்லவா?"
ஸுசீலா இப்போது விழுந்து விழுந்து சிரித்தாள். "ஆமாம்; நீங்கள் ஒரு பக்கம் ஜனங்களின் பசிக்கு உணவு உற்பத்தி செய்தால், நான் இன்னொரு பக்கத்தில் அவர்களுக்குப் பசியேயில்லாமல் அடித்து விட முடியும்!" என்றாள்.
"ஆனால், அவர்கள் குற்றாலத்துக்கு வந்தால், மறுபடியும் பசி உண்டாகி விடும்!" என்றான் பாலசுந்தரம்.
இரண்டு பேரும் சேர்ந்து சிரித்தார்கள். அந்தச் சிரிப்பின் ஒலி அருவியின் சலசல சப்தத்துடன் கலந்தது!
ஆனந்தவிகடன் தீபாவளி மலர் - 1938
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸுசீலா எம். ஏ. - Susila M.A. - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஸுசீலா, என்றாள், நான், விழுந்து, பாலசுந்தரம், என்றான், விட்டு, உற்பத்தி, அம்மா