நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்)
4
பஞ்சு கொடுத்து நூல் வாங்கும் வேலைக்கு
அடுத்தபடியாக ஆசிரமத்தில் பெரிய வேலை, வாங்கிய நூலையெல்லாம் பக்கத்துக்
கிராமங்களிலுள்ள தறிக்காரர்களிடம் கொடுத்துக்கதர் நெய்யச் செய்தல். இதுவும்
சங்கடமான வேலைதான். நூலை நிறுத்துக் கொடுத்து, துணியை நிறுத்து வாங்கி,
கூலி கணக்கிட்டுக் கொடுத்துப் பைசல் செய்வதற்குள்ளாக பிராணன் போய்விடும்!
நூல் நூற்கும் ஸ்திரீகளாவது, நூலை நெய்யும் தறிக்காரர்களாவது தியாக வாழ்க்கையை மேற்கொண்டு தங்களுக்காகத் தொண்டு செய்த ஆசிரமத் தொண்டர்களிடம் அன்பாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. விஷயம் அறிந்த ஒரு சிலர் தொண்டர்களிடம் மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் எப்போதும் அதிருப்தியுடன் சண்டை பிடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்கள்.
எல்லாவற்றுக்கும் தரித்திரக் கொடுமைதான் காரணம். வறுமையோடு அறியாமையும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? ஒரு சிலர், "வடக்கேயிருந்து யாரோ ஒரு புண்ணியவான் நமக்குக் கொடுப்பதற்காக ஏராளமாய்ப் பணம் அனுப்புகிறார்; அதை முழுவதும் நமக்குக் கொடுக்காமல் இந்தத் தொண்டர்கள் நடுவில் நின்று தடை செய்கிறார்கள்" என்று நம்பினார்கள்!
ஆசிரமத்திற்கு நான் போய்ச் சேர்ந்ததற்கு முதல் வருஷம் அந்த ஸ்தாபனத்துக்கு ஒரு பெரிய 'கண்டம்' ஏற்பட்டது. அதன் காரணம் பின்வருமாறு:-
திருச்செங்கோட்டுப் பிரதேசத்தில் ஆசிரமம் ஏற்படுவதற்குச் சில வருஷங்களுக்கு முன்னாலிருந்து சரியான மழை பெய்யவில்லை. மழை பெய்யாதபடியால் கேணிகளில் தண்ணீர் இல்லை. எனவே, வயற்காடுகளில் வெள்ளாமையும் இல்லை.
ஏறக்குறைய பஞ்சப் பிரதேசம் என்று சொல்லக் கூடிய நிலைமை திருச்செங்கோடு தாலுக்காவில். காந்திஜி ஆசிரமத்தைச் சுற்றியிருந்த கிராமங்கள் பூராவிலும் ஏற்பட்டிருந்தது.
இதை முன்னிட்டுத்தான் ராஜாஜி ஆசிரமத்தை ஸ்தாபிப்பதற்குப் புதுப் பாளையத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கே நடந்த கதர் உற்பத்தித் தொழிலைப் பஞ்ச நிவாரண வேலையென்றே சொல்லும்படியிருந்தது. பஞ்சத்தில் அடிபட்ட கிராமங்களுக்கு நூற்றல் கூலி நெசவுக் கூலி மூலமாக லக்ஷக்கணக்கான ரூபாய் வருஷந்தோறும் விநியோகமாயிற்று. அந்த அளவுக்குக் கிராமங்களில் சுபிட்சம் ஏற்பட்டது.
ஆனால், அறியாமையும் மூடநம்பிக்கையும் மிக்க பலம் பொருந்திய சக்திகள் அல்லவா? ஆதி காலத்திலிருந்து இன்று வரையில் எங்கெங்கும் வியாபித்து, பற்பல உருவங்கள் எடுக்கும் ஆற்றல் கொண்டவையல்லவா? இத்தகைய அறியாமை, மூட நம்பிக்கை முதலிய சக்திகளை நமது முன்னோர்கள் அசுரர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் உருவகப்படுத்திப் புராண இதிகாசங்களை எழுதினார்கள். மகாவிஷ்ணு ஒன்பது அவதாரங்கள் எடுத்து, அறியாமை மூட நம்பிக்கை என்னும் தீய சக்திகளை அழிக்கப் பார்த்தார். ஆயினும் அவை அழிந்தபாடில்லை. இன்னமும் பல்வேறு உருவங்களில் அவை நின்று நிலவுகின்றன. கிராமங்களிலும் இருக்கின்றன. நகரங்களிலும் இருக்கின்றன. அர்த்தமற்ற சமயச் சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் சாதி வேற்றுமைகளாகவும் அவை உரு எடுக்கின்றன. நாஸ்திகப் பிரசாரமாகவும், கம்பனைக் கொளுத்தும் பகுத்தறிவு இயக்கமாகவும் சில சமயம் ஓங்கி வளருகின்றன. சில சமயம் "அறிவு வேண்டாம்" என்று சொல்லும் முற்போக்குச் சக்திகளாகவும் வேஷமெடுக்கின்றன!
இப்படிப்பட்ட சர்வ வியாபியான அறியாமையும் குருட்டு நம்பிக்கையும் புதுப்பாளையம் காந்தி ஆசிரமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலே மட்டும் இல்லாமற் போகுமா? இருக்கத்தான் இருந்தன! ஆனால் முற்போக்கு சக்தி என்றோ, பிற்போக்கு சக்தி என்றோ, சநாதன தர்மம் என்றோ, பகுத்தறிவு இயக்கமென்றோ இவை படாடோ பமான பெயர்களைச் சூட்டிக் கொள்ளவில்லை. கலப்பற்ற அப்பட்டமான அறியாமையாகவும் மூட நம்பிக்கையாகவுமே மேற்படி கிராமங்களில் எழுந்தருளியிருந்தன.
எனவே, மேற்படி கிராமவாசிகளில் சிலர், தங்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்ட காந்தி ஆசிரமத்தைத் துவேஷிக்கும்படியான நிலைமை ஒரு சமயத்தில் ஏற்பட்டது. மழை பெய்யாமல் பஞ்சம் பரவி இருந்தது காரணமாகவே அந்தப் பிரதேசத்தில் காந்தி ஆசிரமம் ஸ்தாபிக்கப் பட்ட தென்பதை முன்னமே குறிப்பிட்டேன். ஆனால் ஆசிரமம் ஏற்பட்டதனாலேயே மழை பெய்யவில்லை என்று காரண காரியங்களைத் திருப்பிச் சில விஷமிகள் துஷ்பிரசாரம் செய்தார்கள். அறியாமையில் மூழ்கிய கிராம வாசிகள் அதை நம்பினார்கள்! காந்தி ஆசிரமத்துக் குடிசைகளை இரவுக் கிரவே அக்கினி பகவானுக்கு இரையாக்கி விடுவதென்று ஒரு சமயம் சதியாலோசனையும் செய்தார்கள்!
இதற்கெல்லாம் ஒரு வகையில் காரணமாக இருந்தவர் மன்னார்குடி வேங்கடராமன் என்னும் தொண்டர். இந்த மனிதர் அந்த நாளில் பிரம்மச்சாரி. எப்பொழுதுமே அவர் பிரம்மச்சாரியாயிருந்துவிடுவார் என்று சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நெற்றியில் நாமத்தையோ, விபூதியையோ குழைத்துப் போட்டுவிட்டு, இவர் சில வருஷங்களுக்கு முன்னால் கலியாணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் இயற்கை வாழ்வு நடத்திக் கொண்டிருக்கிறார்.
பிரம்மச்சாரியா யிருந்தது போதாது என்று ஸ்ரீ வேங்கடராமன் யோகாசனங்கள் பயின்று கொண்டிருந்தார். யோகாசனங்களில் சிரசாசனம் என்பதாக ஒன்று உண்டு. தரையில் தலையை வைத்துக் கொண்டு காலை மேலே நிறுத்திக் கொண்டு நெட்டுக்குத்தாக நிற்பதுதான் சிரசாசனம். நமது பெரிய தேசீயத் தலைவர்கள் எல்லாரும் ஒரு சமயம் வெகு சிரத்தையாகச் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் காங்கிரஸ் மகா சபைக் கூட்டத்தின்போது, "ஜவாஹர்லால் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று ஒரு பிரதிநிதி கேட்டார். அந்த வருஷம் ஜவாஹர்லால் காங்கிரஸ் அக்கிராசனர். மேற்படி பிரதிநிதியின் கேள்விக்கு ஒரு தொண்டர், "ஜவாஹர்லால்ஜி தலை கீழாக நிற்கிறார்!" என்று பதில் சொன்னார். தொண்டர் ஜவாஹர்லாலை எகத்தாளம் செய்கிறார் என்று எண்ணிப் பிரதிநிதி அவருடன் சண்டைக்குப் போய்விட்டார். அப்புறம் விசாரித்ததில் அவர் எகத்தாளம் செய்யவில்லை, ஜவாஹர்லால்ஜி உண்மையாகவே சிரசாசனம் செய்து கொண்டிருந்தார் என்று தெரிய வந்தது!
பண்டிட் ஜவாஹர்லால் நேருவைப் போன்ற தலைவர்களே தலை கீழாக நின்றபோது, தொண்டர்கள் நிற்பதற்குக் கேட்பானேன்? காந்தி ஆசிரமத் தொண்டர் ஸ்ரீ வேங்கடராமனும் சிரசாசனம் செய்து வந்தார். ஒரு நாள் பொழுது விடிந்து சூரியோதயம் ஆகும் சமயத்தில் ஸ்ரீவேங்கடராமனும் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது நூல் கொண்டு வந்த ஒரு ஸ்திரீ தற்செயலாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அவ்வளவு தான்; அந்த மூதாட்டி தான் கொண்டு வந்த நூலைப் போட்டுக் கூலி வாங்கிக் கொள்ளக் கூட இல்லை. கிராமத்துக்குத் திரும்பிப் போய், தான் பார்த்த அதிசயக் காட்சியைப் பலரிடம் தெரிவித்தாள். கேட்டவர்களில் ஒரு புத்திசாலி, "அதனாலேதான் மழை பெய்யவில்லை!" என்றான். மேற்படி வதந்தி கிராமம் கிராமமாய்ப் பரவிற்று. இன்னொரு பக்கத்தில் மழை பெய்யாததற்கு வேறொரு காரணமும் கற்பிக்கப்பட்டது. ஆசிரமத் தொண்டர்களில் அங்கமுத்து, முனுசாமி என்று இரண்டு ஹரிஜனங்கள் இருந்தார்கள். மற்றவர்களைப் போலவே இவர்களுக்கும் எல்லா விதத்திலும் சம உரிமை அளிக்கப் பட்டிருந்தது. சமையல் பொதுவாக இருந்த காலத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். எல்லோருடனும் சேர்ந்து உட்கார்ந்து பிரார்த்தனை செய்தார்கள். எவ்வித வித்தியாசமும் காட்டப்படவில்லை. ஆனால், ஆசிரமத்தைச் சுற்றியிருந்த கிராமங்களில் வசித்த கவுண்டர் மார்களோ தீண்டாமையில் வெகு கடுமையான நம்பிக்கை கொண்டவர்கள். "தீண்டாதவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் மழை ஏன் பெய்யும்?" என்ற பேச்சுக் கிளம்பியது. கிளம்பி அதிவேகமாகப் பரவிற்று.
ஆகக்கூடி காந்தி ஆசிரமம் ஏற்பட்டதனாலே தான் மழை பெய்யவில்லை என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்பட்டு விட்டது. மேற்படி குருட்டு நம்பிக்கையைத் துஷ்டர்கள் சிலர் தூபம் போட்டு வளர்த்தார்கள். "ஒருநாள் இரவு ஆசிரமத்துக் குடிசைகளையெல்லாம் கொளுத்தி விட வேண்டும்" என்று கிராமங்களில் பேச்சு நடப்பது பற்றி அடிக்கடி செய்திகள் வந்தன. ஆசிரம வாசிகள் அப்படி ஏதாவது நடக்கலாம் என்று பிரதி தினமும் இரவெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலமும் உண்டு.
ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நடவாததற்குக் காரணம் மேற்படி குருட்டு நம்பிக்கைகளையெல்லாம் மிஞ்சிய இன்னொரு குருட்டு நம்பிக்கைதான். அதாவது "வக்கீல் ஐயா இருக்கும்போது நமக்குக் கெடுதல் ஏற்பட விடமாட்டார். அவரிடம் சொன்னால் சரிப்படுத்தி விடுவார்" என்ற நம்பிக்கை மிகப் பலமாக அந்தக் கிராம வாசிகளிடையே குடி கொண்டிருந்தது. இது காரணமாகவே விஷமிகளின் துஷ் பிரசாரமெல்லாம் காரியத்துக்கு வராமல் போயிற்று. ஆகா! எழுதப் படிக்கத் தெரியாத நிரட்சரக் குட்சிகளான அந்தக் கிராமவாசிகள் வக்கீல் ஐயாவிடம் கொண்டிருந்த குருட்டு நம்பிக்கை மட்டும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் வாதிகள் அனைவருக்கும் இருந்திருக்குமானால் சென்ற சில வருஷங்களில் தமிழ் நாடு எவ்வளவோ மேன்மையடைந்து, தேசம் பார்த்துப் பிரமிக்கும் உன்னத நிலையை அடைந்திராதா? அடடா! என்ன துரதிருஷ்டம்! அத்தகைய குருட்டு நம்பிக்கை நம் எல்லோருக்கும் இல்லாமலல்லவா போய்விட்டது?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்) - Neenda Mugavurai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நம்பிக்கை, செய்து, காந்தி, சிரசாசனம், மேற்படி, குருட்டு, சிலர், கொண்டு, அந்த, சமயம், தொண்டர், தான், பெய்யவில்லை, கிராமங்களில், சேர்ந்து, கூலி, ஆசிரமம், கொண்டிருந்தார், ஆசிரமத், ஜவாஹர்லால், உட்கார்ந்து, பெரிய, கொண்டிருந்தார்கள், காங்கிரஸ், செய்தார்கள், ஏற்பட்டது, நூல், ஆசிரமத்தைச், நமக்குக், என்றோ, இல்லை, அறியாமையும், காரணம்