நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்)
9
'விமோசனம்' ஒன்பதாவது இதழ் அச்சாகிக்
கொண்டிருந்தபோது தேசத்தில் உப்பு சத்தியாக்கிரஹப் பேரியக்கம் ஆரம்பமாயிற்று.
நூறு சத்தியாக்கிரஹிகள் அடங்கிய தொண்டர் படையுடன் ராஜாஜி திருச்சியிலிருந்து
வேதாரண்யத்துக்குக் கால்நடை யாத்திரை புறப்பட்டார். எனக்கு அந்த முதற்
படையிலே சேர்ந்து புறப்பட வேண்டுமென்று எவ்வளவோ ஆசையிருந்தது. ஆனால்,
நான் வரக் கூடாது என்றும், 'விமோசனம்' பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த
வேண்டும் என்றும் ராஜாஜியின் கட்டளை பிறந்தது. எனக்கு இது பிடிக்கவும்
இல்லை; அர்த்தமாகவும் இல்லை. தேசத்தில் மகத்தான சுதந்திர இயக்கம் நடக்கப்
போகிறது. அதில் வெற்றி பெற்றால் சுயராஜ்யமே வந்து விடப் போகிறது. ஒரு
நொடியில் மதுவிலக்குச் சட்டம் நிறைவேற்றி மதுவை அடியோடு எடுத்துவிடலாம்.
அத்தகைய நிலைமையில் மதுவிலக்குப் பிரசாரப் பத்திரிகையை நடத்துவது முக்கியமான
காரியமாக எனக்குத் தோன்றவில்லை. ஆயினும் ராஜாஜியுடன் எதிர்த்து வாதாட
முடியாதவனாயிருந்தேன். வேதாரண்ய யாத்திரையின் மகத்தான விவரங்களைப் பத்திரிகையில்
படிக்கப் படிக்க எனக்கு ஆத்திரம் அதிகமாகி வந்தது. ராஜாஜி சிறை புகுந்த
பிறகு ஒரே ஒரு 'விமோசனம்' இதழ் மட்டும்தான் வெளிக் கொண்டு வந்தேன். அந்த
இதழ் அச்சாகிக் கொண்டிருந்தபோது ராஜாஜிக்கு மன்றாடிக் கடிதம் எழுதிக்
கொண்டிருந்தேன். "தாங்கள் எழுதாமல் பத்திரிகை நன்றாகவும் இராது; ஜனங்களுக்கும்
சிரத்தை குறைந்து விடும்; இது வரை ஏற்பட்ட வெற்றி நஷடமாகி விடும்" என்று
பல முறை வற்புறுத்தி எழுதி, பத்தாவது இதழோடு பத்திரிகையை நிறுத்த அனுமதி
பெற்றுக் கொண்டேன். அவ்விதமே பத்தாவது இதழில் அறிக்கை பிரசுரித்து நிறுத்தி
விட்டேன்.
உண்மையிலேயே பத்திரிகையை அதே முறையில் என்னால் தொடர்ந்து நடத்தியிருக்க முடியாதுதான்.
ராஜாஜி பக்கத்தில் இருந்தவரையில் அவருக்கு மதுவிலக்கில் இருந்த உணர்ச்சியின் வேகம் என்னையும் ஆட்கொண்டிருந்தது. அவர்கள் அப்பால் சென்றதும் என்னுடைய உணர்ச்சியின் வேகமும் குறைந்து போய் விட்டது. உணர்ச்சியில்லாத எழுத்தில் சக்தி என்ன இருக்கும்? பத்திரிகைதான் எப்படி நடத்த முடியும்?
'விமோசனம்' பத்திரிகையின் இதழ்களில் நான் எழுதிய மதுவிலக்குக் கதைகள் இந்தப் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் சர்க்கார் இப்போது மதுவிலக்குச் சட்டம் செய்து வருவதால் இந்தக் கதைகள் பிரசாரத்துக்குப் பயன்படும் என்று நம்பித் தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை வெளியிடுகிறார். ராஜாஜியுடன் வாதம் செய்தாலும் செய்யலாம் சின்ன அண்ணாமலையுடன் என்னால் வாதம் செய்ய முடியாது. நான் 'வேண்டாம்' என்று தடுத்தாலும் அவர் கேட்கப் போவதில்லை. இந்த நீண்ட முன்னுரையைப் பார்த்துப் பயந்து போயாவது ஒரு வேளை ஸ்ரீ சின்ன அண்ணாமலை புத்தகம் வெளியிடுவதை நிறுத்திவிடலாம் என்ற ஒரு சின்ன ஆசை மனதின் ஒரு சிறு மூலையில் எட்டிப் பார்க்கிறது. அந்த ஆசை என்ன ஆகிறதோ, பார்க்கலாம்!
ரா.கிருஷ்ணமூர்த்தி
"கல்கி"எட்டயபுரம்
17-4-47
"கல்கி"எட்டயபுரம்
17-4-47
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்) - Neenda Mugavurai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - விமோசனம், சின்ன, நான், பத்திரிகையை, எனக்கு, இதழ், ராஜாஜி, அந்த