நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்)
6
காந்தி ஆசிரமத்துக்கு நான் போய்ச் சேர்ந்தது
முதல் சில மாத காலம் வரை கணக்கு எழுதுவதில் ஈடுபட்டிருந்தேன். ஆசிரம
வாழ்க்கை ஆனந்தமாகத்தான் இருந்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து
பிரார்த்தனைக்குப் போய் உட்காருவது மட்டும் ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தது.
சில நாள் காலைப் பிரார்த்தனை செய்த பிறகு மறுபடியும் போய்ப் படுத்துக்
கொண்டு விடுவேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு காலையில் எழுந்திருப்பது பழக்கமாகிவிட்டது.
காலைப் பிரார்த்தனையைக் காட்டிலும் மாலை ஏழு மணிப் பிரார்த்தனை எப்போதும் சுவாரஸ்யமாயிருக்கும். மகாத்மாவின் சத்தியாகிரஹ ஆசிரமத்தில் நடப்பதை ஒட்டி, பகவத் கீதை பாராயணம், நாமாவளி பஜனை முதலியவை நடைபெறும். அவற்றோடு "முக்தி நெறி அறியாத" என்னும் திருவாசகமும், "மாற்றறியாத செழும் பசும் பொன்னே!" என்னும் அருட்பாவும் பாடப் பெறும். "பாடப்பெறும்" என்று சம்பிரதாயமாகத்தான் சொல்லுகிறேன். அந்தப் பாட்டுகள் இன்னும் உயிரோடிருப்பது மாணிக்கவாசகர், ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் ஆகியவர்களின் தபோ வலிமையினால் தான். மகாத்மா நடத்தும் மாலை பஜனைகளில் ஸ்ரீ மதி மீராபென் என்னும் பெயர் பூண்ட மிஸ்ஸ்லெட் அம்மையார் மீராபாயின் கீதங்களைப் பாடுவதுண்டு. அவ்வளவு துரதிர்ஷ்டத்தை மாணிக்கவாசகர் செய்யவில்லையென்று சொல்லலாம். ஆனால் அடுத்தபடி துரதிர்ஷ்டக்காரர் என்றே சொல்ல வேண்டும். ஆசிரமத் தொண்டர்களின் சாரீரம் அவ்வளவு சுகமாயிருக்கும்! ஆசிரமத்தில் எனக்கு ஏதாவது கஷ்டம் இருந்ததென்றால், அது மேற்படி தமிழ்ப்பாடல்களைத் தொண்டர்கள் பாடக் கேட்பதொன்றுதான்.
பிரார்த்தனை ஒருவாறு முடிந்த பிறகுதான் உண்மையில் சுவாரஸ்யமான கட்டம் ஆரம்பமாகும். அதாவது, பொது விஷயங்களைப் பற்றிச் சம்பாஷணை நடைபெறும். அரசியல் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள், சமய சம்பந்தமான சந்தேகங்கள் எல்லாம் விவாதிக்கப்படும். ஆசிரமத் தலைவர் ராஜாஜி, ஆசிரமத்தில் இருக்கும் காலங்களில் மேற்படி சம்பாஷணைகள் வெகு ரஸமாயிருக்கும். அத்தகைய சம்பாஷணைகளில் கலந்து கொண்டு அநுபவிப்பதற்காக இன்னும் ஒரு ஜன்மம் இந்த பூமியில் எடுக்கலாம் என்று தோன்றும்.
ஆசிரமத்துக்கு நான் போய்ச் சில மாத காலத்திற்குப் பிறகு ராஜாஜி ஒரு நாள் என்னை அழைத்து "மது விலக்கு வேலையைத் தீவிரமாக ஆரம்பிக்கத் தீர்மானித்திருக்கிறேன். மதுவிலக்குப் பத்திரிகையையும் உடனே ஆரம்பித்துவிட வேண்டியது தான்" என்றார். அந்த வேலைக்காகவே நான் ஆசிரமத்துக்குச் சென்றேனாதலால், கணக்கு எழுதும் வேலையை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு ஆசிரமக் காரியாலயத்திலிருந்து ராஜாஜியின் சொந்தக் காரியாலயத்துக்கு வேலை பார்ப்பதற்காகச் சென்றேன்.
ராஜாஜியின் காரியாலயம் அவருடைய வீட்டிலேயே இருந்தது. ஆசிரமத் தலைவருக்கு மரியாதை செய்வதற்காக அவருடைய வீடு கொஞ்சம் விசேஷ முறையில் கட்டப் பெற்றிருந்தது. மற்றவர்களுடைய வீடுகளுக்கும் ஆசிரமக் காரியாலயத்துக்கும் மேற்கூரை பனை ஓலையினால் வேயப்பட்டிருந்தது. ராஜாஜியின் வீட்டிற்கு மட்டும் கள்ளிக் கோட்டை ஓடு போட்டிருந்தது. நானும் எனக்கு உத்தியோகத்தில் ஏதோ 'பிரமோஷன்' கிடைத்து விட்டதாகவே எண்ணிக் கொண்டு கொஞ்சம் கர்வத்துடனேயே புதுக் காரியாலயத்துக்குப் போனேன். போன பிறகு தான் புதுக் காரியாலயத்தின் இலட்சணம் தெரிந்தது.
ஆசிரமத் தலைவரின் வீடு மொத்தம் பதினேழு அடி நீளமும் பத்தடி அகலமும் கொண்டது. நடுவில் ஒரு குறுக்குச் சுவர், மேற்படி பிரம்மாண்டமான மாளிகையை, சமையலறையாகவும் ஆபீஸ் ஹாலாகவும் பிரித்திருந்தது. சமையல் அறை ஏழு அடிக்குப் பத்தடி அளவு கொண்டது. இதிலேதான் ராஜாஜியின் அருமைப் புதல்வி லக்ஷ்மி (பிற்பாடு ஸ்ரீமதி தேவதாஸ் காந்தி) தகப்பனாருக்கும் தமையனுக்கும் சமையல் செய்தார். பத்து அடிக்குப் பத்தடி இருந்த விஸ்தாரமான ஹால், ராஜாஜியின் காரியாலயமாகவும் வந்தவர்களை வரவேற்கும் டிராயிங் ரூமாகவும் இரவில் ராஜாஜிக்குப் படுக்குமிடமாகவும் விளங்கியது! பகல் வேளையில் எல்லாம் கயிற்றுக் கட்டில்களும் படுக்கைகளும் வெளியில் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும். இரவில் ஹாலுக்குள் இடம் பெறும்.
ராஜாஜி அஞ்சா நெஞ்சம் படைத்தவர் என்பதும், வானம் இடிந்தாலும் மனம் கலங்காதவர் என்பதும் யாவரும் அறிந்த விஷயம். ஆயினும் ஒரு விஷயத்தில் அவருக்குப் பெரும் பயம் உண்டு. "பக்கத்து ஊரில் ஒரு வீட்டில் மூட்டைப் பூச்சி இருந்ததாம்!" என்று யாராவது சொல்லி விட்டால் போதும். அன்றிரவு விளக்குப் போட்டுக் கொண்டு அரை மணி நேரம் தாம் படுக்கும் கட்டிலைப் பரிசோதனை செய்வார்! கயிற்றுக் கட்டிலின் மரச் சட்டங்களிலும் கால்களிலும் எத்தனையோ இடுக்குகள் இருக்குமல்லவா? அவ்வளவையும் துப்புரவாகப் பரிசோதனை செய்து பார்ப்பார்! படுக்கைத் துணிகளையும் தலையணைகளையும் பல முறை உதறுவார்! இது ஒரு புறமிருக்க, தினந்தோறும் சாதாரணமாகக் கட்டில்களும் படுக்கைகளும் வெயிலில் கிடந்து காய்ந்தே தீர வேண்டும்.
மேற்படி பத்து அடிக்குப் பத்தடி விஸ்தீரணமுள்ள ஆபீஸ் ஹாலுக்கு நான் போய் ராஜாஜியின் பக்கத்தில் வேலை பார்க்க உட்கார்ந்த போது அளவில்லாத உற்சாகம் கொண்டேன். அரைமணி நேரத்துக்குள்ளே உற்சாக மெல்லாம் வியர்வையாக மாறி உடம்பெல்லாம் ஸ்நானம் செய்வித்தது.
உஷ்ணம் பொறுக்க முடியாமல் "உஸ் உஸ்" என்றேன். பக்கத்தில் கிடந்த காகித அட்டையை எடுத்து விசிறிக் கொண்டேன்.
"என்ன சமாச்சாரம்? என்ன 'உஸ் உஸ்' என்கிராய்?" என்று ராஜாஜி கேட்டார்.
"ஒன்றுமில்லை; இந்தக் கள்ளிக் கோட்டை ஓட்டுக்கு இவ்வளவு சக்தி உண்டு என்பது இது வரையில் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! வான வெளியிலுள்ள வெயில் கிரணங்களையெல்லாம் இழுத்து நம் தலை மேல் அல்லவா விடுகிறது? இந்த உஷ்ணத்தில் உட்கார்ந்து எப்படித்தான் வேலை செய்கிறீர்களோ?" என்று சொன்னேன்.
அவ்வளவு தான்; ராஜாஜி மற்ற வேலைகளை நிறுத்தி விட்டு, வெயிலின் உயர்ந்த குணங்களைப் பற்றி எனக்குச் சொல்ல ஆரம்பித்தார்.
"சென்னைப் பட்டணத்தில் இருப்பவர்கள் வெயிலில் கெடுதல் இருப்பதாக நினைக்கிறார்கள். ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் போகிறார்கள். இதைப் போல் அறிவீனம் வேறு கிடையாது. வெயில் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? அதிலும் நம்முடைய நாட்டுச் சுதேசி வெயில் இருக்கிறதே, அதனுடைய மகிமையைச் சொல்லி முடியாது. நாம் இந்த ஊர் வெயிலில் பிறந்து, இந்த ஊர் வெயிலில் வளர்ந்தவர்கள். வள்ளுவரும், கம்பரும் இந்த வெயிலில்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார்கள்? வெயிலிலுள்ள 'அல்ட்ராவயலெட்' கிரணங்களின் நோய் போக்கும் மருந்து குணத்தைப் பற்றி நீ அறிந்ததில்லையா? அதிலும் மேற்படி கிரணங்கள் கள்ளிக் கோட்டை ஓட்டின் வழியாக உஷ்ணமாய் மாறி வரும் போது அபார சக்தி உள்ளதாகின்றன. வெயிலுக்குப் பயப்படுவது சுத்தப் பிசகு!" என்று ராஜாஜி சொன்ன வார்த்தைகளை பக்தி சிரத்தையுடன் கேட்டுக் கொண்டேன். "வெயில் உடம்புக்கு நல்லது!" என்று எனக்கு நானே பல தடவை மந்திரத்தைப் போல் ஜபித்தேன். ஆனாலும் அந்தப் பாழாய்ப் போன வெயில் என்னை வறுத்து எடுக்கத்தான் செய்தது. கொஞ்ச நாளில் வேலையின் சுவாரஸ்யத்தில் தன்னை மறக்கும் நிலை ஏற்பட்ட பிறகே வெயிலின் கொடுமையையும் என்னால் மறக்க முடிந்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் சென்னைக்கு வந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது ஒரு மாதப் பத்திரிகையில் (அது இப்போது மறைந்து போயிற்று) ராஜாஜியைப் பற்றி ஒரு விசித்திரமான செய்தி வந்திருந்தது. அது என்ன வென்றால், "ராஜாஜி கதர் இயக்கத்துக்காகச் சேர்த்த பணத்தை எடுத்துக் கொண்டு போய்க் கொடைக்கானல் மலையில் சுகவாசம் செய்து விட்டு வந்தார்!" என்பதுதான்.
ராஜாஜியின் கவனத்துக்கு இது கொண்டு வரப்பட்டதும் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு, "அந்தப் பத்திரிகையின் மேல் வழக்குத் தொடரப் போகிறேன்!" என்றார். செய்தி கொண்டு வந்தவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. "அழகாய்த்தான் இருக்கிறது! தாங்கள் அந்தப் பத்திரிகையின் மேல் கேஸ் போடவாவது? அதை எத்தனை பேர் படித்திருக்கப் போகிறார்கள்? படித்திருந்தால்தான் யார் நம்பப் போகிறார்கள்? தாங்கள் கேஸ் போட்டால் அந்தப் பத்திரிகைக்கு அல்லவா பிரபலம் ஏற்படும்" என்றார் அந்த நண்பர்.
அதற்கு ராஜாஜி சொன்ன பதிலாவது:-
"அப்படி அந்தப் பத்திரிகைக்குப் பிரபலம் வந்தால் வந்து விட்டுப் போகட்டும். என்னுடைய நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவோ, யாராவது அந்த அவதூறை நம்பப் போகிறார்கள் என்றோ நான் கேஸ் போடவில்லை. பத்திரிகை நடத்துகிறவர்கள் இந்த மாதிரி பொறுப்பற்ற முறையில் பொய் அவதூறு சொல்ல இடங்கொடுப்பது தேச நன்மைக்குப் பாதகமாகும். என்னுடைய வேலையை இது பாதிக்கப் போவதில்லை; ஆனால் மற்றவர்களைப் பற்றி இம்மாதிரியெல்லாம் எழுதினால் பொது ஊழியம் செய்வதே முடியாத காரியமாகிவிடும். ஆகையால் வழக்குத் தொடர்ந்தே தீரவேண்டும்" என்றார்.
அவ்விதமே வழக்குத் தொடரப்பட்டது. காலஞ்சென்ற ஜனாப் அப்பாஸ் அலி அவர்கள் அப்போது தலைமைப் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரேட். அவருடைய கோர்ட்டில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அன்று நானும் ஆஜராகியிருந்தேன். ராஜாஜியின் சிநேகிதர்களும் பந்துக்களும், இன்னும் பலரும் வந்திருந்தார்கள்.
ஜனாப் அப்பாஸ் அலிகான் வழக்கு இன்னதென்று ஒருவாறு தெரிந்து கொண்டாலும், குறிப்பிட்ட பத்திரிகையை வாங்கி விஷயத்தைப் படித்துப் பார்த்தார். பிறகு வழக்கில் எதிரியான பத்திரிகை ஆசிரியரை ஏற இறங்கப் பார்த்தார். "என்ன ஐயா! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.
"எதிர் வழக்காடப் போகிறேன்" என்றார் பத்திரிகாசிரியர்.
"நிஜமாகவா? இந்த மாதிரி வழக்கிலா எதிர் வழக்கு ஆடப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.
பத்திரிகாசிரியர் சிறிது திகைத்து நின்றுவிட்டு, "ஆமாம்" என்று பதிலளித்தார்.
மாஜிஸ்ட்ரேட் ராஜாஜியைப் பார்த்து, "தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றார்.
"வழக்கை நடத்த வேண்டியதுதான்" என்றார் ராஜாஜி.
மாஜிஸ்ட்ரேட் அப்பாஸ் அலிகான் இன்னும் ஒரு தடவை மேற்படி பத்திரிகை விஷயத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, ராஜாஜியை நோக்கி, "மிஸ்டர் ராஜகோபாலாச்சாரியார்! இந்தக் கேஸை மேலே நடத்துவதற்கு முன்னால் தங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பதில் சொல்லலாமா?" என்றார்.
"கேளுங்கள்!" என்றார் ராஜாஜி.
"மிஸ்டர் ராஜகோபாலாச்சாரியார்! தாங்கள் எப்போதாவது கொடைக்கானலுக்குப் போனதுண்டா?" என்று மாஜிஸ்ட்ரேட் கேட்டார்.
"இல்லை" என்று ராஜாஜி பதில் சொன்னதும், கோர்ட்டில் அப்போது கூடியிருந்த அவ்வளவு பேரும் (குமாஸ்தாக்கள், பியூன்கள், அடுத்த கேஸுக்காக வந்து காத்திருந்த குற்றவாளிகள் உள்பட) ஒரேயடியாகச் சிரித்ததில், கோர்ட்டே அல்லோலகல்லோலப் பட்டுப் போயிற்று.
சிரிப்புச் சத்தம் அடங்கியதும், ஜனாப் அப்பாஸ் அலி மறுபடியும் பத்திரிகாசிரியரைப் பார்த்து "மிஸ்டர்! இன்னமும் எதிர் வழக்காடப் போகிறீர்களா?" என்று கேட்டார்.
பத்திரிகாசிரியர் விழித்துக் கொண்டு நின்றார். அதைப் பார்த்த எனக்கே அவர் விஷயத்தில் பரிதாபம் உண்டாகி விட்டது.
மீண்டும் ஜனாப் அப்பாஸ் அலி, "மிஸ்டர்! என் புத்திமதியைக் கேளுங்கள். பேசாமல் தாங்கள் எழுதியதை வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். சி.ஆர். நல்ல மனிதர் என்று எல்லாருக்கும் தெரியும். நீர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், அவரும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வார்!" என்றார்.
பத்திரிகாசிரியர் தமது வக்கீலையும் இன்னும் இரண்டொரு நண்பர்களையும் கலந்து கொண்டு அப்படியே செய்வதாகக் கூறினார். வழக்கு முடிந்தது.
காந்தி ஆசிரமத்தில் ராஜாஜி நடத்திய வாழ்க்கையையும், வெயிலின் மேல் அவருக்கிருந்த அபார பிரேமையையும் நன்கு அறிந்தவனாதலால், மேற்படி "கொடைக்கானல் வழக்கு" எனக்கு மிகவும் ரஸமாயிருந்தது. அதை நான் மறக்கவே முடிவதில்லை. அதனால் தான் அவ்வளவு சம்பந்தமில்லாவிட்டாலும், பாதகமில்லையென்று மேற்படி சம்பவத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்) - Neenda Mugavurai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ராஜாஜி, என்றார், கொண்டு, மேற்படி, ராஜாஜியின், நான், பிறகு, என்ன, அந்தப், வெயில், கேட்டார், தாங்கள், அப்பாஸ், வழக்கு, இன்னும், தான், வெயிலில், அவ்வளவு, பத்திரிகாசிரியர், மிஸ்டர், மேல், போகிறார்கள், ஜனாப், மாஜிஸ்ட்ரேட், பற்றி, பத்தடி, ஆசிரமத்தில், ஆசிரமத், எனக்கு, கொண்டேன், என்னும், சொல்ல, காந்தி, போகிறீர்கள், எதிர், கேளுங்கள், போய், பிரார்த்தனை, பத்திரிகை, கேஸ், வெயிலின், அவருடைய, கள்ளிக், வேலை, அந்த, அடிக்குப், வழக்குத், வந்து, கோட்டை