ஸுசீலா எம். ஏ.
1
நமது கதை 1941-ஆம் வருஷத்தில் ஆரம்பமாகிறது.
இது கதை என்று வாசகர்களை நம்பச் செய்வதற்கு எனக்கு வேறு வழி ஒன்றும்
தோன்றவில்லை. இந்த நாளில் நிஜத்தை நிஜம் என்று நம்பச் செய்வதே கடினமாயிருக்கிறது.
கதையை, கதை என்று நம்பச் செய்வது அதை விடக் கஷ்டமானதல்லவா?
ஸ்ரீமதி ஸுசீலா அந்த 1941-ம் வருஷத்திலேதான் எம்.ஏ. பரீட்சையில் புகழுடன் தேறினாள். 1939-ம் ஆண்டில் ஸுசீலாவுக்கு பி.ஏ. பட்டம் கிடைத்து விட்டது. அத்துடன் திருப்தியடையாமல் மேலே எம்.ஏ. பரீட்சைக்குப் படிக்கத் தீர்மானித்தாள். அந்த வருஷத்தில் சென்னை யுனிவர்சிடிகாரர்கள் எம்.ஏ. பரீட்சைக்கு ஒரு புதிய பாடத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அது தான் பாக சாஸ்திரம். இந்தக் காலத்து யுனிவர்ஸிடி கல்வியானது ஸ்திரீகளைக் குடும்பத்துக்கு லாயக்கற்றவர்களாகச் செய்கிறது என்று தேசத்தில் பெரிய கிளர்ச்சி நடந்ததின் பேரில், யுனிவர்ஸிடி இந்த சீர்திருத்தத்தைச் செய்தது. புதிய விஷயமான பாகசாஸ்திரத்தையே ஸுசீலா எம்.ஏ. பரீட்சைக்கு எடுத்துக் கொண்டாள். அவளுக்கு அந்த சாஸ்திரத்தைப் போதிப்பதற்கென்று ஒரு ஐரோப்பிய ஆசிரியை மாதம் ரூ.950 சம்பளத்தில் யுனிவர்ஸிடியினால் நியமிக்கப்பட்டாள். இதிலிருந்தே, நமது காங்கிரஸ் மந்திரிகளின் ஜம்பம் ஒன்றும் யுனிவர்ஸிடியினிடம் மட்டும் பலிக்கவில்லையென்று அறிந்து கொள்ளலாம்.
அந்த ஆசிரியையின் உதவியுடன் பாக சாஸ்திர ஆராய்ச்சியிலும் அப்பியாசத்திலும் இரண்டு வருஷம் பரிபூரணமாக அமிழ்ந்திருந்தாள் ஸுசீலா. இந்த நாட்களில் வேறு எந்த விஷயத்துக்கும் அவளுடைய மனதில் இடம் இருக்கவில்லை. ஒவ்வொரு சமயம், சீமையிலே எலெக்ட்ரிக் என்ஜினியரிங் படிக்கப் போயிருக்கும் அவளுடைய அத்தை மகன் பாலசுந்தரத்தின் நினைவு மட்டும் அவளுக்கு வருவதுண்டு. ஆனால், அடுத்த நிமிஷம், டெமொடோ அப்பத்துக்கு உப்புப் போட வேண்டுமா வேண்டாமா என்ற விஷயத்தில் அவளுடைய கவனம் சென்று, பாலசுந்தரத்தை அடியோடு மறக்கச் செய்து விடும்.
பாக சாஸ்திரம் சம்பந்தமான ஸுசீலாவின் சரித்திர ஆராய்ச்சிகள் அபாரமாக இருந்தன. திருநெல்வேலித் தோசை என்பது ஆதியிலே எப்போது உண்டாயிற்று. எப்போது அது சதுர வடிவத்திலிருந்து வட்ட வடிவமாகப் பரிணமித்தது, எப்போது தோசைக்கு மிளகாய்ப் பொடி போட்டுக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து நூறு பக்கத்தில் ஸுசீலா ஒரு கட்டுரை எழுதினாள். இம்மாதிரியே, கோயமுத்தூர் ஜிலேபி, தஞ்சாவூர் சாம்பார், மைசூர் ரசம், கல்கத்தா ரஸகுல்லா ஆகிய ஒவ்வொன்றைப் பற்றியும் பல நூறு பக்கம் எழுதினாள்.
இன்னும் ஸுசீலா மகஞ்சதாரோவுக்கு நேரில் சென்று அங்கே கண்டெடுக்கப்பட்ட 5000 வருஷத்துக்கு முந்திய சிலாசாஸனங்களை ஆராய்ந்து, இந்தியாவில் புராதன பாகசாஸ்திரத்தைப் பற்றிப் பல அற்புதங்களைக் கண்டுபிடித்தாள். உதாரணமாக, தமிழ்நாட்டில் கொழுக்கட்டை என்பது ஏற்பட்டு முந்நூறு வருஷங்கள் தான் ஆயின என்று ஸுசீலா கண்டுபிடித்துச் சொன்னாள். இதற்கு அவள் 5000 வருஷத்துக்கு முந்திய மகஞ்சதாரோ கிலாசாஸனத்திலிருந்து அத்தாட்சி காட்டியபோது, அதைப் பார்த்தவர்கள் அவ்வளவு பேரும் பிரமித்தே போனார்கள். கொழுக்கட்டையின் மேல் அவர்களுடைய மோகம் பறந்தே போய்விட்டது.
இம்மாதிரி வெறும் ஆராய்ச்சிகளுடன் ஸுசீலா ஒன்றும் நின்று விடவில்லை. அப்பியாச சோதனைகளும் செய்து வந்தாள். ஸுசீலாவின் சோதனைகளுக்காகவே பெண்கள் கலாசாலை ஹாஸ்டலில் ஒரு தனிப் பகுதி ஒழித்து விடப்பட்டது.
ஆரம்பத்தில், ஹாஸ்டலில் வசித்த சக மாணவிகள் அவளுடைய சோதனைகளில் ஒத்தாசை புரிந்து வந்தார்கள். அதாவது, அவள் கண்டுபிடித்த புதிய பட்சணங்களை அவர்கள் ருசி பார்த்து அபிப்பிராயம் சொல்லி வந்தார்கள். ஆனால் வர வர, இது விஷயத்தில் அவர்களுடைய ஒத்துழைப்புக் குறைந்து வந்தது. கடைசியில், ஒருநாள், ஸுசீலா செய்திருந்த 'குளோரோபாரம் பச்சடி'யை அவர்கள் ருசி பார்த்த பிறகு, நிலைமை விபரீதமாகப் போய்விட்டது. ருசி பார்த்தவர்கள் அவ்வளவு பேரும் மூன்று நாள் வரையில் தூங்கிக் கொண்டே வகுப்புக்குப் போனார்கள்; தூங்கிக் கொண்டே படித்தார்கள்; தூங்கிக் கொண்டே தூங்கினார்கள்! இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஹாஸ்டல் மாணவிகள் ஒருவரும் ஸுசீலாவின் 'லபரேடரி'க்கு அருகிலேயே வருவது கிடையாது. எனவே, ஸுசீலா 'தன் வயிறே தனக்குதவி' என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று.
கடைசியாக, பரீட்சை நெருங்கியது. அந்த வருஷம் எம்.ஏ. வகுப்பில் பாக சாஸ்திரப் பரீட்சைக்கு ஆஜரான மாணவி ஸுசீலா ஒருத்திதான். ஆனால், பரீட்சகர்களோ ஒன்பது பேர். அவர்கள் ஸுசீலா எழுதியிருந்த ஆராய்ச்சிகளையெல்லாம் படித்துவிட்டு, 100க்கு 90 மார்க் வீதம் கொடுத்தார்கள். பிறகு ஸுசீலா செய்து கொடுத்த பட்சணங்களைத் தூரத்தில் இருந்தபடியே வாசனந பார்த்து விட்டு, 100க்கு 110 மார்க் வீதம் கொடுத்தார்கள். எனவே, அந்த வருஷம் எம்.ஏ. பரீட்சையில், சென்னை மாகாணத்திலேயே முதலாவதாக ஸுசீலா தேறினாள். அவளுடைய விசேஷ ஆராய்ச்சி முடிவுகளைக் கௌரவிப்பதற்காக 'டாக்டர்' பட்டம் அவளுக்கு அளிப்பதென்றும், ஸிண்டிகேட் சபையார் முடிவு செய்தனர்.
இவ்வளவு மகத்தான கௌரவங்களை அடைந்த ஸுசீலாவுக்கு இந்த இரண்டு வருஷத்தில் ஒரு சின்ன நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். அவளுடைய பாக சாஸ்திர ஆராய்ச்சிகளின் பயனாக அவளுடைய ஜீரணசக்தி அடியோடு போய்விட்டது!
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸுசீலா எம். ஏ. - Susila M.A. - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஸுசீலா, அவளுடைய, அந்த, போய்விட்டது, எப்போது, ருசி, தூங்கிக், கொண்டே, என்பது, பிறகு, செய்து, பரீட்சைக்கு, நம்பச், அவளுக்கு, வருஷம், ஒன்றும், வருஷத்தில், ஸுசீலாவின்