காரிருளில் ஒரு மின்னல்
1
நான் பி.ஏ., எல்.டி. பட்டம் பெற்று, சென்னையிலுள்ள
அழகப்ப செட்டியார் ஹைஸ்கூலில் வாத்தியார் வேலை பார்த்து வந்தேன். என்
வாழ்க்கையின் முக்கிய சம்பவம் நடந்தபோது, எனக்கு வயது முப்பது. ஆனால்
கலியாணம் ஆகவில்லை. காரணம் சொன்னால், உங்களுக்கு வேடிக்கையாயிருக்கும்.
நான் சிறு பையனாயிருந்த காலத்தில் ஒரு நாள், என் வீட்டில் என்னுடைய தாயார்,
பாட்டி, அம்மாமி, சித்தி எல்லாரும் உட்கார்ந்து வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது நான் ஏதோ விஷமம் செய்தேன். அம்மாமி, "இப்படி நீ அசடா யிருந்தால்,
உனக்கு யார் பெண் கொடுப்பார்கள்? கலியாணமே ஆகாது போ!" என்று சொன்னாள்.
அதற்கு என் பாட்டி, "அவனுக்கென்று ஒருத்தி எங்கேயோ பிறந்து காத்துக்
கொண்டுதானே இருப்பாள்?" என்றாள். பாட்டி சொன்னது எப்படியோ என் மனதில்
ஆழமாய்ப் பதிந்து வேரூன்றி விட்டது. எங்கேயோ ஒரு பெண் தன்னந் தனியாக
உட்கார்ந்து என் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் தோற்றம்
என் மனக் கண்ணின் முன் ஓயாமல் வந்து கொண்டேயிருந்தது. அவள் யார், எப்படி
இருப்பாள், எங்கே உட்கார்ந்திருப்பாள் என்பதொன்றும் தெரியவில்லை. மெல்லிய
பனிப் படலத்தினால் மறைக்கப்பட்டது போன்ற அத் தோற்றம் மட்டும் என்னுடைய
நனவிலும் கனவிலுங்கூடத் தோன்றிக் கொண்டேயிருக்கும்.
இதை நான் ஒருவருக்கும் வெளியிட்டுச் சொல்லவில்லை. ஆனால் இதன் காரணமாகவே, என்னுடைய பெற்றோர்களும் மற்றவர்களும் செய்த கலியாண ஏற்பாடுகளை யெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டு வந்தேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு, பந்துக்களின் தொந்தரவு பொறுக்க முடியாமல், நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லையென்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டேன்.
என்னுடைய பாலிய சிநேகிதனும் கலாசாலைத் தோழனுமான சாம்பமூர்த்தி இது விஷயத்தில் என்னுடன் போட்டி போடுவதாகச் சொன்னான். வெகு காலம் அவனும் கலியாணம் செய்து கொள்ளாமலே இருந்தான். கடைசியில் சென்ற வருஷம் அவன் தோல்வியடைந்தான். அவன் சென்னையில் பிரபல உத்தியோகஸ்தர் ஒருவரின் பிள்ளை. தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு பெரிய மிராசுதாரின் பெண்ணுக்கும் அவனுக்கும் கலியாணம் நடந்தது. நான் கூடக் கலியாணத்துக்குப் போயிருந்தேன்.
தீபாவளிக்கு முதல் நாளைக்கு முதல் நாள் அவன் என்னிடம் வந்து, "ஸாமி! நீயே என் கதி" என்று சொல்லி, ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
"உன் கதியைக் கலங்க வைக்காமல் சமாசாரத்தை சொல்லலாமே" என்றேன்.
"தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போக வேண்டியதாயிருக்கிறது. தன்னந் தனியாக அவ்வளவு பெரிய அபாயத்தை எதிர்க்க எனக்குத் தைரியமில்லை" என்றான்.
"இதோ அபயப் பிரதானம் கொடுத்தேன். ஸ்ரீமதி காந்தாமணி தேவியிடம் நீ தனியாக அகப்பட்டுக் கொண்டு முழித்தாயானால், 'ஸாமி!' என்று ஒரு குரல் கொடு, உடனே நான் ஜாக்கிரதையாகி, யாரும் அவ்விடம் தலை காட்டாமல் பார்த்துக் கொள்கிறேன்" என்றேன்.
தீபாவளிக்கு முதல் நாள் காலையில் எழும்பூரில் ரயில் ஏறினோம். சாயங்காலம் ஆறு மணிக்கு வண்டி பாபநாசத்தை அடையும். அங்கிருந்து வண்டி பிடித்துக் கொண்டு கிளம்பினால், இராத்திரி சாப்பாட்டுக்கு வரதராஜபுரம் போய்ச் சேரலாம். இப்படி எண்ணிக் கொண்டு கிளம்பினோம். ஆனால் இந்த எங்கள் எண்ணம் வருண பகவானுக்குக் கொஞ்சங்கூடத் தெரியவில்லையென்று தோன்றியது. காலையில் கிளம்பும் போதே வானம் இருண்டிருந்தது. செங்கற்பட்டுக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் அசாத்தியமான காற்றும் மழையும் அடித்ததில், ரயில் ஒரு மணி நேரம் தாமதித்தது. பிறகு, சீர்காழிக்கருகில் ஒரு கூட்ஸ் வண்டி தண்டவாளத்தைவிட்டு அகன்று விட்டபடியால் இன்னும் மூன்று மணி நேரம் தாமதமாயிற்று.
பாபநாசம் ஸ்டேஷனை அடைந்த போது, இரவு பத்து மணி இருக்கும். ஸ்டேஷனில் விசாரித்ததில்; வரதராஜபுரத்து மிராசுதாரின் வில்வண்டி வந்து காத்திருந்ததாகவும், "ரயில் சீர்காழியில் தங்கிவிட்டது; வராது" என்று சொன்னதன் பேரில் திரும்பிப் போய் விட்டதாகவும் அறிந்தோம். மாப்பிள்ளை விறைப்பு என்பதை அப்போதுதான் நான் பார்த்தேன்.
"ஸாமி! சுத்த மரியாதையற்ற ஜனங்கள் இவர்கள்! இரண்டு மணி நேரம் நமக்காகக் காத்திருக்கக்கூட இவர்களால் முடியவில்லை. பேசாமல் இவர்கள் மூஞ்சியில் கூட முழிக்காமல் திரும்பிப் போய்விடுவதுதான் சரி..." என்று அவன் சொல்ல, "ரொம்ப சரி சாம்பு! டிக்கட் வாங்கி விடட்டுமா?" என்றேன் நான்.
"பேஷாக வாங்கிவிடலாம். திரும்பியும் போய்விடலாம்? ஆனால் இந்தப் பட்டிக்காடு ஜனங்களுக்கு ஒரு பாடங் கற்பிக்காமல் போவதா என்றுதான் பார்க்கிறேன். 'நீங்கள் இவ்வளவு மரியாதைக் குறைவாக நடந்துகொண்டாலும் நாங்கள் மரியாதைத் தவறு செய்யமாட்டோ ம்' என்று அவர்களுக்குக் கன்னத்தில் அறைந்ததுபோல் காட்டினால் தான் புத்தி வரும்" என்றான் சாம்பு.
ஆகவே, சாம்புவின் மாமனாருக்குப் புத்திவரச் செய்வதற்காக, பாபநாசத்தில் யாராவது மோட்டார் வண்டி வாடகைக்கு விடுகிறார்களா என்று பார்க்கலானோம். அன்று முழுதும் அடைமழை பெய்தபடியால் சாலை ரொம்ப மோசமாயிருக்கிறதென்றும், வண்டி போகாதென்றும் அநேகர் சொல்லிவிட்டார்கள். கடைசியில், எங்களைப் போலவே, தன் மோட்டாருக்குப் புத்தி கற்பிக்க எண்ணங் கொண்ட ஒருவன், பதினைந்து ரூபாய் வாடகைக்குத் துணிந்து வண்டி கொண்டுவந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரிருளில் ஒரு மின்னல் - Kaarirulil Oru Minnal - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், வண்டி, அவன், கொண்டு, என்னுடைய, ரயில், என்றேன், கலியாணம், நேரம், ஸாமி, தீபாவளிக்கு, தனியாக, வந்து, நாள், பாட்டி