காரிருளில் ஒரு மின்னல்
7
மைதிலிக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு
வந்தது. "இந்த நடுநிசி வேளையில் பயங்கரமான இடி முழக்கங்களுக்கு மத்தியில்,
என் கதையை நீங்கள் கட்டாயம் நம்புவீர்களென்று எதிர்பார்த்தேன். அது பிரயோஜனப்படவில்லை"
என்றாள்.
"நீ சொன்னதில் நிஜக் கதையும் கொஞ்சம் கலந்துதானிருந்தது. எது வரையில் உன் கதை, எது வரையில் டாக்கிக் கதை என்று தான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றேன்.
"என்னுடைய நிஜக் கதையைச் சொன்னால் நம்பமாட்டீர்களென்றும், ஒரு வேளை பரிகாசம் செய்வீர்களென்றும் நினைத்தேன். நான் சொன்னதில் என் தகப்பனாரையும் குடும்பத்தையும் பற்றிச் சொன்னதெல்லாம் நிஜம். என்னைக் கிழ மிராசுதாருக்கு விற்றதிலிருந்துதான் கதை. அதற்குப் பதிலாக, என்னை என் தகப்பனார் ஒரு டாக்கி முதலாளிக்கு விற்றார். ஏழாயிரம் ரூபாய் கிடைத்தது. எங்கள் குடும்பத்தின் தரித்திரம் தீர்ந்தது. ஆனால் என் தந்தை மட்டும் மனம் நொந்து போனார். என்னுடைய முதல் டாக்கி வெளியான சில காலத்துக்கெல்லாம், அவர் காலஞ்சென்றார்.
கதையில் நேர்ந்தது போலவே ஏற்கனவே எங்களைப் புறக்கணித்த பந்துக்கள் எல்லாம் இப்போது வந்து சூழ்ந்து கொண்டார்கள். என்னுடைய மாமா ஒருவர் பெரிதும் பணத்தாசை உண்டக்கி விட்டார். ஆகவே, இன்னொரு டாக்கியில் நான் நடிப்பதற்காக பேரம் நடந்தது.
அப்பா இறந்து போனபின், நான் மனம் குன்றிப் போயிருந்தேன். ஒரே டாக்கியுடன் நிறுத்திக் கொண்டு என்னைக் கலியாணம், செய்து கொடுத்துவிட வேண்டுமென்பது அவருடைய எண்ணம். அவர் விருப்பத்திற்கு மாறாக மீண்டும் டாக்கியில் நடிக்க எனக்கு இஷ்டமில்லையென்றாலும், அம்மா மாமா இவர்களுடைய பிடிவாதத்துக்கு உட்பட வேண்டியதாயிருந்தது.
இரண்டாவது டாக்கியின் கடைசிக் காட்சிகளை இரண்டு நாளைக்கு முன்பு இங்கே தான் எடுத்து முடித்தார்கள்; கதாநாயகி அதோ அந்தப் பாலத்திலிருந்து விழுந்து தான் இறந்து போகிறாள். ஷுட்டிங் முடிந்ததும் எல்லாரும் போய்விட்டார்கள். என்னுடைய தாயாருக்கு உடம்பு சரிப்படாமலிருந்ததால், நாங்கள் மட்டும் அடுத்த கிராமத்திலுள்ள ஜாகையிலேயே சில நாள் தங்கினோம்.
ஏற்கெனவே, எனக்கு உயிர் கசந்து போயிருந்தது. டாக்கி எடுக்கும் போது எந்தெந்த மாதிரி ஸ்திரி புருஷர்களுடனெல்லாம் பழக வேண்டியிருக்கிறதென்பதை உங்களால் கற்பனை செய்யவே முடியாது. அம்மா! அவர்கள் மூஞ்சியும் முகரக்கட்டையும்! டாக்கியில் வேஷம் போட்டுப் பார்த்தவர்களை அப்புறம் பார்க்கவே வேண்டியிராது. இன்னும், டாக்கி நட்சத்திரங்களின் முகத்தை பார்ப்பதற்கென்று பல்லிளித்துக் கொண்டு வருகிறவர்களைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை. இதனாலெல்லாம் 'இது என்ன வாழ்வு' என்று ஏக்கங் கொண்டிருந்தேன். முன்னமே இப்படியென்றால், இந்த டாக்கி முடிந்ததும், என் மனச்சோர்வு நூறு மடங்கு அதிகமாயிற்று; இப்படி வேஷம் போட்டுப் பணம் சம்பாதித்து யாருக்காக உயிர் வாழவேண்டுமென்று தோன்றியது. ஆகவே, நேற்றிரவு நடுநிசிக்கு, டாக்கியின் கதாநாயகி உயிரை விட்ட இடத்திலேயே நானும் உயிரை விடுவதென்று வந்தேன்..."
"பின்னே ஏன் தாமதித்தாய்?" என்று கேட்டேன்.
"மதகிலிருந்து குதிக்கப் போன சமயம், மோட்டார் குழலின் சத்தம் கேட்டது. எக்காரணத்தினாலோ, உடனே என் தைரியம் போய்விட்டது..." என்று கூறி, மேலே பேசுவதற்குத் தயங்கினாள்.
"காரணம் நானே சொல்லிவிடட்டுமா? டாக்கியின் கதாநாயகியைப் போலவே, உன்னுடைய உள்ளமும் உருவந் தெரியாத ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தது. அவர் அந்த மோட்டாரில் வருகிறார் என்று உன் இருதயத்தினுள்ளே ஏதோ சொல்லிற்று. இல்லையா?" என்றேன்.
மைதிலி கண்களில் அளவிலா ஆச்சரியம் தோன்ற "இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? நீங்கள் மந்திரவாதியா?" என்றாள்.
மழை நன்றாய் விட்டுவிட்டது. ஆகாயத்தில் மேகங்கள் கலைந்து கொண்டிருந்தன. கீழ்வானம் சிறிது வெளுத்தது. வயல் மடைகளில் சலசல என்று ஜலம் பாயும் ஒலி கேட்டது.
"வானம் வெளிவாங்கிவிட்டது. வா, போகலாம்" என்று சொல்லி எழுந்து நின்றேன். அவள் எழுந்திருக்கவில்லை.
"உன் இருதயம் சொன்னது சரி. மின்னல் வெளிச்சத்தில் இன்று உன்னை நான் முதல் தடவை பார்த்ததும்..."
"நிஜமாகவா? ஏற்கனவே என்னை நீங்கள் பார்த்ததில்லையா? என்னுடைய முதல் டாக்கியில் ஒரு வேளை பார்த்திருப்பீர்கள், அதனால் அடையாளம் கண்டுபிடித்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்?"
"நான் உன்னுடைய முதல் டாக்கிக்குப் போகவில்லை. உன்னை அதற்கு முன்னல் பார்த்ததும் இல்லை. நீ தேடியது போலவே, மனக்கண்ணுக்கு நன்கு தெரியாத ஒரு உருவத்தை நானும் தேடிக்கொண்டிருந்தேன். உன்னைப் பார்த்தவுடனே நான் தேடியவள் நீதான் என்று என் இருதயம் சொல்லித் தெரிந்து கொண்டேன்."
மைதிலி எழுந்து நின்றாள்.
"ஐயா! என்னைப் பரிகாசம் செய்கிறீர்களா? நிஜமாய்ச் சொல்லுங்கள். நீங்கள் யார்? நான் சொன்னது டாக்கிக் கதையென்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது? நீங்கள் என்னைத் தேடியதாகச் சொன்னதெல்லாம் உண்மையா, அதுவும் ஒரு கதைதானா?" என்றாள்.
"மைதிலி, என்னுடைய வாழ்நாளில் நான் ஒரே ஒரு கதைதான் எழுதினேன். அதைத்தான் நீ சற்று முன்பு சொன்னாய்; நானே கேட்டு மயிர்க் கூச்செறியும்படி சொன்னாய்..." என்பதற்குள், மைதிலி அளவிலா வியப்புடன், "என்ன? என்ன? நிஜமாக நீங்களா அந்தக் கதை எழுதியது?" என்றாள்.
"ஆமாம்! என்னுடைய நாவலின் கையெழுத்துப் பிரதியை ஒருவர் வாசிப்பதற்கு எடுத்துக் கொண்டு போனார். சில நாளைக்கெல்லாம் அவர் இந்தியாவை விட்டு மலாய் நாட்டுக்குப் போய்விட்டார் என்று அறிந்தேன். போவதற்குமுன் அந்த அசட்டுக் கதையை உங்கள் முதலாளியிடம் அவர் விற்றுவிட்டுப் போயிருக்க வேண்டும். தமிழ் டாக்கிக்காரர்கள் தான் கதை அகப்பட்டால் போதுமென்று இருக்கிறார்களே... அஸம்பாவிதங்கள் நிறைந்த அந்தக் கதை எனக்கே பிடிக்கவில்லைதான். ஆனால் அதில் ஓர் அம்சம் மட்டும் உண்மையானதாகையால் எனக்குப் பிடித்திருந்தது. என்னுடைய உள்ளத்திலிருந்த ஏக்கத்தையே தான் அந்தக் கதாநாயகியின் மூலம் நான் வெளியிட்டிருந்தேன். கதை எழுதியபோது, என்னுடைய இருதயத்தேட்டம் பூர்த்தி பெறவில்லையாதலால், கதாநாயகி உயிரை விட்டாள் என்று சோகமாய்க் கதையை முடித்திருந்தேன்" என்றேன்.
*****
பட்சி ஜாலங்கள் உதயராகம் பாடிச் சூரியோதயத்தை வரவேற்கும் மனோகரமான காலை நேரத்தில், கார்காலத்தின் குளிர்ந்த காற்று மரக்கிளைகளின் மீது விளையாடி மழைத் துளிகளை உதிர்த்துக் கொண்டிருந்த கிராமாந்தரத்துச் சாலையில், நானும் மைதிலியும் கைகோத்துக் கொண்டு, எங்கள் வாழ்க்கைப் பிரயாணத்தைத் தொடங்கினோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரிருளில் ஒரு மின்னல் - Kaarirulil Oru Minnal - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், என்னுடைய, டாக்கி, அவர், தான், கொண்டு, நீங்கள், மைதிலி, என்றாள், டாக்கியில், உயிரை, அந்தக், என்ன, நானும், மட்டும், கதையை, என்றேன், போலவே, டாக்கியின், கதாநாயகி