காரிருளில் ஒரு மின்னல்
5
"ஒவ்வொரு வருஷமும் கோடைக் காலத்தில் இரண்டு
மாதம் நாங்கள் தரங்கம்பாடிக்குப் போய்த் தங்குவது வழக்கம். தரங்கம்பாடியில்
எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் கும்பகோணத்தில் பிரபல வியாபாரியான
ஒரு பம்பாய் ஸேட் வந்து தங்குவதுண்டு. ஒரு வருஷம் பம்பாயிலிருந்து அவருடைய
மருமகனும் அங்கே வந்து தங்கினான். இந்த இளைஞன் பெயர் கிரிதரலால். கதையை
வளர்த்தாமல் சொல்கிறேன்; சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு கிரிதரலால்
தான் வியாபார நிமித்தமாகக் கிழக்காப்பிரிக்கா போவதாகச் சொல்லி, தன்னுடன்
கிளம்பி வந்துவிட இஷ்டமா என்று கேட்டான்.
இங்கே ஒரு விஷயம் உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். என் கணவருடன் நான் வாழ்ந்த நாலு வருஷ காலத்தில், என் வெளி வாழ்க்கை அமைதியாய்த் தானிருந்தது. ஆனால் என் உள்ளத்தில் மட்டும் சாந்தி இல்லை. ஏதோ சொல்ல முடியாத ஏக்கம் என் இருதயத்தில் குடி கொண்டிருந்தது. யாரையோ எங்கேயோ போய்ப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஆனால் யாரைப் பார்க்க வேண்டும், அதற்கு எங்கே போக வேண்டும் என்பதொன்றும் தெரியவில்லை. பெண்களில் சிலருக்குப் பேய் பிடிக்கிறது என்கிறார்களே, அந்த மாதிரி என்னையும் ஏதாவது பிடித்திருக்கிறதோ என்று கூட சில சமயம் சந்தேகப்படுவேன்.
எந்த உருவம் தெரியாத மனிதரைக் காணவேண்டுமென்று நான் ஏக்கம் கொண்டிருந்தேனோ அவரல்ல இந்தக் கிரிதரலால் என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் நான் அவனுடன் போகச் சம்மதித்தேன். வாழ்க்கையில் எனக்கு அவ்வளவு அலுப்பு உண்டாகிவிட்டது. எங்கேயாவது போக வேண்டும் என்ற அளவில்லாத தாபம் ஏற்பட்டிருந்தது. இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்தால் பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயந்தேன்.
ஒரு நாள் என் கணவர் ஏதோ கோர்ட்டுக் காரியமாய்த் தஞ்சாவூர் போயிருந்தபோது நாங்கள் புறப்பட்டுச் சென்னை சேர்ந்து கப்பல் ஏறினோம். கப்பலில் ஏறிய மறுநாளே கிரிதரலாலின் சுபாவம் தெரிய வந்தது. அவன் பெருங்குடிகாரன், எவ்விதப் பாதகத்துக்கும் அஞ்சாதவன் என்று அறிந்தேன். கடைசியில் நைரோபியில் இறங்கியதும், அவன் என்னை ஒரு வீட்டிற்கு அழைத்துப் போய் அங்கிருந்த ஒரு மாதினிடம் என்னை ஒப்புவித்து விட்டுச் சென்றான். அன்று இராத்திரி, அது ஒரு விபசார விடுதியென்றும், கிரிதரலால் மூவாயிரம் ரூபாய்க்கு என்னை அந்த விடுதியின் சொந்தக்காரிக்கு விற்றுவிட்டுப் போய்விட்டான் என்றும் அறிந்தேன்.
எனக்கு வந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் சொல்லி முடியாது. மனநிலையைப் பொறுத்தவரையில் ராக்ஷஸியாகி விட்டேன். மறுநாள் இரவு என்னுடைய அறைக்குள் வந்த குடிகாரன் ஒருவனை அவனிடமிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்டு அதனாலேயே குத்திக் கொன்றேன். அந்த இரத்தக் கறை தோய்ந்த கையைத்தான் இப்போது நீங்கள் பிடித்துக் கொண்டு நிற்கிறீர்கள்..." என்றாள் மைதிலி.
ஒரு கணம் என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. ஆனாலும் நான் அவளுடைய கரத்தை விடவில்லை. மைதிலி மேலே கதையைத் தொடர்ந்தாள்:
"அந்த விடுதியின் சொந்தக்காரி வந்தபோது கத்தியைக் காட்டி அவளையும் கொன்று விடுவதாகச் சொன்னேன். அவள் நல்ல வார்த்தை சொல்லி என்னைச் சமாதானப் படுத்தினாள். என்னைத் தொந்தரவு செய்வதில்லையென்றும், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி விடுவதாயும் வாக்குறுதியளித்தாள். ஒரு நாள் இரவு நான் உணவு அருந்தியதும் என்னை மீறிய தூக்கம் வந்தது. ஏதோ மயக்க மருந்து கொடுத்து விட்டார்கள் என்று மனத்தில் தோன்றியவுடனே, அப்படியே மயங்கி விழுந்தேன். மறுபடி உணர்ச்சி வந்து கண்விழித்துப் பார்த்த போது, மகாபயங்கரமான ஒரு காட்சியைக் கண்டேன். இங்கிலீஷ் கதைகளில் வாசித்திருக்கிறோமே அம்மாதிரியான ஆப்பிரிக்காதேசத்துக் காட்டு மிராண்டி ஜனங்கள் அநேகர் என்னைச் சூழ்ந்து கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் நின்றார்கள். சற்றுத் தூரத்தில் பெரும் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அறிவு சிறிது தெளிந்ததும், நிலைமை இன்னதென்று எனக்கு விளங்கிற்று. அந்தப் பெண் பேய், என் மேல் பழிவாங்குவதற்காக இந்தக் காட்டுமிராண்டிகளிடம் என்னை அனுப்பிவிட்டாள். அவர்கள் இப்போது என்னைப் பலி கொடுத்து, நெருப்பில் போட்டு, நரமாமிச பக்ஷணம் செய்யப் போகிறார்கள்.
இந்த எண்ணம் தோன்றியதும் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டேன். எந்த நிமிஷமும் என்மேல் ஈட்டிகள் பாயுமென்று எதிர்பார்த்தேன். என்மீது பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த என் கணவருக்குச் செய்த துரோகத்திற்குப் பலன் கிட்டிவிட்டதென்று எண்ணினேன். என் தந்தை, 'உன்னைப் பலி கொடுக்க விற்று விட்டேன்' என்று சொன்ன வாக்குப் பலித்துவிட்டது என்றும் நினைத்துக் கொண்டேன்.
அப்போது, அந்தக் காட்டுமிராண்டிகளின் வாத்தியங்களிலிருந்து கிளம்பிய பயங்கர ஒலி சட்டென்று நின்றது. அதற்குப் பதிலாக, 'ர்ர்ர்ர்' என்ற சத்தம் ஆகாய வெளியிலிருந்து கேட்டது. உடனே அது என்ன சப்தமென்பதை அறிந்தேன். கண்ணைத் திறந்து பார்த்தேன். ஆகாய விமானம் ஒன்று இறங்கிக் கொண்டிருந்தது. அது அருகில் வந்ததும், அந்த நரமாமிச பக்ஷிணிகள் வெருண்டு நாலாபுறமும் ஓட்டமெடுத்தார்கள்.
ஆகாய விமானத்திலிருந்து இறங்கிய ஒரு வெள்ளைக்காரப் பெண் தன் கையிலிருந்த கைத்துப்பாக்கியால் நாலாபுறமும் பார்த்துச் சுட்டாள். அந்தக் காட்டுமிராண்டிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். உடனே என்னுடைய கட்டுக்களை அவள் அவிழ்த்து ஆகாய விமானத்தில் ஏற்றிக் கொண்டாள். அந்த வெள்ளைக்காரி ஆப்பிரிக்காக் கண்டத்தை ஒரே மூச்சில் தாண்டும் பந்தயத்திற்காகப் பறந்து கொண்டிருந்ததாகவும், பந்தயம் போனாலும் போகட்டும் என்று அவ்விடத்தில் கீழிறங்கி என்னைக் காப்பாற்றினதாகவும் சொன்னாள். ஒரு ஜீவனுக்கு அந்தியமக் காலம் வரவில்லையென்றால், எப்படிப்பட்ட ஆபத்திலிருந்தும் எந்த விதத்திலாவது தப்பிக்க முடியும் என்பதற்கு நானே சாட்சியாயிருக்கிறேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரிருளில் ஒரு மின்னல் - Kaarirulil Oru Minnal - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அந்த, என்னை, வேண்டும், ஆகாய, கிரிதரலால், அறிந்தேன், கொண்டு, நாள், எந்த, கொண்டிருந்தது, வந்து, சொல்லி, எனக்கு