ஸுசீலா எம். ஏ.
7
ஸுசீலா குற்றாலத்துக்குப் போவது என்று
தீர்மானித்த போது இரவு எட்டரை மணி. அதற்குள் எக்ஸ்பிரஸ் வண்டி போய்விட்டது.
ஆனால் மறுநாள் வரையில் காத்திருக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. ஆதலின்
பாஸஞ்சர் வண்டியிலேயே பிரயாணம் ஆனாள். இந்த வண்டி சாவகாசமாக அசைந்து
ஆடிக் கொண்டு தென்காசிக்குப் போய்ச் சேர்ந்த போது மாலை ஆறு மணியிருக்கும்.
உடனே, வண்டி வைத்துக் கொண்டு குற்றாலத்துக்குப் புறப்பட்டாள்.
குற்றாலத்தில் 'கோமதி பங்களா'வின் வாசலில் போய் வண்டி நின்றது. ஸுசீலா இறங்கினாள். பங்களாவுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டதும் பெரிய ஆச்சரியமாகப் போயிற்று. பங்களாவில் யார் இருக்கக் கூடும்?
இதற்குள் வாசலில் வண்டி வந்து நின்றதைக் கண்டு, தோட்டக்காரன் ஓடி வந்தான். ஸுசீலாவைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்றான். அப்புறம், "இது என்ன, அம்மா, இது? எங்கிருந்து வரீக? தனியாகவா வந்தீக? ஐயா பின்னாலே வராகளா?" என்றான்.
"ஐயா வரவில்லை. நான் மட்டுந்தான் வந்தேன். வீட்டிலே யாரு, மாடசாமி!" என்று கேட்டாள்.
"தெரியாதுங்களா? நம்ம நெறிஞ்சிக்காடு ஐயாதான்."
ஸுசீலாவுக்குத் தலை சுழன்றது. இந்த மாதிரி நேரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. பாலசுந்தரத்தின் மேல் ஏற்கெனவே வெறுப்பு. அதிலும், தான் இப்படி அவமானப்பட்டு வந்திருக்கும் நிலைமையிலா அவரைப் பார்ப்பது? ஆனாலும் இப்போது திரும்பிப் போவது இயலாத காரியம்.
"நான் வந்திருக்கேன், வீட்டை ஒழித்துக் கொடுத்தால் தேவலை என்று போய்ச் சொல்லு."
தோட்டக்காரன் தயக்கத்துடன் போனான். சற்று நேரம் கழித்துத் திரும்பினான்.
"இராத்திரியிலே இத்தனை நேரத்துக்கப்புறம் எங்கே போறது என்று கேக்கறாக. மெத்தை அறை காலியாய்த்தான் இருக்கு. அதிலே உங்களை இருந்துக்கும்படி சொல்றாக" என்றான்.
ஸுசீலாவுக்கு இது சிறிது திருப்தியையளித்தது. மாடசாமியைச் சாமான்களை எடுத்து வரச் சொல்லிவிட்டு, நேரே மெத்தை அறைக்குப் போனாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் சமையற்காரப் பையன் வந்தான். "சாப்பாடு கொண்டு வரட்டுமா, அம்மா?" என்று கேட்டான்.
"ஐயா கேக்கச் சொன்னாகளா?"
"நான் தான் ஐயாவைக் கேட்டேன். 'அந்த அம்மாகிட்ட போய்ச் சாப்பாடுன்னு சொன்னாச் சண்டைக்கு வருவாகடா. நீ. வேணாப் போய்க் கேட்டுப்பாரு' என்றாக."
ஸுசீலாவுக்கு ஆத்திரமாய் வந்தது. "எனக்குச் சாப்பாடு வேண்டாம்" என்றாள். சமையற்காரன் போய்விட்டான்.
அப்போது ஸுசீலா, என்னதான் எம்.ஏ. படித்தவளாயிருந்தாலும், பெண்ணாய்ப் பிறந்தவள் பெண்தான் என்பதை நிரூபித்தாள். குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி அழுதாள்.
அன்றிரவு ஸுசீலா வெகு நேரங் கழித்துத்தான் தூங்கினாள். ஆதலின், காலையில் எழுந்திருப்பதற்கும் நேரமாயிற்று. ஏழு மணிக்கு மேல் எழுந்திருந்து கீழே வந்தபோது, தோட்டக்காரன் சமையல் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்தான். சமையற்காரன் கையில் ஒரு பொட்டலத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.
"என்ன இதெல்லாம்? ஐயா எங்கே?" என்று கேட்டாள்.
"ஐயா மலை மேல மரப் பாலத்துக்குப் போயிருக்காக. அவகளுக்குத் தோசை எடுத்துண்டு போறேன். ஜாகையை மாற்றிவிடச் சொல்லிட்டாக" என்றான்.
ஸுசீலாவின் கண்களில் நீர் துளித்தது. தோட்டக்காரனைப் பார்த்து, "நானும் மரப்பாலத்துக்குத்தான் போறேன். ஐயாவைப் பார்ப்பேன். நாங்க திரும்பி வரும் வரை ஐயா சாமான் இங்கேயே இருக்கட்டும்" என்றாள்.
குற்றாலம் மலையில் மரப் பாலத்துக்குச் சமீபத்தில், அருவி விழுந்து விழுந்து ஒரு சிறு சுனை ஏற்பட்டிருக்கிறது. அதன் நாலு பக்கத்திலும் வெள்ளை வெளேரென்ற சுத்தமான பாறைகள். அந்தப் பாறை ஒன்றின் மேல் பாலசுந்தரம் உட்கார்ந்திருந்தான். காலடிச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சமையற்காரனுடன் ஸுசீலாவைப் பார்த்ததும் அவன் சிறிதும் வியப்புக் காட்டவில்லை. "ஏது, இப்படி எதிர்பாராத சந்தோஷம்?" என்றான். "எதிர்பாராதது என்பது சரி; ஆனால் சந்தோஷமா என்பது தான் சந்தேகம்" என்றாள் ஸுசீலா. இதற்குப்பதிலாக பாலசுந்தரம் ஒரு புன்னகை புரிந்தான். "அது எப்படியாவது இருக்கட்டும். ஜாகை மாற்றச் சொன்னீர்களாமே? அது வேண்டியதில்லை. நான் இன்று சாயங்காலமே ஊருக்குப் போய் விடுவேன்" என்றாள்.
"ரொம்ப வந்தனம். ஜாகை மாற்றுவது எனக்கும் அசௌகரியந்தான்" என்றான் பாலசுந்தரம். உடனே, சமையற்காரனைச் சற்று எட்டி அழைத்துப் போய், அவனிடம் ஏதோ சொல்லி விட்டு வந்தான்.
"இதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு நாம் எத்தனை நாள் பொழுது போக்கியிருக்கிறோம்? அதெல்லாம் நினைத்தால் கனவு மாதிரி இருக்கிறது" என்றாள் ஸுசீலா. அப்புறம் இரண்டு பேரும் சற்று நேரம் பழைய ஞாபகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"இருக்கட்டும்; எனக்குப் பசிக்கிறது. தோசை எங்கே? சாப்பிடலாம்" என்றாள் ஸுசீலா.
"ஐயையோ! இதென்ன கூத்து?" என்றான் பாலசுந்தரம்.
"என்ன? என்ன?" என்றாள் ஸுசீலா.
"உனக்குப் பசிக்கிறது என்கிறாயே? தோசை கீசை என்றால் உனக்குக் கோபம் வரப்போகிறதென்று, பழனியைத் திருப்பி எடுத்துக் கொண்டு போய்விடச் சொன்னேனே?" என்றான்.
ஸுசீலா இடி இடியென்று சிரித்தாள். அந்த மாதிரி அவள் சிரித்து எத்தனையோ காலமாயிற்று.
"சரி; இப்போது என்ன செய்யலாம்?" என்றாள்.
செய்வது என்ன? மத்தியானம் வரையில் காத்திருக்க வேண்டியதுதான். மத்தியானச் சாப்பாடு தேனருவிக்குக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறேன். அங்கே போய் விடலாம்" என்றான் பாலசுந்தரம்.
தேனருவிக்குப் புறப்பட்டார்கள். வழி நெடுகிலும் தங்களுடைய பழைய ஞாபகங்களைப் பற்றியே பேசிக் கொண்டு போனார்கள். வழியில் அநேக இடங்களில் பாறைகளில் ஏறியும், பள்ளங்களைத் தாண்டியும் போக வேண்டியதாயிருந்தது. அங்கெல்லாம், பாலசுந்தரம் ஸுசீலாவின் கையைப் பிடித்துத் தூக்கி விடுவது அவசியமாயிற்று. கடைசியில் பதினொரு மணிக்குத் தேனருவிக்கு வந்து சேர்ந்தார்கள்.
!!!!!
இந்த ஆச்சரியக் குறிகளையே தேனருவியின் வர்ணனையாக நேயர்கள் பாவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தேனருவியின் சுனையில் இருவரும் ஸ்நானம் செய்தார்கள். துணிமணிகளை உலர்த்திக் கட்டிக் கொண்டார்கள். பிறகு, மேலே கவிந்த ஒரு பாறையின் நிழலில் உட்கார்ந்து, பழனியை எதிர்பார்க்கலானார்கள். பசி தெரியாமல் பொழுது போவதற்காக, பாலசுந்தரம் தன்னுடைய சீமை அனுபவங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ஆனால் நடுநடுவே, ஸுசீலா, தன் மணிக்கட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டும், "இன்னும் பழனி வரவில்லையே?" என்று கேட்டுக் கொண்டும் இருந்தாள். கடைசியாக, ஒன்றரை மணிக்கு, பழனி தலையில் கூடையுடன் தூரத்தில் காணப்பட்டான். உடனே இருவரும் எழுந்து போய்ச் சுனையின் அருகில் உட்கார்ந்தார்கள். பாறையை ஜலத்தை விட்டு நன்றாய் அலம்பிச் சுத்தமாக்கி வைத்துக் கொண்டார்கள்.
ஆச்சு! இதோ பழனி கிட்ட வந்துவிட்டான். அங்கே ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்கு அவன் தாவிக் குதித்தாக வேண்டும். "அடே! ஜாக்கிரதை! கூடையைப் போட்டுக் கொண்டு விழாதே!" என்றான் பாலசுந்தரம். இப்படி அவன் சொல்லி வாயை மூடினானோ இல்லையோ, பழனியின் கால், தாவிக் குதித்த பாறையில் வழுக்கிற்று. ஒரு ஆட்டம் ஆடினான். கையை விரித்துச் சமாளிக்க முயன்றான். திடீரென்று விழுந்தான். விழுந்தவன் நல்ல வேளையாகக் கையை எட்டி இரண்டு பாறைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். ஆனால், கூடை! ஐயோ! கீழே பள்ளத்தில் தண்ணீரில் விழுந்து உருண்டு கொண்டிருந்தது. அதிலிருந்த உணவுப் பண்டங்களை மீன்கள் போஜனம் செய்து கொண்டிருந்தன.
பாலசுந்தரம் ஓடி வந்து, பழனியைக் கையைக் கொடுத்துத் தூக்கி விட்டான். அவனும் ஸுசீலாவும், பாவம், பழனியைத் திட்டு திட்டு என்று திட்டினால், பசி நீங்குமா? என்ன செய்வதென்று யோசித்தார்கள். "காலையில் திருப்பிக் கொண்டு போன தோசை வீட்டில் இருக்கு. இதோ போய்க் கொண்டு வந்து விடுகிறேன்" என்றான் பழனி. "சரி! போ! மரப்பாலத்துக்கே கொண்டு போ. அதற்குள் நாங்களும் அங்கே வந்து விடுகிறோம்" என்றான் பாலசுந்தரம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸுசீலா எம். ஏ. - Susila M.A. - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டு, என்றான், ஸுசீலா, பாலசுந்தரம், என்றாள், என்ன, வண்டி, வந்து, போய், நான், தோசை, சற்று, போய்ச், பழனி, அங்கே, அவன், இருக்கட்டும், விழுந்து, சாப்பாடு, மாதிரி, தோட்டக்காரன், வைத்துக், உடனே, வந்தான், மேல், இப்படி, தான், எங்கே