ஸுசீலா எம். ஏ.
5
இதற்கிடையில், சென்னை நகரெல்லாம் அமளி
துமளியாயிருந்தது. தினந்தோறும் ஏழெட்டுப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள்
நடந்தன. அவற்றில் கூடியிருந்தவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேரும்
ஆச்சரியமான நீள அகலங்கள் வாய்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். "பார்க்கப்
போனால், இந்தக் கோவில்களிலுள்ள தெய்வங்கள் வெறுங் கல்லே அல்லவா? கல்லுக்கு
உயிர் உண்டா? உயிரில்லாத கல்லுக்காக வேண்டி உயிருள்ள மனுஷன் உயிரை விட
வேண்டுமா? இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சர்க்காரின்
அநியாயத்தை என்னவென்று சொல்வது?" என்று பிரசங்கிகள் கர்ஜித்தார்கள்.
ஸுசீலா சென்னைக்கு வந்து சேர்ந்த ஐந்தாம் நாள் மாலை, கடற்கரையில் ஒரு பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மாகாணம் முழுவதிலிருந்தும் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தமிழ்த்தாய் ஸுசீலாவும் வந்து பேசுவது அவசியம் என்று கருதப்பட்டது. அதிகமான வற்புறுத்தலின் பேரில், ஸுசீலா கிளம்பினாள். அவ்வளவு முக்கியமான கூட்டத்திற்குப் போகாமலிருக்கக் கூடாதென்று உண்ணாவிரத விடுதியிலிருந்து ஒவ்வொருவராக எல்லோருமே கிளம்பிச் சென்றார்கள்.
ஆரம்பத்திலேயே ஸுசீலாவைப் பேசச் சொன்னார்கள். ஸுசீலா பேசினாள். பொதுக் கூட்டத்திலே அவள் பேசுவது இதுதான் முதல் தடவையானாலும் அற்புதமாய்ப் பேசினாள். மனம் உருகப் பேசினாள். கடைசியில், "இங்கே நாம் பொதுக் கூட்டம் போட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் கரகோசம் செய்து கொண்டுமிருக்கிறோம். இந்த நேரத்தில் அங்கே அந்த வீர புருஷரின் - உயிர்..." இந்த இடத்தில் ஸுசீலாவின் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்ணில் ஜலம் பெருகிற்று. மேலே பேச முடியாமல் உட்கார்ந்து விட்டாள். இந்தக் காட்சி, கூட்டத்தில் ஒரு மகத்தான கிளர்ச்சியை உண்டாக்கிற்று. ஆண் பிள்ளைகள் "அந்தோ! அந்தோ!" என்றார்கள். வீரத் தமிழ் மகளிர் விம்மி அழத் தொடங்கினார்கள்.
ஸுசீலாவுக்கு அப்போது மனதில் உண்மையாகவே ஒரு கலக்கம் உண்டாகியிருந்தது. தான் அங்கு உட்கார்ந்திருக்கையில், ஹிட்லர் குருசாமிக்கு ஏதோ பெரிய ஆபத்து நேர்ந்து கொண்டிருப்பதாக அவளுடைய உணர்வு சொல்லிற்று. உடனே போய் அவனைப் பார்க்க அவள் இருதயம் துடிதுடித்தது. அருகிலிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு அவள் மேடையிலிருந்து பின்புறமாக இறங்கிச் சென்றாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கழுகுக் கண் படைத்த பத்திரிகை நிருபர்கள். 'ஏதோ ஹிட்லர் குருசாமியைப் பற்றிச் செய்தி வந்துதான் இவள் இப்படிக் கூட்டத்தின் நடுவில் எழுந்து போகிறாள்' என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, அவர்களும் ஒவ்வொருவராக நழுவிச் சென்றார்கள்.
ஸுசீலா இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, விடுதியின் வாசலில் போய் இறங்கினாள். கதவைச் சப்தமிடாமல் திறந்து கொண்டு மாடி மீது ஏறிச் சென்றாள். அங்கே ஹிட்லர் குருசாமியைக் காணாததும், அவளுக்கு உயிரே போய்விட்டது போலிருந்தது. கீழே இறங்கி வந்தாள். வீட்டில் சமையற்காரன் ஒருவன் தான் இருந்தான். அவனைக் கேட்கலாமென்று சமையலறையின் கதவைத் திறந்தாள். அந்தோ! அங்கே அவள் கண்ட காட்சியை என்னவென்று சொல்வது? எப்படிச் சொல்வது? சுருங்கச் சொன்னால் தலையில் விழ வேண்டிய இடி தவறிக் கீழே விழுந்தால் எப்படித் திகைப்பாளோ, அப்படித் திகைத்துப் போனாள் ஸுசீலா!
எதிரில் இலையைப் போட்டுக் கொண்டு, அதில் சாம்பார் சாதத்தைத் துளாவிப் பிசைந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தான், ஹிட்லர் குருசாமி. அவனுடைய ஆயுள் பலம் கெட்டியாயிருந்த படியால்தான் அந்தச் சமயம் ஸுசீலா வந்தாள் என்று சொல்ல வேண்டும். இல்லாவிடில், ஐந்து நாள் பட்டினிக்குப் பிறகு அப்படி ஒரேயடியாகக் குழம்புச் சாதத்தைத் தீட்டியிருந்தால், அவன் கதி என்ன ஆகியிருக்குமென்று சொல்ல வேண்டுமா?
ஸுசீலாவைக் கண்டதும், ஹிட்லர் குருசாமி ஒரு நிமிஷ நேரம் அசட்டு முழி முழித்தான். அப்புறம் துள்ளி எழுந்து வந்து, ஸுசீலாவின் முன்னால் மண்டியிட்டுக் கை குவித்தான். "ஸுசீலா! ஸுசீலா! என்னை மன்னி! உன்னுடைய காதலுக்காகத்தான் நான் இந்த காரியம் செய்தேன்..." என்றான். அப்போது, குருசாமி ஒரு கணம் நிமிர்ந்து ஸுசீலாவின் முகத்தைப் பார்த்தான். பிறகு, அந்த முகத்தை அவன் தன் வாழ்நாளில் எப்போதும் பார்க்கவேயில்லை!
அடுத்த நிமிஷத்தில், அந்தோ! அந்தச் சமையலறைக்குள் திமுதிமுவென்று ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வந்து நுழைந்தார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸுசீலா எம். ஏ. - Susila M.A. - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஸுசீலா, ஹிட்லர், பொதுக், அந்தோ, அவள், வந்து, இந்தக், கொண்டு, குருசாமி, சொல்வது, ஸுசீலாவின், போட்டுக், அங்கே, பேசினாள்