நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்)
5
ஆசிரமத் தொண்டர்களில் முக்கியமான இன்னொரு
மனிதர் ஸ்ரீ சிவகுருநாதன். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சாதாரணமாக
யாழ்ப்பாணத்தார் தமிழ் பேசும் விதம் நம்முடைய பேச்சு முறையோடு கொஞ்சம்
மாறுபட்டிருக்கும். ஸ்ரீ சிவகுருநாதன் பேசும் தமிழைத் தமிழ் என்று தெரிந்து
கொள்வதே கடினம், மறுமலர்ச்சித் தமிழைக் கூடத் தெரிந்து கொண்டாலும் கொள்ளலாம்.
ஸ்ரீ சிவகுருநாதனுடைய தமிழை ஆதிசிவனாலும், அகத்தியனாலும் கூடத் தெரிந்து
கொள்ள முடியாது. பேச்சினால் புரிய வைக்க முடியாததை ஸ்ரீ சிவகுருநாதன்
சிரிப்பினால் விளங்க வைத்து விடுவார். பாதி வாக்கியத்தைச் சொன்னதுமே
கலகலவென்று சிரித்து விடுவார். "அந்தப் புன்சிரிப்புக்கு எவ்வளவோ அர்த்தங்கள்"
என்று கதைகளில் அடிக்கடி படித்திருக்கிறோமல்லவா? வெறும் புன் சிரிப்புக்கே
அவ்வளவு அர்த்தம் இருக்குமானால் சிவகுருநாதனுடைய கலகலச் சிரிப்புக்கு
எவ்வளவு அர்த்தம் இருக்க வேண்டும்?
ஸ்ரீ சிவகுருநாதனுக்குத் தெரியாத விஷயம் உலகத்தில் ஒன்றுமே இல்லை.
"மூன்று புளிய மரங்கள் சேர்ந்து ஒன்றேகால் வருஷத்தில் எவ்வளவு காய்க்கும்?" என்றால் பதில் சொல்வார்.
"ஒரு சேர் பசும்பால்; ஒரு சேர் ஆட்டுப்பால் ஒரு சேர் புலிப் பால்... இவற்றின் சராசரி நிறை என்ன?" என்று கேட்டால், பளிச்சென்று பதில் கிடைக்கும்.
"இந்தக் கிணற்றிலே, மூன்று அடி தண்ணீர் இருக்கிறதே? இதற்கு நாலு அடிக்கு அப்பால் தோண்டி எடுக்கும் கிணற்றில் ஏன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை?" என்று கேட்டால் அதற்கும் ஏதாவது விடைக் கிடைக்கும்.
எனினும் அவர் என்ன சொன்னால்தான் என்ன? நமக்கு ஒன்றுமே தெரியப்போவதில்லை!
சில மாதங்களுக்கு முன்னால் ஸ்ரீ சிவகுருநாதன் ஒரு பெரிய விசாலமான பெட்டியை எடுத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்தார். தமது சகதர்மிணியையும் அழைத்துக் கொண்டு வந்தார். பெட்டியைத் திறந்து ஏதேதோ சட்டங்களையும் சக்கரங்களையும் மற்றச் சிறிய பெரிய கருவிகளையும் எடுத்து அறை முழுவதும் பரப்பினார். அந்தக் கருவிகளின் மீது கால் வைக்காமல் அங்குமிங்கும் தாவிக் குதித்து அவற்றைப் பார்க்க வேண்டியிருந்தது.
"இது ஒரு புது விதச் சர்க்கா; பழைய சர்க்காவைப்போல் ஒன்றுக்கு மூன்று மடங்கு நூல் நூற்கும். இதை அக்கக்காகக் கழற்றலாம்; மறுபடியும் பூட்டலாம்" என்றார். (அப்படி அவர் சொன்னதாக அவருடைய முகபாவங்களிலிருந்தும் சமிக்ஞைகளிலிருந்தும் தெரிந்து கொண்டேன்.)
அவர் சொன்னபடியே அக்கக்காகக் கழற்றிக் காட்டினார்; திரும்பப் பூட்டிக் காட்டினார்!
"இந்தப் புது இராட்டையின் ஒவ்வொரு பகுதியையும் படம் எழுதிப் பிளாக் செய்ய வேண்டும். இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போகிறேன். பிளாக் செய்து தரமுடியுமா?" என்று கேட்டார். "ஆகட்டும்" என்றேன். "நான் இப்போது வர்தா ஆசிரமத்தில் இருக்கிறேன். பிளாக்குகள் செய்து வைத்தால் மறுபடி வந்து எடுத்துப் போகிறேன்" என்று சொன்னார். அவ்விதமே மேற்படி புது இராட்டையின் பகுதிகளைத் தனித்தனியாகப் படம் எழுதச் செய்து பிளாக்கும் செய்து வைத்தேன். ஆனால், ஸ்ரீ சிவகுருநாதன் இன்று வரை வந்தபாடில்லை. அவருடைய புது மாதிரி இராட்டையைப் பச்சைக் கீரைத்தண்டு என்று நினைத்து வர்தா ஆசிரமத்தில் யாராவது சாப்பிட்டு விட்டார்களோ என்னமோ?
காந்தி ஆசிரமத் தொண்டர்களில் இன்னொருவரான ஸ்ரீ நாராயணராவுக்கு அந்தக் காலத்தில் "சாயக்கார நாராயண ராவ்" என்று பெயர். கதர்த் துணிக்கு நாட்டு மூலிகைகளையும் நாட்டுச் சரக்குகளையும் கொண்டு சாயம் போடும் முறையை அவர் கற்றுக் கொண்டு வந்திருந்தார். காந்தி ஆசிரமத்தில் உற்பத்தியாகும் கதர்த் துணியில் ஒரு பகுதிக்குச் சாயம் போடும் வேலையையும், விதவிதமான கரைகளும் பூக்களும் அச்சடிக்கும் வேலையையும் செய்து வந்தார்.
ஸ்ரீ நாராயண ராவ் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். 1921-ல் ஒத்துழையாமை செய்த பிரபல வக்கீலான ஸ்ரீ எம்.ஜி.வாசுதேவய்யாவின் நெருங்கிய உறவினர். இப்போது காந்தி ஆசிரமத்தின் மானேஜராயிருந்து திறமையாக நடத்தி வருகிறார்.
குழந்தை போன்ற குணமுடைய விசுவநாதன் தேனீ வளர்க்கும் கலையில் தேர்ச்சி பெற்ற பிள்ளை. நீங்களும் நானும் தேனீயின் அருகில் சென்றால் அது நம்மைக் கொட்டும். விசுவநாதன் தேனீயிடம் சென்றால் முத்தம் கொடுக்கும்! அப்படிப் பட்ட விசுவநாதன் இப்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. எங்கே இருந்தாலும் அவர் சௌக்கியமாக நன்றாயிருக்கவேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்.
டாக்டர் ரகுராமன் நான் சென்ற ஒரு வருஷத்துக்குப் பிறகு காஞ்சி நகருக்குப் போய் விட்டார். அங்கு ஹரிஜனத் தொழிற்சாலை முதலிய பல பொது ஸ்தாபனங்களில் முக்கிய பொறுப்பு வகித்து நடத்தி வருகிறார்.
டாக்டர் ரகுராமன் பத்தரை மாற்றுத் தங்கம் என்றால், அவருக்குப் பதிலாக வந்த டாக்டர் ரங்கநாதன் பத்தே முக்கால் மாற்றுத் தங்கம். இன்னும் திருச்செங்கோட்டில் தொண்டு புரிந்து வருகிறார்.
உப்பு சத்தியாக்ரஹ இயக்கம் நடந்த வருஷத்தில் தேசத் தொண்டில் ஈடுபட்டு ஆசிரமத்துக்கு வந்த ஸ்ரீ தியாகராஜன் இன்று வரையில் அரிய சேவை புரிந்து வருகிறார்.
மொத்தத்தில் காந்தி ஆசிரமத் தொண்டர்கள் எல்லாருமே ஒரு தனி இனமாகத் தோன்றினார்கள். சுறுசுறுப்பும், ஊக்கமும், தொண்டு செய்யும் ஆர்வமும் கொண்டவர்களாய் இருந்தார்கள்.
காந்தி ஆசிரமத்தை விட்டு நான் விலகி மீண்டும் பத்திரிகைத் தொழிலுக்கு வந்த சில வருஷங்களுக்குப் பிறகு மகாத்மா காந்தி தமிழ் நாட்டில் சுற்றுப் பிரயாணத்துக்கு வந்திருந்தார். அப்போது "மகாத்மா சொன்னதை வாபஸ் வாங்க வேண்டும்" என்று கிளர்ச்சி செய்யும் அளவுக்கு நமது அருமைத் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை! "முற்போக்குச் சக்தி" அவ்வளவு தூரம் தமிழ்நாட்டை ஆட்கொண்டிருக்கவில்லை! தமிழ் மக்கள் அனைவரும் மகாத்மாவிடம் பக்தியுடன் இருந்த காலம். அவர் சொன்னபடி எல்லா விஷயத்திலும் நடக்க முடியாவிட்டாலும் மகாத்மாவின் வாக்கை வேதவாக்காக அனைவரும் மதித்தார்கள். அந்தச் சுற்றுப் பிரயாணத்தின் போது மகாத்மா காந்தி தமது பெயரைக் கொண்ட புதுப்பாளையம் ஆசிரமத்தில் இரண்டு நாள் ஓய்வுக்காகத் தங்கினார். பழைய உறவை நினைத்துக் கொண்டு நானும் அச்சமயம் காந்தி ஆசிரமத்துக்குச் சென்றேன். என்னுடன் இன்னும் சில நண்பர்களும் சென்னையிலிருந்து வந்தார்கள். பிரயாணத்தின் போது அவர்கள் காந்தி ஆசிரமத்தைப் பற்றி எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் "காந்தி ஆசிரமத் தொண்டர்கள் எப்படி? நீர் 'பூரி யாத்திரை'க் கட்டுரையில் வர்ணித்திருக்கும் தொண்டர்களைப் போன்றவர்கள்தானோ?" என்று கேட்டார். 'பூரி யாத்திரை' என்ற கட்டுரையில் 1927-ல் நடந்த டில்லி காங்கிரஸ் அநுபவத்தைப் பற்றி நான் எழுதி இருந்தேன். அதில் குறிப்பிட்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர் வர்ணனை பின்வருமாறு:-
"காங்கிரஸுக்கு வெளியூர்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திறங்குவார்கள். ரயிலை விட்டிறங்கியதும் அவர்கள் பிளாட்பாரத்தில் மூட்டைகளையும் பெட்டிகளையும் குவித்துக் கொண்டு நிற்பார்கள். உடனே நாலைந்து காங்கிரஸ் தொண்டர்களை அங்கே காணலாம்; அவர்களில் தலைவராயிருப்பவர், ரயிலிலிருந்து இறங்கிய பிரதிநிதிகளின் மூட்டைகளும் பெட்டிகளும் மோட்டாருக்குப் போக வேண்டுமென்று தீர்மானம் செய்வார். மற்றத் தொண்டர்கள் அத்தீர்மானத்தை ஆமோதிப்பார்கள். அத்துடன் தொண்டர்களின் கடமை தீர்ந்தது. வந்த பிரதிநிதிகள் தத்தம் மூட்டைகளையும் பெட்டிகளையும் தூக்கிக் கொண்டுபோய் மேற்படி தீர்மானத்தையும் நிறைவேற்றி வைக்க வேண்டும்!"
இவ்விதம் நான் எழுதியிருந்ததைப் படித்திருந்தபடியால்தான் என்னுடன் வந்த நண்பர் "காந்தி ஆசிரமத் தொண்டர்களும் அப்படிப்பட்டவர்கள்தானோ?" என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் சொன்னேன்:- "இல்லை, ஐயா, இல்லை. அந்த மாதிரி வெறும் தீர்மானம் செய்வதோடு நிற்கக்கூடிய ஒரே ஒரு தொண்டர் காந்தி ஆசிரமத்தில் ஒரு காலத்தில் இருந்தார். அந்த வேலையை அவர் நல்ல வேளையாக விட்டு விட்டுப் பத்திரிகைத் தொழிலுக்குப் போய்விட்டார்! தற்சமயம் காந்தி ஆசிரமத்தில் உள்ள தொண்டர்களில் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் யாரும் இல்லை. தீர்மானம் செய்வது ஒருவர், அதை நிறைவேற்றி வைப்பது இன்னொருவர் என்பதையே அறியார்கள். ஆகையால் நீங்கள் சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து இறங்கிய உடனே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காந்தி ஆசிரமத் தொண்டர்கள் அங்கு விருந்தினரை வரவேற்பதற்கு வந்திருப்பார்கள். உங்களுடைய பெட்டி படுக்கைகளைத் தூக்கிப் போய் பஸ்ஸில் எறிவது போல் உங்களையும் எறிந்தாலும் எறிந்து விடுவார்கள்!"
இவ்விதம் நான் சொன்னபடியே அன்றைக்கு ஏறக்குறைய நடந்தது. என்னுடன் வந்த நண்பர்கள் தங்கள் பெட்டி படுக்கைகள் படும்பாட்டைக் கண்ட பிறகு, தங்களையும் தொண்டர்கள் அந்த மாதிரி பஸ்ஸில் தூக்கி எறிவதற்குள்ளே தாங்களே அவசர அவசரமாக ஏறிக்கொண்டார்கள்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்) - Neenda Mugavurai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - காந்தி, ஸ்ரீ, நான், கொண்டு, அவர், ஆசிரமத்தில், வந்த, ஆசிரமத், சிவகுருநாதன், செய்து, இல்லை, வேண்டும், தொண்டர்கள், புது, வருகிறார், தெரிந்து, தமிழ், அந்த, டாக்டர், விசுவநாதன், தீர்மானம், காங்கிரஸ், என்னுடன், மகாத்மா, பிறகு, பற்றி, சேர், மூன்று, சேர்ந்தவர், தொண்டர்களில், என்ன, பெரிய, இப்போது, கேட்டார், வந்தார், மாதிரி