நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்)
இருபத்திரண்டு வருஷங்களுக்கு
முன்னால் ஈரோட்டு மாநகரின் வீதியில் ஒரு ஜட்கா வண்டியில் நமது முன்னுரை
பின்நோக்கி ஆரம்பமாகிறது. இரவு சுமார் எட்டு மணி இருக்கும். வானத்தில்
சந்திரனும் நட்சத்திரங்களும் கீழ் நோக்கிய வண்ணம் இருந்தன. வீதியில்
ஜனங்கள் அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சில
சமயம் அவர்களுடைய பார்வை நமது ஜட்கா வண்டியின் பேரிலும் விழுந்தது. அவ்விதம்
எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்து இழுத்த ஜட்கா வண்டிக்குள்ளே அமர்ந்திருந்தது
யார்? இயம்பவும் வேண்டுமோ? இந்த நூலின் ஆசிரியராகிய அடியேன் ராவன்னா
கீனாதான். ஒரு பெட்டி, ஒரு படுக்கை சகிதமாக அந்த வண்டிக்குள் அமர்ந்திருந்தேன்.
எதற்காக அந்த நேரத்தில் அந்த ஜட்கா வண்டியில் நான் அமர்ந்திருந்தேன்?
என் உள்ளத்தில் அச்சமயம் பொங்கித் ததும்பிய கவலைக் கடலுக்குக் காரணம்
யாது? - என்று வாசகர்கள் கேட்கலாம். இதோ பதில் சொல்லுகிறேன்:
ஈரோட்டிலிருந்து சென்னை மாநகர் போவான் வேண்டி இரவு ஒன்பது மணிக்குச் செல்லும் நீராவித் தொடர் வண்டியைப் பிடிப்பதற்காக அந்தப் புரவி வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்...என்ன சொல்கிறீர்கள்? முன்னுரை கொஞ்சம் முன்னேறட்டும் என்று தானே? என்ன செய்யட்டும் ஐயா, ஜட்கா வண்டி முன்னேறினால்தானே கட்டுரையும் முன்னேறும்? அந்த ஜட்கா வண்டியை இழுத்த குதிரை அன்று ஏனோ சண்டித்தனம் செய்தது. முன்னால் பத்தடி சென்றால் பின்னால் பதினைந்தடி சென்றது. வண்டிக்காரன் குதிரையை இருபது அடி அடித்தான். கொஞ்ச நேரம் இப்படி நடந்த பிறகு நான் ஒரே அடியாகப் பிடிவாதம் பிடித்து ஜட்கா வண்டியிலிருந்து கீழே இறங்கி விட்டேன். ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தே போக ஆரம்பித்தேன். ஆனாலும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை; ரயிலுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ, என்னமோ, அது எனக்காகக் காத்திராமல் போயே போய் விட்டது!
அவ்விதம் அன்றைய ரயிலைப் பிடிக்க முடியாதபடி 'டன்கெர்க்' செய்த ஜட்கா வண்டிக்கு இன்று என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். அது இப்போது எந்த உலகத்திலிருந்தாலும் அதன் ஆத்மா சாந்தி பெறுவதாக!
ஏனெனில், அன்று ரயிலைப் பிடிக்க முடியாமற் போன காரணத்தினால் என் வாழ்க்கையில் இணையில்லாத பாக்கியத்தை அடைந்தேன். இரவு ரயில் தவறிப் போய் விட்டபடியால் மறுநாள் காலை ரயிலுக்குப் போகும்படி ஆயிற்று. ரயில் நேரத்துக்கு ஒரு மணி முன்னாலேயே புறப்பட்டு ஒற்றை மாட்டு வண்டியில் சென்று ரயிலைப் பிடித்தேன். நான் ஏறிய மூன்றாம் வகுப்பு ரயில் வண்டியில் இருந்தது யார் என்று நினைக்கிறீர்கள்? ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் அவருடைய செல்வக் குமாரி லக்ஷ்மியும் இருந்தார்கள். இருவரும் கோயமுத்தூரிலிருந்து திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்குப் போய்க் கொண்டிருந்ததாக அறிந்தேன். திருச்செங்கோடு போவதற்குச் சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் இறங்க வேண்டும் என்றும் தெரிந்தது.
திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சில மாதங்களுக்கு முன்னாலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதுவரையில் கோயமுத்தூரில் உறவினர் வீட்டிலிருந்த குமாரி லக்ஷ்மியை ராஜாஜி அவர்கள் அப்போதுதான் முதன் முதலாகக் காந்தி ஆசிரமத்துக்கு அழைத்துப் போவதாகத் தெரிந்து கொண்டேன்.
அந்தக் காலத்திலேயே ராஜாஜியிடம் எனக்குப் பக்தி அதிகம். ஆனால் பழக்கம் மிகச் சொற்பம். ஆகையால் நானாக அதிகம் பேசுவதற்குத் துணியவில்லை. ராஜாஜி "எங்கே போகிறாய்?" என்று கேட்டார்கள். "கதர் போர்டில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டேன். சென்னையில் 'நவசக்தி' பத்திரிகைக்கு உதவி ஆசிரியராகப் போகிறேன்" என்றேன்.
கதர் போர்டு வேலையை நான் விட்டு விட்டதை ராஜாஜி விரும்பவில்லை என்று தெரிந்தது. சிறிது நேரம் ஏன் விட்டேன் என்பது பற்றிக் கேள்விகளும், குறுக்குக் கேள்விகளும் போட்டு என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தி விட்டார்கள். நல்ல வேளையாக, சங்கரி துர்க்கம் ஸ்டேஷன் சீக்கிரத்தில் வந்து என் சங்கடத்தைத் தீர்த்தது!
ராஜாஜி ரயிலிருந்து இறங்கும் சமயத்தில் "காந்தி ஆசிரமத்திலிருந்து மதுவிலக்குப் பத்திரிகை ஒன்று நடத்துவதாக உத்தேசம்; அதற்கு உன்னை அழைத்துக் கொள்ளலாமென்று எண்ணியிருந்தேன்" என்றார்கள். பாதாள லோகத்திலிருந்து திடீரென்று சொர்க்க லோகத்துக்குத் தூக்கி விட்டால் எப்படி இருக்கும்? அம்மாதிரி இருந்தது எனக்கு. இதற்குள் ரயில் நின்று விட்டது. ராஜாஜி இறங்கத் தொடங்கி விட்டார்கள். அவசர அவசரமாக, "தாங்கள் பத்திரிகையை எப்போது ஆரம்பித்தாலும் என்னை அழைத்தால் உடனே வருகிறேன்!" என்று சொன்னேன். என்னுடைய பதில் அவர்களுடைய காதில் சரியாக விழுந்ததோ இல்லையோ என்ற கவலை சென்னைக்குப் போய்ச் சேரும் வரையில் என்னைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தது.
எழுத்தாளர்கள் ஒரு பத்திரிகையிலிருந்து இன்னொரு பத்திரிகைக்கு மாறியதாகவோ, தாங்களே புதிய பத்திரிகை ஆரம்பித்ததாகவோ கேள்விப்படும்போது நான் சிறிதும் வியப்படைவதில்லை. எழுத்தாளர் என்போர் ஒரு விநோதமான இனத்தினர். ஓர் இடத்தில் நிலையாக இருக்க அவர்களால் முடிவதில்லை. தம் இஷ்டம் போல் சுயேச்சையாக எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எழுத வேண்டும் என்ற ஆவல் பெரும்பாலான எழுத்தாளர் உள்ளத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். மேலேயுள்ளவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் சரிதான்; மாறுதல் வெறி திடீரென்று சில சமயம் தோன்றத்தான் செய்யும். ஸ்ரீ திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களைப்போல் நல்ல மனிதர் வேறொருவர் இருக்க முடியாது. எவ்வளவோ அன்பும் ஆதரவுமாக அவர் என்னை நடத்தி வந்தார். ஒரு தடவையாவது ஒரு குற்றம் கூறியது கிடையாது. ஆயினும் மூன்று வருஷத்துக்கெல்லாம் "நவசக்தி"யை விட்டு வேறுவித வேலை பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு உண்டாகிவிட்டது. 'வெறி' என்று சொன்னாலும் தவறில்லை. எனவே ஒரு நாள் திரு.வி.க. அவர்களிடம் என் மனோநிலையைச் சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.
மறுநாள், ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநகருக்கு வந்திருப்பதாகப் பத்திரிகைகளில் படித்து அறிந்தேன். (தினப் பத்திரிகைகளில் போக்கு வரவுச் செய்திகளை வெளியிடுகிறார்களே, அவர்கள் அடியோடு வாழ்க!) திருச்செங்கோட்டிலிருந்து பம்பாய்க்குப் போகும் மார்க்கத்தில் சென்னையில் இறங்கி, ஒரு சினேகிதர் வீட்டில் தங்கியிருப்பதாகத் தெரிந்தது. "இதென்ன, காக்கை உட்கார்ந்ததும் பனம்பழம் விழுந்ததும் சரியாயிருக்கிறதே?" என்று எண்ணிக் கொண்டே ஸ்ரீ ஆச்சாரியாரைப் பார்க்கப் போனேன். (அப்போதெல்லாம் ராஜாஜி என்னும் அருமையான மூன்று எழுத்துப் பெயர் வழக்கத்துக்கு வரவில்லை. அந்த நாளில் பாடப்பட்ட ஒரு தேசியப் பாட்டில், "சேலம் வக்கீல் ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆ ஆர்" என்று தொகையராவின் ஒரு வரி முழுவதையும் அவருடைய பெயர் அடைத்துக் கொண்டிருந்தது.) ஸ்ரீ ஆச்சாரியார் என்னைப் பார்த்ததும், "முன்னொரு தடவை சொன்னேனே நினைவிருக்கிறதா? மதுவிலக்குப் பத்திரிகையொன்று ஆசிரமத்தில் தொடங்கப் போகிறேன். மூன்று மாதத்திற்குள் வர முடியுமா?" என்று கேட்டார். "மூன்று மாதத்துக்குள் வர முடியாது, இன்றைக்கே வரமுடியும்!" என்று பதில் சொன்னேன். "அதெப்படி?" என்று கேட்டார்.
"நவசக்தி"யை நான் விட்டு விட்ட விவரத்தைச் சொன்னேன்.
ஆச்சாரியார் ஐந்து நிமிஷம் கோபமாயிருந்தார். அம்மாதிரி சஞ்சல புத்தி உதவாது என்று கண்டித்தார். பிறகு, "போனது போகட்டும்; பட்டணத்தில் வேலை இன்றிச் சும்மாத் திரியக்கூடாது; கெட்டுப் போவாய்; இரண்டு நாளைக்குள் ஆசிரமத்துக்குப் புறப்பட்டுவிடு! அங்கே சந்தானம் இருக்கிறார். உன்னைப் பார்த்துக் கொள்வார். நான் வடக்கே இருந்து திரும்பி வந்ததும் பத்திரிகையைப் பற்றி யோசிக்கலாம்!" என்று கூறினார்.
எனக்கு ஏற்பட்ட குதூகலத்தைச் சொல்லி முடியாது. ஆயினும் குதூகலத்தை அதிகமாகக் காட்டிக் கொள்ளாமல் "அதற்கென்ன? அப்படியே செய்கிறேன்!" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்) - Neenda Mugavurai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஜட்கா, நான், ராஜாஜி, ஸ்ரீ, அந்த, வண்டியில், ரயில், காந்தி, மூன்று, ரயிலைப், விட்டு, நவசக்தி, என்னை, சொன்னேன், சொல்லி, முடியாது, எனக்கு, சக்கரவர்த்தி, பதில், இரவு, விட்டேன், பிடிக்க, திருச்செங்கோடு, என்னைப், தெரிந்தது