ஸுசீலா எம். ஏ.
6
ஸுசீலா இன்னும் இரண்டு நாள் சென்னையில்
இருந்தாள். இத்தனை நாளும் ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதத்தை நடத்தி
வைத்தவர்கள் ஸுசீலாவைச் சூழ்ந்து கொண்டு, இனிமேல் இயக்கத்தை அவளே தலைமை
வகித்து நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். "ஹிட்லர் குருசாமி
காங்கிரஸின் ஒற்றன்" என்று அவர்கள் ஆணையிட்டார்கள். இதைத் தாங்கள் முன்பே
சந்தேகித்ததாகவும், ஆனால் அன்றிரவு, உண்ணாவிரத நிதிக்கு அதுவரை வசூலாகியிருந்த
ரூ. 350யும் அமுக்கிக் கொண்டு அவன் ஓடிப்போனதிலிருந்துதான் அது நிச்சயமாயிற்று
என்றும் சொன்னார்கள். இனிமேல் ஸுசீலாதான் தங்களுடைய தலைவி என்றும், அவள்
மட்டும் உண்ணாவிரதம் ஆரம்பித்தால் தாங்கள் முன்போலவே கூட இருந்து நடத்தி
வைப்பதாகவும் உறுதி கூறினார்கள்.
ஆனால், ஸுசீலாவுக்கு இதனாலெல்லாம் போன உற்சாகம் திரும்பி வரவில்லை. அன்றிரவு வெளியான பத்திரிகையைப் பார்த்த பிறகு, அவளுக்கு நிராசையே உண்டாகி விட்டது. பத்திரிகையில் இரண்டு விஷயங்கள் வெளியாகியிருந்தன. ஒன்று, ஹிட்லர் குருசாமி வெளியிட்டிருந்த அறிக்கை. அது வருமாறு:-
"நான் உண்ணாவிரதத்தை நிறுத்தியது குறித்து பலர் பலவிதமான சந்தேகங்கள் கொள்ளாமலிருப்பதாகத் தெரிவதால், இந்த அறிக்கையை வெளியிடுவது என் கடமையாகிறது. நான் உண்ணாவிரதத்தைக் கை விட்டது, தமிழ் நாட்டின் மேன்மையைக் காப்பதற்காகவே தவிர வேறில்லை. அதாவது, நமது அருமைத் தமிழ் மூதாட்டியாகிய ஔவையாரின் அருள்மொழியை மெய்யாக்குவதற்குத்தான் அவ்வாறு செய்தேன். ஔவை என்ன சொல்லியிருக்கிறாள்?
"மானங் குலங்கல்வி,
வண்மை அறிவுடைமை,
தானந்தவ முயற்சி
தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேற்
காமுறு தல்பத்தும்
பசி வந்திடப் பறந்துபோம்"
என்று சொல்லியிருக்கிறாரல்லவா? அப்படியிருக்க, தீவிரமான பசி எடுத்த பிறகும்
நான் அந்தப் பத்தையும் பறந்து போகச் செய்யாமலிருந்தால், ஔவை வாக்கல்லவா
பொய்த்து விடும்? நிற்க.வண்மை அறிவுடைமை,
தானந்தவ முயற்சி
தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேற்
காமுறு தல்பத்தும்
பசி வந்திடப் பறந்துபோம்"
என்னுடைய உண்ணாவிரதத்தின் போது எனக்குத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் மர்மங்களைப் பற்றியும் ஸ்திரீகளின் ஆழங் காண முடியாத உள்ளத்தின் இயல்பைப் பற்றியும் அநேக விஷயங்கள் தெரிய வந்தன. அவையெல்லாம் தமிழ் மக்களைத் திகைத்து, திடுக்கிட்டு, திக்கு முக்காடச் செய்பவையாயிருக்கும். சமயம் வரும் போது அவற்றை யெல்லாம் தைரியமாக வெளிப்படுத்த நான் கொஞ்சமும் பின் வாங்க மாட்டேன்."
ஸுசீலா இதைப் படித்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். ஹிட்லர் குருசாமியின் மேல் அவளுக்கு முதலில் வந்த கோபம் மாறி அநுதாபம் உண்டாயிற்று. பாவம், கள்ளங்கபடில்லாத சாது. தற்சமயம் தன்னைச் சூழ்ந்திருக்கிறவர்களை விட அவன் எவ்வளவோ மேலல்லவா?
அவளுடைய கவனத்தைக் கவர்ந்த இன்னொரு விஷயம் பின்வரும் பெரிய தலைப்புகளின் கீழ்க் காணப்பட்டது.
"இந்தியாவின் பயங்கரமான
ஜன அபிவிருத்தி"
"உணவுப் பஞ்சத்தைத் தடுக்க வழி என்ன?"
இந்தத் தலைப்புகளின் கீழே, சீமையிலிருந்து
சமீபத்தில் திரும்பி வந்த ஸ்ரீ பாலசுந்தரம் பி.ஏ., எம்.இ.ஓ.பி.எச். சின்
படமும், அவரைப் பத்திரிகை நிருபர் பேட்டி கண்ட விவரமும் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
அதில், ஸ்ரீ பாலசுந்தரம் எல்லாருக்கும் தெரிந்த சில ஆச்சரியமான விஷயங்களை
எடுத்துக் காட்டியிருந்தார். 1930-ல் இந்தியாவின் ஜனத்தொகை 35 கோடி.
1940-ம் வருஷ ஜனக் கணிதியின்படி 39 1/2 கோடு, பத்து வருஷத்தில் 4 1/2
கோடி அதாவது 100-க்கு 12 1/2 வீதம் ஜனத்தொகை பெருகியிருக்கிறது. ஆனால்,
உணவு உற்பத்தியோ 100-க்கு 2 1/2 வீதம் தான் அதிகமாயிருக்கிறது. இப்படியே
போய்க் கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் தேசத்தில் பயங்கரமான உணவுப் பஞ்சம்
ஏற்பட்டுத்தானே தீர வேண்டும்? ஆகையால், தேசத்தில் உள்ள அறிவாளிகள் எல்லாரும்
உடனே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினாலன்றி, அப்புறம் நிலைமை சமாளிக்க
முடியாமல் போய்விடும்."உணவுப் பஞ்சத்தைத் தடுக்க வழி என்ன?"
இது சரிதான்; ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கு ஸ்ரீ பாலசுந்தரத்தின் யோசனைகள் தான் என்ன? அவர் இரண்டு யோசனைகள் கூறியிருந்தார். ஒன்று, உணவுப் பொருள் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சி. இதற்காக, மேனாட்டார் கைக்கொள்ளும் நவீன விவசாய முறைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, நமது நாட்டில் உள்ள மலை அருவிகளிலிருந்தெல்லாம் மின்சார சக்தி உண்டு பண்ணவும், அந்த மின்சார சக்தியைப் புதுமுறை விவசாயத்துக்குப் பயன்படுத்தவும் முயல வேண்டும். தாம் உடனே இந்த முயற்சியில் இறங்கப் போவதாகத் தெரிவித்து விட்டு அவர் மேலும் கூறியதாவது:-
"ஆனால், இது மட்டும் போதாது. எவ்வளவுதான் இந்த வழியில் முயற்சி செய்தாலும், நாற்பது கோடி ஜனங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் தயாரிப்பதற்கே இன்னும் பத்து வருஷம் செல்லும். இதற்கிடையில் ஜனத் தொகை பெருகிக் கொண்டே போனால்...? ஆகவே, இந்தியாவில் குறைந்தது ஒரு கோடிப் பேர் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருப்பது என்ற விரதத்தைக் கைக் கொள்வது அவசியம். நான் அத்தகைய விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக ஒரு அகில் இந்திய சங்கம் ஸ்தாபிக்கலாமென்றும் எண்ணியிருக்கிறேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில், அதாவது..."
ஸுசீலா அவ்வளவுதான் படித்தாள். அளவிலாத அருவருப்புடன் பத்திரிகையைக் கீழே போட்டாள். இதற்கு முன்னால், இவ்வுலகம் வரண்ட பாலைவனமாக அவளுக்குத் தோன்றிற்று என்றால், இப்போது புயற் காற்றினால் அலைப்புண்டு கொந்தளிக்கும் கடலைப் போல் காணப்பட்டது. இந்த தொல்லைகளையெல்லாம் மறந்து, எங்கேயாவது சில காலம், அமைதியாக இருந்து விட்டு வரவேணும். மனுஷ்ய சஞ்சாரமே இல்லாத இடமாக இருந்தால் ரொம்ப நல்லது. அத்தகைய இடம் எங்கே இருக்கிறது? ஏன்? வேறு எங்கே போய்த் தேட? குற்றாலம் ஒன்றுதான் அத்தகைய இடம்! ஆம்; குற்றாலத்துக்குப் போவதுதான் சரி. அங்கே பங்களா இருக்கிறது. பக்கத்தில் தோட்டக்காரன் குடித்தனமாயிருக்கிறான். அங்கே நேரே போய்விட வேண்டியது. அங்கிருந்து தகப்பனாருக்குக் கடிதம் எழுதி விட்டால் போகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸுசீலா எம். ஏ. - Susila M.A. - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், உணவுப், ஹிட்லர், ஸ்ரீ, கோடி, வேண்டும், விட்டு, அத்தகைய, என்ன, இரண்டு, தமிழ், அதாவது, ஸுசீலா, முயற்சி