நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்)
7
மீண்டும் விட்ட இடத்தில் தொடங்குகிறேன்.
மது விலக்குப் பிரச்சாரத்துக்காக ஒரு மாதப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்றும்,
அதற்கு 'விமோசனம்' என்று பெயர் வைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் ராஜாஜி
கூறியபோது எனக்குப் பல சந்தேகங்கள் தோன்றின.
"மது விலக்கு என்கிற ஒரு விஷயத்துக்கு மட்டும் தனிப் பத்திரிகையா? அவ்விதம் நடத்த முடியுமா?" என்று கேட்டேன்.
"ஏன் நடத்த முடியாது? பேஷாக நடத்த முடியும்?" என்றார் ராஜாஜி.
"பத்திரிகையின் பக்கங்கள் எத்தனை?"
"நாற்பது பக்கங்கள்."
"நாற்பது பக்கமும் மதுவிலக்கு விஷயமேயா?"
"ஆமாம்."
"நாற்பது பக்கத்துக்கு மது விலக்கு விஷயம் எப்படித் திரட்டுவது? அப்படித் திரட்டி பத்திரிகை கொண்டு வந்தாலும் ஜனங்கள் வாங்குவார்களா?"
"ஏன் வாங்க மாட்டார்கள்? வாங்கா விட்டால் வாங்கச் செய்ய வேண்டும்."
"எப்படி வாங்கச் செய்வது? அடிபிடி கட்டாயம் செய்ய முடியுமா? படிக்க சுவாரஸ்யமாயிருந்தால் தானே பத்திரிகையை வாங்குவார்கள்?"
"படிக்க சுவாரஸ்யமா யிருக்கும்படிச் செய்யலாம். நீ பார்த்துக் கொண்டேயிரு. முதல் இதழை நான் தனியாகவே தயாரித்துக் காட்டுகிறேன்!"
அவ்விதமே ராஜாஜி 'விமோசனம்' முதல் இதழைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஒரு வாரத்தில் தயாரித்தும் முடித்து விட்டார். அட்டைப் பக்கத்துக்கு மதுப் புட்டியாகிய அரக்கனை ஜனங்கள் விரட்டியடிப்பது போன்ற படம். உள்ளே முதல் பக்கத்துக்கு பாரதியாரின் "ஜய பேரிகை கொட்டடா!" என்ற பாட்டைத் தழுவி "மது வெனும் பேய்தனை அடித்தோம்!" என்று ஒரு பாட்டும் படமும். மதுவிலக்கின் அத்தியாவசியத்தைப் பற்றிய தலையங்கம்.
குடியின் தீமையை விளக்கும் இரண்டு கதைகள். இன்னும் சில கட்டுரைகள். "கடற்கரைக் கிளிஞ்சல்" என்னும் தலைப்பில் அநேக சிறு குறிப்புகள். ஆங்காங்கே மதுவிலக்குப் பிரசாரப் படங்கள். இவ்வளவும் தயாராகி விட்டன. படங்களுக்கு ஒருவாறு உருவங்களையெல்லாம் குறிப்பிட்டு ராஜாஜி பிளான் போட்டுக் கொடுத்து விடுவார். அவற்றைப் பார்த்து சரியான படங்களைச் சென்னையில் ஸ்ரீ செட்டி என்பவர் செய்து கொடுத்து வந்தார். [துரதிருஷ்டவசமாக ஸ்ரீ செட்டி அகால மரண மடைந்தார். இவருடைய இளைய சகோதரர்தான் பிற்காலத்தில் பிரசித்தியடைந்த ஸ்ரீசேகர்.]
அமெரிக்காவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல மதுவிலக்குப் பிரசார நூல்களும் பத்திரிகைகளும் ராஜாஜி தருவித்திருந்தார். அவற்றைப் படித்து "மது விலக்கு வினாவிடை" என்னும் ஒரு விஷயத்துக்கு மட்டும்முதல் இதழுக்கு நான் எழுதிக் கொடுத்ததாக ஞாபகம் இருக்கிறது. விஷயம் எல்லாம் தயாரான பிறகு பத்திரிகையை எங்கே அச்சடிப்பது என்ற கேள்வி ஏற்பட்டது. காந்தி ஆசிரமத்தில் அச்சுக் கூடம் இல்லை. பல யோசனைகள் செய்த பிறகு அப்போது சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த ஹிந்தி பிரச்சார அச்சுக்கூடத்தில் அச்சடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
"திருவல்லிக்கேணியில் பத்திரிகை அச்சடிப்பது சரிதான். அச்சடித்த பிரதிகளை என்ன செய்வது?" என்று கேட்டேன்.
"ஒரே பார்சலாகக் கட்டி இங்கே கொண்டு வந்து சந்தாதார்களுக்கு அனுப்புவது. காந்தி ஆசிரமம் தபாலாபீசுக்கும் வேலை வேண்டுமோ, இல்லையோ?" என்றார் ராஜாஜி. "சந்தாதார் இருக்கும் இடமே தெரியவில்லையே? அவர்களை எப்படிப் பிடிப்பது?" என்று கேட்டேன். "பார்த்துக் கொண்டேயிரு; போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள்!" என்று ராஜாஜி சொன்னார். அப்போது தமிழ் மக்களிடையே பத்திரிக்கை படிக்கும் வழக்கம் நன்கு பரவியிருக்கவில்லை.
ஸ்ரீ வ.வே.சு. ஐயர் அவர்களின் 'பால பாரதி'யும் ஸ்ரீ ஏ.மாதவய்யா அவர்களின் 'பஞ்சாமிர்தம்' என்னும் பத்திரிகையும் எவ்வளவு கஷ்டப்பட்டன என்பதை நான் அறிந்திருந்தேன். 'பால பாரதி'க்கு 800 சந்தாதார்களுக்கு மேலும், 'பஞ்சாமிர்த'த்துக்கு 400 சந்தாதார்களுக்கு மேலும் சேரவில்லை. ஸ்ரீ மாதவய்யா பத்திரிகை போட்டுப் பண நஷ்டமும் அடைந்தார். எத்தனையோ விதவிதமான ரஸமான விஷயங்களை வெளியிட்ட பத்திரிகைகளே இவ்வளவு இலட்சணத்தில் நடந்திருக்கும்போது மது விலக்குப் பிரசாரத்துக்காக மட்டும் நடத்தும் பத்திரிகை எவ்விதத்தில் வெற்றியடையப் போகிறது? குடிகாரர்கள் இந்தப் பத்திரிகையை ஒரு நாளும் படிக்கமாட்டார்கள். குடிப்பழக்கமில்லாதவர்களுக்கோ இப்பத்திரிகை தேவையேயில்லை. அப்படியிருக்கும்போது மதுவிலக்குப் பிரசாரத்துக்காக ஒரு தனிப் பத்திரிகை நடத்துவதில் என்ன பயன்? யார் வாங்கப் போகிறார்கள்? வீண் கஷ்டத்தோடு நஷ்டமும் ஏற்படுமே?
இப்படிப்பட்ட சந்தேகங்களும் குழப்பங்களும் மனதில் குடி கொண்டிருந்தன. ஆனால் 'விமோசனம்' முதல் இதழைப் பார்த்ததும் என் சந்தேகங்கள் எல்லாம் பறந்தன. ராஜாஜியே சென்னைக்குச் சென்றிருந்து ஹிந்தி பிரசார சபையில் முதல் இதழை அச்சடித்துக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த விமோசனம் பத்திரிகைக் கட்டைப் பிரித்து ஆவலுடன் ஒரு பிரதியை எடுத்துப் பார்த்தேன். "நம்முடைய பயங்கள் எல்லாம் வீண்; இந்தப் பத்திரிகை வெற்றியடையப் போகிறது!" என்று எனக்குத் தைரியம் உண்டாகி விட்டது.
முதல் இதழ் ஆயிரம் பிரதிகள்தான் அச்சிட்டோ ம். அதுவரை சேர்ந்திருந்த சந்தாதார்களுக்கு அனுப்பிய பிறகு, தமிழ் நாட்டிலிருந்த கதர் வஸ்திராலயங்களுக்கெல்லாம் விற்பனைக்காக அனுப்பினோம். என்னுடைய சந்தேகங்கள் பறந்து போய் பத்திரிகைப் பிரதிகளும் பறந்து போய் விட்டன!
இரண்டாவது இதழிலிருந்து நானே பொறுப்பை எடுத்துக் கொண்டேன். ராஜாஜி ஒவ்வொரு இதழுக்கும் மதுவிலக்கைப் பற்றி கதையோ கட்டுரையோ எழுதுவார். நானும் இதழுக்கு ஒரு மதுவிலக்குக் கதை தவறாமல் எழுதி வந்தேன். ராஜாஜியின் கருத்துக்களையொட்டி மதுவிலக்குப் பிரசாரக் கட்டுரைகள், குறிப்புகள் முதலியவற்றையும் எழுதி வந்தேன். மாதம் ஒரு தடவை சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று பத்திரிகையை அச்சடித்து பைண்டு செய்து எடுத்து வருவேன். சில சமயம் ராஜாஜிக்குச் சென்னையில் வேறு காரியங்கள் இருக்கும். எனவே, இரண்டு பேருமாகச் சென்னைக்குப் போவோம். மூன்று நாளைக்குள் ஹிந்தி பிரசார அச்சுக் கூடத்தார் பத்திரிகையை அச்சிட்டு பைண்டு செய்து கொடுத்து விடுவார்கள்! இந்த மூன்று நாளும் அப்போது திருவல்லிக்கேணியிலிருந்த ஹிந்தி பிரசார சபையிலேதான் எங்களுக்கு வாசம். இரவு நேரங்களில் சபைக் கட்டிடத்தின் மேல் மச்சில் மொட்டை மாடியில் படுத்து உறங்குவோம். தூக்கம் வருகிற வரையில் ராஜாஜியுடன் பேச்சுக் கொடுத்து அவருடைய பழைய வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றி ஏதாவது கேட்பேன். அவர்களும் ரஸமான சம்பவம் ஏதாவது சொல்வார்கள்.
'விமோசனம்' பத்திரிகையின் மூலம் எனக்குக் கிடைத்த மேற்படி பாக்கியத்தை நான் என்றும் மறக்க முடியாது.
'விமோசனம்' விற்பனை ஒவ்வொரு இதழுக்கும் அபிவிருத்தி அடைந்து வந்தது. மொத்தம் பத்து இதழ்கள்தான் வெளியிட்டோ ம். ஒன்பதாவது பத்தாவது இதழ்கள் நாலாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன.
அந்தக் காலத்து நிலைமையில் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பற்றிய பத்திரிகை அவ்வளவு பிரதிகள் விற்பனை ஆனது ஒரு மகத்தான வெற்றி என்றே கருத வேண்டியிருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்) - Neenda Mugavurai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ராஜாஜி, பத்திரிகை, விமோசனம், ஸ்ரீ, பத்திரிகையை, கொடுத்து, மதுவிலக்குப், ஹிந்தி, சந்தாதார்களுக்கு, பிரசார, நான், கொண்டு, பிறகு, அச்சடிப்பது, அப்போது, சந்தேகங்கள், விலக்கு, எல்லாம், நடத்த, என்னும், பக்கத்துக்கு, நாற்பது, கேட்டேன், செய்து