ஸுசீலா எம். ஏ.
4
ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதம் ஆரம்பமானதிலிருந்து,
அதைப் பற்றிய செய்திகளைத் தினந்தோறும் வெகு ஆவலுடன் ஸுசீலா கவனித்து
வந்தாள். குருசாமியின் பேரில் அவளுக்கு ஏற்பட்ட நன்மதிப்புக்கு ஒரு அளவேயில்லை.
"சாப்பாட்டைத் துச்சமாகக் கருதும் ஒரு மனுஷனாவது உலகில் இருக்கிறானல்லவா?
வயிற்றைக் கட்டிக் கொண்டு அழாதா இவனல்லவோ வீர புருஷன்? ஆஹா! அவன் தான்
எப்படியிருப்பானோ? என்னமாய்ப் பேசுவானோ?" என்று எண்ணாததெல்லாம் எண்ணி,
எட்டாத கோட்டையெல்லாம் கட்டினாள்.
ஒரு வாரம் ஆயிற்று. பத்து நாள், பதினைந்து நாள், இருபது நாளும் ஆயிற்று. அதற்கு மேல் ஸுசீலாவுக்குத் திருநெல்வேலியில் இருப்புக் கொள்ளவில்லை. அந்த வீர புருஷனை, இலட்சிய புருஷனை, இருபது நாள் சமையலையும் சாப்பாட்டையும் மறந்திருக்க கூடிய மகாதீரனை, உடனே சென்று நேரில் பார்க்காவிடில் தன் ஆவி ஒரு கணமும் தரிக்காது என்று தீர்மானித்தாள். தகப்பனாரிடம் சொல்லவே, இந்த மாதிரி முன்னேற்றமான இயக்கங்களில் அதி தீவிர அநுதாபங் கொண்டவரான கோமதியப்பர் உடனே தயங்காமல் விடை கொடுத்தார். ஸுசீலா சென்னைக்கு ரயில் ஏறினாள். ஆனால் அந்தோ! அந்த ரயிலுக்கு வழியில் ஆபத்து ஒன்றும் நேரிடவில்லையென்பதை ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறோம். நிற்க.
ஸுசீலா எம்.ஏ. சென்னைக்குப் பிரயாணமான சமாசாரம் அவள் வருவதற்கு முன்பே சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டது. ஹிட்லர் குருசாமி தங்கியிருந்து வீட்டில் இந்தச் செய்தியானது மிகவும் கலக்கத்தை விளைவித்தது. குருசாமி தானே ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ஸுசீலாவை வரவேற்பேன் என்றதால் மேற்படி கலக்கம் நேர்ந்தது. மற்றவர்கள் அவனை ரொம்பவும் கேட்டுக் கொண்டு அப்படிச் செய்யாமல் தடுத்தார்கள். தாங்கள் போய் அவளைத் தக்கபடி வரவேற்று அழைத்து வருவதாகச் சொன்னார்கள். அப்படியே சென்று அழைத்து வந்தார்கள்.
ஸுசீலா அந்த வீட்டுக்குள் காலை வைத்ததும், அவள் கேட்ட முதல் கேள்வி என்னவென்று நினைக்கிறீர்கள்? அவளுடைய இருதய அந்தரங்கத்திலிருந்து, "அவர் எங்கே?" என்னும் வார்த்தைகள் மகத்தான தாபத்துடன் வெளிவந்தன. "மாடியில் இருக்கிறார்" என்றதும் அவளுடைய கால்கள் மெத்தைப் படிகளின் வழியாக அவளை மாடியில் கொண்டு போய்ச் சேர்த்தன! ஆஹா! அங்கே ஸுசீலா தன் ஆயுளிலேயே முதன் முதலாக ஹிட்லர் குருசாமியைப் பார்த்தாள்; குருசாமியும் ஸுசீலாவைப் பார்த்தான். வலது கண் வலது கண்ணுடனும் இடது கண் இடது கண்ணுடனும் இரு கண்கள் இரு கண்களுடனும் ஏக காலத்தில் சந்தித்தன. ஆஹா! அந்தச் சந்திப்பின் பெருமையை என்னால் வர்ணிக்க முடியுமா? அதை வர்ணிப்பதற்கு ஒரு கம்பனோ ஒரு காளிதாஸனோ அல்லது ஒன்றரைக் கம்பனோ ஒன்றரைக் காளிதாஸனோ தான் வல்லவர்களேயன்றி என் போன்றோர்களால் அது நினைக்கவும் முடியாத காரியமல்லவா?
ஸுசீலா வந்து சேர்ந்த செய்தி அறிந்ததும், சென்னை 'வீரத் தமிழ்' மகளிர் சங்கத்தைச் சேர்ந்த பெண்மணிகள் நாலைந்து பேர் வந்து சேர்ந்தார்கள். அன்று முதல், இவர்களே ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதத்தை நடத்தி வைக்கத் தொடங்கினார்கள்.
இரண்டொரு நாளைக்கு முன் ஒரு பொல்லாத தமிழ்ப் பத்திரிகையில், "ஹிட்லர் குருசாமி உண்ணாவிரதம் ஆரம்பித்து இருபது நாளாகிறது. அவர் இதே முறையில் இன்னும் எண்பது நாள் உண்ணாவிரதம் நடத்தத் தீர்மானித்திருப்பதாக அறிகிறோம். இந்த நூறு நாள் உண்ணாவிரதத்தில் தமது தேக நிலையில் ஒரு அணுவளவு கூடக் குறைவதில்லையென்றும் அவர் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்!" என்பதாக ஒரு கேலிக் குறிப்பு வெளியாகியிருந்தது. ரயில் பிரயாணம் செய்யும் போது ஸுசீலா இதைப் பார்த்தாள். அப்போது அவளுடைய மனதிலும் சிறிது ஐயம் தோன்றியது. இப்போது ஹிட்லர் குருசாமியைப் பார்த்த பிறகு அந்த சந்தேகம் எவ்வளவு அநியாயமானது என்பதை உணர்ந்தாள். ஆகா! சூதுவாதற்ற இத்தகைய சாது முகத்தையுடையவர், இப்படி அசட்டு முழி முழிக்கும் கண்களையுடையவர் - எங்கேயாவது ஏமாற்றும் வேலையில் இறங்குவாரா? ஒரு நாளும் இல்லை. எனினும், சந்தேகப் பிராணிகளுடைய சந்தேகங்களையெல்லாம் தீர்க்கும் பொருட்டு ஸுசீலா ஒரு ஏற்பாடு செய்தாள். அன்று முதல், தினந்தோறும் ஹிட்லர் குருசாமியின் எடையை நிறுத்து அவர் வசிக்கும் வீட்டு வாசலில் போர்டில் எழுதப் போவதாக அறிவித்தாள்.
ஸுசீலா வந்தது முதல், ஹிட்லர் குருசாமி இருந்து வீடு ஜே ஜே என்று ஆயிற்று. அந்த அதிசயமான உண்ணாவிரத வீரனைப் பார்ப்பதற்கும், வீரத் தமிழ் மங்கை ஸுசீலாவைப் பார்ப்பதற்குமாக ஜனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் நிரந்தரமாக வசிப்பவர்கள் முப்பது, நாற்பது பேர் ஆகி விட்டார்கள். 'உண்ணாவிரத நிதி வசூல் கமிட்டி'யைச் சேர்ந்தவர்கள், மந்திரிகள் வீட்டு மறியல் தொண்டர்கள், வெளியூர்களிலிருந்து ஹிட்லர் குருசாமிக்குத் தொண்டு செய்ய வந்தவர்கள், 'வீரத் தமிழ் மகளிர்', இவ்வாறு நாளடைவில் கூட்டம் பெருகிற்று. இவர்களுக்கெல்லாம் கீழே தினம் மூன்று வேளை சமையல், சாப்பாடு எல்லாம் ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. ஆனால், அந்தோ! மேலே ஹிட்லர் குருசாமி, சமையல் வாசனையை மட்டும் முகர்ந்து கொண்டு கிடந்தான். ஸுசீலா வந்தது முதல் அவனுடைய தேகத்தின் நிறையும் மளமளவென்று குறைந்து வந்தது. தோற்றத்திலும் நாளுக்கு நாள் மெலியத் தொடங்கினான்.
முதலில் இரண்டு மூன்று நாட்கள் குருசாமிக்கு இது கஷ்டமாகவே இல்லை. உண்மையில் அவனுக்குப் பசியே தோன்றவில்லை. இடைவிடாமல் ஸுசீலாவின் ஞாபகமாகவே இருந்தான். ஆஹா! இத்தகைய ஒரு பெண்மணியின் நன்மதிப்பைப் பெற்றோமே! இந்த பாக்கியத்துக்காக உண்ணாவிரதம் மட்டுந்தானா இருக்கலாம்? ஒன்றும் சாப்பிடாமலே கூட இருக்கலாமே? - என்று இவ்விதம் எண்ணமிட்டான். முதல் சந்திப்பில், அவளிடம் அவனுக்கு ஏற்பட்ட வியப்பு - இவள் தானா எம்.ஏ. ஸுசீலா என்ற ஆச்சரியம் - அந்த இரண்டு மூன்று நாள் நெருங்கிய பழக்கத்தில் பரிபூர்ணமான காதலாகவே மாறிவிட்டது. ஆஹா! இத்தகைய பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதல்லலவா வாழ்வு? மற்றதெல்லாம் வாழ்வு ஆகுமா? தகப்பனார் பெரிய வக்கீல் ; சொத்தோ ஏராளம்; இவளோ எம்.ஏ. படித்தவள்; ஓ! இவளுடன் நடத்தும் இல்வாழ்க்கைதான் எவ்வளவு இன்பகரமாயிருக்கும்?
இந்த நினைவுகளுக்கிடையில் இன்னொரு பயங்கரமான எண்ணம் வந்து குறுக்கிடும். சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்? முதலில் தான் உயிரோடிருக்க வேண்டுமே? அப்போதுதானே காதல், கல்யாணம், இல்வாழ்க்கை, இவற்றினாலெல்லாம் பிரயோஜனம் உண்டு? நாளாக ஆக அவனுக்கு இந்த நினைவே அதிகமாக வந்து கொண்டிருந்தது. நாலைந்து நாள் பட்டினிக்குப் பிறகு அவனுக்கு மாரை அடைக்கத் தொடங்கிய போது, உடம்பை என்னமோ செய்த போது, அவன் ஒரு முக்கியமான தீர்மானத்துக்கு வந்தான். அதாவது ஸுசீலாவுக்காக, அவளுடைய காதலுக்காக, தான் உயிர் வாழத்தான் வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்குரிய வழிகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். திடீரென்று அவளுக்கு ஏமாற்றமளித்து, அவளுடைய காதல் முறிந்து போகும்படியும் செய்யக் கூடாதல்லவா?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸுசீலா எம். ஏ. - Susila M.A. - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஸுசீலா, ஹிட்லர், நாள், அந்த, வந்து, கொண்டு, அவளுடைய, குருசாமி, தான், குருசாமியின், உண்ணாவிரதம், அவர், இத்தகைய, வந்தது, மூன்று, அவனுக்கு, போது, சென்று, ஆயிற்று, இருபது, வீரத், தமிழ்